Wednesday 28 April 2010

பனிப் பிரதேசம் - 4

ஸ்டேட்ஸ்வொர்த் எனப்படும் இடமானது பூங்காவினையும், அருமையான கட்டிடம் ஒன்றையும் கொண்டிருந்தது. அரச பரம்பரையினரால் இந்த கட்டிடம் பல வருடங்களாக பராமரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்தனை முன்னிட்டு அந்தக் கட்டிடம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர்களில் அழகாக வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. ஓவியங்கள் மிக அருமையாக வரையப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பூங்கா பகுதியில் நடக்க ஆரம்பித்தோம். வெயில் காலத்தில் வண்ண வண்ணப் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த பூங்கா எங்கும் பனியுடன் காட்சி தந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அங்கே பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதியம் அங்கேயே உணவு அருந்திவிட்டு எப்படியாவது குகை ஒன்றுக்குள் சென்று பார்த்துவிட வேண்டுமென அங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ளே ஒரு குகைதனைப் பார்க்க விரைந்தோம்.

மதிய உணவு என்றதும் நினைவுக்கு வருகிறது. காலை உணவு ஹோட்டலிலேயே தந்தார்கள். காலை உணவு, இரவு உணவு போல் அல்லாது மிகச் சிறப்பாகவே இருந்தது.

விரைந்து சென்று அந்த குகையைப் பார்க்கச் சென்றபோது சற்று பனி அதிகமாக கொட்டத் தொடங்கியது. குகை இருக்கும் இடத்திற்குச் சென்றுப் பார்த்தால் குகை மூடப்பட்டு இருந்தது, பனி மிக அதிகமாக அங்கு நிறைந்து இருந்ததால் வாகனம் செல்லவும் வழியில்லை. பனி விழுவதைக் கண்டதும் நேராக ஹோட்டல் சென்றுவிடலாம் என முடிவெடுத்தோம்.

ஹோட்டல் சென்றடைந்த போது மணி மூன்றரை ஆகியிருந்தது. ஹோட்டலிலேயே அமர்ந்து இருப்பதா என யோசித்தவாரே பனி விழும் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக தொடர்ந்து பனி விழவில்லை. தொலைகாட்சியில் செய்தியைப் பார்த்தபோது பனி விழுந்த காரணத்தினால் பலர் காரினை அப்படி அப்படியே விட்டுவிட்டுச் சென்றதாகவும், இரவெல்லாம் காரில் இருந்ததாகவும் தென் இங்கிலாந்து பகுதியில் ரெட்டிங் எனும் ஊரில் நடந்த விசயத்தைச் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் ஒரு சாலையைப் பற்றிச் சொன்னார்கள். அந்த சாலையில் தான் திங்கள் கிழமை காலையில் கிளம்பி வந்திருந்தோம், புதன் அன்று அதே வழியில் தான் செல்ல வேண்டும். எல்லாம் சரியாகிவிடும் எனும் நம்பிக்கை இருந்தது. ஹோட்டலிலிருந்து அருகில் உள்ள ஊரின் பகுதிக்குள் நடந்தே சென்றோம்.

கடைகள் எல்லாம் மூடிக் கொண்டிருந்தார்கள். இரவு என்ன சாப்பாடு என யோசித்துக் கொண்டு கடை வீதிகளில் நடந்து திரும்புகையில் இந்திய உணவுக் கடை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்று அவர்களிடம் பேசுகையில் இருபது வருடங்களுக்கு மேலாக கடை வைத்திருப்பதாகவும் மான்செஸ்டரில் இருந்து வந்து செல்வதாகவும் கடை திறந்து அரைமணி நேரம் ஆவதாகவும் கூறினார். எங்களைத் தவிர கடையில் வேறு எவரும் இல்லை. டெர்பி பல்கலைகழகத்தில் இந்திய மாணவர்கள் அதிகம் படிப்பதாகவும் கூறினார். கோடைகாலத்தில் கடை நிரம்பி வழியும் எனவும் சொன்னார். கடையில் உணவு பொருட்கள் வாங்கிச் சென்றோம். உணவு நன்றாக இருந்தது.

கார்ன்வால் எனப்படும் இடத்தில் பனியானது உறைந்து ஒரு ஊர்வலப் பேருந்து வழுக்கி தடுமாறியதில் சிலர் இறந்த செய்தி கேட்டபோது இயற்கையின் விபரீதம் வெகுவாகவே அச்சமூட்டியது. வட இங்கிலாந்து பகுதிதான் அதிகம் பாதிக்கப்படும் என்பது போலவே ஸ்காட்லாந்து அதிக குளிரிலும், பனியிலும் வாடியதாகவும் செய்தி வந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை இவ்வாறு இங்கு கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டு வந்த இடத்தில் குகைப் பகுதி பார்க்காமலிருந்தது வருத்தமாக இருந்தது. நாங்கள் சென்ற இடம் எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. புதன்கிழமை காலையில் லண்டன் நோக்கிய பயணம் ஆரம்பித்தோம். குகை கண்களுக்குத் தென்பட்டதா?




(தொடரும்) 

6 comments:

ரோகிணிசிவா said...

awesome photos , kannuku kulirchiyaai ,
thanks for sharing

மதுரை சரவணன் said...

உங்கள் எழுத்து மிகவும் கவர்கிறது. எங்களையும் உங்களுடன் அழைத்துச் சொல்கிறது. வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான இடங்கள் ரொம்ப நல்லாருக்கும்போல.. எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சார். போட்டோக்கள் அருமை.

தோழி said...

நல்லாருக்கு தொடருங்கள்...

Chitra said...

nice keepsake photos...... :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி ரோகிணிசிவா.

மிக்க நன்றி சரவணன்,

மிக்க நன்றி ஸ்டார்ஜன்,

மிக்க நன்றி தோழி,

மிக்க நன்றி சித்ரா.