Monday 1 October 2012

மத மாற்றம் மன மாற்றம் தருமா?

எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மேல் விழ மனம் மிகவும் லேசாக இருந்தது.

நான் இந்த மதத்துக்காரன் என்றுதானே என்னிடம் இந்த சாமியார் வந்து தொலைக்கிறார். மதம் மாறிவிட்டால் என்ன என்று யோசனை வந்தது? வேறொரு மதம் மாறிவிட்டால் அந்த மதத்து குருமார்கள் வந்து தொலைப்பார்களே என யோசித்து மதமே வேண்டாம் என விட்டுவிட்டால் என யோசித்தேன். அது  வேண்டவே வேண்டாம் தந்தை பெரியார் தாடியோடு வந்து நிற்பாரே என மிகவும் அதிகமாக யோசித்தேன். எப்படியும் புதியவன் என்பதால் வேற மதத்து குருமார்கள் வர தயங்குவார்கள், அதனால் வேறொரு மதம் மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு எப்படி இந்த மதம் கிடைத்தது? அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டபோது அது அப்படித்தான்டா என்றே சொன்னார்கள். எனக்கு கோபமாக வந்தது. நான் எதற்கு இந்த  மதம் கொண்டவனாக திரிய வேண்டும்? எனக்கு வேறொரு மதம் வேண்டும் என்றேன்? எதற்கு என்றார்கள். என்னை கனவில் தினமும் சாமியார் தொல்லை செய்கிறார், அவரது தொல்லையில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றேன். கிளுகிளுப்பான சாமியாரா என்றார் அப்பா. அப்பாவை நோக்கி கொழுப்பா உங்களுக்கு என்றார் அம்மா. இனி அவர்கள் சண்டையில் எனது மத மாற்றம் மறந்து போகும் என நினைத்து அங்கிருந்து விலகினேன்.

எனக்குத் தெரிந்த மதம் மாறிய சிலரை சென்று சந்தித்தேன். நான் மதம் மாற வேண்டும் என நினைக்கிறேன், எந்த மதம் நல்லது என சொல்லுங்கள் என்றேன். ஒருவன், நான் அந்த மதத்தில் இருந்தவரை எனது வாழ்க்கை சீரானதாக இல்லை, ஆனால் இந்த மதம் வந்தவுடன் மிகவும் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்றான். என்ன காரணம் என்றேன். எல்லாம் மதம் சொல்லும் போதனை தான் என்றேன். அப்படி என்ன நீ மாறிய மதம் சொல்லிவிட்டது என்றேன். அன்பு, அன்பு அன்பு என்றான். யோசித்தேன். நான் இப்போது இருக்கும் மதமும் அப்படித்தானே சொல்கிறது என நினைத்து கொண்டு, வேறு என்ன சொல்கிறது என்றேன். மனம் நிம்மதியாக இருக்க வழி சொல்கிறது என்றான். என்ன என்ன வழிகள் என்றேன்? எனக்கு நேரமில்லை, நீ இந்த மதத்திற்கு மாறினால் எல்லாம் புரியும், முதலில் எனது மதத்திற்கு மாறு என்றான். வேறொருவனிடம் என்றேன்.

அவன் நான் மதம் மாறியதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றான். ஏன்டா குப்பை, மதம் மாறாம இருந்தா கூட வெளிநாடு நீ போயிருக்கலாம் என்றேன். அவனோ அந்த மதத்தில் இருந்தவரை நான் குப்பை, இப்போ இந்த மதத்துக்கு வந்ததால நான் கோபுரம் என்றான். நீ என் மதத்துக்கு மாறு, அப்புறம் உனக்கு ஈசியா வெளிநாடு வாய்ப்பு வாங்கித் தரேன் என்றான். அவன் அவன் மதத்தை அவனது மதம் என சொந்தம் கொண்டாடுகிறார்களே என தோணியது. எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் எனும் ஆசை நிறையவே உண்டு. வெளிநாடு செல்வதற்கு  மதம் மாற துணிந்துவிட்டேன். அவனிடம் எப்படி மதம் மாற வேண்டும் என விபரங்கள் கேட்டேன். அவன் சில நடைமுறைகள் சொன்னான். பெயர் மாற்றம், உருவ மாற்றம், பழக்க மாற்றம் என பல விசயங்கள். ஒவ்வொரு மதத்தில் இத்தனை கட்டுபாடுகளா என யோசித்தேன். ஆனால் அடுத்த நாள் அவனை வந்து பார்க்குமாறு சொல்லி சென்றான்.

முதலில் பார்த்தவனிடம் இது குறித்து விபரங்கள் சொன்னதும், அவனுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. என்ன காரணத்திற்கு அவனது மதத்திற்கு மாறுகிறாய், அதற்கு பேசாமல் உனது மதத்திலேயே நீ இருக்கலாம், இரண்டும் ஒன்றுதான். எனது மதம் மட்டுமே வேறு. எனது மதத்தில் சேர்வதாக இருந்தால் சொல் என சொல்லிவிட்டு போய்விட்டான். சாமியார் தொல்லை வேண்டாம் என நினைத்து வெளிநாட்டு ஆசை வந்து தொத்திக் கொண்டது. அன்று இரவெல்லாம் தூங்க வேண்டாம் என உறுதியாக இருந்தேன். தூங்கினால் தானே அந்த சாமியார் வந்து தொலைகிறார்.

''நாளைக்கில இருந்து உன் கனவுல நான் வரமாட்டேனு நினைச்சியா'' என்றார் சாமியார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தூங்காமல் உட்கார்ந்து இருந்தாலும் இந்த சாமியார் வந்து தொலைகிறாரே என்று எரிச்சலுடன் ''ஆமாம், நீ வரக்கூடாது, நாளையில் இருந்து நான் வேறு மதம்'' என்றேன். ''மதம் மாறினால் பெயர் மாற்ற வேண்டுமே'' என்றார் சாமியார். ''நான் நல்ல பெயரை யோசித்து வைக்கிறேன்'' என்றேன். ''நானே சொல்கிறேன், உனது பெயர் மன்சவ்'' என்றார் சாமியார்.

''இதென்ன பெயர், அந்த மதத்தின் வாசனையே இல்லை'' என்றேன் நான். ''வாசனைப் பொருட்களை பெயரில் தூவு, வாசனை வரும்'' என சாமியார் சிரித்தார். ''நான் பெயர் முதற்கொண்டு எல்லாம் எனது நண்பனிடம் கேட்டுக் கொள்வேன், நீங்கள் போகலாம்'' என்று சொன்னேன். ''மதம் மாறுவதன் மூலம் மனம் மாற்றம் வரும் என நினைக்கிறாயா?'' என்றார் சாமியார். ''சாமி, மனமாற்றத்தினால் தானே  மதமே மாறுகிறேன்'' என்றேன் எகத்தாளத்துடன். ''அப்படி என்ன மனம் மாற்றம்'' என்றார் சாமியார். ''எதோ ஒன்று'' என்றேன்.

''வெளிநாடு போனாலும் அங்கேயும் என்னால் வர இயலும், இவ்வுலகம் எனக்கு சொந்தம்'' என்றார் சாமியார். ''நான் வெளிநாடு போக இருக்கிறது, உங்களுக்கு எப்படி'' என்று குழைந்தேன். ''யாம் அறிவோம், விடிந்துவிட்டது நீ உனது நண்பனை கண்டு வா'' என்றார் சாமியார்.

''ஏம்பா , உட்கார்ந்துட்டே இப்படியா  தூங்குவ, ஒழுங்காப் போய் படு. உட்கார்ந்துட்டே கனவு காண்றது. உனக்கு ஒருத்திய கட்டி வைச்சாத்தான் நீ எல்லாம் உருப்படுவ'' என அம்மாவின் சத்தத்தில் அலறிக் கொண்டே எழுந்தேன்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாவே எடுத்தார். ''ரொம்ப சந்தோசம்டி, பையனும், அம்மாவும் நல்லா இருக்காங்களா, நாளைக்கு வந்து பார்க்கிறேன், இன்னைக்கு நேரமாயிருச்சி'' என அம்மாவின் இந்த பக்க குரல் மட்டும் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்ததும் கேட்டேன்.

''யாரும்மா போன்ல'' என்றேன்.

''என் பெஸ்ட் பிரண்டோட பொண்ணுக்கு பையன் பிறந்து இருக்கானாம், பேரு கூட முன்னமே செலக்ட் பண்ணிட்டாங்களாம்''

''என்ன பேரு'' என்றேன்.

''மன்சவ்''

''மன்சவ்'' என்னையும் அறியாமல் கத்தினேன்.

''எதுக்கு இப்படி கத்துற'' என அம்மா கத்தினார்.

மதம் மாற்றம் மன மாற்றம் தருமா? மன மாற்றமே மத மாற்றத்திற்கு காரணமா? விடை தெரியாமல் சாமியாரை மனமுருக அன்று வேண்டினேன். 

2 comments:

IlayaDhasan said...

nice thoughts!

Radhakrishnan said...

நன்றி இளையதாசன்