Wednesday 21 April 2010

இசையும் நானும்

சின்னஞ்சிறு வயதில் மேளமும், நாதஸ்வரமும் கண்டு ரசித்த அனுபவம் உண்டு. எப்படியெல்லாம் இசைக்கிறார்கள் என ஆவலுடன் பார்த்ததும் உண்டு, ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் என்றுமே வந்ததில்லை.

கல்லூரியில் படித்த நாட்களில் மேசையில் தாளம் போட்ட சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட வைப்பான். அத்தனை அருமையாக தாளம் போடுவான்,  இனிய இசையாக இருக்கும் அது. நானும் மேசையில் தட்டுவேன், ஆனால் இசையாக அது வடிவம் பெற்றதில்லை.

இசைக்கும் எனக்கும் எட்டாத தூரமாகவே இருந்தது. ஆய்வுக்கூடங்களில் அதிகம் பாடல் பாடிக்கொண்டே ஆய்வு செய்யும் வழக்கம் உண்டு. எல்லாமே சொந்தமாக அந்த அந்த சூழ்நிலைக்கு என்னால் எழுதப்படும் பாடல்கள் அவை. பின்னர் அந்த பாடல்கள் மறந்து போகும்.

இலண்டனுக்கு வந்த பின்னர் எனது மகன் மிருதங்கம், பாடல் என கலைகள் கற்றுக்கொள்ளச் சென்றான். எந்த கலையை கற்றுக் கொள்வது என மனம் மிருதங்கம், வயலின், வீணை என அலைபாய ஆரம்பித்தது.

வேண்டாம், கதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வோம், கலையெல்லாம் எதற்கு என நினைத்தே மூன்று வருடங்கள் ஓடியேவிட்டது. 2008 ஆக்ஸ்ட் மாதம் திடீரென நான் மிருதங்கம் கற்று கொள்ளப்போகிறேன் என எனது மகனின் குருவிடமே நான் மாணவனாக சேர்ந்தேன். எனக்குள் உள்ளூர வெட்கம், கொஞ்சம் தயக்கம்.

மிருதங்க வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டே வகுப்புகள் சென்றேன். ஆகஸ்ட் விடுமுறை வந்துவிட்டது. பின்னர் இரண்டு வாரம் பின்னர் மீண்டும் தொடங்கினேன். வருட சான்றிதழ் விழா  நடைபெற்றது. என்னையும் மேடையில் மிருதங்கம் வாசிக்க சொல்லி இருந்தார் குரு. மறுக்காமல் சரி என ஒப்புக்கொண்டேன். உள்ளூர பயமாக இருந்தது.

விழாவில் மகனும் மற்றவர்களும் இணைந்து செய்தார்கள். நான் மேடையில் அமர்ந்திருக்க எனக்குச் சிரிப்பாக இருந்தது, அதேவேளையில் பயமும் கூட. மிருதங்கம் நன்றாகவே செய்தேன் என அனைவரும் சொன்னார்கள். இசை எனக்கும் வந்தது.

விழா ஆரம்பிக்கும் முன்னர் மிருதங்கம் பயிலும் மாணவன் எனது பெயர் அடிப்படை பாடத்தின் பட்டியலில் இருப்பதை கண்டு ''புலவர் போல் இருக்கிறீர்கள் அடிப்படை பாடமா' என என்னைப் பார்த்துக் கேட்டான். நான் சிரித்துக் கொண்டேன்.

நவராத்திரி முன்னிட்டு வருடா வருடம் ஸ்ரீலண்டன் முருகன் ஆலயத்தில் மகனும் மற்றவர்களும் மிருதங்கம் இசைப்பார்கள். அதைக் கண்டது உண்டு. அதே வருடம், நானும் மிருதங்கம் இசைத்தேன். அதே அச்சம், அன்று செய்த பாடத்தை செய்யாமல் பயிற்சியே இல்லாமல் புது பாடத்தை சிறு பிழைகளுடன் வாசித்தேன். நன்றாக இருந்தது என்றே சொன்னார்கள். மிருதங்க வித்துவான் ஒருவர் உங்கள் முயற்சி வெற்றியாகும் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது.

எனக்கு நுனிப்புல் புத்தக வெளியீட்டு விழாவில் சால்வை அணிவித்து பேசிய முருகன் கோவில் குருக்கள் நான் நன்றாக வாசித்தேன் என சொன்னபோது மனம் மேலும் மகிழ்ச்சி கொண்டது. அட! மனது எவ்வளவு வெட்கம் கொள்கிறது, வயதாகிவிட்டது என நினைத்து.

மிருதங்கம் கற்றுக்கொண்டு ஆறு மாதங்கள் ஆனபின்னர்  எனக்கான முதல் தேர்வு நடந்த போது மிகவும் சுலபமாகத்தான் இருந்தது. இருப்பினும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற மனோபாவம் மனதை பயமுறுத்தியது. தேர்வு எழுதச் சென்ற காலமெல்லாம் நினைவுக்கு வந்து சேர்ந்தது. நன்றாகப் படித்துவிட்டேனா, செய்முறைப் பயிற்சி செய்துவிட்டேனா என கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.

நன்றாகவே செய்தேன். அதற்கடுத்து தொடர்ந்து கற்றுக் கொண்டு இரண்டாம் நிலை தேர்வும் சென்ற வாரம் முடித்து விட்டேன். இசையினைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஐந்து வகை ஜாதிகள், அவை திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம். ஏழு வகை தாளங்கள், அவை துருவம், மத்யம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏக ஆகும்.

4 comments:

Vidhoosh said...

congrats sir. very happy to know you play mirudhangam/

Radhakrishnan said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி விதூஸ்.

அண்ணாமலை..!! said...

மிருதங்கம் கற்றுக் கொள்ளப்போனதை
மிகவும் சுவையாகவே எழுதியுள்ளீர்கள்!
சீக்கிரமாகவே வித்துவானாவீர்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி அண்ணாமலை அவர்களே.