Thursday 29 April 2010

பனிப் பிரதேசம் - 5

குகைக்குள் செல்ல இயலவில்லையே என வருத்தத்துடன் லண்டன் நோக்கிய பயணம் தொடங்கிச் சென்றோம். நேற்று சென்ற வழியிலேயே இன்றும் செல்ல, அந்த இறக்கப் பாதையில் சென்று நேற்று தவறவிட்ட ஓரிடத்தில் காரினை நிறுத்தி விசாரித்ததில் ஒரு குகை என்ன இரண்டு குகைகள் செல்லலாம் என சொன்னார்கள். மனது மிகவும் மகிழ்ச்சி கொண்டது.

நாங்கள் மூவர் மட்டும் தான். ஒரு சிறிய கடை வைத்து அங்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த கடையில் ஒரு சிலர் மட்டும் இருந்தார்கள். நம்பிக்கையுடன் குகைக்குள் சென்றோம். 105 படிகள் தாண்டி கீழிறங்கியதும், ஸ்பீட்வெல் குகைக்குள் படகின் மூலம் பத்து நிமிட பயணம். ஏன் குகை உருவாக்கினார்கள், எப்படியெல்லாம் செய்தார்கள் என எங்களுக்கு துணையாக வந்த படகு ஓட்டியவர் சொல்லிக்கொண்டே வந்தார்.

காரீயமும், நீலக்கல் எடுப்பதற்காக கன்னிவெடிகள் மூலம் குகை உருவாக்கி இருக்கிறார்கள். படகு விலகிச் செல்ல என ஓரிடத்தில் ஒதுக்குப்புறம் எனவும் உருவாக்கி இருந்தார்கள். சித்தர்கள் என எவரும் அங்கே நடமாடவில்லை. ஓரிடத்தில் நிறுத்தி அங்கே சில விசயங்கள் காண்பித்தார். அப்படி நின்றபோது எடுத்த புகைப்படம் தான் மேலிருப்பது. அதே வழியாக திரும்பி வந்தோம். பின்னர் 105 படிகள் மேலேறி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பயணம் தொடங்கினோம்.

பத்து நிமிடங்களுக்குப் பின்னர் மற்றொரு குகையை அடைந்தோம், அங்கே நடைபயணமாக சென்றோம். எங்களுக்கு துணையாக யாரும் வரவில்லை. குகையின் இருபுறங்களிலும் வெளிச்சம் இருந்தது. ஓரிடம் தாண்டியதும் அதற்கு மேல் செல்லக்கூடாது என தடுப்பு போட்டு வைத்து இருந்தார்கள், ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லை, நான் சென்று பார்க்கலாம் என இறங்க, சகதியைக் கண்டு பயந்து திரும்பினேன். பின்னர் குகை பராமரிப்பாளரிடம் பேசியபோது 'நல்ல வேளை நீங்கள் செல்லவில்லை, அது குகையினை பற்றி அறிந்து கொள்ள, ஆராய்ச்சிகள் புரிய வருபவருக்கான இடம். பிபிசி மூலம் படம் எடுக்கவும் வருவார்கள், அதற்குத்தான் ஒரு தடுப்பு போட்டிருக்கிறோம் என சொன்னார்கள்.

அப்பாடா என மனம் சொன்னது. குகை கண்ட மகிழ்ச்சியுடன் லண்டன் நலமுடன் வந்தடைந்தோம். வந்த சில தினங்களிலேயே ஏப்ரலில் ஸ்காட்லான்ட் செல்ல வேண்டுமென திட்டமிட்டோம். பிப்ரவரி மாதத்திலேயே நல்லதொரு திட்டத்துடன் ஏப்ரல் மாதம் பயணம் தயார் செய்து வைத்தோம். அந்த பயணக் கட்டுரையை சில வாரங்கள் பின்னர் எழுதுகிறேன். அதுவரை, பயணத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்.


(முற்றும்) 

அடுத்த பயணக் கட்டுரை வெளியீடு :  ஸ்காட்லாந்து நோக்கிய கனவுகள் 

4 comments:

தோழி said...

உண்மையாவே நல்ல பயணம் போன திருப்தி இருக்கு நன்றி...

Radhakrishnan said...

மிக்க நன்றி தோழி.

Chitra said...

அங்கேயும் பாபா குகையா? ஹா,ஹா,ஹா,ஹா..... அருமையான பயணத்தொடர் பகிர்வு. பாராட்டுக்கள்!
அடுத்த பயணத்துக்கும் வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

:) பாபா குகையே தான். மிக்க நன்றி சித்ரா