Tuesday 2 August 2016

காதலினும் கல்யாணம் பெரிது

காதல் பருவம் எது என்று கேட்டால் காதல் வரும் பருவம் தான் காதல் பருவம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. காதல் எப்படியும் கல்யாணத்தில்தான் சென்று முடிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை ஆனால் காதல், கல்யாணத்தில் சென்றுதான் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

இன்று அலுவலகத்திற்கு  நடந்து செல்லும்போது ஒரு தேநீர் கடையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. இதுவரை அப்படி எவரையும் சந்திக்கவே இல்லை என்பதுதான் ஒரு வேதனையாக இருந்தது. வேறு ஒருவரை உற்றுப்பார்த்தல் அநாகரிகமான செயல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அழகிகள் அழகன்கள் எல்லாம் தெருவில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உற்றுப்பார்த்தால் நம்மை நோக்கிய அவர்களின் கண்களும், புருவங்களும் சுளுக்கிக்கொள்ளும். அதற்காகவே எதற்கு இந்த வீண் வம்பு என மரம் பார்ப்பதும், செடி பார்ப்பதும், மண் பார்ப்பதும், வானம் பார்ப்பதும் என அவ்வப்போது அவர்களை பார்ப்பதும் என சாலையில் நடக்கும்போது பொழுது போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென மேலதிகாரி சுரேஷ் மாயதேவன் அழைத்தார். உள்ளே சென்றதும் அங்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு ஒரு யுவதி அமர்ந்து இருந்தாள். என்னோடு வேலை பார்த்தவனின் காலி வேலைக்குத்தான் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என யூகித்துக் கொண்டேன்.

''இவங்கதான் தீபா ராமநாதன், நம்ம அலுவலகத்தில் புதுசா இன்னைக்கு ஜாயின் பண்ணி  இருக்காங்க. உன்னோட புராஜக்ட்லதான் இவங்க ஒர்க் பண்ண இருக்காங்க. உன்னோட அறையில் இருக்கிற பக்கத்து சீட் இவங்களுக்கு அரேஞ் பண்ணி இருக்கு.

தீபா, இவர் தான் தீபக் சொக்கநாதன். இந்த அலுவலகத்துல ரெண்டு வருசமா வேலை பார்க்கிறார். இவரோடதான் உங்க புராஜக்ட் ஒர்க். எல்லாம் இவர் உங்களுக்கு சொல்வார். நீங்க இவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினா போதும். அவர் எனக்கு அப்டேட் பண்ணுவார்''

''சரிங்க  சார்''

மழலையின் குரலை விட மங்கையரின் குரலே அழகு என ஒரு திருக்குறள் எதற்கு எழுதவில்லை என தோனியது. திருவள்ளுவர் காதல் எல்லாம் புரிந்து இருக்கமாட்டார், நேராக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றுதான் இருந்து இருப்பார் என நினைக்கத் தோனியது.

''தீபா இதுதான் உங்க சிஸ்டம், டேபிள் சேர் எல்லாம்''

''சரிங்க தீபக்''

சார் என்று அழைப்பாள் என்று பார்த்தால் நேரடியாக பெயர் கொண்டே அழைத்துவிட்டாள்.

''இந்த அலுவலகம் எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா?''

''இது ஏன்னா சுற்றுலாத்தளமா, சுற்றிப் பார்க்க''

''எது எது எங்க இருக்குனு தெரிஞ்சிக்கலாமே''

''எல்லாம் சொல்லிட்டாங்க, இருக்கிறதே மூணு புளோர். புராஜக்ட் எதுவரைக்கும் போயிருக்கு''

''பத்து பெர்சென்ட் கூட ஆரம்பிக்கலை, இந்த ப்ரொஜெக்ட் சேன்க்சன் ஆன நேரம் அவன் வேலையை விட்டுட்டுப் போயிட்டான்''

''எதுக்குப்  போனார்?''

''ம்ம் கல்யாணம் பாரின் பொண்ணு, இனி அவன் பாரின் செட்டில்''

''பொறாமையா இருக்கீங்க போல''

இத்தனை சகஜமாக பேசுவாள் என்று எவர் எதிர்பார்த்தது.

''பொறாமைப்பட்டுக்கிட்டாலும், இதுக்கு முன்ன வேற எங்க வேலைப்  பார்த்தீங்க?''

''இதுதான் முதல் வேலை''

''ஒரு பயம் எல்லாம் இல்லையா''

''ஏன் இங்க சிங்கம், புலி, பாம்பு, பல்லி எல்லாம் வேலை செய்யுதா?''

''இல்லை''

அதற்குப் பின்னர் எதுவும் பேசாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய கேள்விகள் வேலையைப் பற்றி கேட்டாள். என்னைப் பற்றி, என் குடும்பம் பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை.

உணவு கொண்டு வந்து இருந்தாள். மத்தியானம் நேராக உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றாள். வழக்கம்போல வெளியில் உள்ள கடையில்  வாங்கிக்கொண்டு உணவு உண்ணும் இடம் வந்து அமர்ந்தேன். அங்கு சாப்பிட்டுக் கொண்டு  இருக்கும் பதினைந்து நபர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். அலுவலகத்தில் மொத்தம் 19 பேர்தான். பெரிய அலுவலகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த அலுவலகம் ஆரம்பித்தே ஐந்து வருடங்கள்தான் ஆகிறது. அங்கு இருந்த அனைவருக்குமே கல்யாணம் ஆகி இருந்தது. கழுத்தில் தாலி இல்லை இருந்தாலும் இந்த தீபா பற்றிதான் தெரியவில்லை. சிலர் தம்பதி சமேதரராக வேறு வேலையில் சேர்ந்து இருந்தார்கள். சில காதல் திருமணம், சில பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். அவர்களை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தார்கள்.

''தீபக், உனக்குத் துணைக்கு இதோ தீபா. இன்னும் கல்யாணம் ஆகலை. யாருக்கு முதலில் கல்யாணம் ஆகுதுனுப் பார்ப்போம்''

இந்த தர்மலிங்கத்திற்கு இதுவே வேலை.

''தீபாவுக்குத்தான் முதலில் ஆகும், அவங்கதான் பொண்ணு''

இது சுந்தரமூர்த்தியின் அடுத்த யூகம்.

''என்னோட கல்யாணம் காதல் கல்யாணம் தான். நமக்குப்  பிடிச்ச நம்மைப் பிடிச்சவர் தான் வாழ்க்கைத் துணை அப்போதான் நம்மளப்  பெத்தவங்கள  சந்தோசமா வைச்சிக்கிற முடியும்''

தீபாவின் இந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் சற்று ஆச்சரியத்துடன் பாராட்ட வைத்தன.

''சூப்பர் தீபா, உங்க மனம் போல பையன் அமைய வாழ்த்துக்கள்''

தர்மலிங்கமும், சுந்தரமூர்த்தியும் ஆசிர்வாதம் செய்தார்கள். அவர்கள்தான் இந்த அலுவலகம் ஆரம்பிக்கும்போது சேர்ந்த மூத்த பணியாளர்கள். மேலதிகாரிக்கு நண்பர்கள் என்று கூட சொல்லிக்கொள்வார்கள்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. இத்தனைக்கும் தீபாவின் கடின உழைப்புதான் காரணம் என்று சொல்ல வேண்டும். தீபாவை மிகவும் பிடித்து இருந்தது. தீபாவின் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மேலதிகாரி என்னை அழைத்து வேறொரு புராஜக்ட் கொடுத்து தீபாவுடன் சேர்ந்து செய்யுமாறு கூறினார். சந்தோசமாக சம்மதம் சொல்லிவிட்டு வந்தேன்.

''அடுத்த புராஜக்ட் கூட நாம ரெண்டு பேரும்  சேர்ந்து பண்ணனும்னு சொல்லி இருக்கார்''

''சக்ஸஸ் கொடுத்தாச்சு, இனிமே எல்லா புராஜக்ட் நாம சேர்ந்துதான் பண்ண வேண்டி இருக்கும்''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

''என்ன கேட்டீங்க''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

அறையில் பெரும் நிசப்தம் நிலவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் தீபா பேசினாள்.

''தீபக், பெண்கள் தேவதைகள் அல்ல, ஆணின் தேவைகள் அப்படினு நினைக்கிற கிறுக்கர்கள் இருக்கிற இந்த உலகத்தில நீங்க  நிறையவே வித்தியாசமாத்தான் இருந்தீங்க . இந்த ஒரு வருச  பழக்கத்தில உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். உங்களோட அம்மா, அப்பா, அக்கா அப்படினு உங்களோட குடும்பம் உங்களுக்கு எத்தனைப் பெரிசுன்னு புரிய எனக்கு நிறைய நாட்கள் ஆகலை. என்னோட குடும்பத்தைப் பத்தி உங்ககிட்ட  நான் எதுவும் சொன்னது இல்லை.

என்னோட அண்ணன் காதல் கல்யாணம்தான். அண்ணியோட அம்மா அப்பா கல்யாணத்தை ஏத்துக்கலை. எங்க குடும்பம் ஏழைக்குடும்பம் தான் ஒரு காரணம். ஆனா வீட்டுக்கு வந்த அண்ணி ஒரே மாசத்துல என்னை, எங்க அம்மா, அப்பாவை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. நாங்க எந்த பிரச்சினையும் பண்ணாம வேறு வீட்டிற்கு வாடகைக்கு வந்துட்டோம். ஒரு ஆறு மாசம் கழிச்சி அண்ணி தன்னோட தப்பை உணர்ந்து எங்களை கூப்பிட்டாங்க. ஆனா நாங்க போகலை. வாரம் ஒருதரம் அவங்களைப்  பார்க்கிறதோட சரி. அவங்க அம்மா அப்பா கூட அவங்களை மன்னிச்சிட்டு ஏத்துக்கிட்டாங்க. இதுவே என் அண்ணன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாமலோ அல்லது அந்த பொண்ணு என் அண்ணனை கல்யாணம் பண்ணாமலோ போயிருந்தா இந்த காதல் எல்லாம் பண்ணினது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆகி இருக்காது.

காதல்னு சுத்திக்கிட்டு இருக்கிறதைவிட இப்படி எதுவுமே காதல் அது இதுனு சொல்லாம தனக்குப் பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறது கூட நல்லா இருக்கு.

இந்த புராஜக்ட் உங்களோட சிந்தனை, முழு உழைப்பு. ஆனா நான்தான் எல்லாம்  பண்ணின மாதிரி ஒரு தோற்றம் நீங்க  உண்டாக்கின போதே உங்களோட மனசில நான் இருக்கேனு தெரிஞ்சிக்கிட்டேன். ஐ லவ் யூனு சொல்ல உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறப் போகுது.

காதல்னு சொல்லிட்டு அதை கேவலப்படுத்தறதை விட கல்யாணம்னு சொல்லி ஒரு உறவுக்குள்ள உரிமையோட போறது எனக்கு உங்களைப் பார்த்தபிறகுதான், பழகின பிறகுதான் தெரிஞ்சது. முதமுத காதல் கல்யாணம்தான் பண்ணுவேன்னு சொன்னதை கூட மாத்திக்கிட்டேன். ம்ம் நிச்சயம் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன், நிறைய காதல் இருக்கு''

நான், அப்பா, அம்மா, அக்கா, மாமா, அக்காவின் குட்டிப்பையன் என தீபாவின் வீட்டிற்குச் சென்றோம்.  தீபாவின் அப்பா மிகவும் தயங்கினார். தீபாவின் அம்மா கூட எங்களால நிறைய செய்ய முடியாது. கல்யாணம் ஆனப்பறம் பிரச்சினை எதுவும் இதனால வந்துரக்கூடாது என்று  சொன்னபோது என் உறுதியோடு என் அம்மாவும் அப்பாவும் அப்படியொரு நிலை வராது என உறுதி அளித்தார்கள். அப்பா அதோடு நில்லாமல் மேலும் தொடர்ந்தார்.

''கல்யாணம் பண்ணுறது பெரிசு இல்லை, இந்த காலத்தில கடைசி வரைக்கும் சேர்ந்து சந்தோசமா வாழுறதுதான் குதிரைக்கொம்பா இருக்கு. கல்யாணம் ஆனபிறகு அவங்களை நாம தொந்தரவு பண்ணக்கூடாதுனு நினைக்கிறாங்க''

''அவங்க விருப்பம் போல இருக்கட்டும்''

கல்யாணத்திற்கான ஏற்பாடு எல்லாம் செய்து தேதி குறித்தாகிவிட்டது.

''தீபக், நம்மளோட என் அம்மா, அப்பா சேர்ந்து உங்க வீட்டுல உங்க அம்மா அப்பாவோட வந்து இருக்கட்டுமா?''

இப்போதைய வீட்டினை விட ஒரு பெரிய வீடு ஒன்று பார்க்க தீபாவுடன் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.












Friday 22 July 2016

கபாலி - ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி

எப்போதாவதுதான் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுவும் ரஜினி படம் என்றால் எப்போதாவது வரும் என்பதால் எளிதாக தியேட்டருக்குச் சென்றுப் பார்க்கலாம். கபாலி திரைப்படத்தை பார்க்க இதுவரை சென்று இராத ஒரு தியேட்டரை தேர்வு செய்து முன்பதிவு பண்ணியாகிவிட்டது. அதிக விலை எல்லாம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலை தான்.

அரைமணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்றால் அங்கே கூட்டமே இல்லை. நிம்மதியாக இருந்தது. கூட்டம் என்றாலே ஒருவித அலர்ஜி போலாகிவிட்டது. கூட்டம் என்பது ஒரு ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. கூட்டம் என வந்துவிட்டால் மக்கள் செயல்பாடுகள் மாறிவிடுகிறது.

உண்பதற்கு அருந்துவதற்கு என வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் முன்னர் தியேட்டருக்குள் சென்றால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தார்கள். மகிழ்ச்சி. பின்னர் ஒவ்வொருவராக வரத்தொடங்கி கணிசமான கூட்டம் சேர்ந்துவிட்டது. நல்லவேளை பெரும் விசில் அடித்து ஆரவாரம் செய்யும் நபர்கள் இல்லாது இருந்தனர். ஒரு புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது ஒரு சினிமா பார்க்கும் போதோ தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. இருப்பினும் விசில் அடிக்கும் மிகச் சிறிய  கூட்டம் இருந்தது.

ரஜினி. என்னைப் பொருத்தவரை ஒரு மந்திரச்சொல். எவர் என்ன சொன்னாலும் எத்தனை பேசினாலும் அது குறித்து கவலைப்படுவது இல்லை. சில பாடல்கள், விளம்பரங்கள் என முடிந்து படம் தொடங்குகிறது. உள்ளுக்குள் ஒருவித உணர்வு. ரஜினிக்கான உணர்வு அது. வார்த்தைகளில் சொல்ல இயலாது. ரஜினியின் அறிமுக காட்சி என ஆரம்பிக்கும் முன்னர் ஒரு கதைச்சுருக்கம் சொல்லப்படுகிறது. படிப்பறிவு நிறைந்த சமூகம் என முடிவு கட்டிவிட்டார்கள். மலேசியா. மலேய மொழி.

வன்முறை காட்சிகளுடன் தொடங்குகிறது. படத்தோடு நம்மை ஒன்றிவிடும்படியாக அடுத்தடுத்து என காட்சி நகர்கிறது. ஒரு மெல்லிய காதல் இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு இழப்பினைத் தாங்க இயலாமல் தவிக்கும் இரக்க மனது. ஒரு கட்டத்தில் ரஜினி படமா என நினைக்கும் அளவுக்கு காட்சிகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. ஒரு படைப்பாளியின் பார்வையில் அந்த படைப்பு வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். அப்பா என அழைத்து மனம் உருக வைக்கும் காட்சிகள். எதிர்பாராத திருப்பங்கள் என மிகவும் அருமையாக முதல் பகுதி நகர்கிறது. படைப்பாளி என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளும் போது காட்சிகள் மிகவும் அழகாகின்றன. சலிப்பின்றி படம் நகர்கிறது. துரோகம், அடிமைத்தனத்தில் இருந்து மீளல் என பல விசயங்கள். தமிழ்நேசன் நல்ல பெயர்.

இடைவேளைக்குப் பின்னர் அதே வேகத்தில் நகரும் படம் காதலை மீண்டும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது. அன்பில் உலக உயிர்கள் வாழும். ஏதேனும் நடக்குமோ என நினைக்கும்படியான காட்சிகள். இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் இயக்கம் என களைகட்டிவிட்டது படம். பாடல்கள் கதையோட்டத்தோடு இணைகின்றது இடைஞ்சலாகவே இல்லை.

கடைசியாக வழக்கமான தமிழ் சினிமாவாக மாறிவிடுகிறது. எப்போதும் போல ஹீரோ வெற்றி பெறுகிறார். ஆனால் எழுதப்பட்ட வசனங்களை உற்று கவனித்தால் தமிழ்நாட்டின் சாபக்கேடு உலகின் சாபக்கேடு புரியும். கடைசியில் அப்படியே படமும் முடிகிறது ஏதோ ஒரு வெறுமை ஒட்டிக்கொண்டது போல இருந்தது. இனியும் இந்த படம் தொடராதா எனும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்த ஒரு படத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என  விரும்பியது இல்லை. ஏனோ கபாலி அப்படியொரு எண்ணத்தை ரஜினிக்காகவே விதைத்துச் செல்கிறது. ஆங்கில மொழி  சரளமாக படத்தில் ஆங்காங்கே வருகிறது. சரி சரி எல்லாம் படித்தவர்கள்தான். ஆனால் முட்டாள்கள் போலவே செயல்படுவார்கள் என முடிகிறது படம். உலகின் சாபக்கேடு அது.

நல்ல நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படைப்பு. வித்தியாசமான ரஜினி. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கபாலி ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி. 

Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



Wednesday 15 June 2016

இறந்தது போல இருந்தது இல்லை இறந்தது

மாறா மரபு - முன்னுரை


ஒருவேளை இப்போதே இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வந்து இருக்கத் தேவை இல்லைதான்.

இறப்பு பற்றிய நினைப்பு  ஒன்று வேதனைபடுபவனுக்கும்  மற்றொன்று சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பவனுக்கும் வந்து சேர்கிறது.

இவ்வுலகில் நிறைய விசித்திரங்கள் நடைபெறுவது உண்டு. பொருள் பணம் என எதுவும் இல்லாதவன் கூட இறப்பது குறித்து யோசிப்பது இல்லை. எப்படியேனும் வாழ்நாளை கழித்து விட வேண்டும் எனும் அக்கறை மட்டுமே இருக்கும். பொருள் பணம் இருந்தும் இறப்பது குறித்த சிந்தனை கொண்டவர்களும்  உண்டு.

இந்த உலகில் மரணத்தை வென்று விடும் ஒரு அரிய  வாய்ப்பு கிட்டிவிடும் எனில் அதைவிட மிகச் சிறந்த ஒரு விஷயம் இருக்கவே இயலாது. ஆனால் எத்தனை பேர் இந்த உலகில் வாழ வேண்டும் என பிரியம் கொள்கிறார்கள்.

இன்னும் அவன் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். தான் பெற்ற பெயர், படிப்பு, நட்பு, உறவு என என்னவென்னவோ அவனது மனதில் வந்து நிழலாடியது. அவனுக்கு இன்னமும் திருமணம் ஆகி இருக்கவில்லை.

இத்தனையும் விட்டுவிட்டு இறந்து போய்விட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையுடன் அவனது பொழுது கழிந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அவனது யோசனை மரபணுக்கள் மீது உட்கார்ந்து கொண்டது. இந்த மரபணுக்களில் மாற்றம் செய்துவிட்டால் மரணத்தை வென்றுவிடலாம் எனும் ஒரு யோசனை. அதன்படி அவனது சிந்தனை இன்ட்ரான் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இன்ட்ரான் எக்சான் எல்லாம் மரபியலில் ஒரு முக்கிய கூறு, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஆனால் அவனது எண்ணம் இரண்டுமே வெவ்வேறு என்று எண்ணத் தோனியது. அவனைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. இன்ட்ரான்கள் இல்லாது போனால் மனிதன் நோயின்றி வாழ இயலும் என கணித்து வைத்தான்.

பிறவா வரம் வேண்டும் என பாடி வைத்தவர்கள் பலர். இறவா நிலை வேண்டும் என துடிதுடித்தவன் அவன். அவனது சிந்தனையும் செயலும் அதைச் சுற்றியே இருந்தது.

எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதுவெல்லாம் கற்பனை ஆகிறது. எப்போது கற்பனை சாத்தியம் ஆகிறதோ அப்போது அது சாதனை ஆகிறது. அவனது கற்பனை சாத்தியமா என அவனால் கூட சொல்ல இயலாது. ஆனால் சாதிக்கப்போவதாகவே அவன் எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவன் இப்படித்தான் பிரபலமாக சொல்லிக் கொண்டான். உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என்  வாழ்வின் இலட்சியம். கேட்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

மனிதன் நோயினால் மட்டுமே மரணம் அடைவது இல்லை என அவன் சிந்திக்க மறந்து இருந்தான்.

எத்தனையோ உயிரினங்கள் தோன்றியும், அழிந்தும் போன இந்த பூமியில் இறந்தது போல இருந்தது இல்லை... இறந்தது. 


நன்றி

அன்புடன்
வெ. இராதாகிருஷ்ணன்
இலண்டன்
  

Saturday 16 April 2016

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு -9

பகுதி 8   பகுதி 7 பகுதி 6  பகுதி 5 பகுதி 4  பகுதி 3 பகுதி 2 பகுதி 1

9. 

ரகுராமன் தான் சொன்ன நாளுக்கு முன்னதாகவே கல்லூரியில் இருந்து தோணுகாலுக்குச் சென்றான். அவனைப் பார்த்த அழபா, பழனிச்சாமி சுப்பிரமணியன் என எல்லோரும் சந்தோசம் கொண்டார்கள். எத்தனை நாள் இருப்ப என்றவர்களுக்கு சனிக்கிழமை காலையில் கிளம்ப இருப்பதாக கூறினான். அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

ரகுராமன் முதலில் தனது ஊரில் உள்ள அனைவரையும் தனது பக்கம் திருப்ப வேண்டும் என ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஊரின் மந்தையில் அனைவரையும் வெள்ளிக்கிழமை இரவு வருமாறு கூறினான். பெயர், சின்னம், கொடி  எல்லாம் தனது மனதில் பதித்துக் கொண்டு தன்னோடு எடுத்துக் கொண்டான். ஆனால் எவருமே அவனது பேச்சை கேட்டது போலத்  தெரியவில்லை. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஊரில் இருந்தவர்கள் சத்தம் போட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ரகுராமன் சின்ன கூட்டமாவது வர வேண்டும் எனத் தொடர்ந்தான். ரகுராமனுடன் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள். 

அன்று இரவு கொஞ்ச நபர்கள் வந்து மந்தையில் அமர்ந்தார்கள். ரகுராமனின் வீட்டில் அனைவருமே வந்துவிட்டார்கள். ரகுராமன் ஊருக்குப் பொதுவான ஒலிப்பெருக்கி மூலம் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்கள் வந்து சேர்ந்தார்கள். 

''நான் மக்கள் ஒற்றுமை இயக்கம் அப்படின்னு கட்சியை இந்த இடத்தில் வைச்சி நான் ஆரம்பிக்கிறேன், அதுக்கு உங்களுடைய ஆதரவுதான் வேண்டும். கட்சியோட சின்னம் இதயம். இதை எப்படியும் நடத்திக்காட்டுவேன். நம்ம ஊருல இருக்க எல்லாரும் இனிமே இந்த மக்கள் ஒற்றுமை இயக்கத்தோட உறுப்பினராக மாறனும்''

கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். 

''கால காலமா நாங்க ஆதரிக்கிற கட்சியை விட்டுட்டு வானு சொன்னா நாங்க வர முடியுமா? அதுவும் நீ சின்னப்பையன் வேற உனக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்னு கட்சி ஆரம்பிக்கிற. பேசாம எங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ணாத''

ரகுராமன் அவரை அமரச் சொன்னான். அவரும் மறு பேச்சு பேசாமல்  அமர்ந்தான்.

''நீங்க வேற வேற கட்சி உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனா நான் நம்ம ஊருக்காரன் ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்ப நம்ம ஊரே என்னை ஏத்துக்கலைன்னா அப்புறம் எப்படி மத்த ஊர்க்காரங்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறது. நம்ம ஊர்த்தலைவர் ராமசுப்பு ஐயா என்னோட கட்சியை ஆதரிக்கனும். அப்படி நீங்க ஆதரிக்காட்டியும் பரவாயில்லை இதுதான் கட்சி, இதுதான் சின்னம். கட்சிக்கொடி ஒரு வெள்ளை நிற பின்னணியில் ஒரு சாம்பல் நிற புறா''

ராமசுப்பு எழுந்தார். 

''நீ கட்சி ஆரம்பி ஆதரவு கேளு ஆனா ஆதரிக்கிறதா, வேணாமானு அவங்க அவங்க முடிவு செய்யட்டும், என்னோட கட்சியை விட்டுட்டு நான் மாறமாட்டேன். நான் கிளம்பறேன்''

ஊர்த் தலைவர் ராமசுப்பு கிளம்பிச் சென்றதும் அவரோடு பலரும் கிளம்பிப் போனார்கள். இன்னும் பலர் அமர்ந்தபடியே இருந்தார்கள். 

''அடுத்த வருசத் தேர்தலுக்குள்ள நம்ம கட்சியை பெரிசாக்கி எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கணும். எந்த கட்சிகாரங்களையும் நாம திட்டிப் பேசக்கூடாது. நீங்க எல்லோரும் வந்து இந்த கட்சி பெயர், சின்னம், கொடி இதை எல்லாம் ஆசிர்வதிக்கணும்''

பலர் எழுந்து வந்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ரகுராமனின் அம்மா, அப்பாவும் வந்தார்கள். 

''சொல்லச் சொல்ல கேட்க மாட்ற, ஆனா முடிவு பண்ணிட்ட அதுக்கான வழியைப் பாரு''

ரகுராமனின் அப்பாவின் வார்த்தை அவனுக்குள் பெரும் பலம் ஒன்றை உருவாக்கியது. ரகுராமன் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தான். 

''ஒவ்வொரு சனிக்கிழமை இங்கே வருவேன். நீங்க என்ன பண்ணனும்னா நம்ம ஊரை சுத்தமா வைச்சிருக்கணும், ஒருத்தருக்கு உதவினா ஓடோடிப் போய்  செய்யணும். கிரிக்கெட் விளையாடறது எல்லாம் மறந்துருங்க. காசு விசயத்தில் சரியா இருங்க. கல்குறிச்சி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி அப்படின்னு முதலில் போவோம்''

அழகர்பாண்டி குறுக்கிட்டான். 

''அருப்புக்கோட்டை வேணாமா''

''போவோம், புதிய கட்சி உதயம்னு ஒரு பெரிய விளம்பரம் தருவோம்''

''பணம் செலவாகுமே, நீ வேலைக்குப் போனா பரவாயில்லை, படிக்க வேற செய்ற''

''விவசாய நிலத்தில வர பணம் கொஞ்சம்  ஒதுக்குவோம், நீங்க எல்லாம் வேலை செய்ற பணம் இதுல போடுவோம். நமக்கு ஆதரவு தர பெரியவங்க எல்லாம் கட்சி உறுப்பினர்களாக மாத்துவோம்''

எல்லாம் விபரமாக சொல்லி முடிக்க இரவு பத்து ஆனது. ரகுராமன் வீட்டிற்குச் சென்றான். 

''விளையாட்டுத்தனமில்லை, இப்பவே உனக்கு எதிரிங்க தயாராகி இருப்பங்க''

அப்பாவின் எச்சரிக்கை மனதில் ஓடியது. எவரைப் பற்றியும் குறை சொல்லாமல் மக்களுக்கு நிறை செய்வதே பணி  என்று இருந்தால் எதற்கு எதிரிகள் உருவாகப் போகிறார்கள் என யோசித்தான் ரகுராமன். 

ஊரில் இருந்தே தொடங்க வேண்டும் எனும் தனது எண்ணத்தால் தன்னுடன் சண்முகப்பிரியாவை அழைத்து வரவில்லை. நாளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என உறங்க ஆரம்பித்தான். 

மக்களுக்காக உழைக்கும் நோக்கம் உடைய கட்சிகள் தனித்தனியாக இருப்பதன் அவசியம் என்ன, கொள்கைகள் அற்ற கட்சிகள், கொள்கைகள் வெவ்வேறான கட்சிகள் கூட்டணி என அமைத்துக் கொள்வதன் அவசியம் என்ன? மக்கள் எப்போதும் தமது சிந்தனைகளை தமக்குள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். 

(தொடரும்) 

Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)

Friday 8 April 2016

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 30

''ஆமா சார், என்ன சார் விஷயம்''

''இதோ இவனை உனக்குத் தெரியுமா?''

''தெரியும் சார், இவன் பேரு கோரன், என்னோடதான் படிச்சான், பாதியில படிப்பை விட்டுட்டான். நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்து இருந்தான். இப்போ கரியநேந்தல் அப்படிங்கிற ஊருல பிசினஸ் வைச்சி இருக்கிறதா சொன்னான்''
''இவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க''

பயத்தில் முருகேசு நடுங்கிக்கொண்டு இருக்க காயத்ரி உடனே வந்தவள்
''சார், சுபத்ராகிட்ட நீங்க விசாரிச்சா எல்லாம் தெரியும், இவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை''

''நீ யாருமா''

''என்னோட பேரு காயத்ரி''

''சரி நீங்க ரெண்டு பேரும் எங்களோட கிளம்பி வாங்க, சுபத்ரா ஊருக்குப் போகலாம், ஊரு தெரியும்ல''

அதற்குள் முருகேசுவின் அம்மா என்னடா இதெல்லாம் என்றபடி வந்து நின்றார்கள்.

''அந்த பையனை இங்க தங்கிட்டுப் போகச் சொன்னோம் அவன் தான் கேட்கலை''

''நீ யாருமா இவனோட அம்மாவா, நீயும் கூட வாம்மா''

மறுப்பேதும் சொல்லாமல் மூவரும் உடன் சென்றார்கள்.

''சார்  இங்க சுபத்ராவோட சொந்தக்காரங்க இருக்காங்க ரங்கநாதனு பேரு என்னோட அக்காவைத்தான் கட்டி இருக்காங்க, அவங்களையும் விசாரிச்சிட்டு கூட்டிட்டுப் போகலாம்''

''அதெல்லாம் இருக்கட்டும், முதலில அந்த சுபத்ராவை விசாரிப்போம்''

சுபத்ராவின் ஊருக்குள் சென்றபோது இருவர் வந்து நின்றார்கள்.

''அந்த பையன் கொலைக்கேசு விஷயமாவ வந்து இருக்கீங்க, நாங்கதான் அவனை கொன்னுபோட்டோம். உங்களுக்கு தகவல் சொன்னதே நாங்கதான். இவங்களை கூப்பிட்டு வந்து இருக்கீங்க''

காவல் அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

''என்ன தைரியம்டா உங்களுக்கு''

''இருக்காத பின்ன, இந்த ஊரு மண்ணு அப்படி''

''தம்பி நீங்க மூணு பெரும் போகலாம். உன்னைத் தேடித்தான் கோரன் வந்தான்னு அவங்க அப்பா தகவல் சொன்னதாலதான் உன்னை விசாரிக்க வந்தோம்''.

கொலை செய்தோம் என சொன்ன அந்த இருவரையும் காவல் அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள்.

''சுபத்ரா யாருடா''

''எங்க ஊரு பொண்ணுதான், ஆனா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேத்து எங்க தோட்டம் பக்கம் வந்தான் அப்போ யாரு என்னனு  விசாரிச்சப்ப திமிரா பேசினான் அப்போ இவனுக்கும் எங்களுக்கும் நடந்த தகராறுல கொஞ்சம் வரம்பு மீறிப் போச்சு நாங்க அவனை தொலைச்சி கட்டிட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். புடிச்சிட்டுப் போயா, சுபத்ரா எங்க சுமித்ரா எங்கனுட்டு''

பலர் அங்கே கூடி நின்றார்கள். நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்களாடா என்று ஆளாளுக்குப் பேசியபடி நின்றார்கள்.

''நாங்க எதுக்கு திருந்தனும், அவனவன் ஒழுங்கா இருந்தா நாங்க ஒழுங்கா இருக்கப்போறோம்''

காயத்ரி முருகேசுவிடம் வா போகலாம் என்றாள் . கொஞ்சம் இரு என்றான் முருகேசு.

''சுபத்ராவை கூப்பிடுங்க''

சுபத்ரா அங்கு வந்து நின்றாள்.

''என்ன சார் என்ன விஷயம்''

''கோரன் அப்படின்னு ஒருத்தனை கொன்னு இருக்காங்க உனக்கு இதில சம்பந்தம் இருக்கா''

''எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார், அவனை எதுக்கு சார் நான் கொல்லனும் எனக்கு என்ன கொல்லுறது தான் தொழில்னு நினைச்சீங்களா''

''ஏன்டா போலிசு மூதேவி, நாங்கதான் கொன்னோம்னு இந்த இரண்டு பேரும் சொல்றாங்க பிடிச்சி வேற வைச்சி இருக்க அவகிட்ட விசாரிக்கிற''

அங்கிருந்த ஒருவர் சொன்னபடி கத்தியை ஓங்கி காவல் அதிகாரியை குத்த வந்தார். அவரை சிலர் பிடித்துக்கொண்டார்கள்.

''சரிம்மா நீ போம்மா''

''எதுவும் மேல் விபரம் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க சார்''

''என்ன நீ அந்த போலிசு  மூதேவிகளை  சார்னு சொல்லிட்டு இருக்க, அவனுகளையும் சேர்த்து வகுந்துட்டா சரியாப் போயிரும்''

இன்னும் அவர் சத்தம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரை எதுவும் காவல் அதிகாரிகள் சொல்லவில்லை.

காவல் அதிகாரிகள் கொலை செய்தோம் என சொன்ன இருவருடன் கிளம்பினார்கள்.

சுபத்ராவை நோக்கி முருகேசு சென்றான். காயத்ரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு சுபத்ராவின் வீட்டுக்குள் சென்றான்.

''சுபா நீ போன்ல சொன்னது போல நீதான கொலை பண்ணின''

''ஆமாடா நான்தான் அவனை என்னுடைய தடயம் எதுவும் இல்லாம கொன்னுட்டு பழியை இவனுங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொன்னேன்''

''எதுக்கு சுபா''

''அவன் உன்னையும் என்னையும் கொலை பண்ணத்தான் நேத்து வந்தான். உன் அம்மாவைப் பார்த்து மனசு மாறிட்டான். ஆனா அவன் வஞ்சம் தீரலை. என்கிட்டே அவன் இந்த விபரத்தை சொன்னப்ப அவனை கொலை பண்ணினேன், இப்போ என்னடா அதுக்கு, போயி அதோ அவ இருக்காள அவளோட பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இரு. இது இந்த உலக பரிணாமம்டா. புத்தியுள்ளதே பிழைக்கும். அவளைக் கொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டடா  அதனால அவளைக் கொன்னு பிரயோசனம் இல்லை''

''ஒன்னுமே இல்லாத விஷயத்தை இப்படி கொலையில கொண்டு வந்து நிறுத்திட்டியே சுபா''

''இந்த பூமி கூட ஒன்னுமே இல்லாமத்தான்டா இருந்துச்சு. புல், பூச்சி, மனுஷன் எல்லாம் வரலை, அது போலத்தான்டா, நீ கிளம்பிப் போ. கர்ம வினை அது இதுன்னு சொல்லிட்டு திரியாதே இது பரிணாமம். இன்னும் விலங்குகள் மனம் கொண்ட மனிதர்கள் திரியும் பூமி, கொஞ்சம் மாறி இருக்கேன் இதுவே விலங்கா இருந்து இருந்தா அவளை எப்பவோ கொன்னு போட்டு இருப்பேன்''

''சுபா நீ பண்ணினது தப்புன்னு தோணலையா''

''என்னை உன்னை காப்பாத்திக்க நான் பண்ணினதை எப்படிடா தப்புன்னு சொல்வ, பேசாம போயிருடா, என்னைத் தேடி இனிமே வராதடா''

''என்னப்பா அந்த பொண்ணு சொல்லுது''

''கொலை பண்ணிட்டு அவனுகளை ஏத்துக்கச் சொன்னேன்னு சொல்லுதுமா''

''முருகேசு வா போலீசுக்குப் போகலாம்''

''வேணாம் காயூ''

''இன்னும் அவ மேல உனக்கு கரிசனம் போகலைல முருகேசு''

''ஐயோ அம்மா இவளை கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு''

''காயத்ரி, இத்தோட இந்தப் பிரச்சினை முடிச்சிருச்சினு பேசாம இரும்மா''

''சரி அத்தை''

சில வருடங்கள் கழிந்தது. முருகேசுவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணநாள் அன்று சுபத்ரா வாழ்த்து பூங்கொத்தோடு வந்து இருந்தாள். காயத்ரிக்கு மனதில் பயம் குடி புகுந்தது.

''டேய் முருகேசு நீ சந்தோசமா இருக்க நான் எதுவும் செய்வேன்னு உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு சொல்லி வை, திருமண வாழ்த்துக்கள் காயத்ரி'' என வாழ்த்திவிட்டு சுபத்ரா சென்றாள். காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

''கர்ம வினைன்னு சொல்வாங்களே அதுதான் இதுவா முருகேசு''

''இல்லை காயூ, இது பரிணாமம்''

(முற்றும்)









Wednesday 16 March 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 1

எனது ஊருக்கு மேற்கே காடுகள் அடர்ந்த ஒருபெரிய மலை ஒன்று இருந்தது அந்த மலைக்கு அருகில் எவரும் சொல்லமாட்டார்கள் குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விட வேண்டும் என்பது ஊர் விதித்த கட்டளையைவிட அவரவர் விதித்துக்கொண்ட கட்டளைதான் எவரையுமே எல்லை தாண்டவிடவில்லை. சிறு வயது முதல் அந்த எல்லையை தாண்டிவிட வேண்டும் எனும் பேராவல் இருந்தது, அதுவும் குறிப்பாக மலை மீது ஏறி மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் துடிப்பானது ற்றும் குறைந்தபாடில்லை. என் மூளைக்கு என்ன பிரச்சினையோ எனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஒரொன்னா ஒன்பது என்பேன். நன்றாக கையில் அடி வாங்கி இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்காக அந்த அடிகளைத் தாங்கிக்கொள்வேன். நிறைய விசயங்கள் நினைவில் இல்லை. மலை குறித்து பலர் பேசியது அங்குமிங்கும் நினைவு இருக்கிறது. பேய் மலை, ஆவி மலை என கதை சொல்வார்கள். எனக்கு அந்ந கதைகளில் இஷ்டம் இல்லை. படிப்பு வராமல் போனதால் பள்ளிக்கு வரக்கூடாது என திட்டினாலும் மதிய உணவு க்காக வெட்கமின்றி போவேன். அதையும் தடுத்தார்கள். ஒருவனிடம் வாங்கித்தரச் சொல்லி திருடி உண்டேன். 

அதுவும் சில வாரங்கள் நின்றுபோனது. வீட்டில் உணவு இருந்தால் இப்படி எதற்கு அலையப்போகிறேன் நான் பிறந்த சில மாதத்தில் நொப்பாவும் நொம்மாவும் நோயில் செத்துப்போனார்கள் நொம்மாவின் தொம்பிதான் என்னை வளர்த்தார். கழுதை எங்கன போய் திங்கட்டும் என எனக்குத் திட்டு விழும் காலை இரவு ஏதேனும் கொஞ்சம் தின்ன கிடைக்கும்படிப்புதான் வரலைல பள்ளிக்கூடம் போகலைல, போய் வேலை பாத்து காசு கொண்டா என மொமா அடித்து விரட்டினார் அன்றிலிருந்து தோட்ட வேலை என போகத் தொடங்கி மதியம் கொஞ்சம் உண்ண கிடைத்தது. தோட்டத்திலேயே பொழுதன்னைக்கும் கிடப்பேன். காலை இரவு நன்றாக சாப்பிட கிடைத்தது. மொமா எனைத் தேடவில்லை காட்டின் தோட்டத்தின் பொள்ளை ஆனேன் எப்படியாவது மலைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். என்னடே பேசற, பொட்டுல அடிச்சேன் புட்டுக்குறவ ஒழுங்கா கிட என தோட்டத்து நொண்ணன் சொன்னதால் பேசாமல் இருந்துவிட்டேன் எடேய் அந்த மலைக்குப் போனவுக யாருமே உசிரோட திரும்புனது இல்லையாம் என் பாட்டி சொன்னிச்சி என புல் பிடுங்க வர ஒருத்தன் கதை சொன்னான், எடுவட்ட பயலே உன் பொட்டிக்கு யாரு சொன்னதாம் என அவன் தலையில் நங்குனு கொட்டினேன், என் தாத்தா கூட அப்படித்தான் செத்தாராம் என அவன் சொன்னதும் எந்த தொத்தாடா என்றேன் பாட்டியோட அப்பா என்றான் பொட்டியைப் பார்க்கப் போனேன் ஏய் பொட்டி உன் நொப்பா மலைக்குப் போயா செத்தாரு என்றேன் ஆமா என பொட்டி தலையை ஆட்டிச்சி எப்படி எனக் கேட்டேன் எல்லையைத் தாண்டி போனாரு போனவருதான் என பொட்டி அழுதது.

அந்த மலையைப்பற்றி பொட்டி வேறு எதுவும் சொல்ல மறுத்தது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரலை. என் தொத்தா பொட்டி எல்லாம் யாரென எனக்குத் தெரியாது. இந்த மாயஜால கதைகள் மாந்த்ரீக கதைகள் எல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள் எப்போது இந்த எல்லையைப் போட்டார்கள் என்று கேட்டால் அது எப்பவோ போட்டதுடேஎன்றே சொல்வார்கள். ஒரு பயலுக்கும் அந்த மலையைப்பற்றித் தெரியாது ஆனால் அங்கு போனால் செத்துப்போவாக என்பது மட்டுமே அறிந்து இருந்தார்கள் சாக எவர்தான் ஆசைப்படுவார்கள். அங்கனப்போன செத்த என்பதே பெரும் பயம் தான் எனக்கு உள்ளுக்குள் நமநம எரிச்சல். செத்தாலும் பரவாலை என நினைத்தபடி அந்த மலை மீது எனக்கு ஒரு கண் இருந்தது சீவாத முடி மண் பூசிய சட்டை டவுசர் என திரிந்தேன் மலைப்பக்கம் போக ஆள் சேர்த்தால் அடிக்காத குறைதான் படிப்பு. வந்து இருந்தாலவது நாலு வார்த்தை படிச்சி இருக்கலாம் ஒரு எழுத்து கூட எழுதப்படிக்க மனசே வரலை மறந்து போனது மறந்து போனதுதான் எனக்கு வயசு இப்ப இருக்கும்னு ஒரு நொண்ணனிடம் கேட்டப்ப நீ ஆவணில பொறந்த உனக்கு இப்போ 15 என்றது 15 வயசா என ஆவெனப் பார்த்தேன் மலையைப்பற்றி இத்தனைவருசமாகவா நானுநினைச்சிட்டு இருக்கேன் என அன்னைக்கு ராத்திரி பயத்தோட மலையை நோக்கி நடந்தேன் கொஞ்சம் பயமாக இருந்தது அஞ்சு பாறாங்கல் தூரம் நடக்க மனசுக்கு படபடனு இருந்தது எவடே இந்நேரத்தில இங்குட்டு என ஒரு மொமா கத்தியது நான் தான் மொமா மலைச்சாமி என கத்தினேன் டார்ச் வெளிச்சம் என்மீது பட்டது சே காவக்காரன் மாதிரி நிக்கறான் என நடந்தேன் நில்லுடே மலைப்பக்கம் போகுற உனக்கு புத்திகெட்டுப் போச்சா என மொமா கத்தியது இல்லே மொமா உப்ப திரும்பி போயிருவேன் என சொன்னாலும் தரதரவென எனது கைகளைப் பற்றி இழுத்து அவர் தோட்டத்தில் கொண்டு இட்டார் எடே இன்னும் நாலு பாறாங்கல் இந்த தோட்டம் அதைத் தாண்டிப் போனா கொஞ்ச தூரம் காடு அந்தகாட்டைத் தாண்டித்தான் மலை நீபாட்டுக்குப்போற என சொல்லி சப்புனு ஒரு அறை விழுந்தது மொமா அடிக்கிற வேலை நீ வைச்சிக்காத அப்புறம் கல் எடுத்து கொன்னேப்புடுவேன் சாவுக்கு நான் பயப்படலை மலைக்குப் போனா செத்துப் போயிருவாகனு கதையை நம்ப சொல்றயா என்னடே நீ ஓவராப் பேசற போடே போய் சாவு அப்பன் ஆத்தாளை காவு வாங்கினவதான நீனு என எட்டி உதைத்தார் வலி விர்ரென்று இருந்தது அந்த வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கியது.

மொமா நீ ஒரு தடிமாடு சின்னப்பயல உதைக்கிற எனகத்தினேன் சொல்லிட்டே இருக்கேன் பேசிட்டு இருக்க என ஓங்கி அடிக்க வந்தார் போடே போ நிக்காத மலைக்குப் போக மனசு இல்லை தோட்டம் வந்து படுத்துக்கொண்டேன் என் நொம்மா நொப்பா சாக நான் எப்படி காரணம் என மனசு பதைபதைத்தது என் சோட்டுப்பயக கூட இப்படி சொன்னது இல்லை இந்த மொமாவுக்கு என் மேல என்ன அக்கறை அடிக்கிறான் உதைக்கிறான் என் நொம்மாவோட தொம்பி கூட இப்படி இல்லை நாளைக்கு ஊருல இவன் என்னைப்பத்தி என்ன சொல்வானு தெரியாதே எனநினைத்தபடி வலியுடன் தூங்காமல் தூங்கினேன் எடே எந்திரு நைட்டு மலைப்பக்கம் போனியா என தோட்டத்து நொண்ணன் கேட்டார் இல்லண்ணே தூக்கம் வரலை சும்மா நடந்தேன் அந்த மொமா என்னை அடிச்சாக என்றேன் ஊர்ப்பக்கம் நடக்க வேண்டிதானே எதுக்கு அங்குட்டுப் போன பல்ல விலக்கிட்டு காபியக்குடி இட்லி இருக்கு பொறவு சாப்பிடு வடக்கால தண்ணி பாய்ச்சு மலைப்பக்கம் போவாத இன்னைக்கு யாரும் களை எடுக்க வரலை நானு பொறவு
வரேன் இங்கே வாடே என்னடே கன்னத்தில வீங்கி இருக்கு என தொட்டார் அடிச்சாகனு சொன்னனில காபி குடிடே கூட வாடே என இருந்தார் செங்கல் பொடியால் பல் விலக்கி காபி குடித்து நொண்ணனோடு ஊருக்குள் போனேன் நேராக அந்த மொமா வீட்டுக்குப் போனார் எவனைக்கேட்டு வெண்ணை இவனை அடிச்ச வகுந்துருவேன் என்னமோ நீசோறு போட்டு வளர்க்கற மாதிரி அடிச்சிருக்க அந்த மொமா இல்லை ராசு அவன் பேசின பேச்சு என இழுத்தார் எல்லாம் சொன்னான் அவன் மேலே தப்பு இல்லை இனி அவன் விசயத்தில தலையிட்ட மனுசனா இருக்கமாட்டேன் பாத்துக்க காவாலித்தனத்தை வேறு எவன்கிட்ட வேணா காமி ஊரே கூடியது விடுயா ராசு என விலக்கினார்கள்.

எடே நீ தோட்டத்துக்கு போ என்றதும் எனக்கு சாதிச்சது போன்று இருந்தது அந்த நொண்ணனோட எனக்கான கோபம் என்னவென இப்பதான் பார்த்தேன் வலி ஏதுமில்லை
எனக்குனு ஒருத்தர் இருக்காரு என்பதான தைரியம் நினைக்கவே நன்றாக இருந்தது கொஞ்ச நாளைக்கு மலைக்குப் போக வேண்டும் என எண்ணம் வரவில்லை எதுக்குப் படிப்பு வரலைனு யோசிக்க முடியலை ஆனா இந்தமுறை விளைச்சல் பரவாயில்லை புதுத்துணி கிடைச்சது அதைப்போட்டுக்கிட்டு சும்மா ஊருக்குள்ளார சுத்தினேன்மலைச்சாமி என என் மொமா கூப்பிட்டு காசு இருந்தா கொடுடே எனக் கேட்டார் பையில் இருந்த பத்து ரூபா தாள் கொடுத்தேன் எடே கூடக்கொடு என்றதும் இல்லை என தோட்டம் வந்தேன் மலையை நோக்கி பார்க்கத் துவங்கினேன் நொண்ணன் கிட்ட சொல்லி செய்யலாம் என சாயந்திரம் கேட்டேன் ஏன்டே இப்படி மலைக்கு நீ அலையற போனா உசுரோட யாரும் திரும்ப மாட்டாங்க சொன்னா கேளுடே திரும்பிருவேன் என்றதும் வேணாம்டே அப்புறம் உன் இஷ்டம் என போய்விட்டார் எனக்கு மனசுக்குள் ஒரு தைரியம் வந்தது அன்று இரவு மலையை நோக்கி நடந்தேன் காட்டினை நெருங்கினேன் காட்டுக்குள் பாதைஎன எதுவும் இல்லை நெடு மரங்கள் அசைந்தன சிறுசிறு செடிகள் இருந்தன புதர்கள் போன்றே காட்சி அளித்தது இதுவரை இருந்த நிலவு வெளிச்சம் மறைந்து இருட்டாக இருந்தது டார்ச் அடித்தேன் பகலில் வந்து இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் திரும்ப மனமில்லை அங்கேயே இருந்தேன் அதிகாலையில் சிறு வெளிச்சம் வர உள்ளூர பயமற்று நடந்தேன் மர வாசனையில் நான்மயங்கி விடுவேனோ என நினைத்தேன்

(தொடரும்)

Wednesday 2 March 2016

மாறா மரபு - 6

8. மனிதனே மகானுபாவன் 

‘’இங்க பாரு ராம், உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு நான் வேறு எங்காச்சும் போயி வேலைப் பார்த்துகிறேன், இப்படி என்னை கொலை பண்ணுவேன்னு மிரட்டுறது நல்லா இல்லை. நீ டாக்டருக்குத்தான் படிச்சியா இல்லை கொலைகாரனாகப் படிச்சியா. நீ நல்லது செய்றேன்னு நினைச்சித்தான் நான் சரின்னு சொன்னேன். வேற உள்நோக்கம் எதுவும் இல்லை. நீ இதை முறையா செஞ்சா என்ன? உனக்கு அனுமதி கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் இப்படி கள்ளத்தனம் பண்ற. இனிமே என்னை மிரட்டின அப்புறம் நான் என்ன பண்ணனுமோ அதை பண்ண வேண்டி இருக்கும்’’

‘’டாக்டர் சுபா, கோபப்படாத, நான் இது என்னோட லட்சியம் மாதிரி செய்றேன். இதுக்கு இடையூறா எது வந்தாலும் அலட்சியப்படுத்த முடியாது. அதனால் தான் அப்படி ஒரு வார்த்தையை விட்டுட்டுட்டேன். உன்னை நம்பறேன். மனப்பூர்வமா நம்பறேன்’’

‘’சரி ராம், என்னை மிரட்டி அடிபணிய வைக்க மட்டும் ஒருபோதும் கனவு காணாத’’

சுபா டாக்டர் ராமிடம் சொல்லிவிட்டு தனது அறையில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் எட்டிப்பார்க்க எத்தனித்தது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் நன்றாக வாழ வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த அந்த உயிரினங்கள் அதன்பாட்டுக்கு இருப்பின் எவ்வித நெருக்கடியும் இல்லை, எதனுடனும் போட்டி இடாதவரை அதன் இயல்பை தொலைப்பதும் இல்லை.

பிறரை மிரட்டி அடிபணிய வைக்கும் போக்கு இந்த உலகில் நிறையவே நடந்து வருகிறது. இதற்கு எல்லாம் எந்த மரபணு காரணம் என மருத்துவ உலகம் கண்டுபிடித்து விட்டதா என்ன. நோய் என வந்தால் மட்டுமே அதற்கு என்ன காரணிகள், அதற்கு எந்த மரபணு எனத் தேடித் திரியும் மருத்துவ உலகம் ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் என்ன அடிப்படை என புரியாமல்தான் இருக்கிறது. சுபா எப்படியும் இந்த வாரம் ஸ்ரீரங்கம் சென்று வர வேணும் என திட்டமிட்டாள்.

‘’டாக்டர், பேசன்ட்ஸ் வெயிட் பண்றாங்க, வரச் சொல்லட்டுமா?’’

‘’ம்ம், வரச் சொல்லுப்பா’’

ஒவ்வொருவராக பார்த்து அனுப்பி வைக்கையில் மாலை மணி ஆறு ஆகிவிட்டது. வழியில் டாக்டர் ராம் வந்து பார்த்தார்.

‘’என்ன டாக்டர் சுபா, ஆர் யூ ஆல்ரைட்?’’

‘’எஸ் ராம், நல்லா இருக்கேன்’’

‘’நான் சொன்னது எதுவும் மனசில வைச்சிகிரலையே’’

‘’ராம், அதுபத்தி பேச வேணாம், திரும்பவும் எனக்கு அதை நினைவுபடுத்தி என்னோட இரவுப்பொழுதை கெடுத்துறாத’’

‘’சரி டாக்டர் சுபா’’

சுபா வீட்டிற்கு போனதும் குளித்துவிட்டு சமையல் அறையில் அருகில் இருந்த மேசையில் அமர்ந்தாள்.

‘’சுபா, உன் அண்ணன் ரகு போன் பண்ணி இருந்தான்’’

‘’என்ன விசயம்மா’’

‘’உன் அண்ணி லட்சுமியோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம். அவனும் டாக்டர் தானாம். உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னான்’’

‘’எதுக்கும்மா இப்ப அவசரம். அப்படியே கல்யாணம் பண்ணினாலும் நான் சிவராம் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுத்தான் பண்ணுவேன்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா பிறகு யோசிக்கலாம்மா’’

‘’யாரு அந்த சயின்டிஸ்ட் பையனா’’

‘’ஆமாம்மா’’

‘’உன் அப்பாவுக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டியது இல்லை’’

‘’நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்’’

‘’அதுக்கில்லை சுபா’’

‘’அம்மா ப்ளீஸ் என்னை விட்டுடு. எனக்கே தலை வலிக்கிற மாதிரி இருக்கு’’

‘’ஒரு நிமிஷம் இரு, சப்பாத்தி செஞ்சி தரேன், எங்களை மீறி நீ எதுவும் செய்யமாட்டல’’

‘’செய்யலைம்மா’’

மூன்றே சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள். இன்ட்ரான் பற்றி புரட்ட ஆரம்பித்தாள். படித்துக்கொண்டே இருந்தவள் சட்டென யோசித்தாள். எப்போது செல்லில் கரு உருவாகத் தொடங்கியதோ அப்போதுதான் இந்த இன்ட்ரான்கள் உருவாகத் தொடங்கி இருக்கும். அப்படியெனில் ஈஸ்ட்டில் இன்ட்ரான்கள் உண்டா எனும் கேள்வி அவளுக்குள் எழுந்தது. இந்த ஈஸ்ட்கள் செல்லில் கரு கொண்டுதானே இருக்கிறது. சிவராமிற்கு போன் செய்தாள்.

‘’சிவா ஈஸ்ட்ல இன்ட்ரான் இருக்கா?’’

‘’என்ன சுபா, எந்த திசைக்கு இன்ட்ரான் இருக்கு, ஒரு திசைக்கும் இன்ட்ரான் இல்லை’’

‘’இதுக்கு நான் சிரிச்சி வைக்கட்டுமா?’’

‘’ஓ நீ ஈஸ்ட் செல் பத்தி கேட்டியா, அது இருக்கட்டும். எனக்கு வீட்டில பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொண்ணு பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தா. பேரு கூட ராகினி, சாப்ட்வேர் எஞ்சினியர்’’

‘’சிவா ஈஸ்ட் செல்லுக்கு இன்ட்ரான் இருக்கா இல்லையா’’

‘’இருக்கு சுபா, ஏன் கேட்கிற?’’

‘’பாக்டீரியாவுக்கு இல்லாத இன்ட்ரான் எப்படி ஈஸ்ட்க்கு வந்துச்சி. ஈஸ்ட்ல நியூக்ளியஸ் இருக்கிறதுதானே காரணம்’’

‘’சுபா, உனக்கு எப்படி இந்த யோசனை வந்துச்சி’’

‘’கேட்கறதுக்கு பதில் சொல்லு சிவா’’

‘’ஆமா சுபா. எதுக்கும் ஜூலியோட ஆர்டிக்கில் படிச்சிப் பாரு. உனக்கு நான் லிங்க் அனுப்புறேன்’’

‘’தேங்க்ஸ் சிவா. சிவா, என்னோட அம்மாவும் எனக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாங்க. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். அதான் இப்ப உனக்கு பொண்ணு பாத்துட்டாங்கள வீட்டில எனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருறேன்’’

‘’சுபா என்ன சொல்ற’’

‘’ஆமா சிவா’’

‘’சுபா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதுபத்தி பேசினது இல்லையே, திடீருன்னு ஏன்?’’

‘’சிவா, எனக்கு காதல் அப்படின்னு எதுவும் எண்ணம் இல்லை. கல்யாணம்னு வந்தா உன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு இருந்தேன். அதுவும் நீ ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு என் வீட்டில சொல்ல சொன்ன நினைவு இருக்கா. அதிருக்கட்டும் அவ்வளவுதான், இப்போதான் எல்லாம் தெளிவாயிருச்சி’’

‘’சுபா, என்னை மன்னிச்சிரு. நான் அன்னைக்கு சொன்னது உண்மைதான்’’

‘’இதில என்ன மன்னிப்பு வேண்டி இருக்கு. என் மனசில பட்டதை சொன்னேன், மறக்காம அந்த லிங்க் அனுப்பு இப்போ’’

‘’ம்ம் அனுப்புறேன் சுபா’’

சிவராம் சுபாவிடம் பேசியபின்னர் மிகவும் மனம் சஞ்சலத்திற்கு உள்ளானான். சுபா மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என அவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. தான் விளையாட்டாக பேசியதை அவள் மனதில் உண்மை என்றே எண்ணி இருக்கிறாள் என நினைத்தபோது சற்று கஷ்டமாக இருந்தது. எது என்றாலும் தன்னைத் தேடி வரும் சுபாவை நினைத்தபோது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து உட்கார்ந்தது. வேகமாகத் தேடி அந்த இணைப்பை சுபாவுக்கு சிவராம் அனுப்பி வைத்தான்.

Deletion of Many Yeast Introns Reveals a Minority of Genes that Require Splicing for Function

எல்லாவற்றையும் படித்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. பாலூட்டி வகையின் செல்களில் இந்த இன்ட்ரான்கள் முக்கியத்துவம் நிறைந்தது என்ற வரிகளை வாசித்தபோது தான் டாக்டர் ராம் மீது ஒரு இனம் புரியாத கோபம் வந்து சேர்ந்தது. அதோடு தனது ஆசையை தொலைந்து போகச் செய்த சிவராம் மீதும் சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது.

எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் சராசாரிக்கு உட்பட்டு இருப்பார்கள் என்பதை புரியாத போது காதல் வந்துவிடுகிறது. ஆல்டர்நேடிவ் ஸ்பிலிசிங் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும் எனும் பயம் மீண்டும் சுபா மனதில் வந்து அமர்ந்து கொண்டது. மேலும் மேலும் படித்துக் கொண்டே வந்த போது செல்லின் வளர்ச்சியில் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் எவ்வித மாற்றம் உண்டு பண்ணுவதில்லை என அறிந்ததும் குழப்பம் அடைந்தாள். எப்படி இருந்தாலும் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகவே செய்யும் என தெளிவாக முடிவு ஒன்றை எடுத்தவளாக அறைக்குள் சென்றாள். ஏதோ ஒரு ராம் தனது உறக்கத்தை இன்று கெடுக்க வேண்டும் போல் இருந்து இருக்கிறது என எண்ணினாள்.

அடுத்த நாள் அப்பாவிடம் சிவராம் குறித்து பேசினாள். அவரும் உனக்கு என்ன விருப்பமோ அதன்படி செய்மா.

‘’நாங்க ஒரு மாப்பிள்ளை பாத்து உனக்குப் பிடிக்காம போச்சுனா எங்களுக்கும் தான் கஷ்டம்’’

‘’என்ன பேசறீங்க, ஒரு பொண்ணு உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா, நாங்க பாக்கற பையனை கட்டுன்னு சொல்லாம என்ன இது’’

‘’டாக்டர் விருப்பப்படி செய்யட்டும்’’

தனக்கு தரப்பட்ட சுதந்திரம்தனை பயன்படுத்த முடியாமல் தவித்தாள் சுபா. சிவராமிடமே சென்று என்னை திருமணம் பண்ணிக்கொள் என கேட்கலாமா என்று கூட ஒரு கணம் நினைத்துவிட்டாள். பிறகு நடப்பது நடக்கட்டும் என அந்த வாரம் முழுவதுமே எப்படியோ கடத்திவிட்டாள். அந்த வாரம் முழுவதுமே சிவராமிடம் அதிகம் பேசவில்லை. இன்ட்ரான்கள் பற்றிய எண்ணம் கூட பின்னோக்கி போய் இருந்தது. வெள்ளிக்கிழமை காலையில் தான் அம்மாவிடம் தான் ஸ்ரீரங்கம் செல்ல இருப்பதாக சொன்னாள்.

‘’என்ன விஷயம்’’

‘’ஒருத்தரை வேலை விசயமா பாக்கணுமா’’

‘’எங்க தங்கப்போற?’’

‘’நாளைக்கு காலையில போயிட்டு நைட்டே வந்துருவேன்மா’’

‘’சுபா, நீ ஒரு மாதிரியா இருக்கியேம்மா’’

‘’அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா’’

எப்பொழுது நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசிக்கவில்லை என தெரிகிறதோ அப்போதே நாம் பாதி இறந்து விடுகிறோம். அதற்குப் பின்னர் நம்மை குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி ஒன்று எழுகிறது. இந்த உலகில் நமக்கு என்று எதுவும் இல்லை என்றது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. சுபா அடுத்தநாள் ஸ்ரீரங்கம் நோக்கிப் போனாள். அவள் அதிகாலை எழுந்து கிளம்பி மதியம் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தாள். நேராக கோவில் சென்று மூடும் முன்னர் வணங்கிவிட்டு வந்தபோது அவளுக்குள் ஒருவித தெளிவு உண்டாகியது. இதே ரெங்கமன்னாரை தான் அடைய வேண்டி தவம் இருந்த ஆண்டாள் குறித்து எண்ணிப்  பார்த்தாள். தான் ஒன்றை அடைய வேண்டி இருக்கும் தவத்தின் வலிமை அந்த ஒன்றை நிச்சயம் தனக்கு கொண்டு வந்து சேர்க்கும். இந்த டாக்டர் ராம் அப்படித்தான். அவன் இருப்பது ஒரு தவம். இந்த மனித குலமே ஒவ்வொரு மாற்றத்திற்கு என ஒரு மாபெரும் தவம் இருக்கிறது. ஒன்றை புரியாது எனில் அது புரியாது என தவம் இருக்கும் மனிதர்கள் ஒதுங்கிப் போவது இல்லை. அதைப் புரியும் வரை அந்த தவத்தின் வலிமையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்களே அன்றி குறைத்துக் கொண்டது இல்லை. அதே எண்ணத்துடன் ரெங்கநாதனை தேடிச் சென்றாள்.

குடிசையின் வெளியில் அமர்ந்து இருந்தார் ரெங்கநாதன். அவர்தான் என அடையாளம் கொண்டவள் போல அவர் அருகில் சென்றாள்.

‘’நீங்க ரெங்கநாதன்’’

‘’அவனை சேவிச்சிட்டு வரேளா’’

‘’யாரை’’

‘’வேறு யாரை, அந்த ரெங்கன்தான்’’

‘’ஆமா தாத்தா’’

‘’என் வீட்டில சேரு இல்ல, இப்படி கீழ உட்காருவேளா’’

சுபா அமர்ந்தாள். சிவராம் சொன்ன அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தாள்.

‘’மனுசா எல்லாம் மகானுபாவன். அவாளுக்கு எல்லாம் தெரியும். இந்த ஜீவராசிகளில் மனுசா மட்டும் தான் இந்த பிரபஞ்சத்தை அலசி ஆராய முற்பட்டா. ஒளி வைச்சி இந்த லோகத்துக்கு ஒளி கொடுக்கிறவா இந்த மனுசா தான். இதே போல ஒரு பூமியை இந்த மனுசா உருவாக்கும் அளவுக்கு திறமை  படைச்சவா, பிரசாதம் சாப்பிட்டேளா’’

‘’ம்ம், நீங்க சிவா கிட்ட சொன்னது எல்லாம் நடக்குமா தாத்தா’’

‘’அந்த இன்ட்ரான்கள் குழந்தைகளா. உம்ம கையால்தானே தொடக்கம்’’

‘’அது வந்து... உங்களுக்கு எப்படித் தெரியும்’’

‘’நான்தான் சொல்றேனில்லையோ, இந்த மனுசா மகானுபாவன்’’

‘’மகானுபாவன் அப்படின்னா?’’

‘’ஒரு பேரறிஞன்,  பிறர் போற்றிட சிறந்தவன், மாபெரும் ஞானி, தனக்கென்று இல்லாமல் பிறருக்கு என குணம் கொண்ட  கொடைப்பண்பினன்''

‘’அப்படி இருக்காங்களா?’’

‘’நிறைய இருக்கா, ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறா. எல்லாம் இந்த இன்ட்ரான்கள் நீக்கிட்டா சரியாகிரும்’’

‘’நமது சிந்தனைக்கும் இன்ட்ரான்களுக்கும் என்ன சம்பந்தம்’’

‘’நிறைய இருக்குனு சொல்வா. நினைக்க நினைக்க நடுக்கமும், சந்தோசமும் உண்டாகும்னு எழுதி வைச்சிருப்பா. நாராயண ஸ்தோத்திரம் கேட்டது உண்டோ’’

‘’இல்லை’’

‘’ஊருக்கு திரும்பிப் போறப்ப அதை வாங்கிட்டுப் போங்கோ, தினமும் கேளுங்கோ’’

‘’ ம்ம்’’

’அச்சலோத்ருதி சஞ்சல்கரா, பக்தனுக்ரக தல்பார நாராயணா’’ இதோட அர்த்தம் என்ன தெரியுமோ. அதாவது ஒரு மலையையே தூக்கிய  வலிமை கொண்டவனே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆர்வம் கொண்டவனே நாராயணா அப்படின்னு பொருள், மலையை தூக்கினது யாரு. அந்த பரந்தாமன். பரந்தாமன் வடிவிலா தூக்கினார். இல்லையே மனுஷ ரூபத்தில் தூக்கினார். அதான் மனுசனே மகானுபாவன். ஒரு தனிப்பட்ட மனுசாளோட உடல் வலிமையை விட மன வலிமை புத்தி கூர்மை ரொம்ப பெரிசுனு இப்ப சொல்றா’’

சுபா தன்னை அறியாமல் அவரை நோக்கி வணங்கினாள் (தொடரும்)
9. மனம் மயங்குதல்


சுபா ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து ரெங்கநாதன் குறித்து சிவராமிடம் நிறைய பேசிக்கொண்டே வந்தாள். எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது குறித்தும் அவள் சொன்னதும் சிவராம் மறுத்தான். சிவராம் தனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாக கூறினான்.

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகுமார் தீபா தம்பதிகளின் விந்தணுக்கள், அண்ட செல்களை பெற்றுக் கொண்டாகிவிட்டது. டாக்டர் ராம் முக்கிய வேலையாக இருந்தார். டாக்டர் சுபா அவற்றை நுண்ணோக்கியில் பார்த்துவிட்டு மயக்கம் போடாத குறையாக டாக்டர் ராமிடம் வந்தாள்.

‘’ராம், அந்த செல்கள் எல்லாம் உருப்படியாகவே இல்லை, வந்து பார்’’

‘’என்ன சுபா, விளையாடுறியா’’

‘’இதில் என்ன ராம் விளையாட வேண்டி இருக்கு’’

டாக்டர் ராம் அவசர அவசரமாக வந்து பார்த்தவர் நெற்றி எல்லாம் வியர்க்கத் தொடங்கி இருந்தது.

‘’தெய் டோன்ட் லுக் நார்மல்’’

‘’இப்ப என்ன பண்றது ராம்’’

‘’ஃப்யூஸ் தெம்’’

‘’நோ’’

‘’டூ வாட் ஐ சே, டோன்ட் டூ எனிதிங், ஜஸ்ட் ஃப்யூஸ் தெம். யூஸ் இன்ஜெக்சன் புரொசிஜர்’’

‘’ஐ கான்ட், தெய் வில் ஃபெயில்’’

‘’ஜஸ்ட் டூ இட். ஒன் டூ ஒன், செலக்ட் வாட் யூ தின்க் பெஸ்ட்’’

டாக்டர் ராம் தனது தலையில் அடித்துக் கொண்டார்.

‘’சுபா, சொன்னதை செய்துட்டு வா, எனக்கு மயக்கம் வருவது போல இருக்கு’’

சுபா ஒரு விந்து செல் எடுத்து ஒரு அண்ட செல்லுடன் ஊசி முறையில் இணைத்தாள். இப்படியாக மூன்று விந்து செல்களை மூன்று அண்ட செல்களுடன் தனித்தனியாக இணைத்தாள்.


ஆய்வகத்தில் அவைகளை வைத்துவிட்டு டாக்டர் ராமினை சந்திக்க வந்தாள்.

‘’ராம், இணைத்து பண்ணியாச்சு’’

‘’தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்தாச்சா’’

‘’இன்னும் இல்லை ராம்’’

‘’என்னதான் நடக்குது சுபா, அவங்க கிளம்பி போயிருந்தா என்ன பண்ணுவ. இன்னும் ஆறு நாளில் அவங்களுக்கு நாம இந்த கருவை உள்ளே வைச்சாகனும். நாளைக்கு வந்து கருத்தரிச்சி இருக்கான்னு பாரு’’

‘’எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு ராம்’’

‘’ஒன்னு நடக்கிற முன்னாடி சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், நீ முதல போயி தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்து ஆறு நாள் கழிச்சி வரச் சொல்லு’’

சுபா, தீபாவிடமும் சுகுமாரிடமும் நடந்த உண்மையை மறைத்து எல்லாமே நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை சொன்னவள் தீபாவின் கருப்பையை தயார் செய்ய ஹார்மோன் ஊசி போட்டாள். தீபா சுபாவின் முகத்தில் ஒருவித பயம் இருப்பதை கண்டார்.

‘’டாக்டர் உங்க முகமே சரியில்லையே, எதுவும் பிரச்சினையா?’’

‘’ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு இருபது மணி நேரத்தில கரு உருவாகிரும், அப்புறம் ஒரு ஆறு நாள் அதை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்து வருவோம். அப்புறம் ஆறு நாள்  பிறகு வந்தீங்கனா உங்க கருப்பையில கருவை வைச்சிரலாம்’’

‘’எத்தனை கரு உருவாக்குவீங்க டாக்டர்’’

‘’மூனு உருவாக்கி இருக்கோம், உங்க விருப்பபடி உங்க கருப்பையில வைக்கிறோம்’’

‘’மூனும் வைச்சிருங்க டாக்டர்’’

‘’மூனுமே நல்லா இருந்தா வைக்கலாம். ஆனா மூனு வேண்டாம், இரண்டு மட்டும் வைப்போம், உங்க உடம்பு தாங்கனும் இல்லையா’’

‘’சரி டாக்டர்’’

சுபா, தீபாவும் சுகுமாரும் செல்லும் வழியினைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ராம் அங்கே வெகுவேகமாக வந்தார்.

‘’டாக்டர் சுபா, அவங்க போயிட்டாங்களா’’

‘’போயிட்டாங்க ராம்’’

‘’எனக்கு வந்து அந்த செல்களை காட்டு, ஐ வான்ட் டு மேக் சுயர்’’

சுபா, ராமிற்கு அந்த செல்களை காட்டினாள்.

‘’வெல் டன் சுபா, இட்ஸ் மிராக்கிள்’’

‘’என்ன ராம்’’

‘’இந்த செல்கள் எல்லாம் சாதாரண செல்களா, இல்லையே அப்புறம் எப்படி நார்மலா இருக்கும், நீ கொஞ்சம் கூட யோசனை இல்லாம என்கிட்டே வந்து சொல்ல நானும் பயந்து சே ஒரு அரைமணி நேரம் என்னை பாடாபடுத்திட்டியே டாக்டர் சுபா’’

‘’இல்லை ராம், அப்நார்மல் செல்கள் அது’’

‘’அதேதான், நாம கொடுத்த கேப்ஸ்யூல் வேலை செஞ்சி இருக்கு, நீ எதுக்கும் ஒரு கருவை நாளைக்கு எடுத்து ஜீன் டெஸ்டிங் பண்ணிரு, மீதி ரெண்டு மட்டும் வளரட்டும். அந்த ரெண்டு மட்டும் கருப்பையில் வைச்சா போதும்’’

‘’சரி ராம்’’

‘’இன்னைக்கு உன்னை நான் ஒரு ரெஸ்டாரன்ட் கூப்பிட்டு போகப் போறேன், என்னோட ஆராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தரும் உனக்கு சின்ன பார்ட்டி’’

‘’எதுவும் வேண்டாம் ராம், எனக்கு இன்னும் திக் திக்னு மனசு அடிச்சிக்கிது’’

‘’கவலைப்படாதே சுபா, இட் வில் வொர்க். அப்போ நீ வரலை’’

‘’இல்லை ராம், நாளைக்கு இந்த கருவை வந்து பாக்கிறவரை எனக்கு நிம்மதி இல்லை. அவங்க நம்பிக்கையை நாம தகர்த்துரக்கூடாது’’

‘’சரி சுபா, நான் மட்டும் போயி இந்த நாளை கொண்டாடப் போறேன்’’

அன்று இரவு சுபா சரியாக சாப்பிடவில்லை. அம்மா அப்பாவுக்கு காரணம் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சிவராமிடம் இந்த விஷயத்தை சொல்லவும் மனம் வரவில்லை.

‘’சுபா’’

‘’என்னம்மா’’

‘’அந்த பையன் கிட்ட பேசினியா’’

‘’இல்லம்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டான், சாதாரணமா பழகினான், பேசினானாம்’’

‘’அப்போ பையன் பாக்க சொல்லவா’’

‘’இப்ப இதைப் பத்தி பேசனுமாம்மா, எனக்கு வேலை இடத்தில நடந்ததை நினைச்சே கவலையா இருக்கு’’

‘’என்னம்மா என்ன ஆச்சி’’

‘’ஒன்னுமில்லைம்மா’’

‘’சொல்லு சுபா, சரியாவும் நீ சாப்பிடலை’’

சுபா தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொன்னதும் எல்லாம் நல்லாவே நடக்கும், அதுபத்தி கவலைப்படாதம்மா என்று ஆறுதல் சொல்லிவிட்டு கல்யாணம் குறித்து யோசிக்க சொன்னார்

இரவு மிகவும் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது. ரெங்கநாதன் சொன்னது போல நாராயண ஸ்தோத்திரம் கேட்க ஆரம்பித்தாள். எல்லா வரிகளுமே புரியாததாக இருந்தன. எதையாவது அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டவாறே குரலின் இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளது செல்பேசி ஒலித்தது.

‘’டாக்டர் சுபா, எல்லாவற்றையும் பாதுகாப்பாகத்தானே வைச்சிட்டுப் போன, அது பக்கத்தில வேறு எந்த ஒரு பொருளும் இல்லையே. எனக்கு திடீருன்னு ஒரு சந்தேகம்’’

‘’இல்லை ராம், எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கு’’

‘’நீ இல்லாத ஒரு குறைதான் சுபா, பார்ட்டிக்கு நாலைஞ்சி பேரு வரவைச்சிட்டேன்’’

‘’சரி ராம், குட் நைட்’’

மீண்டும் பாடல் கேட்க ஆரம்பித்தாள். தான் செய்வது சரிதானா எனும் ஒரு உணர்வு தன்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. எவருமே இப்படி ஒரு காரியத்திற்கு துணை போயிருக்கமாட்டார்கள் என்றே எண்ணினாள். தனக்கு புகழ் அடைய விருப்பமா அல்லது ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தந்த தைரியமா என தெரியாது அப்படியே அசதியில் உறங்கியவள் நடுசாமத்தில் முழித்தாள்.

பிறந்தவுடன் இறந்த குழந்தையைப் பார்த்த நினைவுகள் வந்து போயின. இப்படி இயற்கையை மீறிய செயல் ஒன்றை செய்வது சரியா என யோசித்தாள். எப்படியாகினும் நாளை விடிய வேணும் எனும் எண்ணத்தில் உறங்க நினைத்தாலும் உறங்க இயலவில்லை.
அதிகாலையில் உறங்கியவளை அவளது அம்மாதான் எழுப்பி விட்டார்.

‘’அம்மா குழந்தை குழந்தை’’

‘’என்ன சுபா’’

‘’பயமா இருக்குமா, கெட்ட கனவு ஒன்னு’’

‘’நீ மனசைப் போட்டு குழப்பாதே’’

சுபா குளிக்கும்போது அவளுக்கு அழுகை தானாக வந்தது. அவசர அவசரமாக கிளம்பினாள். மிகவும் தாமதமாகவே கிளினிக்கிற்கு சென்றாள், டாக்டர் ராம் அங்கே இருந்தார்.

‘’குட் மார்னிங் டாக்டர் சுபா’’

‘’வணக்கம் ராம்’’

‘’எவரிதிங் இஸ் சக்சஸ்’’

‘’ராம்’’

‘’ஆல் ஆர் பெர்டிளைஸ்ட், லுக்கிங் குட்’’

‘’தேங்க்ஸ் ராம்’’

‘’எல்லாம் உன்னால நடந்தது டாக்டர் சுபா’’

‘’ஜீன் டெஸ்டிங் பண்ணவா’’
‘’வேண்டாம்’’

‘’நேத்து பண்ண சொன்ன ராம்’’

‘’இல்லை வேண்டாம்’’

‘’உறுதிபடுத்திக்கிட்டா நல்லதுதானே’’

‘’இல்லை சுபா, ஆறு நாட்கள் ஆகட்டும். அன்னைக்கு பண்ணுவோம். எப்படி ஒவ்வொரு நாள் வளரும்னு நமக்கு தெரியாது. ஒன்னாவது நிச்சயம் நல்லா இருக்கனும். நாம எடுக்கிறது நல்லதா இருந்து பிரச்சினை ஆகிட்டா என்ன பண்றது. லெட் அஸ் பீ சேப்’’

‘’சரி ராம்’’

‘’யூ கேன் கோ அன்ட் லுக். அவங்களுக்கு தகவல் சொல்லிருங்க’’

சுபா அவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். எப்படி இவை நல்ல செல்களாக மாறிக்கொண்டன என புரியாமல் இருந்தது. அப்போதே தீபா சுகுமார் தம்பதிகளுக்கு தகவல் சொன்னாள். அவர்கள் சந்தோசத்தில் நிறைய பேசினார்கள்.

தினமும் செல்களை பார்ப்பதும் அவைகள் குறித்து எழுதுவதுமாக சுபா இருந்தாள். மூன்றாம் தின மாலை அன்று சிவராம் சந்திக்க வேண்டும் என சொன்னதால் அவனை சென்று பார்த்தாள்.

‘’என்ன சிவா’’

‘’சுபா உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன், உனக்கு சம்மதமா’’

‘’சிவா’’

‘’பரிதாபமோ, குற்ற உணர்வோ இல்லை’’

‘’உண்மையா சிவா’’

‘’ஆமா சுபா. உன்னை அறிய முயன்றபோது என்னை அறிந்து கொண்டேன்’’

‘’கவிதையா சிவா’’

‘’உன்னை போற்றி ஆராதிக்க என்னைவிட எவரும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை எனும் பேரகந்தை எனக்கு எப்போதும் உண்டு’’

‘’எங்கே இதை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்த’’

‘’நீ தொலைத்ததாய் நினைத்த ஒன்று நீ என்னிடத்தில் இன்னும் இருக்குமென்று நீ எதிர்பார்த்து இருக்கமாட்டாய். ஒருவேளை உன்னை மீண்டும் உள்ளுக்குள் நினைத்துப் பாத்திராவிட்டால் எனக்கு காதல் என்றால் என்னவென தெரியாமல் போயிருக்குமோ? அன்று உன்னிடம் நான் பேசியதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கவே நான் விருப்பம் கொள்கிறேன்’’

‘’வாவ் அசத்தல் சிவா. நீதான் எழுதினியா’’

‘’உண்மையானவர்கள் ஒருபோதும் ஒளிந்து கொள்வதில்லை’’

‘’போதும் போதும் சிவா, நீ சொன்னதே எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு. எங்கே எனக்கு நீ இல்லாம போயிருவியோனு ஒருவித மனக்கலக்கம் இருந்துட்டே இருந்துச்சி. அப்புறம் மூனு கருக்கள் அருமையா வளர்ந்துட்டு இருக்கு. ராம் கூட என்னை பார்ட்டிக்கு கூப்பிட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’’

‘’மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தபோது நான் உன்னை காதலிக்கத் தொடங்கினேன்’’

‘’சிவா. இந்த உலகத்திற்கு வா’’

‘’சுபா இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்கு துணையாக கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். நல்லவேளை உன்னை இழக்க இருந்தேன். எல்லா கருவுமே நல்ல நிலையில் இருக்கா’’

‘’இருக்கு, ஜெகன் பேசினாரா’’

‘’தினமும் பேசிட்டு இருக்கோம். இன்னும் மூனு நாளுல ஆரம்பிக்க போறோம்’’

‘’சிவா நாங்களும் கருவை மூனு நாளில் வைக்கப் போறோம்’’

சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டி மழை பெய்யத் தொடங்கி இருந்தது. (தொடரும்)

பகுதி 10 பிரபஞ்சத்தின் கூறு 

அடுத்த இரண்டு தினங்களில் இரண்டு கருக்கள் சிதைந்து போயின. டாக்டர் ராம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சுபாவை அழைத்து கடுமையாக சத்தம் போட்டார். சுபா தான் என்ன செய்ய இயலும் என்றே வருத்தம் தெரிவித்தாள். ஆனால் டாக்டர் ராம் சுபாவின் மீது பழியை சுமத்தினார். அன்று தன்மீது சுமத்தப்பட்ட பழியை எவரிடம் சொல்வது என வாடிய முகத்துடனே இருந்தாள். மிச்சம் இருக்கிற அந்த ஒரு கரு பிழைக்க வேண்டுமே எனும் கவலை சுபாவை மிகவும் வாட்டியது. டாக்டர் ராம் சுபாவின் அறைக்கு வந்தார். 

''சுபா அந்த கருவை வேறு ஒரு மீடியாவுக்கு மாத்திரு, இந்த கரு மட்டும் சிதைஞ்சதுன்னா என்னோட கனவு எல்லாம் சிதைஞ்சிரும். உன்னை சத்தம் போட்டது எல்லாம் மனசில வைச்சிக்காதே. என்னோட கோபம் எல்லாம் உன் மேல தான் என்னால காட்ட முடியுது. சாரி சுபா. உனக்கேத் தெரியும் நான் இதற்காக எவ்வளவு போராடுறேனு. எனக்கு நிறைய படபடப்பா இருக்கு சுபா''

''ராம் நான் என்ன பண்ணுவேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. எல்லாம் சிதைஞ்சி இருந்தா என்ன பண்றது. நாளைக்கு தீபா வந்துருவாங்க. இந்த கருவை இப்போ வேற மீடியாவுக்கு மாத்தி ஏதாவது ஆச்சினா என்ன செய்றது. இப்படியே இருக்கட்டும். நீ என்னை திட்டினதை எல்லாம் என்னால ஈசியா எடுத்துக்க முடியலை. நீ ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கிற மாட்டேங்கிற. உனக்கு புகழ் பெருமை தான் ஒரே குறிக்கோள். தனிப்பட்ட மனுஷரோட எண்ணத்திற்கு நீ எப்போ மதிப்பு தந்து இருக்க சொல்லு''

''இல்லை சுபா. எனக்கு கைகால்கள் ஓடலை, சரி நீ சொன்னமாதிரியே மாத்த வேணாம். நான் வெளில போறேன். நாளைக்கு நல்ல முறையில் இந்த கருவை வைச்சிரு''

''எங்க போற ராம்''

''பிரார்த்தனைப் பண்ணப் போறேன்''

''நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு ராம். அப்படியாவது உபயோகமா இருக்கும்''

டாக்டர் ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். 

சுபா இந்த மூன்றாவது கரு சிதையுமோ என்றே பயந்தாள். 

சிவாவை ஜெகன் சந்தித்தான். 

''என்ன சிவா எல்லாம் தயார இருக்கா''

''எல்லாம் தயார் பண்ணிட்டேன், நீ எனக்கு பணம் கொடுத்தா நான் எல்லாம் ஆர்டர் பண்ணி இன்னும் ஒரு மாசத்தில வேலையை ஆரம்பிச்சிருவேன். நாளைக்கு நீ பணத்தை எனக்கு அனுப்பிரு''

''நான் உன்னோட யுனிவேர்சிட்டிக்கு வரேன். என் கண் முன்னால நீ ஆர்டர் பண்ணு''

''என்ன ஜெகன் என் மீது உனக்கு நம்பிக்கை  இல்லையா''

''அதில்லை சிவா, எனக்கு திருப்தியா இருக்கும். நீ சரியானதைத்தான் ஆர்டர் பண்றியானு எனக்கும் தெரியும். தப்பா நினைக்காதே''

''இப்படி இதுவரை நீ சொல்லலியே ஜெகன்''

''வேலைன்னு வந்திட்டா அப்படித்தான் சிவா''

மறுநாள் சிவாவின் ஆய்வகத்திற்குச் சென்றான் ஜெகன். சிவாவிற்கு சிறிது பணத்தை மாற்றினான் ஜெகன். அவனுக்கு முன்னாலேயே சிவா தேவையான காரணிகளை ஆர்டர் செய்தான். ஒவ்வொன்றின் விலையை பார்த்தபோது இது எல்லாம் தேவையா என்றே சிவா மனதில் நினைத்துக் கொண்டான். ஜெகனை சிவா தனது சூப்பெர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். இதை ஜெகன் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளதவன் போலவே இருந்தான். 

''இங்க பாரு சிவா, நீ இந்த காரணிகள் எல்லாம் வந்ததும் பத்திரமா எடுத்து வை. நீ எப்போ ஆரம்பிக்கப் போறியோ அப்போ சொல்லு நான் வரேன்''

''ஜெகன் நீ வந்தா நல்லதுன்னு நானே நினைச்சேன்''

''நீ ரொம்ப சந்தேகத்தோடு இருந்ததால நான் வர வேண்டி இருந்தது. இல்லைன்னா நான் இதில் தலையிட வேண்டியது இல்லை. அதுவும் என்னை அந்த டாக்டர் ராம் பார்த்தா என்னோட நிலைமை என்னாகிறது''

''எதுக்கு ஜெகன் இப்படிப் பயப்படுற''

''சிவா நான் கிளம்பறேன். எல்லா காரணிகள் வந்ததும் தகவல் சொல்லு''

''சரி ஜெகன்''

ஜெகன் சிவாவின் மீது நம்பிக்கை இல்லாதவனாக தென்பட்டான். இவன் நிச்சயம் குழப்பிவிடக்கூடும் என்றே அவனது மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் வெளியே சென்றபோது சிவாவின் சூப்பர்வைசர் அழைத்தார். இதை ஜெகன் எதிர்பார்க்கவில்லை. நிறைய விசாரித்தார். ஜெகன் வேறு வழியின்றி தனது பணியிடம் குறித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்கு அவர் தன்னிடம் ஒரு புராஜக்ட் இருப்பதாகவும் விருப்பம் இருப்பின் சொல்லவும் கூறினார். ஜெகன் தான் பரிசீலனை செய்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டான். ஆனால் டாக்டர் ராம் மீதான அச்சம் அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது. 

சுபா வேண்டாத தெய்வம் இல்லை. அவளின் முகம் கலக்கத்துடன் இருந்தது. இரவு எல்லாம் சரியாகவே உறங்கவில்லை. சுபாவின் அம்மா சுபாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினார். அதிகாலையில் கிளம்பி கிளினிக் வந்து அடைந்தாள். அவளுக்குள் இருந்த பதட்டம் அவள் அறியாதது. தனது அறையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு வேகமாக ஆய்வகத்தில் நுழைந்தாள். கரு இருந்த மீடியாவை எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்

டாக்டர் ராமை அழைத்து தகவல் சொன்னாள். டாக்டர் ராம் எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்தார். சுபா மீண்டும் பேசியபோது கருவை வைத்தபின்னர் அது எப்படி வளருமோ அதைப் பொறுத்தே எதுவும் சொல்ல இயலும் என்றார். டாக்டர் ராமின் குரல் உடைந்து இருந்தது. சுபாவுக்கு கொஞ்சம் இருந்த நிம்மதியும் இப்போது போய்த் தொலைந்தது. தீபா தம்பதியினர் வந்து சேர்ந்தார்கள். 

தீபாவை சுபா நன்றாக பரிசோதனை செய்துவிட்டு டாக்டர் ராம் வரட்டும் என்றே காத்து இருந்தாள். ஆனால் டாக்டர் ராம் வெகு நேரமாகியும் வரவில்லை. டாக்டர் ராமிடம் சுபா பேசியபோது தனக்கு வர விருப்பம் இல்லை அதை சுபாவையே செய்ய சொன்னார். சுபா கருவை தீபாவின் கருப்பையில் வைத்துவிட்டு கவனமாக இருக்கும்படி பல ஆலோசனைகளை வழங்கினாள். தீபாவின் எல்லையில்லா சந்தோசம் கண்டு மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது. 

''எப்போ வரட்டும் டாக்டர்''

''ஒரு வாரம் கழிச்சி வாங்க, நிறைய கவனமா இருங்க''

''இரண்டு கருவுல ஒன்னு தப்பிச்சிரும்ல டாக்டர்''

''ம்ம் தப்பிச்சிரும்’’ தான் ஒன்றுதான் வைத்தேன் என சொல்லாமல் மறைத்தாள் சுபா.

அன்று முழுவதும் டாக்டர் ராம் வரவில்லை. சுபாவின் மனம் நிறைய வருத்தத்தில் இருந்தது. ஒவ்வொரு தினமும் எப்படி கடந்தது என அவளால் விவரிக்க இயலவில்லை. டாக்டர் ராம் சுபாவிடம் அதிகம் பேசவும் இல்லை. 

''ராம் என்ன ஆச்சு''

''டாக்டர் சுபா, நான் தப்பு பண்ணிட்டேனோ''

''என்ன ராம்''

''இதை பண்ணியிருக்கக் கூடாதுன்னு மனசில ஒரு யோசனை''

''முன்னமே சொன்னேன் ராம் நீதான் கேட்கலை''

''அந்த இரண்டு கரு சிதைஞ்சது என்னை என்னமோ பண்ணுது டாக்டர் சுபா, அதுவும் இந்த கரு நிலைக்குமானு ஒரே பயம்''

''இதுவரைக்கும் அவங்க ஒன்னும் சொல்லலை ராம்''

''நாலு நாள் தான் ஆயிருக்கு, முழு குழந்தை உருவாகி பிறந்து என்னால தோல்வியை ஏற்க முடியாது டாக்டர் சுபா''

''ராம்''

ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார். ஒரு மனிதனின் முயற்சிக்கு ஏற்படும் தோல்வி ஒருவரை துவளவே செய்யும். 

சுபா ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று ரெங்கநாதனை சந்தித்தாள். ரெங்கநாதன் சுபாவை பார்த்ததும் என்னோட ஞாபகம் வந்துருச்சா என்றார். சுபா ரெங்கநாதனிடம் எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள். ரெங்கநாதன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தான் என்ன செய்ய வேணும் என்றார். 

''இந்த குழந்தை நல்லபடியா பிறக்குமா தாத்தா''

''நான் என்ன ஜோசியக்காரானா''

''நீங்க சொன்னதே எனக்கு தைரியம் தந்தது தாத்தா''

''பிறக்கும் பிறக்கும், என்னை பெரிய சாமியாரா ஆக்கிராதேள்''

''தாத்தா உங்களப் பாத்து மனசு தைரியம் அடையலாம்னு வந்தேன்''

''கவலைப்படவேணாம், எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புங்கோ''

அவர் அப்படி சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பினார். சுபா தான் எதற்கு வந்தோம் என்கிற உணர்வு எதுவும் இன்றி அப்படியே உறைந்து நின்றாள். அவரை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என மனம் எண்ணி பின் தொடர்ந்தாள். ரெங்கநாதன் கோவிலுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். 

''தாத்தா''

''நீங்க ஊருக்குப் போங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும், நான் இப்போ ரெங்கனோட பேச வந்து இருக்கேன், நீங்க ஸ்தோத்திரம் கேளுங்கோ''

''வரேன் தாத்தா''

கோவிலில் சென்று வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். சுபாவின் பெற்றோர்கள் சுபாவிடம் நிறைய நேரம் பேசினார்கள். சுபா எல்லா விபரங்களையும் சொல்ல வேண்டிய சூழல் வந்தது. ஆனால் ரெங்கநாதன் குறித்து சொல்லி விஷயத்தை மாற்றினாள். 

ஒரு வாரம் கழித்து தீபாவை பரிசோதித்தபோது எவ்வித பிரச்சினை இல்லாமல் இருந்தது சுபாவுக்கு திருப்தியாக இருந்தது. டாக்டர் ராமிடம் சொன்னபோது தான் கவலைப்படுவது போலவே ராம் காட்டிக்கொண்டார். இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது. 

ஜெகன் சிவாவின் ஆய்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். சிவா அதிர்ச்சி அடைந்தான். 

(தொடரும்) 






 11. துரோகம் சிலரின் இயல்பு

‘’என்ன ராஜ் சொல்ற, ஜெகன் வேலையை விட்டுட்டானா? இப்போ எங்கே இருக்கான்’’

‘’டாக்டர், அவன் பஞ்சாப் போறதா சொல்லிட்டுப் போனான்ல, அப்புறம் வந்து பஞ்சாப்பில் வேலை உறுதி ஆயிருச்சினு எல்லாம் காலிபண்ணிட்டுப் போயிட்டான்’’

‘’அவனோட நம்பர் இருக்கா’’

‘’இல்லை டாக்டர்’’

‘’அவன் என்னமோ விளையாடுறான் ராஜ், நீ பஞ்சாப்புக்கு வேலை மாத்திப் போக முடியுமா?’’

‘’அவன் எங்கே இருக்கானு தெரியாம எப்படி மாத்திப் போறது டாக்டர்’’

‘’நீ அவனோட சூப்பர்வைசர்கிட்ட அவனைப்பத்தி விசாரிச்சி இப்பவே சொல்லு’’

‘’டாக்டர் இருங்க இப்பவே கேட்டுட்டு வரேன்’’

தங்கராஜ் சென்று சூப்பர்வைசரிடம் விசாரித்தபோது எதுவும் என்னால் ஜெகனைப் பற்றி சொல்ல முடியாது. அவன் ஒரு துரோகி. அவனுக்கு துரோகம் இழைப்பதே பழகிப்போய்விட்டது. விடுமுறை என போனவன் எனக்கு எந்த தகவலும் அவன் சொல்லவே இல்லை. எங்கு போனான் என்ன ஆனான் எனத் தெரியாது. எல்லாத் தொடர்புகளையும் துண்டித்து வைத்து இருக்கிறான் என்ற செய்தி தங்கராஜிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘’டாக்டர் அவன் வேலை விசயமா போகலை’’

‘’ராஜ், அப்படின்னா அவன் சொந்த ஊருக்குப் போயிருக்கனும்’’

‘’எல்லா சோசியல் நெட்வொர்க் அவன் டீஆக்டிவேட் பண்ணி இருக்கான் டாக்டர்’’

‘’நீ எதுக்கும் சென்னைக்கு கிளம்பி வா. உன்னோட வேலையை இங்கப் பாத்துக்கிரலாம்’’

‘’டாக்டர், அங்கே வேலை கிடைச்சப்பறம் சொல்றேன் டாக்டர்’’

‘’ராஜ், நீ கிளம்பி வா’’

‘’ஒரு மாசம் டைம் கொடுங்க டாக்டர்’’

‘’சரி வந்து சேரு’’

ஜெகன் தன்னை ஏமாற்றுவது போன்று உணர்ந்தார் டாக்டர் ராம். தான் உண்மையில் பயப்படுவது போல குழந்தை பிறக்கும் வரை டாக்டர் சுபாவிடம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தவருக்கு ஜெகனின் பிரச்சினை புதியதாக இருந்தது.

‘’ஜெகன், எப்படி நீ இந்த ஆய்வகத்தில் சேர்ந்த’’

‘’எல்லாம் நீ செய்துவைத்த அறிமுகம் சிவா’’

‘’என்ன புரோஜக்ட்’’

‘’பிறகு சொல்றேன், எல்லா வேலையும் நானே செய்துக்கிறேன். இதில் நீ தலையிட வேண்டாம்’’

‘’ஜெகன், உன்னால எப்படி இப்படி நடக்க முடியுது, டாக்டர் ராம் கண்ணில் நீ பட்டால் என்ன ஆகும்னு தெரியுமா. பயந்துட்டு இருந்தியே’’

‘’என்ன ஆகும், எல்லாத் திருட்டும் அவன் பண்ணிட்டு இருக்கான், நான் எதுக்குப் பயப்படனும்’’

‘’ஜெகன், உன்னால என்னோட வேலைக்குப் பாதிப்பு வந்துராம பாத்துக்கோ, இல்லை நான் பொல்லாதவன் ஆயிருவேன்’’

‘’அது நீ சூப்பர்வைசரிடம்தான் போய் பேசனும், என்னைப் பிடிச்சி இருந்தது சேர சொல்லிட்டார்’’

‘’உன்னோட டில்லி சூப்பர்வைசர்கிட்ட சொன்னியா’’

‘’எதுக்கு, நான் கொடுத்த ரெபெரேன்ஸ் வேற, அவருக்கு நான் எங்க இருக்கேன்னு தெரியாது. நீ என்னோட விசயத்தில் இனிமே தலையிடாத, அப்படி பண்ணின அவ்வளவுதான்’’

சிவா ஜெகனின் குணம் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தான்.

‘’ஜெகன் இனிமேல் இந்த விசயத்தில் நான் தலையிட மாட்டேன்’’

‘’வெல்டன் சிவா’’

சிவா சூப்பர்வைசரிடம் சென்று ஜெகன் பற்றி பேசியபோது நீ  இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா என்ன அர்த்தம் என சிவாவையே அவர் சத்தம் போட்டார். ஜெகனுக்காக என்ன ஆர்டர் பண்ணினியோ அதெல்லாம் ஜெகன் கிட்ட கொடுத்துரு. அவரோட புரொஜக்ட்ல நீ தலையிடாத. அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என சிவா அமைதியானான்.

ஜெகன் எல்லாம் திட்டமிட்டுப் பேசித்தான் உள்ளே வந்து இருக்கிறான் என்று நினைத்தபோது சிவாவினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறான் என்றே நினைத்தான் சிவா. தான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

டாக்டர் ராம் தான் எதிலும் நேரடியாக தலையிடக்கூடாது என்றே எல்லா விசயங்களையும் தங்கராஜ் மூலம் செய்து வந்தார். தங்கராஜ் சென்னைக்கு வந்தபின்னர் ஜெகன் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தார். வேலையைவிட்டு வர நாட்கள் வேணும் என்றதால் உடனே விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெகன் பற்றி அவனது ஊரில் சென்று விசாரிக்கச் சொன்னார்.

தங்கராஜ் அதன்படியே நேராக ஸ்ரீரங்கம் சென்று தன்னை ஜெகனின் நண்பன் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தான். அதற்கு ஜெகனின் பெற்றோர்கள் ஜெகன் டில்லியில் இருப்பதாக சொன்னார்கள். தங்கராஜ் விபரங்கள் எல்லாம் கூறியபின்னர் தங்களுக்கு வேறு எந்த தகவலும் வரவில்லையே என்றார்கள். இந்த ஜெகன் என்ன ஆனான் எனும் குழப்பம் தங்கராஜிற்கு வந்து சேர்ந்தது.

‘’டாக்டர் ராம், ஜெகன் பத்தின விபரங்கள் அவங்க அப்பா அம்மாவுக்கே தெரியலை’’

‘’ராஜ், அவன் என்னை ஏமாத்துறான், நீ சென்னைக்கு கிளம்பி வா, உனக்கு புது வேலை நான் இங்கே ஏற்பாடு பண்றேன்’’

‘’இல்லை டாக்டர், நான் வேலை மாறிட்டுத்தான் வர முடியும்’’

‘’சரி ராஜ்’’

டாக்டர் ராம் குழப்பம் நிறைந்தவராகத் தென்பட்டார். டாக்டர் சுபா ராமிடம் பேச வேண்டும் என அனுமதி கேட்டுக்கொண்டு சென்றாள்.

‘’என்ன டாக்டர் சுபா?’’

‘’பாலகுரு திவ்யா அவங்களுக்கு இதே மாதிரி பண்ணனும் ராம். எதுவும் மாத்தாம அப்படியே பண்ணினா பிரச்சினை இருக்காது’’

‘’டாக்டர் சுபா, நீ உன் விருப்பம்போல செய். எனக்கு இன்னும் மனசு ஒரு நிலைக்கு வரலை’’

‘’ரொம்பவும் ஒருமாதிரி இருக்கியே ராம்’’

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ அவங்களுக்கு இப்படியே பண்ணு’’

‘’ராம் எதுவும் உதவி தேவையா’’

‘’எதுவும் வேணாம்’’

டாக்டர் ராம் தன்னை நம்பி எல்லாம் ஒப்படைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சுபா. தீபாவிடம் விசாரித்தபோது தான் நன்றாக அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று சிவா அவசரம் அவசரமாக சுபாவை சந்திக்க வேணும் என அழைத்தான். சுபாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லி சிவா முடித்தபோது அந்த வேலையை மட்டும் விட்டுராதே சிவா என்று சொன்னாள் சுபா.

தினங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. ஜெகன் தன்னை ஒரு முழுமூச்சுடன் ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டான். சிவராம் ஜெகனின் மீது தனி வெறுப்பு வளர்க்க ஆரம்பித்தான்.

திவ்யாவின் அண்ட செல்கள், பாலகுருவின் விந்து செல்கள் எடுத்து முன்னர் போலவே ஆய்வகத்தில் இணைத்தாள் சுபா. எப்படியும் இந்த முறை நன்றாக வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். டாக்டர் ராம் சுபா என்ன செய்து வைத்து இருக்கிறாள் என சுபா சென்றபின்னர் ஆய்வகத்தில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.

நாட்கள் நகர கரு எவ்வித பிரச்சினை இன்றி வளர்ந்து இருந்தது. அதில் ஒன்றை மரபணு ஆய்விற்கு உட்படுத்தினார் டாக்டர் ராம். இதை எம்ப்ரோயினிக் பிரி இம்ப்லேன்ட்சன் என சொல்வார்கள். இதன் மூலம் ஏதேனும் கருவில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கண்டு கொள்ளலாம். இந்த ஆய்வின் முடிவில் இன்ட்ரான்கள் இல்லாமல் கரு வளர்ந்து இருந்தது. அதைக்கண்டு பேரின்பம் கொண்டார் டாக்டர் ராம்.

‘’ராம், ரிப்போர்ட் எப்படி இருக்கிறது’’

‘’நினைச்சது நடந்திருச்சி டாக்டர் சுபா’’

‘’இன்ட்ரான்கள் எல்லாம் இல்லையா’’

‘’இல்லை டாக்டர் சுபா, எல்லாம் திரும்பத் திரும்ப ஆய்வு செய்து உறுதிபடுத்தியாகிவிட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை’’

‘’நேத்து வரை ஒருமாதிரி இருந்தியே ராம்’’

‘’அது நேத்து டாக்டர் சுபா. ஆனா இது இன்று. கடந்தகால இன்பத்திற்கு நிகழ்காலம் பொறுப்பாகிறது’’

‘’எனக்கும் மகிழ்ச்சி ராம். இதற்கடுத்து எப்போ அடுத்த தம்பதிக்கு பண்ணப் போறோம்’’

‘’இல்லை டாக்டர் சுபா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சி பண்ணலாம், இப்ப ஒன்னும் அவசரமில்லை’’
‘’சரி ராம்’’

‘’டாக்டர் சுபா, உனக்கு எப்போ கல்யாணம்’’

‘’தெரியலை ராம்’’

‘’உன்னை பொண்ணு கேட்டு வரலாம்னு யோசிக்கிறேன்’’

‘’ராம்’’

‘’உன்னை மாதிரி ஒரு நம்பிக்கையான பொண்ணுதான் வேணும் டாக்டர் சுபா’’

‘’ராம், உன்னை மாதிரி ஒரு ஆளு எல்லாம் எனக்கு கணவன் ஆக முடியாது, இதைபத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்’’

சந்தோசத்தில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிவிட்டோமோ என டாக்டர் ராம் ஒருகணம் சிந்தித்தார். மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் தடுமாறிவிடுகிறோம்.

‘’டாக்டர் சுபா, தெரியாமல் கேட்டுட்டேன்’’

சுபா பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினாள். இந்த உலகம் பெண்களுக்கானதுதான். ஆனால் ஆண்கள் அதை ஒருபோதும் உணர்ந்து கொண்டது இல்லை. தானே இவ்வுலகத்தின் முதன்மை என ஒவ்வொரு ஆணும் ஒரு கணத்தில் எண்ணிவிடக்கூடும்.

அந்த வார சனிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்றுகொண்டு இருந்தாள் சுபா. ரெங்கநாதன் பற்றி அறிந்து கொள்ள நிறைய ஆர்வம் வந்து இருந்தது. சுபாவை கண்டதும் அடையாளம் கண்டவராக என்ன விசேசம் என்றார்.

‘’உங்க ரத்தம் பரிசோதனை பண்ணலாமா தாத்தா’’

‘’மரபணு பரிசோதனையா’’

‘’ஆமா தாத்தா’’

‘’தாராளமா பண்ணலாம்னோ’’


ரெங்கநாதனை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றாள் சுபா (தொடரும்)