Monday 4 January 2010

முயல் கறி


ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழிகள் சந்தியா, விந்தியா.

சந்தியாவுக்கு ஏதாவது பிரச்சினை எனில் விந்தியா முதல் ஆளாய் நிற்பாள். சந்தியாவும் அவ்வாறே.

இருவரது ஊரும் பத்து நிமிடத்தில் நடந்து செல்லுமாறு அமைந்து இருந்தது. இரு ஊர்களுக்கும் இடையில் விவசாய நிலங்கள். அந்த விளை நிலங்கள் வீடாகிப் போனால் இரண்டு ஊர்களும் ஒரு ஊராகிப் போய்விடும். சந்தியாவின் சொந்த கிராமம் சற்று தொலைவில் இருந்தது, அங்கே அவரது பாட்டி தாத்தா வசித்து வந்தனர். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு சந்தியாவின் முழுக் குடும்பமும் சென்று விடும். வேறொரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் அவளது பெற்றோருக்கு அதுவே செளகரியமாக இருந்தது.

யார் பள்ளித் தேர்வில், விளையாட்டுப் போட்டியில் முதல் வருவது எனும் போட்டி இருவருக்குமிடையில் மிகவும் அதிகமாகவே உண்டு. ஆனால் இவர்கள் இருவரையும் இதுவரை முதலில் வராத வண்ணம் தடுத்து வரும் கணேசனும் அந்த பள்ளியில் உண்டு.

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை கழிந்து பள்ளிக்குச் சென்றனர் இருவரும்.

பாட மதி்ப்பெண்கள் என அன்றே அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் தரப்பட்டது. சந்தியா முதல் மாணவியாக முதன் முறையாக வந்தாள். விந்தியா மூன்றாம் நிலையில் இம்முறை இருந்தாள். கணேசன் தான் இரண்டாம் நிலை என அறிந்ததும் அழுதுவிட்டான்.

'இனிமே நீ அழப் பழகிக்கோடா' என சந்தியா சற்று கோபமாகவே கணேசனிடம் சொன்னாள்.

'நாங்க எத்தனை தடவை இரண்டாமிடம், மூணாமிடம்னு வந்துருக்கோம், நீ ஏண்டா அழறே' என தன் பங்குக்கு விந்தியாவும் சொல்லி வைத்தாள்.

'என்னை என் அப்பா அடிப்பாரு' என அழுதான் கணேசன்.

'என் புரோகிரஸ் ரிப்போர்ட் வந்ததும் அதை உன்கிட்ட தரவா, அதைப் பார்த்தாவது எத்தனை நான் அடி வாங்கியிருக்கனும்னு உங்க அப்பா நினைக்கட்டும்' என்றாள் சந்தியா.

'என்னதையும் சேர்த்து எடுத்துட்டுப் போ, இப்பவே புரோகிராஸ் ரிப்போர்ட் தந்து தலைவலி தராங்க' என்றாள் விந்தியா.

கணேசன் எதிர்பார்த்தது போல கணேசனின் தந்தை அவனை அடிக்கவில்லை, மாறாக நன்றாகப் படிக்குமாறு வலியுறுத்தினார்.

'சந்தியாவுக்கு என்ன வேணும்' என்று அவரது தந்தைச் செல்லமாகக் கேட்டார்.

'முயல் வேணும்' என்றாள் சந்தியா.

'முயலா? நீ சொன்னது போல முதல் ராங்க் வந்துட்ட, அதனால உனக்கு வாங்கித் தரேன்' என உறுதி தந்தார் சந்தியாவின் தந்தை சோனைமுத்து.

முயல் விற்கும் இடங்களுக்குத் தேடி அலைந்தனர். கண்கள் உருண்டையான முயல் வேண்டும் எனத் தேடினாள் சந்தியா. காதுகள் கொம்புகள் போல இருக்க வேண்டும் என அடம் பிடித்தாள். வேகமாக துள்ளிக் குதித்தோட வேண்டும் எனவும் வம்பு செய்தாள். அவள் கேட்டபடி வாங்கிட அழுத்துப் போனார் சோனைமுத்து.

கண்கள், காதுகள் சரி, ஓடும் முயல் என எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தவித்தவர் ஊரில் உள்ள ஒருவனிடம் சொன்னார். அவனும் சில தினங்களுக்குப் பின்னர் ஒரு முயல் ஒன்றைப் பிடித்து வந்து தந்தான். சந்தியாவுக்கு அந்த முயல் மிகவும் பிடித்துப் போனது.

தினமும் அதை தனது செல்லக் குழந்தையைப் போல பாவித்து வந்தாள். பழக்கப்பட்டு போன முயல் ஓட எத்தனிக்கவில்லை, சந்தியாவுடன் ஒட்டிக்கொண்டது. நாய் ஏதேனும் வந்தால் விரட்டி அடித்துவிடுவாள் சந்தியா. பள்ளிக்குச் செல்லும் போது அதனை பத்திரமாக ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றாள். மதிய உணவு, தண்ணீர் என அனைத்தும் தந்து விடுவாள்.

முயல் கொழுகொழுவென ஆகிப் போனது. ஓடும் வேலையில்லை, உணவு தேடும் தேவையில்லை. முயலுக்கு சோம்பல் அதிகமாகிப் போனது. இதைக் கவனித்த சந்தியா சனி, ஞாயிறு என மாடியில் ஓடச் சொல்லி முயலைத் தூண்டுவாள். முயலும் சொல்வதற்கிணங்க ஓடிக் காண்பிக்கும்.

முழு ஆண்டுத் தேர்வு வந்தது, விடுமுறையும் உடன் வந்தது. முயலை உடன் எடுத்துச் செல்லலாம் என சந்தியா விரும்பினாள். ஆனால் சந்தியாவின் தாய் சுகுமாரி மறுத்துவிட்டார். கிராமத்தில் கொண்டு சென்றால் பிரச்சினை எனச் சொல்லி விந்தியாவிடம் பாதுகாக்கத் தரலாம் என சொன்னாள். சந்தியாவும் விந்தியாவிடம் விபரம் சொல்லிக் கொடுத்தாள்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆனது. நாளிதழ் ஒன்றைப் பார்த்த சந்தியாவின் முகம் வெடவெடத்தது, மனம் படபடத்தது.

'அம்மா, என் முயலுக்கு என்னாகி இருக்குமோ' என அலறினாள்.

'என்னாச்சு'

'இதோ நியூஸ் படிம்மா' எனக் காட்டினாள்.

'முயல் கறி தின்ற பள்ளித் தோழியின் குடும்பம்'

'முயலை என் தோழி வீட்டுலப் பாக்கச் சொல்லிப் போயிருந்தோம், அன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்தா முயல் ஓடிப்போச்சுனு சொன்னாங்க, ஆனா முயல் கறி வாசம் அடிச்சது, நாங்க கேட்டப்ப முயல் கொழு கொழுனு இருந்திச்சி அதான் சாப்பிட்டோம்னு சொன்னாங்க' என வேதனையுடன் அந்த நாளிதழின் வரிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

விந்தியாவின் வீட்டுக்குப் போன் செய்தாள் சந்தியா.

'பேப்பர் நியூஸ் பார்த்து பயந்திட்டியா' எனச் சிரித்தாள் விந்தியா.

'ம்ம்' என்றாள் சந்தியா.

'உனக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருப்பேனா, முயல் எப்பவும் பத்திரமாத்தான் இருக்கும், நீ சந்தோசமா பாட்டி வீட்டுல இரு, கவலைப்படாதே' என நம்பிக்கை சொன்னாள்.

இதைக் கேட்ட சந்தியாவின் அன்னை மனதில் நினைத்தாள்.

புரிந்துணர்வும், ஒருமித்த எண்ணமும் உள்ளவரை எல்லாப் பொருள்களும் இவ்வுலகில் பாதுகாப்பாகவே இருக்கும். நமது முன்னோர்கள் நம்மிடம் தந்த பூமியினை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ முயல் கறி செய்துவிட்டோமா என எண்ணுகையில் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

(முற்றும்)

2 comments:

Anonymous said...

கதையையும் லேபிலையும் ரசித்தேன்.!!!

Radhakrishnan said...

மிக்க நன்றி சின்ன அம்மிணி.

சில மாதங்களுக்கு முன்னர் போட்டிக்காக யோசனை செய்த கதை இது.

காலம் தாழ்த்திச் செய்யப்படும் செயல்கள் சில அதற்குரிய பலனை பெறத் தவறிவிடுகின்றன.