Wednesday 28 April 2010

தமிழ் அமைப்புகள்

இதுக்குத்தான் சொல்றது, இருக்கற வேலைய ஒழுங்காப் பார்த்தோமா, தெரிஞ்சதை எழுதிட்டு, கண்ணுக்குப் படறதை வாசிச்சிட்டு அர்த்தம் தெரியுதோ, அர்த்தம் தெரியாதோ பிடிச்சா ஆஹா ஓஹோனு சொல்லிட்டு, பிடிக்கலைன்னா என்ன எழவு இதுனு தூக்கிப் போட்டுட்டு போயிரனும்.ரொம்ப ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சா பெரிய பிரச்சினைதான். அப்படி என்ன ஆராய்ச்சினு அப்புறமா சொல்றேன்.

வெளிநாட்டுக்குப் போயிட்டா உள்நாட்டு நிலவரம் ஒன்னும் புரிய மாட்டேங்குது. உள்நாட்டு விவகாரங்களில விவரம் முழுசா தெரியாம எழுதரதைப் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்படித்தான் அங்க அங்க படிச்சி யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க அப்படி ஒரு எண்ணம் வந்து சேர்ந்துச்சு, அதோட போகட்டும்னு விட்டாக்கா விவகாரமான எழுத்தாளர்கள் அப்படினு ஒரு எண்ணம் வந்து சேர்ந்துச்சு.

இதெல்லாம்  எழுதி என்ன ஆகப்போகுது அப்படினு ஒரு நினைப்பு வந்து சேர்ந்தப்ப இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது அப்படின்னு ஒரு பதிவு வேற. ஆனாலும் நானும் இடுகை எழுதுறேனு காட்டிக்க,  கதை, கவிதை, கட்டுரைகளின் ஊடே இப்படி  ஏதாவது எழுத வேண்டியதாப் போயிருச்சி.

ஆனாலும் ஒரு கொள்கை வைச்சிருக்கேன், எந்த சூழ்நிலையிலும் (சில தவறியிருப்பேன்) தனி மனிதர்  நிலை தாழ்த்தியோ, தனி மனிதரை விமர்சித்தோ பொது இடத்தில் ஒரு இடுகையும்  எழுதுவதில்லைனு. மொத்தமாத்தான் பொத்தாம் பொதுவாத்தான் எல்லாம் சொல்றது என் வழக்கம். எங்க ஊருல சொல்வாங்க, பொது இடத்துல வைச்சி தனிப்பட்ட மனுஷனுக்கு அறிவுரை சொன்னா, அறிவுரை சொல்ல வந்துட்டான்னு நினைப்பாங்க ஏன்னா தனி மனிசனோட குறைகளை மத்தவங்க முன்னால  சொன்னா கோவம் பொத்துக்கிட்டு வந்துரும், அதுவே பொத்தாம் பொதுவா சொல்லிப் பாரு, நம்மளை சொல்லலைன்னு நினைச்சிட்டு போயிருவாக. எங்க ஊருல சொன்ன  கொள்கை என்னன்னா உறைக்கிரவங்களுக்கு உறைச்சிருமாம். தனிப்பட்ட மனிசரை விமர்சிக்கிறச்சே யாருக்கும் தெரியாம தனியா கூப்பிட்டு போய் சாந்தமா இப்படி பண்ணிட்டியேனு கருசனையா பேசணுமாம். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உறைக்கிரவங்களுக்கு உறைக்கனுமே.தனியா பேசினா என்ன, பொதுவா பேசினா என்னனு ஆகிப் போச்சு ஊரு உலகம்.

அது சரி, அட தலைப்பை இப்படி வைச்சிட்டு என்ன என்னமோ எழுதிட்டு போறேன். அது வேற ஒன்னும் இல்ல. ம க இ க அப்படின்னா ஒரு கட்சினு இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன். தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்னு நான் ஊருல இருந்தப்போ ஒன்னு இருந்தது. அதுல நான் கூட உறுப்பினரா இருந்தேன். பணம் கூட வசூல் செஞ்சேன். அப்புறம் எழுதாமலேயே எழுத்தாளர் சங்கத்தில உறுப்பினரா இருக்கோம்னு விலகிட்டேன். அதுக்கப்பறம் எந்த சங்கம் இருக்கு, எந்த தமிழ் சேவை இருக்குன்னு ஒண்ணுமே தெரியாது.

அப்புறமா முதல்  புத்தகம் வெளியிட்டப்ப கூட மக்களுக்கு அறிமுகமான எழுத்தாளர்கிட்ட போய் அணிந்துரை, முன்னுரைன்னு வாங்கலை. முன்ன பின்ன பழகாத, ஆனா  எழுத்து மூலமே தெரிஞ்சவங்களை வைச்சிதான் எழுதி வாங்கி வெளியிட்டேன்.

ம  க இ க அப்படின்னா என்னனு தேடிப் பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப பேரு ம க இ க அப்படினு போட்டு இருந்தாங்க. அப்புறம் படிச்சப்பதான் மக்கள் கலை இலக்கிய கழகம்னு தெரிய வந்துச்சு. அட சாமிகளானு மனசுக்கு தோணிச்சி. இந்த இலக்கிய, தமிழ் சங்கம், கழகம் எல்லாம் எத்தனை இருக்கு என்ன செய்துனு எனக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். இவங்களோட கொள்கை என்ன? தமிழ் எழுத்துக்கு இவங்களோட தொண்டு என்னனு தெரிஞ்சிக்கணும்னு ஆசை. உரையாடல் அமைப்புனு ஒன்னு இருக்கு. கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டியில கலந்துருக்கேன். பார்த்தாக்க அது ரெண்டு நண்பர்களோட கனவுனு தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப கூட அது சரிதானு தெரியலை.

மக்கள் சேவைனு ஆனப்புறம்  எதுக்கு ஆயிரத்தெட்டு கட்சிகள்? அனைத்து கட்சிகளோட கொள்கை என்ன? மக்கள் நலன் தானே முதலா இருககனும்? எல்லா அரசியல்வாதியும் ஒன்னு கூடி நல்லது செஞ்சா என்ன, நீ செய்றது தப்பு, அவன் செய்றது தப்புன்னு சொல்லிட்டு இருக்காம? அது போலத்தான் தமிழ் சேவைன்னு இருக்கிற இந்த கழகங்கள், சங்கங்கள் எல்லாம் ஒன்னு கூடி தமிழ் வளர்க்கும் பணியை செஞ்சாத்தான் என்ன? எதுக்கு ஒரு அமைப்பு மேல மத்த அமைப்பு தாக்கிக்கிட்டு இருக்கு? இது என்ன பெரிய விஷயம், ஒரே சாமினு சொல்லிட்டு இருக்கே ஓராயிரம் மதங்களும், கோட்பாடுகளும்?!

இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்காம், அது என்னன்னா நோக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுய விளம்பரம் தேடுற வழிக்கு பாதை தேடினா எல்லார் பாதையும் தனித் தனியாத்தான் இருக்குமாம், இந்த வலைப்பூ போல!

9 comments:

? said...

அகநாழிகை உங்கள மாதிரிதான் நானும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால நினைச்சேன். இப்போ அத நினைச்சா சிரிப்பா வருது. பாருங்க• நீங்க கூட அவங்க கொள்க என்ன அவிங்க யாரு என்ன பண்றாங்க•. எது அவங்க களம் இந்த மாரி விசயம் தெரியாமலே வினர்சனம் வைக்கிறீங்க பாருங்க• அத மாரித்தான் அப்போவியும் நான் பண்ணேன். இப்போ புரிந்து விட்டது. எதுக்கும் வினவு தளத்தில போயி விசாரித்து பாத்தீங்களன்னா உங்களுக்கு புரிய வரலாம்.

Radhakrishnan said...

பதினைந்து வருடங்களுக்கு முன்னரா? நல்ல கொள்கையுடனும், நோக்கத்துடனும் தொடங்கப்படும் எல்லா அமைப்புகளும் தன் பாதையிலிருந்து விலகிவிட்டது என கூற இயலாது. நிச்சயம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். இந்த இடுகையின் நோக்கம் பல அமைப்புகளை தெரிந்து கொள்வதும், அதன் செயல்பாடுகளை புரிந்து கொள்வதுதான். மிக்க நன்றி ஐயா.

Chitra said...

/////மக்கள் சேவைனு ஆனப்புறம் எதுக்கு ஆயிரத்தெட்டு கட்சிகள்? அனைத்து கட்சிகளோட கொள்கை என்ன? மக்கள் நலன் தானே முதலா இருககனும்? எல்லா அரசியல்வாதியும் ஒன்னு கூடி நல்லது செஞ்சா என்ன, நீ செய்றது தப்பு, அவன் செய்றது தப்புன்னு சொல்லிட்டு இருக்காம?//////



......தன் குடும்ப மக்கள் நலன்தான் முதன்மையாக இருக்கிறது. :-(

மற்ற சங்க விஷயங்கள் பற்றி கருத்து சொல்ல, எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்கள் பகிர்வுக்கு நன்றி.

Dr.Rudhran said...

மருத்துவம் உயர்வானதுதான், எல்லா மருத்துவமனைகளிலும் நேர்மை இருக்கிறதா?
இலக்கியம் உயர்வானதுதான், எல்லா இலக்கியமும் உயர்வுக்கு மக்களை அழைத்துச் செல்கிறதா?
எல்லாரும் ஒன்றாகசிஜெ செயல்படுவது, ஒரே நோக்கில் இருந்தால்தான் சாத்தியம். அதுவரை வெவ்வேறு குழுக்கலாக கழகங்களாகத்தான் செயல்படுவார்கள்.

எவரோடும் சேர்ந்து கொண்டு ஆதாயம் தேடும் நிலையில் இல்லாமல் இதை எழுதுகிறேன்.

அகநாழிகை said...

முதல் பின்னூட்டத்தில் ‘அகநாழிகை‘ என்ற எனது பெயர் எப்படி வந்தது?

? said...

pls read below links

http://www.vinavu.com/



http://inioru.com/?p=12347

Radhakrishnan said...

அமெரிக்காவிலும் தமிழ் சங்கங்கள் இருக்குமே, இலண்டனில் கூட வெவ்வேறு சங்கங்கள் உண்டு, மிக்க நன்றி சித்ரா.

சரியாகவே சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி மருத்துவர் ஐயா.

அவர் தனது எண்ணமும் எனது எண்ணமும் ஒன்றாகவே இருக்க அகநாழிகை என சொல்லிவிட்டார் என நினைக்கிறேன். மிக்க நன்றி வாசு சார்.

இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

Radhakrishnan said...

தகவலுக்கு நன்றி ஐயா.