Thursday 15 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 4

4.

ரகுராமன் வீட்டுக்கு வந்ததும் கட்சிக்கான கொள்கைகள் எதுவெல்லாம் என யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது தந்தை ரங்கராஜ், ரகுராமனை அழைத்தார்.

''எதோ கட்சி ஆரம்பிக்கப் போறியாமே''

''யாருப்பா சொன்னா''

''கட்சி கொள்கை, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடறீங்கனு வேற கேட்டுட்டு இருக்கியாமே''

''ஆமாம்பா, அப்படியொரு எண்ணம் இருக்கு''

''இருக்கும் இருக்கும், கட்சி கொள்கை, கட்சி கொள்கைனு பேசறியே, உனக்குனு ஒரு கொள்கை எப்பவாச்சும் வைச்சிருக்கியா?ஒவ்வொரு தனி மனிசன் சேர்ந்ததுதான் ஒரு கூட்டம், அமைப்பு எல்லாம். அந்த அந்த தனி மனிசனுக்குனு ஒரு கொள்கை இருக்கும், இருக்கனும். ஆனா கொள்கையோட இருக்கிற ஒரு தனிமனுசனக் காட்டுப் பாக்கலாம், ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்னு கொள்கை மாத்திட்டே இருக்கறவனுகதான் எல்லாரும், நேரத்துக்கு, காலத்துக்கு ஏத்தமாதிரி தன்னை மாத்திக்கிர பயலுகதான் எல்லாரும். புரிஞ்சிக்கோ!

ஒரு கூட்டத்தில இருக்கிற எல்லா தனி மனிசனுக்கும் ஒரே கொள்கை இருக்குமானு உன்னால சொல்ல முடியுமா! ஒரு தனிமனிசனோட கொள்கையை கையில வைச்சிக்கிட்டு செம்மறியாடு கூட்டம் மாதிரி அந்த கொள்கைக்குப் பின்னால போறவங்கதான் பெரும்பாலானவங்க. அவங்க அவங்களுக்கு ஒரு ஒழுங்கான கொள்கையா இருந்தா அந்தத் தலைவரோட கொள்கை, இந்தத் தலைவரோட கொள்கைனு அநாவசியமாப் பேசிட்டு எவனும் இருக்கமாட்டான், அவனவனோட கொள்கையை நிறைவேத்திரதுல உறுதியா இருப்பான், அதைப் புரிஞ்சுக்கோ முதல்ல, கட்சி ஆரம்பிக்கப் போறேனு பட்சி சொல்லிச்சினு அடிப்படை விசயத்தைப் புரிஞ்சிக்காம உலகத்தைத் திருத்த நினைக்காதே, இதுதான் உனக்கு நான் கடைசியா சொல்றது, பொழப்ப பாரு அவ்வளவுதேன், போ!''

ரகுராமன் விக்கித்து நின்றான்.

''என்ன நின்னுட்டே இருக்கே, போயி காலேஜுல ஒழுங்காப் படிக்க வழியப் பாரு. இதோ பாரு, அரசியல் ஒரு சாக்கடைனு சொல்வாங்க, ஆனா அந்த சாக்கடை உருவாக காரணமே நம்மளைப் போல இருக்கிறவங்கதானு ஒரு பயலும் நினைச்சிக்க மாட்டான், எப்படியாவது உலகத்தை மாத்திப்புடனும், அவர் வந்தா நல்லா இருக்கும், அவர மாதிரி ஆட்சியத் தரனும் பேசற எவனுமே தன்னோட செயலை ஒரு நிமிசம் கூட பரிசோதிக்க மாட்டான் அதை தெரிஞ்சிக்க''

ரகுராமன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவனது தந்தை இத்தனை கடுமையாக எப்போதுமே அவனிடம் பேசியதில்லை. அவர் செய்யும் தொழிலில் நேர்மையாகவும், பிறரிடம் அன்பாகவும், கரிசனையுடன் மட்டுமே அவர் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறான். எந்தவொருப் பிரச்சினையெனினும் மிகவும் சுமூகமாகவே பேசித் தீர்த்துக் கொள்வதில் மிகவும் வல்லவர் அவர். அவரை கிராமத்தில் மதித்து நடப்பவர்கள் அதிகம். தேவையில்லாத சச்சரவுகளில் நேரத்தைச் செலவழிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம் என எப்போதும் ஒரு துடிதுடிப்புடன் செயலாற்றுபவர்.

ரகுராமன் தனது அறையில் அமர்ந்தான். தனக்கென என்ன கொள்கை இருக்கிறது என நினைத்துப் பார்த்தான். ஒரு கொள்கையும் தென்படவில்லை. அவனது மனதின் ஓரத்தில் சந்தானலட்சுமி தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சந்தானலட்சுமி, ரகுராமனுடன் படிக்கும் பெண். இருவருக்குமிடையிலான காதல் பலருக்கும் கல்லூரியில் தெரிந்தே இருந்தது.

இத்தனை பேசிய தந்தை ஏன் ஒரு கட்சிக்கு என இன்னமும் வாக்கு அளித்துக் கொண்டிருக்கிறார் என எண்ணினான் ரகுராமன். உலகில் நடக்கும் அநியாய செயல்களைப் புறக்கணிக்கிறோம் என வாக்கு அளிக்காமல் இருப்பது சிறந்தது என எப்படி சொல்லலாம், ஒரு மாற்றம் வேண்டுமெனில் அதற்கான ஆயத்தங்கள் மிகவும் அவசியம் என தோணியது ரகுராமனுக்கு.

பேசிப் பேசியேப் பொழுதைக் கழித்து மாற்றம் தேவையெனினும் அவர் மாறட்டும், இவர் மாறட்டும் என வறட்டுத்தனமாகப் பேசி வாழ்க்கை கழிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை, தவறெனினும் சகித்துக்கொண்டு, தானும் அந்த தவறில் உழன்று வாழும் மனிதர்கள் உள்ளவரை குறையுள்ள உலகமாகவே இருக்கும் என்பதுதானே எழுதாத வரலாறு!

(தொடரும்)

2 comments:

யாரோ ஒருவர் said...

அரசியல் ஒரு சாக்கடை,அதில் கால் வைத்தால் தான் தெரியும்,

Radhakrishnan said...

ஹா ஹா! அப்படியெல்லாம் எதுவுமில்லை.

சராசரி மனிதன் பண்ணாத அரசியலா, அரசியல்வாதிகள் பண்ணிவிட்டார்கள்?