Tuesday 27 April 2010

பனிப் பிரதேசம் - 1

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு (2009) என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில் உச்சிகளின் மாவட்டம் ( பீக் டிஸ்டிரிக்ட்) எனப்படும் வட இங்கிலாந்தில்  மான்செஸ்டருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். வானிலை எச்சரிக்கை எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

தினமும் வானிலை எச்சரிக்கைப் பார்த்துவிட்டு பனி எதுவும் உச்சி மாவட்டத்தில் இல்லை என முடிவு செய்து கிறிஸ்துமஸ் வாரத்தில் திங்கள் கிழமை கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புதன் கிழமை திரும்பலாம் என முடிவு செய்தோம். எங்கு தங்குவது என அதிக யோசனை. விலை மலிவாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் தங்குமிடம் மனதுக்கு திருப்தியாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது என பல இடங்களை இணையத்தில் தேடினோம்.

எத்தனை மனிதர்கள் எத்தனை விதமாக ஒரே இடத்தைப் பற்றிய அனுபவங்கள், பிரமிக்க வைத்தது. அனைவருக்கும் ஒரே மனம் இருந்துவிடக் கூடாதா எனத் தோன்றியது. கிறிஸ்துமஸ் முதல் வார வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி தாண்டியும்  எந்த ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்ய இயலவில்லை. அறைகள் ஒன்று மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு சில ஹோட்டல்கள் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.

இறுதியாக ஆனால் உறுதியாக ஒரு ஹோட்டல் பஃக்ஸ்டன் எனும் ஊரில் தேர்வு செய்தோம். விலை மலிவாகவே இருந்தது. சனி, ஞாயிறு கிழமை கடந்துவிடாதா எனும் ஏக்கத்தில் இருக்க திங்கள் கிழமையும் வந்து சேர்ந்தது. லண்டனில் பனி பெய்ததால் சின்னச் சாலைகள் வண்ணம் பூசியதைக் கலைக்க மறுத்துவிட்டன. கால்கள் வழுக்க ஆரம்பித்தன. கிளம்பும் முன்னர் எதிர்த் தெருவில் எவரோ திருடிய கார் ஒன்று சாலையில் வழுக்கி ஒரு வீட்டு முன்புறம் நிறுத்தப்பட்ட காரில் இடித்து நின்றுவிட, காரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனார் அவர். சாலையில் கவனம் தேவை என மனம் நினைத்துக் கொண்டது.

இந்த மூன்று நாட்கள் பனி இல்லை என சொன்ன வானிலை, செவ்வாய் அன்று சற்று பனி இருக்கும் என்றே சொன்னது. இதற்கு முன்னர் பனி பெய்ததா இல்லையா என்பதை மனம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு கிளம்பி மாலை மூன்று மணி சென்றடைந்தோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாலையில் பனித்தடங்களே இல்லை.

உச்சிகளின் மாவட்டம் தனில் ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே பனி நிறைந்தே இருந்தது. பனியைக் கண்ட ஆர்வத்தில் காரினை ஓரத்தில் நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்கள் எடுத்துவிட்டு காரினை நகற்ற கார் பனியில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது.

(தொடரும்)

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்குங்க உங்க பனிப்பிரதேசம்...

நிகழ்காலத்தில்... said...

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்..

வாழ்த்துகள்..

Chitra said...

தொடரட்டும் உங்கள் பனிப் பிரதேச கட்டுரை....... பகிர்வுக்கு நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி சங்கவி, சிவா ஐயா, சித்ரா.