Sunday 25 April 2010

அங்காடித் தெரு - டிவிடி விமர்சனம்

இந்த படத்தைப் பத்தின எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வெயில் அப்படின்னு ஒரு படத்தைப் பார்த்துட்டு அட நம்ம ஊரு அப்படின்னு ஒரு பாசம் வந்து சேர்ந்துச்சு. அதுக்கப்பறம் இப்ப வெயில் படத்தோட கதைய நினைச்சு பார்த்தா முழு கதையும் ஞாபகத்துக்கு வந்து சேர மாட்டேங்குது. இன்னொரு தரம் வெயில் படத்தைப் பார்த்துரனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த அங்காடித் தெருவுக்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்படாது.

அங்காடித் தெரு அங்காடித் தெரு அப்படின்னு சொல்றாங்களே, இந்தப் படத்தைப் பாத்துட்டு பல பேரு மனசு ரொம்ப கனமா உணர்ந்தாங்கன்னு கேள்விபட்டு படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருந்துச்சி.

ரொம்ப நாளுக்கு முன்ன இப்படித்தான் பொற்காலம்னு பொக்கிஷம்னு ஒரு படத்தை ரொம்ப பொறுமையா பார்த்து முடிச்சேன். நானும் நல்லா இருக்குனு மத்தவங்ககிட்ட சொல்லி வைக்க படத்தை பாத்தவங்க சரியான குப்பைனு சொல்லிட்டாங்க. அப்படி சொன்னாக்கூட பரவாயில்லை, என்ன ரசனை உனக்குன்னு என்னைத் திட்டிட்டாங்க. அப்புறம் கந்தசாமி படத்தை நான் பாக்காம இருந்துட்டேன். மத்தவங்க எல்லாம் கந்தசாமி படத்தைப் பாத்துட்டு ஆஹா ஓகோனு பாராட்டினாங்க. சரி போய் தொலையுதுன்னு கந்தசாமியை ரொம்ப நாளைக்கப்பறம் பாத்து வைச்சேன். அப்ப என்னைய நானே திட்டிக்கிட்டேன். இது மாதிரி ஒரு படத்தை எல்லாம் பார்க்கனுமா சாமினு நினைச்சேன்.

இது போல ஒரு படம் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு கேள்விபட்டு அதுக்கப்பறம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட பேரு உன்னைப் போல் ஒருவன். படம் நிறையவே பிடிச்சி இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த படத்துக்கு ரொம்ப பேரு சாயம் பூசிட்டாங்கனு. ஒரு படத்தை பாத்துட்டு ஐயோ அம்மான்னு கத்துற வழக்கம் நம்மளை விட்டு ஒருபோதும் மாறாது. அதக்கப்பறம் தமிழ்ப்படம்னு ஒரு படம், தன்னைத்தானே நகைச்சுவையோட விமர்சிக்கிறப்ப உண்மை நிலை தெரிஞ்சி போயிரும். அப்படிதான் இந்த படமும் இருந்துச்சி. நல்லாவே சிரிக்கத் தோணியது. அதுவும் கடைசி கட்டம் படத்தோட வெற்றின்னு சொல்லலாம்.

சரி அங்காடி தெருவுக்கு வருவோம். விருதுநகர் தெருவுல எல்லாம் இந்த அங்காடி அப்படிங்கிற வார்த்தை ரொம்ப பிரபல்யம். தெலுங்குல கூட 'அங்கடி' அப்படினு சொன்னா அது கடையைத்தான் குறிக்கும். அங்காடி அப்படிங்கிறது நல்ல தமிழ் சொல். கடைத் தெரு அப்படிங்கிறத விட அங்காடி தெரு ரொம்பவே நல்லா இருக்கு.

படம் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் நிஜமான மனிதர்கள் கண்ணுக்கு வந்துட்டே இருந்தாங்க, அதனாலவோ என்னவோ படத்துல ஒரு பிடிப்பு இல்லாம போயிருச்சி. அப்புறம் சொல்வாங்க, ஏழையின் உணர்வினை புரிந்து கொள்ளனும்னா ஏழையாவே இருந்துப் பார்த்தாத்தான் தெரியும்னு. பணத்தோட புரளுரவங்களுக்கு, என்ன பெரிய கஷ்டம்னு மத்தவங்களை ஏளனமாத்தான் பாக்கத் தோணும்.

எங்க ஊருல இருந்து கூட தீப்பெட்டி வேலைக்கு, மண் அள்ளுற வேலைக்கு, பஞ்சு ஆலைக்குனு வேலைக்குப் போய்ட்டு வரவங்களப் பார்க்கறப்போ கஷ்டமாத்தான் இருக்கும். படிச்சி நல்ல வேலைக்குப் போகலாம்னு பார்த்தா இந்த படத்துல வரமாதிரி ஏதாவது ஒரு நிகழ்வு வந்து அவகளை கஷ்டத்திலேதான் வைச்சிருக்கும். 'எங்க பொழப்பு அப்படிதான் ராசா'னு அவங்க சொல்றச்சே 'சே என்ன வாழ்க்கை இது' அப்படினு ஒரு எரிச்சல் வந்துட்டுப் போகும்.

இந்த படத்துல நல்ல நல்ல பாடல்கள் இருந்தாலும் என் வழக்கப்படி பாடல்களை படத்தோட சேர்த்துப் பார்க்கிறது கிடையாது. பாடலை தனியாத்தான் பார்க்கிறது வழக்கம். சில படங்களுல பாடலை தள்ளிவிட்டுட்டுப் பார்த்தா ஏழை பணக்காரன் ஆகியிருப்பாரு. அந்த மாதிரி அசட்டுத்தனம் எல்லாம் இந்த படத்துல இல்லை.

படத்துல கஷ்டப்படறவங்களையும், அடிமைப்படுத்துதலும், பாலியல் தொல்லைக்கு உள்ளாகிற பெண் வர்க்கம்னு காட்டி இருந்தாலும், காதலோட வலியையும், காதலோட வலிமையையும் காட்டி இருந்தது நல்லா இருந்தது. கடைக்குள்ளாறப் போய் பொருள் வாங்கறப்ப எல்லாம் அவங்களும் நம்மளைப் போல மனுசருங்கனு முகம் சிரிச்சி அவங்களோடப் பேசியே பழகிப் போன எனக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்துச்சு. முன்னால இருந்த விசுவாசம் அப்படிங்கிற வார்த்தைக்கு இப்ப எல்லாம் கொடுக்கப்படற அடைமொழி அடிமைப்படுத்துதல், சுரண்டுதல். மத்தவங்களோட பலவீனத்தைப் பயன்படுத்தித் தன்னைத்தானே உயர்த்திக்கிறது ஒரு தனிமனுசனிலிருந்து ஒரு நாட்டு வரைக்கும் இருக்கத்தான் செய்து.

திருவிழா சமயத்துல பொருள் விக்கிறவங்களப் போல அங்காடித் தெருவில பொருள் விக்கிறவங்களோட வாழ்க்கை பார்க்கிறவங்களுக்கு கஷ்டம், ஆனா அப்படி வாழுறவங்களுக்கு வாழ்க்கை ஒருவித போராட்டம். பணம் வைச்சிருக்கிறவங்க காட்டுற பரிதாபம் ஒன்னும் யாரோட வாழ்க்கையையும் உயர்த்தப் போறதில.

இப்படி கஷ்டப்படறவங்க, வாழ்க்கையில நஷ்டபடறவங்களோட வேதனையை படைப்புகளாக எழுதி, படங்களா காட்டி தங்களோட பொழப்பை நடத்துர படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் மனசாட்சினு ஒன்னு இருந்தா இந்த நிலையை மாத்துரதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரட்டும். அது மட்டும் முடியாது, ஏன்னா இவங்களும் ஜோசியக்காரங்க போலதான். உன் வாழ்க்கை இப்படி ஆகும், அப்படி ஆகும்னு சொல்லும் ஜோசியக்காரங்க போல, இதோ இப்படி இருக்கு, அதோ அப்படி இருக்குனு படம் காட்டி ப்ச் கொட்டிட்டு போற கூட்டம். இதுபோன்ற இழிநிலை வலிக்கு நாமளும் காரணம்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எல்லாம் கர்ம வினைனு கைதட்டிட்டு போற கூட்டத்துல நாமளும் இருக்கோம்னு நினைக்கிறப்போ அதனோட வலி என்னவோ அதிகம் தான்.

3 comments:

Chitra said...

It is very interesting to read your views.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விமர்சனம் ராதாக்கிருஷ்ணன் சார்.

Radhakrishnan said...

மிகவும் நன்றி, சித்ரா மற்றும் ஸ்டார்ஜன்.