Wednesday 7 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 3

சிறிது நேரம் கழித்துஉணவு அறைக்குச் சென்றான் கதிரேசன். அங்கே தெய்வேந்திரன் ஒருவனை அடித்துக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்த கதிரேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏன் இப்படி எடுத்ததுக்கெல்லாம் இவர் அடிக்கிறார் என்ற கேள்வி மனதில் ஓடியது. பின்னர் அவர் சமையல் அறைக்குள் சென்று அங்கு சமையல் செய்தவர்களைச் சத்தம் போட ஆரம்பித்தார்.

நேராக அந்த மாணவனை நோக்கிச் சென்ற் கதிரேசன். ''உன்னை ஏன் அவர் அடிச்சார்?'' எனக் கேட்டான். கதிரேசனை சற்று வித்தியாசமாகப் பார்த்துவிட்டு ''சாப்பாடு சரியில்லாமல் இருந்தது, அதான் ஏன் இப்படி சமைக்கிறீர்கள், சற்று அவர்களைச் சொல்லக்கூடாதா'' எனக் கேட்டேன், அதற்கு அவர் ''மற்றவங்க எல்லாம் பேசாமத்தான சாப்பிடுறாங்க, உனக்கு என்ன வந்துச்சு, சேர்ந்தன்னைக்கே இப்படியா'' என அடிக்கத் தொடங்கிவிட்டார். ''வலிக்கிறதா?'' என்றான் கதிரேசன். ''அம்மா அடிச்சாலும் வலிக்கத்தானே செய்யும், தாங்கித்தான் ஆகனும்'' என்றவன் தட்டினைக் கழுவிக்கொண்டு கதிரேசனுடன் மேலும் பேசினான். அவன் மதுசூதனன், காட்பாடி. எஞ்சினியரிங் தகவல் துறையில் இணைந்து இருக்கிறான்.

கதிரேசன் தன் பெயரை சொன்னான். ''ஓ நீ சைவ குலமோ'' என்றான் மதுசூதனன். ''ஆமாம், உன் பேரு என்ன?'' என்றான் கதிரேசன். ''நான் வைணவம், என் பேரு மதுசூதனன், அறை எண் 40ல் நான் இருக்கிறேன், நீ எந்த அறையில் இருக்கிறாய்?'' எனக் கேட்டான் மதுசூதனன். ''நான் அறை எண் 46, நான் ரசம் குடித்துவிட்டு வருகிறேன்'' என சென்றான் கதிரேசன்.

கட்டுப்பாட்டிற்குள் எதையும் கொண்டு வரவேண்டுமெனில் அச்சப்படுத்துதலும், கொடுமைப்படுத்துதலும் பெரும் ஆயுதங்களாகவேப் பயன்பட்டு வருகின்றன. இத்தனை மாணவர்களையும் ஒழுங்கில் வைத்திருக்க வேண்டுமெனில் அத்தனை சாதாரண விசயமில்லைதான் என கதிரேசன் எண்ணிக்கொண்டே உணவு அறைக்குள் நுழைந்தான். அங்கே இருந்த பணியாளாரிடம் ரசம் வேண்டும் என கேட்க அவரும் ரசம் ஊற்றிக்கொடுத்தார். ரசம் குடித்தபோது மிகவும் புளிப்பாக இருந்தது. ஊர் ஞாபகம் மனதைத் தொட்டது. புளியமரங்கள் கல்லடிபட்டு புளியம்பழங்களை உதிர்த்துக்கொள்வதும் அவைகளை சுவைத்த போது இருந்த சுவையும் நினைவுக்கு வந்தது.

'அம்மா இந்நேரம் தூங்கி இருப்பாளோ' என நினைக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு தினமும் ஒரு கதை சொல்வாள் அம்மா. கதை சொல்வதற்கு என்றுமே சலித்துக் கொள்ளமாட்டாள். கதைக் கேட்டுக்கொண்டே தூங்கிப்போன நாட்கள் மிகவும் அதிகம். இன்று யாருக்கு கதை சொல்வாளோ? என எண்ணியபோது கதிரேசனின் கண்கள் கலங்கியது.

அறைக்குள் வந்து பேசாமல் படுத்துக்கொண்டான். தூக்கம் துக்கமாக அன்றுதான் தோன்றியது. அதிகாலை எழுந்து குளித்தான். வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகத்தான் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு என தனி அறை எல்லாம் கிடையாது. குளித்து முடித்தவன் சிவனை வணங்கிவிட்டு எதுவும் சாப்பிடாமல் சிவன் கோவில் நோக்கிச் செல்ல நினைத்து மதுசூதனனிடம் சென்று, சிவன் கோவிலுக்கு வருகிறாயா? எனக் கேட்டபொழுது, ''நான் சிவனை தொழுவதில்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். அவனிடம் எதுவும் மேற்கொண்டு கேட்காது சிவன் கோவிலை அடைந்தபோது கல்லூரி முதல்வர் சிவநாதன் அங்கே வந்திருந்தார். அவரை இதற்கு முன்னர் ஒரே தடவைப் பார்த்து இருந்தாலும் அவரது முகம் பளிச்சென மனதில் பதிந்திருந்தது. வெகு சிலரே கோவிலில் இருந்தார்கள்.

''வணக்கம் சார்'' என்றான் கதிரேசன். அவரும் வணக்கம் சொன்னார். கோவிலில் உள்நுழைந்தபோது நிசப்தம் நிலவியது. பாட ஆரம்பித்தார் சிவநாதன்.

''ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்''


பாடல் பாடி முடித்துவிட்டு சிவன் கோவிலில் இருந்து வெளியே கிளம்பினார் சிவநாதன். கதிரேசன் பாடத் தொடங்கினான்.

''முக்கண்ணனே மூவுலகமென யாவுலகமும் பரவிக் கிடப்போனே
எக்கணமும் நீங்கா நிலையைக் கொண்டோனே
உயிரோடு வைத்த உடல் ஒப்புவித்துக் கொண்டேன்
பயிரது மாண்டிடாது செழித்திடுமோ சொல்சிவனே''

அங்கிருந்த சிலர் அவனையேப் பார்த்தார்கள். பாடலைக் கேட்ட சிவநாதன் திரும்பிக் கோவிலுக்குள் வந்தார்.

புளியம்பட்டியில் களையெடுத்துக் கொண்டிருந்த செல்லாயி தனது கையில் ஏதோ ஒன்று குத்திவிடவே 'கதிரேசா' என கண்கள் கலங்கிட அவனது பெயரைச் சொன்னார். கதிரேசன் கிளம்பிச் சென்றதிலிருந்து மிகவும் மனம் வேதனையுற்றிருந்தார் செல்லாயி.

(தொடரும்)

2 comments:

நிகழ்காலத்தில்... said...

தொடர்கதை நன்றாக வருகிறது

வாழ்த்துக்கள் நண்பரே

Radhakrishnan said...

மிக்க நன்றி, சிவா அவர்களே.

தமிழினி அவர்களே, மிக்க நன்றி. பல விசயங்களை நீக்கிக் கொண்டே வரும் நான், நீங்கள் சேர்த்துக் கொள்ளச் சொல்லி எழுதியதைப் பார்ப்பது எனக்கு விந்தைதான். எனினும் இது உங்கள் நோக்கம், உங்கள் முயற்சி, நிச்சயம் வெற்றியடையட்டும். மிக்க நன்றி.