Monday 26 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 6


பூஜை அறையில் சென்று அமரும் முன்னர் கதிரேசன் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். உடலெல்லாம் திருநீறுடன் நிற்கும் அவனைப் பார்த்த நீலகண்டன் ''என்ன கோலம் இது?'' என்றார். ''மனம் விரும்பியது தாத்தா'' என்றான் கதிரேசன். பூஜை அறையில் அமர்ந்தார்கள். சிரத்தையுடன் வழிபட்டார்கள். தீபம் எடுத்து காண்பித்தார் நீலகண்டன். தானாகவேப் பாட ஆரம்பித்தான் கதிரேசன்.


''ஒளியது உன்னால் விளைந்தது எனில் பெருமானே
தெளிய வேண்டிட இருளும் உனதோ
பஞ்ச பூதங்களும் விரிந்துபறந்து செல்லும் வழியை
அஞ்ச வைத்து அடக்குவதோ சொல்சிவனே


நெஞ்சினில் நித்தம் உனைப்பாடும் நிலையது கொண்டேன்
கெஞ்சியும் உனை தொழுவதில்லை என்றார்
உலகோர் எல்லாம் உனைமட்டும் தொழவே
கலகம் கலங்கிப் போயிருக்காதோ சொல்சிவனே


நன்மையதை மட்டுமே நாதன் நீயும் கொண்டிட
இன்னது என்வசம் தந்திடு கேட்கிலேன்
புல்லும் புல்வளர்த்த துகளும் அகக்கண் ஆனதால்
கல்லும் உயிர் பெற்றதோ சொல்சிவனே''


பாடி முடித்தவன் பக்கத்தில் பார்த்தான். கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்தார் நீலகண்டன். தனது கண்களை இரு கைகளால் துடைத்துக் கொண்டான். கண்கள் திறந்த நீலகண்டன் கதிரேசனை நோக்கினார்.


''உன்னோட கேள்விக்கெல்லாம் ஒருநாள் பதில் கிடைக்கும், பதில் கிடைக்கலையேனு ஆத்திரமோ ஆதங்கமோ படாதே, நீ அறிஞ்சி சொல்ற பதில் எனக்கு உகந்ததா இருக்கலாம். இந்த உலகத்தார் எல்லார்க்கும் உகந்ததா இருக்கலாம், ஏன் யாருக்குமே உகந்ததாக இல்லாமலும் போகலாம். ஆனா மொத்த உலகமும் ஏத்துக்கிற ஒன்னு இருக்கு.

உனக்குத் தெரிஞ்சிருக்கும் தென்னாட்டுச் சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்படினு. இரண்டாவது வரியை எழுதினப்போ ரொம்ப அழகா அமைச்சிட்டார், அதுதான் எல்லாம் சிவமயம். நான் சொல்றதெல்லாம் நீ ஏத்துக்க வேண்டியது இல்லை. எனக்கு இது போதும்னு என்னோட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் இருந்திட்டு வரேன். என்கிட்ட படிச்சவங்க எல்லாம் என்னை இந்நிலையிலப் பார்க்கறப்போ 'சார் நீங்களா இப்படி மாறீட்டீங்கனு?' கேட்காமப் போகமாட்டாங்க. அவங்களுக்கு என்னால புன்னகையை மட்டுமே பதிலாகத் தரமுடியுது, உன்னோட பாதையை நீ எந்த ஒரு வெளி அழுத்தத்துக்கும், ஏன் உன் உள் அழுத்தத்துக்கும் அகப்பட்டு தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக்காதே, உருவாக்கிக்காதேனுதான் சொல்வேன், எதுவும் உன்னோட விருப்பம்''

மேலும் தொடர்ந்தார். ''சிவபுராணம் படிச்சிருக்கியா?'' என்றவரிடம் ''பிறர் பாடக் கேட்டு இருக்கேன், நானா எல்லாம் படிச்சது இல்லை தாத்தா'' என்றான் ஆச்சரியத்துடன் கதிரேசன். அதுல மாணிக்கவாசகர் பாடுவார்.

''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணிய''

''கேட்டு இருக்கியா?''என்றார் நீலகண்டன். ''வாழ்த்தும் போற்றியும் மட்டுமே கேட்டு இருக்கேன் தாத்தா'' என்ற கதிரேசனிடம் சிவபுராணம் எடுத்துக் கொடுத்தார். நேரமிருக்கிறப்போ இதைப் படி என்றார். ''எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேனு சொல்வார், எப்படினு நீ யோசிச்சிப் பாரு. பதில் கிடைக்கலைன்னா வந்து கேளு''' என பிரசாதம் கொடுத்தார். கதிரேசன் கைகளில் சிவபுராணம் தவழ்ந்தது.


(தொடரும்)

3 comments:

Chitra said...

''எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேனு சொல்வார், எப்படினு நீ யோசிச்சிப் பாரு. பதில் கிடைக்கலைன்னா வந்து கேளு''' என பிரசாதம் கொடுத்தார். கதிரேசன் கைகளில் சிவபுராணம் தவழ்ந்தது.

..... Good one. :-)

vasu balaji said...

தொடருங்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, வானம்பாடிகள் ஐயா.