Tuesday 13 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 4

கதிரேசனிடம் பாடல் பற்றி பேசினார் சிவநாதன். சிவனை நோக்கி சொல்சிவனே என பாடக்கூடாது என்றார். மேலும் அவர், சிவன் யாருக்கும் எதற்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். கதிரேசனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ''என்ன எதுவும் பேசமாட்டேங்கிற?'' என்றவரிடம் கதிரேசன் ''பாடுறதுல தப்பில்லையே சார்'' என்றான். ''பாடுறதுல தப்பில்லை, ஆனா சொல்சிவனே அப்படினு பாடக்கூடாதுனுதான் சொல்றேன், அதுவும் நீ பாடின பாடல் சிவனை தரம் தாழ்த்துவதாக இருக்கிறது, இப்படி அதிகபிரசங்கித்தனமாக நீ நடந்து கொள்வது சரியில்லை'' என்றார். மெளனம் சாதித்தான் கதிரேசன்.

''நீ என்ன பண்ற?'' என்றார். ''நான் உங்க காலேஜ்ல பாலிடெக்னிக் முத வருசம் சேர்ந்திருக்கேன் சார்'' என்றான். ''விடுதியிலதான் தங்கியிருக்கியா, உன் பேரு என்ன?'' என்றவரிடம் ''ஆமா சார், பேரு கதிரேசன்'' என்றான். ''நீ இப்படி பாடினதுக்கு மன்னிப்புக் கேள், இனி பாடமாட்டேனு சொல்லு'' என்றார். ''நான் பாடினதுல எந்த தப்பும் இல்லை சார், இதுபோல பாடுறதை நான் நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை சார், சிவன் பொதுவானவர், சொல்சிவனே என பாடுவது மூலம் அவர் தரம் தாழ்ந்திட போவதில்லை, இதை நீங்கள் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு என்னை மிரட்டுறது அந்த சிவனுக்கே அடுக்காது'' என மனதில் தோன்றியதை பயம்தனை மறந்து போன கதிரேசன் படபடவென பேசினான். சிவநாதன் அங்கிருந்து விருட்டென வெளியேறினார்.

''ஏம்ப்பா அவர்தான் பாடக்கூடாதுனு சொல்றாருல, பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, கொஞ்சம் கூட மரியாதையில்லாம'' என்றார் அங்கிருந்த ஒருவர். அப்போது உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த வயதான ஒருவர் கதிரேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரேசன் கோவிலிருந்து நேராக விடுதிக்குச் சென்றான். தெய்வேந்திரன் இவனுக்காகவே காத்திருந்தது போல ''உள்ளே வா'' என கதிரேசனை தனது அறைக்குள் அழைத்தார்.

''உன்கிட்ட என்ன சொன்னேன், பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொன்னேன்ல. பிரின்சிபால்கிட்டயே நீ முறைச்சிட்டு நின்னுருக்க. உன்னை விடுதியை விட்டு உடனே வெளியே அனுப்பச் சொல்றார், நீ எல்லாம் எடுத்துட்டு கிளம்பு. அப்படி நீ எடுத்துட்டுப்போகலைன்னா உன்னை காலேஜ்ல இருந்து நீக்கிருவோம்னு சொல்ல சொன்னார்'' என்றார் தெய்வேந்திரன். கதிரேசனுக்கு தான் கேட்பது உண்மைதானா என தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டான். ''கிளம்பு, கிளம்பு, வீணா என் கோவத்தைக் கிளராதே'' என்றார் தெய்வேந்திரன்.

கதிரேசனின் மனம் பதறியது. அம்மாவை நினைக்கையில் மயக்கமே வந்தது. ''சார், இப்போ எங்கே போவேன், எனக்கு இங்க யாரும் தெரியாது சார்'' என அழ ஆரம்பித்தான் கதிரேசன். ''நீ படிக்கனும்னு நினைச்சா வெளியே போ'' என்றார். ''ஒருதரம் பிரின்ஸிபால்கிட்ட பேசிப் பாருங்க சார்'' என அழுதுகொண்டே சொல்ல ''நீ என்னை வேலையை விட்டுப் போகவச்சுரவ போலிருக்கு, அவர் ஒருதரம் முடிவா சொல்லிட்டா அவ்வளவுதான். காலேஜ்ல இருக்கச் சொல்றாரே அதை நினைச்சிட்டுப் பேசமா போ'' என அடிக்க கையை ஓங்கினார். ''போறேன் சார்'' என்றான் கதிரேசன்.

எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு அழுகையுடனே கிளம்பினான். கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் எல்லாம் கதிரேசனை பரிதாபமாகப் பார்த்தார்கள். பின்னர் பெட்டியுடன் நேராக பிரின்சிபால் அறைக்குச் சென்றான். கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். பின் உள்ளே அனுப்பினார்கள்.

''சார், எனக்கு இங்க யாரையும் தெரியாது சார், என்னை விடுதியில சேர்த்துக்கச் சொல்லுங்க சார்'' என அழுதான் கதிரேசன். ''நீ எங்கேயாவது தங்கிக்கோ, விடுதியில நீ தங்கக்கூடாது'' என்றார் சிவநாதன். ''பாடுனதுக்கா சார் இந்தத் தண்டனை?'' என்றான் கதிரேசன். ''நீ மரியாதையில்லாம நடந்துகிட்டதுக்குத் தான் இந்த தண்டனை, இந்த நிலைமை தொடர்ந்துச்சினா காலேஜ்ல இருந்தே உன்னை வெளியேத்த வேண்டியிருக்கும்'' என்றார் அவர். ''சொல்சிவனே னு பாடுறதல என்ன சார் தப்பு, இதெல்லாம் ஒரு காரணமா?'' என்றான் கதிரேசன் அழுகையுடன். ''பாடியதுமில்லாம எதிர்த்துப் பேசிட்டே இருக்க, நான் சொன்னா நீ கேட்கனும்'' என்றார் மேலும். ''என்னோட கருத்தைச் சொல்லக்கூடாதா சார்?'' என்றவனிடம் ''நீ சொல்ற விதம் சரியில்ல, இதோ பாரு, நீ எங்கேயாவது தங்கிக்க, விடுதியில தங்க வேண்டாம், உனக்கு நான் சொல்றது பிடிக்கலைன்னா நீ காலேஜ்ல இருந்து நின்னுக்கலாம்'' என சொல்லி வெளியேப் போகச் சொன்னார்.

கதிரேசன் இனியும் அங்கே நிற்பது கூடாது என கண்கள் கலங்கியபடியே வெளியேறினான். பெட்டியுடன் சிவன் கோவிலுக்குள் சென்றான். முதல் நாளிலேயே தனக்கு கல்லூரியில் ஏற்பட்ட அவமானம் அவனை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தது. எங்கு சென்று தங்குவது, எப்படி கல்லூரிக்குச் செல்வது என குழம்பியவன் சிவனை நோக்கி கண்ணீர் மல்க பாடினான்.

''அன்னையும் தந்தையும் அறிந்த முதல் அறிவே
நின்னை யான் விளித்த பொருட்டு
ஓரிடம் இல்லை என்றே ஒதுக்கித் தள்ளினார்
பாரிடத்து யாவும் உனதிடமோ சொல்சிவனே''

பாடி முடிக்கையில் கதிரேசனின் கையை உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த அந்த வயதானவர் பிடித்துச் சொன்னார். ''நீ என்னோட வா, என்னோட வீட்டுல நீ தங்கிக்கிரலாம், நீ காலேஜ்க்குப் போய்ட்டு வா'' என்றார். கதிரேசன் உடல் கிடுகிடுவென ஆடியது.

(தொடரும்)

3 comments:

vasu balaji said...

கதிரேசனை அழகாக உருவாக்குகிறீர்கள் ஐயா.

கிரி said...

வாங்க சார் ரொம்ப நாளா ஆளை காணோம்!

Radhakrishnan said...

மிக்க நன்றி வானம்பாடிகள் ஐயா.

அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறேன் கிரி அவர்களே. விரைவில் பல இடுகைகளைப் படித்து விடுகிறேன். மிக்க நன்றி.