Tuesday 27 April 2010

பனிப் பிரதேசம் - 2


அங்கே பனியில் சிறிது நேரம் விளையாடினோம். முன்னும் பின்னும் காரை நகர்த்தி ஒருவழியாக ஹோட்டல் நோக்கி காரைச் செலுத்தினேன். கரு நிறப் பாதையில் மட்டுமே வாகனம் செலுத்திய அனுபவம் உண்டு. செம்மண்ணில் டிராக்டரில் அமர்ந்து சென்ற அனுபவம் நிறையவே உண்டு. ஆனால் பனிகள் நிறைந்த வெண்ணிறப் பாதையில் முதன்முதலாக காரைச் செலுத்தும்போது காரில் எச்சரிக்கை ஒலி வந்து கொண்டிருந்தது. எதிரில் ஏதேனும் கார் வந்தால் கூட விலக முடியாத நிலை. மெதுவாக காரினைச் செலுத்தி ஒருவழியாக ஹோட்டல் செல்லும் சாலை வந்தடைந்ததும் மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.

ஹோட்டல் நோக்கிச் செல்லும்போது இருபுறமும் மலைகள் எல்லாம் இமயமலைகள் போன்றே காட்சி அளித்தன. அற்புதமான பயணத்தின் முடிவில் மலையில் அமர்ந்திருக்கும் ஹோட்டலை அடைந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. நல்லதொரு வரவேற்பினைத் தந்தார் அங்கிருந்த பெண். பின்னர் எங்கள் அறையை அடைந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு வரவேற்பறை. பின்னர் உள்ளே சென்றதும் படுக்கை அறையுடன் கூடிய குளியலறை என மிகப் பெரிய அறையாகவே காட்சி தந்தது. சிறிது நேரத்தில் அறையில் தொலைபேசி சப்தம் எழுப்ப, எனது மகனுக்கான படுக்கையை தயார் செய்வதாக கூறினார்கள். அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வரவேற்பறையில் இருந்த இருக்கையானது, படுக்கையாக மாற்றப்பட்டது. அங்கே ஒரு தொலைகாட்சி, படுக்கை அறையில் தொலைகாட்சி ஒன்று என இருந்தது. வெளியில் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து இருந்தது. மரங்கள் வெள்ளை இலையுடன் அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது.

இரவுச் சாப்பாடு என ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என சென்றால் முன்பதிவு செய்ய சொன்னார்கள். இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டு ஆறு மணியளவில் சாப்பிட சென்றோம். நாங்கள் சைவ உணவு என்பதால் சற்று சிரமமாக இருந்தது. எனினும் பசிக்கு எனச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

காலையில் எங்கு செல்வது என ஒருவழியாய் முடிவு செய்து பயணித்தோம். அந்த பயணம் சிலிர்ப்பையும், பயத்தையும் தந்தது.

(தொடரும்)

3 comments:

தோழி said...

பிறகு என்ன ஆச்சு???? ஆவலுடன் காத்திருக்கேன்...

Chitra said...

உங்கள் தொடர் பயணக் கட்டுரை, நல்லா விறுவிறுப்பாக செல்கிறது. :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி தோழி, சித்ரா.