Wednesday 14 April 2010

கதை கதை கேளு - தொடர்பதிவு

சில தொடர் பதிவுகளை எழுத வேண்டும் என்பதின் முதல் கட்டமாக முதல் அழையாத் தொடர் வரிசையில் நுனிப்புல் நாவலில் பங்கு பெற்ற ஒரு கதை மட்டுமே இங்கே அளிக்கப்படுகிறது.  இனி கதையை கேளுங்க, படிங்க. 

வாசன் சாப்பிட்டு முடித்துவிட்டு சுமதியிடம் விபரம் கேட்டான். சுமதியும் தனக்கு பரீட்சை வருவதாகவும் வெளியில் சிலர் காத்துக் கொண்டு இருப்பதாகவும் படிப்பு சொல்லித்தர வேண்டும் என சொன்னாள். ‘’ இன்னைக்கு தோட்டத்தில அதிக வேலை இருந்தது அதனாலதான் வரமுடியல, பாடம் மட்டும்தான இன்னைக்கு’’ என்றான் வாசன். ‘’இல்லை மாமா, பாடத்தோட கதையும் வேணும்’’ என்றாள் சுமதி.

வெளியில் தலைமை சீடரை அனுப்பிவிட்டு என்ன இனியும் காணவில்லை என காத்துக் கொண்டு இருந்தார்கள் செல்வங்கள். அவர்கள் சத்தம் போடாமல் அமைதியாய் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. வாசன் வந்ததும் பாலு ‘’எனக்கு பாடத்தில பெயிலாப் போய்ருவோம்னு பயமா இருக்கு’’ என்றான். வாசன் ‘’இன்னும் பரீட்சைக்கு நாள் இருக்குத் தான, படிச்சிரலாம்’’ என்றதும் சிறு நம்பிக்கை வந்தவன் போல சரியென தலையாட்டினான். வீட்டின் வெளியில் வெளிச்சம் இருந்தது, அனைவருக்கும் பாய் விரித்து அமரச் சொன்னான் வாசன். அனைவரும் அமர்ந்தனர். பாடங்கள் சொல்லித் தந்தான். ‘’எவ்வள படிச்சாலும் மறக்குது’’ என பாலு தன் நிலையை வாசனிடம் சொன்னதும் ‘’ஒண்ணோட ஒண்ணு ஒப்புமை படுத்தி படிச்சா மறக்காது, இலகுவா ஞாபகம் வைக்க உதவும், நாம மனனம் செய்துதான் படிக்கனும் அதே வேளையில் புரிஞ்சி மனனம் செஞ்சா நல்லது’’ என்றதும் ‘’பரீட்சை முடிஞ்சிட்டா ஜாலிதான்’’ என்றான் பாலு.

வாசன் அதற்கு ‘’பரீட்சை முடிஞ்சாலும் படிச்சிக்கிட்டே இருக்கனும் இல்லைனா 'நூறு நாள் கற்ற கல்வி ஆறு நாள் விடப்போம்' மாதிரி ஆயிரும், இதற்கு அர்த்தம் தெரியுமா’’ என்றான். சுமதி சொன்னாள் ‘’நூறு நாள் படிச்சி ஆறு நாள் படிக்காம விட்டா நூறு நாள் படிச்ச கல்வி மறந்துரும்’’ என்றதும் ‘’ஆமா’’ என்றான் வாசன். ‘’அப்படின்னா படிச்சிகிட்டே இருக்கனுமா’’ என்றான் பாலு. ‘’விசயங்கள் தெளிவுபடுத்திக்கிற படிச்சிட்டுத்தான் இருக்கனும். வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உபயோக்கிறோம் அப்படிங்கிறது இரண்டாவது பட்சம்’’ என்றான் வாசன்.

‘’படிப்பு அப்படிங்கிரது ஒவ்வொரு விசயத்திலும் இருந்து படிக்கிறது, வெறும் புத்தகப் படிப்பு படிப்பாகாது. விசயம் தெரிய விசயங்கள் படிக்கனும் ஆனா எப்படி நடைமுறையில நடந்துக்கனுமோ அதுக்கு நமது விவேக புத்தியை உபயோகிக்கனும், அதுதான் சிறந்த கல்விக்கு வரைமுறை’’ என்றதும் பழனி ‘’இதை எங்க வாத்தியார் சொல்லமாற்றாரு, புத்தகத்தை படிங்கடா மனப்பாடம் பண்ணுங்கடான்னு சொல்றார்னே’’ என்றான். ‘’நீ எவ்வளவு விசயம் தெரிஞ்சவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்தில நீ எடுக்குற மதிப்பெண்கள் வைச்சித்தான் உன்னை எடை போடுவாங்க அதனால அவர் சொல்றதுதான் சரி, ஆனா உலக நடப்பு அப்படி இல்ல’’ என்றான் வாசன். பாடங்களை படித்து முடித்தார்கள். வாசன் நாளைக்கு பார்க்கலாம் என்றதும் சுமதி ‘’மாமா கதை’’ என்றாள். வாசன் சற்று யோசித்தவாறே இதோ நான் கேள்விபட்ட கதை சொல்றேன் என ஆரம்பித்தான்

‘’ஒருத்தன் மற்றவர்களுடைய மனசை படிக்கிற படிப்பை எடுத்து நல்லவிதமா படிச்சு முடிச்சான்’’ என்று வாசன் ஆரம்பிச்சதும் ‘’அது என்ன படிப்புன்னே’’ என்றான் பழனி. ‘’அதை ஆங்கிலத்தில சைக்காலஜினு சொல்வாங்க தமிழ்ல மன உளவியல்னு சொல்வாங்க’’ என்றதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘’ சாமி கதை இல்லையா, நம்ம ஊருக்கு வந்தாரே ஒரு தாத்தா அவர் பத்தி இல்லையா’’ என்றான் பாலு. ‘’இல்ல இது வேற கதை’’ என்றான் வாசன். ‘’கதைய சொல்ல விடுங்கள்’’ என்றாள் வேணி.

வாசன் தொடர்ந்தான். ‘’அப்படி அவன் படிச்சி முடிச்சதும் தனது நண்பனோட கிராமத்தை விட்டு தள்ளி தனியா ஒரு வீடு எடுத்து தங்கினான்’’ ‘’அவர் நண்பன் என்ன படிச்சிருக்கார்னே’’ என்றான் பழனி. வாசன் சிரித்துக் கொண்டே ‘’அவன் நண்பன் சட்டம் படிச்சி இருந்தான், இப்படி இவங்க தங்கி இருந்தப்ப படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போகாத ஒருத்தர் இவனோட தனியான வீட்டை பார்த்து வந்தார்’’ ‘’யாருனே நம்ம முத்துராசு மாமா மாதிரியா’’ என்றான் பழனி. ‘’அப்படியெல்லாம் இல்லை’’ என்று சொல்லிய வாசன் ‘’கதைய கேளு’’ என்றான். ‘’நீங்கதான அண்ணே ஒப்புமை படுத்தி படிக்கச் சொன்னீங்க’’ என்றான் பழனி. மற்றவர்கள் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

‘’அந்த நேரம் பார்த்து அவனது சட்டம் படிச்ச நண்பன் வெளியூருக்கு போயிருந்தான், முன்ன பின்ன தெரியாதவர் இவன்கிட்ட வந்து எனக்கு பசிக்குது ஏதாவது கொடுன்னு கேட்டார்’’ அந்த நேரம் பார்த்து ஏதொ சொல்ல வாயெடுத்த பழனியின் வாயினை மூடினான் பாலு. வாசன் புன்னகைத்துக் கொண்டே ‘’உள்ள வாங்க அப்படின்னு அவரை வரவழைச்சி உணவு தந்தான், அவர்கிட்ட நிறைய நேரம் பேசிகிட்டு இருந்தான், அவரும் நிறைய விசயங்கள் பேசினார் அப்படி பேசிட்டு இருக்கறப்ப நேரம் போறதே தெரியல இருட்டிருச்சு, உடனே அவர் இங்க தங்கிட்டு காலையில போறேன்னு சொன்னதும் சரி அப்படின்னு சம்மதம் தந்து படுக்கச் சொன்னான். புதுசா வீடு போனதால நிறைய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் வங்கி வைச்சி இருந்தான், சரின்னு தூங்கினாங்க’’ என நிறுத்தினான் வாசன்

‘’என்ன அண்ணே ஆச்சு’’ என்றான் பழனி இம்முறை வாய் மூட வந்த பாலுவின் கைகள் விளக்கி. வாசன் தொடர்ந்தான். ‘’காலையிலே எழும்பி பார்த்தப்ப வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாம் காணோம் அந்த ஆளையும் காணோம், அய்யோ ஏமாந்துட்டுமேன்னு தலையில கை வைச்சி உட்காந்துட்டான்’’ என்றதும் ‘’அவன் தான் பிறர் மனசை படிச்சிருக்கிறாரே மாமா பின்ன எப்படி’’ என்றாள் சுமதி. ம்ம் எனச் சொல்லிவிட்டு ‘’அவன் நண்பன் வந்தவுடன் இதை பார்த்து பதறிப் போய் என்ன ஆச்சுனு கேட்டான், அதுக்கு அவன் நேத்து ஒருத்தர் வந்தார் நல்லா பேசினார் பிறகு தூங்கனும்னு சொன்னார் இப்படி பண்ணிட்டு போய்ட்டார்னு’’ சைக்காலஜி படிச்சவன் சொல்ல சட்டம் தெரிஞ்சவனுக்கு கோவம்னா கோவம் ‘’அறிவு இருக்காடானு திட்டினான் முன்ன பின்ன தெரியதவங்களை எப்படி நம்பலாம் உன் படிப்பை உபயோகிக்க வேண்டியது தான’’ அப்படினு சொன்னான். அவன் சொன்னான் ‘’படிப்பை உபயோகிச்சு அவர்கிட்ட பேசினப்பறம் அவர் நல்லவருனு முடிவு பண்ணித்தான் தங்க விட்டேன்னு சொன்னதும் அவனையும் அவன் படிப்பையும் திட்டிக்கிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்னு’’ அந்த நண்பன் சொன்னான்.

இங்க வந்து பொருள் எல்லாம் திருடிட்டு போனவரை அவர் வீட்டுல பார்த்த அவரோட மனைவி ‘’எப்படி இவ்வளவு பொருள்னு கேட்டாங்க அதுக்கு அவர் சிரிச்சிக்கிட்டே ஒருத்தனைப் பார்த்தேன் அவன் தலையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டாத குறைதான் பேசி தூங்கறாப்ல நகர்த்திட்டேன்னு சொன்னார்’’ இதில இருந்து என்ன தெரியுது என்றான் வாசன். ‘’ஏமாத்துறவங்க ஏமாத்திட்டே இருப்பாங்க’’ என்றான் பாலு. ‘’கற்றது கையளவு கல்லாதது உலகளவு’’ சுமதி சொன்னாள். வாசன் சிரித்துக் கொண்டே ‘’ம்ம், எதிலயும் சமயோசிதமா சிந்திச்சு வாழனும், வெறும் புத்தகப் படிப்பை நம்பக் கூடாது’’ என்றதும் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள் .

3 comments:

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

அட!!!!
இந்த கதை நல்லா இருக்கே.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ராஜா, பரோட்டா, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.