Wednesday 10 October 2012

அவனுடன் அவள் ஓடிப் போய்விட்டாள்

ரமேஷும், ராதிகாவும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். முதலில் காதல் இனிக்கத்தான் செய்தது. சில வருடங்களில் இனித்த காதல் சில காரணங்களால் புளிக்க ஆரம்பித்தது. அவர்களின் காதலில் கொஞ்சம் இனிப்பை அதிகமாக சேர்த்து இருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால் பழக பழக பாலும் புளிக்கும் என்பது எவரோ எழுதி வைத்தது, எதற்காக எழுதி வைத்தார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியது இல்லை.

திடீரென ஒருநாள், ராதிகா சிவக்குமாருடன் ஓடிப் போய்விட்டாள் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ரமேஷ். அவன் இந்த விசயத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சிவக்குமார், ரமேஷிற்கு பழக்கம் தான். ஆனால் ராதிகாவும், சிவக்குமாரும் நெருக்கமாக பழகியதை ரமேஷ் பார்த்தது கூட கிடையாது. இப்படி எனது தலையில் மண்ணை வாரி போட்டு விட்டாளே என கதறினான், புலம்பினான் ரமேஷ். இப்போது கூட எதற்கு இப்படி ஒரு அபசகுனமான ஒரு முடிவு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நடந்தது அதுதானே, அது இல்லை என்று எப்படி மறுக்க முடியும்?

சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் வேறொரு ஊரில் பேருந்து நிலையத்தில் மோசமான நிலையில் இருந்த ராதிகாவை சந்தித்தான் ரமேஷ். தன்னை ஏமாற்றிவிட்டு போனவள் தானே எனும் ஆத்திரம் இருந்தாலும் அவள் இருந்த நிலை அவள் மீது பரிதாபம் கொள்ளச் செய்தது. என்ன ஆயிற்று என்றே வினவினான். தன்னை சிவக்குமார் ஏமாற்றிவிட்டதாக ரமேஷின் காலில் விழுந்து புலம்பினாள் ராதிகா.  ரமேஷிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. தன்னுடன் அவளை உடன் அழைத்துச் சென்றான். இப்போது கூட நீங்கள் கேட்கலாம், எதுக்கு அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றியவளுக்கு கடவுள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார், அப்படியே விட வேண்டியது தானே என. ஆனால் நடந்தது அதுதானே.

ரமேஷின் வீட்டில் ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ராதிகாவை தலைமுழுகி விட்டதாக ராதிகா அப்பா புலம்பித் தள்ளினார். என்ன செய்வது என யோசித்தான் ரமேஷ். ராதிகாவிடம் ஒரு திட்டம் சொன்னான். ராதிகாவும் சம்மதித்தாள். அடுத்த நாள் காலையில் ரமேஷ் கூட ராதிகா ஓடிப்போய்ட்டா என்றே ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தது. இப்போது கூட நீங்கள் நினைக்கலாம். ரமேஷ் தானே ராதிகாவிடம் இதற்கு யோசனை சொன்னான். எதற்கு ரமேஷ் ராதிகாவை கூட்டிட்டு ஓடிப்போய்விட்டான் என ஊர் சொல்லவில்லை என. அதுதான் நமது கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

இப்படித்தான் நீங்கள் தொலைகாட்சித் தொடர்களிலும், செய்தித் தாள்களிலும், உங்கள் கிராமங்களிலும், நகரங்களிலும், சிலரது வீட்டிலும் கூட நடந்து கொண்டு இருப்பதை கண்டு இருப்பீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் அப்போதெல்லாம் என்ன மனுசங்க என்று கோபம் உங்களுக்குள் கொப்பளிக்கும். இவர்கள் எல்லாம் எதற்கு வாழ்கிறார்கள் என ஆதங்கம் கொள்வீர்கள். அதுவும் கற்பனை பாத்திரங்களை கண்டு வெகுண்டு எழுவீர்கள். அதுவே நீங்கள் செய்ய வேண்டிய வாய்ப்பு வந்தால்  எப்படி அவ்வாறு நடந்தீர்கள் என சிந்தித்து பார்க்க கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஓடிப்போவதில் மட்டுமே குறியாக இருப்பீர்கள். எதற்கு இப்படி? கர்ம வினையா? கவனக்குறைவா? ஆசையின் உந்தலா? என்ன காரணம்? இதற்கெல்லாம் மூளையின் செயல்பாடுகள், எண்ணங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

மெண்டல் சிமுலேசன் அதாவது மூளை பாவனை என்று இதனை குறிப்பிடலாம். அதாவது இந்த மூளை பாவனையில் உண்மையாக நடந்த நிகழ்வையோ, அல்லது கற்பனையாக ஒரு நிகழ்வையோ பாவனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு இன்று என்ன நடக்கும் என யோசனை செய்வது, நடந்த போன நிகழ்வுகளை அசை போடுவது, வினோதமான கற்பனை செய்வது, நடந்த ஒன்றை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என நினைப்பது போன்றவை மூளை பாவனையில் அடங்கும். இப்படிப்பட்ட மூளை பாவனை மூலம் ஒரு காரியத்தை மிகவும் அழகாக சாதிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

அதாவது நாம் இந்த விசயம் தான் நடக்கும் என மூளை பாவனையில் நாம் ஒரு சில விசயங்களை அணுகும்போது அந்த நம்பிக்கை தன்மையில் அந்த விசயங்கள் உண்மையிலேயே நடந்துவிடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. நான் நினைத்தேன், நடந்துவிட்டது என பலர் குறிப்பிடுவதை பார்க்கலாம். இதன் காரணமாக நாம் மூளை பாவனை செய்வதன் மூலம் ஒரு நிகழ்விற்கு நம்மை தயார் படுத்தி கொள்ளலாம். இப்போது ரமேஷிற்கு, ராதிகா தன்னை விட்டுப் போய்விடுவாள் எனும் ஒரு மூளை பாவனை நடந்து இருந்தால் ராதிகா ஓடிப் போனபோது அவன் அதிர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை என்றாகிறது. சில விசயங்கள் எ ப்படியும் நடக்கும் எனும் எல்லா வாசல்களையும் திறந்து வைத்தாலும் உயரிய எண்ணங்களே மிகவும் அவசியம் என சொல்லப்படுகிறது.

திட்டமிடலுக்கு மூளை பாவனை மிகவும் அவசியம். ஒரு நிகழ்வை நாம் செய்ய விரும்பும்போது அது குறித்து நாம் ஒத்திகை பார்க்கும் வழக்கம் பல வருடங்களாகவே உண்டு. சில நேரங்களில் அந்த ஒத்திகையை நமது மூளை செய்து பார்க்கும். விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்ல இருப்பவர்கள் என எல்லாரும் மூளை பாவனை செய்து பார்ப்பதால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்கிறார்கள். ஒரு விசயத்தை பாவனை அதாவது கற்பனை செய்யும் போது நமது ரத்த வேகம் முதற்கொண்டு பல விசயங்களில்  மாற்றம் ஏற்படுகின்றது. ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் இந்த பாவனையின் மூலம் செழுமைப்படுத்தபடலாம்.

இந்த மூளை பாவனையின் மூலம் ஒரு எண்ணம், அந்த எண்ணத்தை செயல்முறைக்கு கொண்டு வருதல் என்பதை மிகவும் அருமையாக செய்து முடிக்கலாம் என்றே பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. ஒரு இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த மூளை பாவனை மிக மிக அவசியம்.

ரமேஷ் ராதிகாவிடம் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் நம்மை நமது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே சொல்ல அதை ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். ரமேஷிற்கும், ராதிகாவிற்கும் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையுடன் ஓரிரு வருடங்களில் அவர்கள் ஊருக்கு வர அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ரமேஷிற்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. அதுபோலவே எப்படி நடந்தது? அதுதான் கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

மூளை பாவனை இரண்டு வகைப்படும். ஒன்று முடிவை பாவனை செய்வது. மற்றொன்று முடிவை நோக்கிய செயல்பாடுகளை பாவனை செய்வது. குழந்தை பிறந்தால் சேர்ந்து வாழலாம் என்பது முடிவு குறித்த பாவனை. குழந்தை பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்பது முடிவு குறித்த செயல்பாடுகள் பற்றிய பாவனை.

இப்போது ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது குறித்து முடிவு பாவனை ஒன்றும், முடிவு நோக்கிய செயல்பாடுகள் குறித்த பாவனை ஒன்றும் தொடங்குங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்.




3 comments:

Avargal Unmaigal said...

நீங்கள் சொல்லியவிதம் மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த பதிவு

Radhakrishnan said...

மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

Yaathoramani.blogspot.com said...

சொன்ன கருத்தும் சொல்லிச் சென்ற விதமும்
அருமை.தொடர வாழ்த்துக்கள்