Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை வரிகள் மிக அருமை..எல்லோரும் அவங்க அவங்களாகவே இருந்தா யாருக்கும் ஒரு பிரச்சனையும் இருக்காது...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Radhakrishnan said...

நன்றி மலர். அவங்க அவங்களாகவே இருந்தா அவங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனா மத்தவங்களுக்குத்தான் பிரச்சினை.