Friday 30 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 8

கதிரேசனை வீட்டிற்குள் அழைத்தார் செல்லாயி. ஆனால் உள்ளே செல்லாமல் வெளியே நின்றான் கதிரேசன். கதிரேசனிடம் என்னைத் தேடி நீ வந்திருக்க அவசியமில்லை என்று செல்லாயி சொன்னார். பார்க்க வேண்டும் போல் தோணியது என்ற கதிரேசனிடம் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்றார் செல்லாயி. நான் சிவன் பக்தன் என்றான் கதிரேசன். நீ என் மகன் என்பதை யாரும் மறுக்க மாட்டாங்க என்ற செல்லாயி நீ முதலில் உள்ளே வா, வெளியே நின்னு பேசாதே என்றார்.

அதற்குள் ஊரில் இருந்த சிலர் அங்கே வந்து சேர்ந்தனர். நடந்த விசயம் உடனே தெரிந்து கொண்டனர். கதிரேசனை நோக்கி படிக்கிற வயசுல என்ன பக்தி வேண்டி கிடக்கு என்றார்கள். அதிலும் ஒரு பாட்டி ‘’கதிரேசு, புளி புளிக்கத்தான் செய்யும் ஆனா அது பதார்த்தங்களை கெடாம பாதுகாக்கும் தன்மை வச்சிருக்கு, அதுபோல இந்த குடும்பவாழ்க்கை கசக்கறமாதிரிதான் தெரியும் ஆனா சந்ததி சந்ததியா காத்து வரும்’’ என்றார். ''செல்லாயி, ஒரு கல்யாணத்தை இவனுக்குக் கட்டி வையி, எல்லாம் சரியாப் பூரும்'' என்றார் அந்த பாட்டி மேலும்.

‘’எனக்கு என்ன பண்றதுனு தெரியலை, ஒருவாரம் படிக்கப் போய்ட்டு இப்படி வந்து நிற்கிறான். யார் என்ன மந்திரம் செஞ்சாங்களோ'' என்றார் செல்லாயி வேதனையுடன். ''நீ தான் நல்லா படிச்சி வருவனு பார்த்தா இப்படி பொறுப்பில்லாம சாமியாரு ஆயிட்டேன்னுட்டு, போய் நல்லா படிச்சி முன்னுக்கு வரப் பாரு'' என பொறுப்பில்லாமல் இளைஞர்களும், தந்தையர்களும் சுற்றிவரும் ஊரில் பொறுப்புடன் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.

''வீட்டுக்குள்ள வாப்பா, மத்ததைப் பிறகு பேசிக்கிரலாம்'' என கதிரேசனை உள்ளே அழைத்துச் சென்றார் செல்லாயி. கதிரேசன் வீட்டுக்குள் நுழைந்தான். மற்றவர்கள் கலைந்து சென்றார்கள். செல்லாயியின் உறவினர்கள் கேலி பேசினார்கள். ஒரு மகனைப் பெத்து அவனை சாமிக்கு நேந்துவிடத்தான் வளர்த்தியாக்கும் என்றார்கள். கதிரேசன் வீட்டில் தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான். நாழிகை கழிந்து கொண்டே இருந்தது. ஊரெல்லாம் கதிரேசன் பற்றிய பேச்சாகிவிட்டது. 'இந்த வயசுல சாமியாரு ஆயிட்டேனு வந்து நிற்குது' என்றார்கள் சிலர்.

கதிரேசனிடம் பல விசயங்கள் சொல்லி அலுத்துப் போயிருந்தார் செல்லாயி. ''பரம்பரையே இல்லாமப் போயிரும்பா யோசிச்சி செய்பா'' என்றதோடு நிறுத்திவிட்டு அமைதியானார். ஒரு சில மணி நேரங் கழித்து வீட்டுக்கு வந்த கதிரேசனின் தந்தை வழி தாத்தா ''இவங்களுக்குத் தெரியுமா? அத்தனையும் ஒதுக்கிட்டு சிவனே கதி என இருக்கறது எத்தனை கடிசுனு இவங்களுக்குத் தெரியுமா? கதிரேசு, நீ எடுத்த முடிவு அத்தனை சாதாரணமில்ல, மனசு ஓரிடத்தில உட்காராது, கண்ணை மூடிக்கிட்டாலும் கண்டது மனசுக்குள்ள கன்னாபின்னானு சுத்தும், எல்லோரும் போல சிவனைத் தொழுதுட்டு சாதாரணமா வாழ்ந்துட்டுப் போக வழியப் பாரு அம்புட்டுதான் சொல்வேன்'' என்றார் அவர் பங்குக்கு.

செல்லாயியின் அண்ணன் விசயம் கேள்விபட்டு துவாரம்பட்டியிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ''என்ன புள்ளைய வளர்த்து வைச்சிருக்க, சாமியாரா போறான்னா அதை ஊரு பூரா பரப்பிட்டு திரியனுமா, ஏண்டா நீதான் சாமியாராப் போகனும்னு முடிவு பண்ணிட்டா என்னத்துக்கு உன் ஆத்தாளப் பார்க்க வந்த, அப்படியே அங்குட்டு போக வேண்டியதுதானே, மானம் போகுது, ஊருல பார்க்கறவனெல்லாம் உன் மருமகன் கதிர்ஈசனா மாறிட்டானு கேலி பண்றானுங்க, ஒழுங்கா இருக்கற வழியைப் பாரு இல்லை கையை காலை உடைச்சி மூலையில உட்கார வைச்சிருவேன்'' என கோபத்தின் எல்லைக்குச் சென்று கத்தினார் அவர். கதிரேசன் எந்த ஒரு சலனமுமின்றி அமைதியாகவே அமர்ந்து இருந்தான்.

செல்லாயி தனது அண்ணன் லிங்கராஜுவை தனியாய் அழைத்து ''உன் பொண்ணை என் பையனுக்கு உடனே கல்யாணம் பண்ணிருவோம்ணே, இவன் இருக்கறதப் பார்த்தா பயமா இருக்கு'' என்றவுடன் ''அவ படிச்சிட்டு இருக்கா, இப்படி மனசு இருக்கறவனுக்கு என் பொண்ணை ஒரு காலமும் தரமாட்டேன், நாளைக்கே ஓடிப் போய்ட்டான்னா என் பொண்ணு நிலைமை என்னாகிறது'' என சொல்லி முடித்த அடுத்த கணமே ''என் புள்ளைய நீ இனி திட்டாதேண்ணே, நீயும் விசயம் கேள்விபட்டு வராமலேயே இருந்திருக்கலாம்'' என்றார். லிங்கராஜு வீட்டை விட்டு வெளியேறினார்.

நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. முழு தினமும் விரதம் இருந்து இருந்தாள் செல்லாயி. அவரவர் உறங்கச் சென்று விட்டார்கள். ''உனக்கு தெரியாதாய்யா, அந்த ஈசனே குடும்பஸ்தருய்யா, சிவனைப் பத்தி நீ சின்ன வயசுல இருந்தே சொல்சிவனேனு சிலாகிச்சிப் பாடறப்ப எல்லாம் எனக்கு கேட்க சந்தோசமா இருக்கும் ஆனா இப்போ நீ இருக்கற நிலையைப் பாத்தா எனக்கு உசிருப் போகற மாதிரி இருக்குப்பா, இப்பப் பாடுப்பா'' என அழுத விழிகளுடன் சொன்னார் செல்லாயி. கதிரேசன் தனது அமைதியை கலைத்தான்.

உன்பக்தனாய் மாறிய கணம் பந்தம் வேண்டாமென
தன்நிலை தவறிய சிறுகுழந்தையை போன்றே
பெற்றது என்நிலை என்பதாய் கருதியே பேசினர்
உற்றவள் உயிரை அண்டம்தருமோ சொல்சிவனே.

செல்லாயி மயங்கி விழுந்தாள். கதிரேசன் அம்மா அம்மா என பதறியவண்ணம் எழுப்பினான். தண்ணீரை எடுத்து வந்து தெளித்தான். மயக்கம் தெளிந்த செல்லாயி பதறிய கதிரேசன் கண்டு ''மத்த உயிர் கலங்கறதைக் கண்டு காப்பாத்த துடிக்கிற உணர்ச்சியை விட எந்த உணர்ச்சியும் சிவனுக்கு உகந்தது இல்லைப்பா'' என்றார் அவர். சமையல் அறையில் செல்லாயி விரதம் முடிக்க வைத்திருந்த உணவை எடுத்து வந்து அன்னைக்கு ஊட்டி விட்டான் கதிரேசன். அவனது கைகள் நடுங்கியது.

(தொடரும்)

4 comments:

Chitra said...

Good story..... ! :-)

மதுரை சரவணன் said...

// ''மத்த உயிர் கலங்கறதைக் கண்டு காப்பாத்த துடிக்கிற உணர்ச்சியை விட எந்த உணர்ச்சியும் சிவனுக்கு உகந்தது இல்லைப்பா'' என்றார் அவர். சமையல் அறையில் செல்லாயி விரதம் முடிக்க வைத்திருந்த உணவை எடுத்து வந்து அன்னைக்கு ஊட்டி விட்டான் கதிரேசன். அவனது கைகள் நடுங்கியது.//
super. good story

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, சரவணன்

Radhakrishnan said...

வால்பையன் தங்கள் தளம் நன்றாக உள்ளது, மிக்க நன்றி.