Friday 30 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 7

சிவபுராணம் படிக்க ஆரம்பித்தான் கதிரேசன். நீலகண்டன் சொன்ன வரியையும் அடுத்த வரியையும் மட்டும் பலமுறைப் படித்தான். பொருள் விளங்கியது போலிருந்தது. இருப்பினும் நீலகண்டனிடமே விளக்கம் கேட்டுவிடலாம் எனச் சென்றான்.


 ''தாத்தா எனக்கு விளக்கம் சொல்லுங்க'' என்றான் கதிரேசன். 

''புரியலையா, புரிந்தது சரிதானானு சோதிக்க வந்திருக்கியா?'' என்றார் நீலகண்டன்.



''புரிந்தது சரிதானானு தெரிஞ்சிக்க வந்துருக்கேன்'' என்றான் கதிரேசன். 


''என்ன புரிஞ்சிக்கிட்ட சொல்லு?'' என்றார் நீலகண்டன். 

''நான் எல்லாப் பிறப்பும் எடுத்தும் உன்னை உணரவில்லை; ஆனால் இம்முறை உன்னை உணர்ந்து உன் மனம் அடைந்தேன்'' என்றான் கதிரேசன்.



''இவ்வளவுதானா? இன்னும் இருக்கா?'' என்றார் நீலகண்டன்.


 ''அவ்வளவுதான் தாத்தா'' என்றான் கதிரேசன். 


''பாடல் முழுசும் படிச்சியா?'' எனக் கேட்டார் நீலகண்டன்.


 ''இல்லை தாத்தா'' என்றான் கதிரேசன்.


 ''இதுதான் வாழ்க்கையோட சூட்சுமம்'' என்றார் அவர். 

மேலும் அவர் தொடர்ந்தார்.



 ''மொத்த வாழ்க்கையை யாராலேயும் வாழ முடியாது, எல்லா விசயத்தையும் ஒரே பிறப்புல தெரிஞ்சிக்கவும் முடியாது. காலம் காலமா சொன்னவங்க, அவங்களுக்கு முன்னால சொன்னவங்கனு கருத்துக்களை எடுத்துக்கிட்டாலும் முழுசும் ஒருத்தரும் தெரிஞ்சிக்க முடியாது. ஒவ்வொன்னா அதன் அதன் நிலையில நாம பிறந்தாலும் நம்மால விசயத்தைத் தெரிஞ்சிக்கிறது கஷ்டம். ஆனா எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிட்டதுபோல நாம நடந்துக்கிறதுதான் நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு வாழுற வாழ்க்கை. இப்படியே நாமப் பார்த்தோம்னா தெளிவுதான் பிறக்கனும், ஆனா மயக்கநிலைதான் மிஞ்சும், அதனாலதான் தெரிஞ்சிக்கிறம்னுங்கிற ஆவல் தொடர்ந்துகிட்டே இருக்கு உலகத்திலே'' என நிறுத்தியவர் சிறிது இடைவெளிவிட்டு சொன்னார். ''எந்த விசயத்திலும்''. கதிரேசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். 

''இப்பப் பாடலுக்கு வரேன், எத்தனையோ பிறப்பு எடுத்தபோதும் அவரால் பெருமானை உண்மையாய் தொழ இயலவில்லை. அதுல என்ன சொல்றாருங்கிறதுதான் முக்கியம். புல், கல் என்றெல்லாம் சொல்லி மனிதனாகவும் பிறந்தேன், அசுரராகவும் இருந்தேன். முனிவராகவும் இருந்தேன். ஆனால் அப்போது கூட உனது பாதம் எனக்குத் தென்படவில்லை. இப்பொழுது உன் பாதம் தென்பட்டு உன்னை சரணடைந்தேன் என்கிறார், இது நான் அறிஞ்சது. ஒவ்வொருத்தரும் உன்னை மாதிரி பொருள் கொள்ளலாம். அதனால மனிதராக இருப்பவர்கள் சிவனை மட்டுமே தொழ வேண்டுமென்பதில்லை. ஆனால் அவர்கள் சிவனைத் தொழும்வரை அவர்களது பயணம் தொடரும், அதுவும் முந்தைய பயணம் நினைவில்லாமல். சிவனை உண்மையாய் உணரும் வரை இந்த வாழ்க்கைப் பயணம் தொடரும். உயிருள்ள பொருளிலும், உயிரற்ற பொருளிலும் சிவனே. எல்லாம் சிவமயம். அறிந்து கொள்ளும்வரை பயணம் நிற்காது. நான் அறிந்து கொண்டேனா என்பதை என்னால் மாணிக்கவாசகர் போல் சொல்ல முடியவில்லை''


கதிரேசன் கண்கள் கலங்கியபடி நன்றி சொன்னான். நீங்கள் தமிழாசிரியரா எனக் கேட்ட கதிரேசனுக்கு ஆம் என்று தலையாட்டினார் நீலகண்டன். அவருடன் தங்கி இருந்த நான்கு நாட்களும் மிகவும் நன்றாக இருந்தது. பல விசயங்கள் சொன்னார். அன்றைய தினங்களில் பாடல் எதுவும் அவன் பாடவே இல்லை. பூஜையில் அமர்ந்தபோது பாடுவான் என எதிர்பார்த்த நீலகண்டன் அவன் பாடாதது கண்டு ஆச்சரியமடைந்தார். ஆனால் அதுகுறித்து கேட்கவில்லை. ஒவ்வொரு தினமும் தீவிர யோசனையில் இருந்தான் கதிரேசன். மதுசூதனன் ஒவ்வொரு மாலையும் கதிரேசனை சந்திப்பான். தெய்வேந்திரன் பற்றி அதிகமாக சொல்லி இருந்தான். வெள்ளிக்கிழமை வந்தது. ஊருக்குச் செல்ல வேண்டும் என நீலகண்டனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். ''நிச்சயம் என்கிட்ட திரும்பி வரனும்'' என்றார் நீலகண்டன். 

புளியம்பட்டியை அடைந்தான் கதிரேசன். கதிரேசன் வரவைக் கண்டதும் கண்களில் நீர் கோர்த்தது செல்லாயிக்கு. வீட்டின் வாசல் வெளியே நின்றவன் ''அம்மா நான் சிவன் பக்தனானேன், இனி எனக்கு குடும்ப பந்தம் வேண்டாம், என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா'' என்றான் கதிரேசன். அந்த வார்த்தைகளைக் கேட்ட செல்லாயி பதறினார். எழு என தூக்கிவிடக்கூட சக்தியின்றி, செல்லாயிக்கு இருந்த பாதி உயிரும் போய்விடத்தான் துடித்தது. 



(தொடரும்) 

No comments: