Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Thursday 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!





Wednesday 26 August 2015

தமிழ் மின்னிதழ் - சுதந்திரம் 2015 -1

இம்முறை தமிழ் மின்னிதழ் எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் சிறப்பிதழாக வெளிவந்து இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். அதிலும் எழுத்தாளர் சிறப்பிதழில் எனது எழுத்து வந்தது அதைவிட இரட்டிப்பு சந்தோசம்.

ஆமாம், முதலில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வோம்.  சென்ற முறை இங்கே சொன்னது போல ஒரு கதையை தமிழ் மின்னிதழுக்கு எழுதி அனுப்பி அது இடம்பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் மின்னிதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதற்காக தொடர்ந்து எனது எழுத்து வரும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. ஆசிரியர் மற்றும் இதழின் குழுவைப் பொருத்தது, அதைவிட நான் எழுதி அனுப்புவேனா என்ன எழுதி அனுப்புவேன் என்பதைப் பொருத்தது . ஆசிரியரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் உள்ளூர அத்தனை சந்தோசம். இந்த தருணத்தில் முதலில் எனது எழுத்துக்கு ஆதரவு தெரிவித்த நமது திண்ணை சிற்றிதழுக்கு எனது நன்றி.  நமது திண்ணை தவிர எனது எழுத்து எந்த ஒரு சிற்றிதழ் இணைய இதழ் என எதிலுமே வந்தது இல்லை. இது என்ன பெரிய விசயமா என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை பெரிய விசயம் தான்.

எப்படி ஊர் மெச்ச வேண்டி நாம் வாழ நினைக்கிறோமோ அதைப்போலவே ஊர் மெச்ச வேண்டி எழுத்து இருக்க வேண்டும் எனும் எனது எழுத்தின்  தவம் எவருக்கும் தெரியாது, அதன் வலி எவருக்கும் புரியாது. எனது முதல் நாவலை வாசித்துவிட்டு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் என எனக்கு இப்போது நினைவில் இல்லை.

நான் எழுதி அனுப்பிய கதையின் தலைப்பு எண்ணியாங்கு என்கொலல். நண்பர் ஒருவர் சூப்பர் என்றார், ஆனால் எனது வழக்கமான சிறுபிள்ளைத்தனம் அந்த கதையில் இல்லை என்றார். ஆமாம், இரண்டே வார்த்தைகள். எண்ணியாங்கு, என்கொலல். இந்த இரண்டு வார்த்தைகளுமே திருக்குறளில் இருந்து எடுத்தது. என்கொல் என்ற வார்த்தை என்கொலல் என திரிந்தது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

இதில் எண்ணியாங்கு எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இந்த குறள் சொல்வது என்னவெனில் எண்ணியதை செயல்படுத்த உறுதி இருப்பின் எண்ணியது நடைபெறும். கதையில் இதைத்தான் சொல்ல எண்ணினேன். அப்போது  ஒரு பெரிய கேள்விக்குறி எனக்கு எழுந்தபோது மரம் பற்றி நினைவுக்கு வந்தது. மனிதர்கள் தான் தமது எண்ணங்களுக்கு அது இது என சொல்லித் திரிகிறார்கள், ஆனால் மரம்? மரம் என்ன நினைத்து எதை எண்ணி எதில் உறுதியாக இருந்து நிறைவேற்றி கொள்கிறது என்பதே அது. மற்றொன்று நன்றி நவிலல். நாம் சரி, மரம்?

காலைக்குச் செய்த நன்றி என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர்  எனின்

எழுத ஆரம்பிக்கிறேன். கதை சரளமாகவே வரவில்லை. ஒரு கட்டுப்பாட்டில் பயணிக்கும்போது நமது சிந்தனைகள் தடைபடும் என்பது உறுதி. இந்த கதையில் அடுத்து எடுத்துக்கொண்டது அறிவியல் விஷயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் ஒரு எண்ணம். இடைச்செருகல் மாதிரி இருக்கக்கூடாது அதே வேளையில் கதையின் ஓட்டத்தை கெடுத்துத் தொலையக்கூடாது. ஆனால் எனக்கு எழுதி எழுதிப் பார்த்தாலும் திருப்தியே வரவில்லை. கடைசியாக நிலம், வீடு, ஸ்டீரால் விஷயம் சரியெனப் பட்டது. பலமுறை யோசித்து அதிகம் என்னால் திருத்தி வெட்டப்பட்ட கதை இதுவாகவே இருக்கும். இதுக்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளை வேண்டி புரட்ட வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். முதலில் தவறுதலாக அதில் இருந்த மூலக்கூறுகள்  இரண்டுமே ஒரே மாதிரி அனுப்பினேன். பின்னர் அதை சரிசெய்து அப்போது சில வரிகள் மாற்றி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆசிரியரிடம் இருந்து பதிலே இல்லை. எனக்கும் கேட்கவோ பயம். சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஒருவேளை வெளியாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது இந்த வலைத்தளம் என சமாதானம் பண்ணிக்கொண்டேன். ஆனால் உள்ளூர ஒரு கவலை இருந்தது. அதாவது ஒரு பள்ளியில் அனுமதி கிடைக்காத பிள்ளையின் தந்தையின்  கவலை அது. நல்லவேளை, கதை அனுமதி பெற்றுவிட்டது எனும் ஆசிரியரின் பதில் வந்ததும் மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமலும் போகலாம். ஆனால் எழுதிவிட்டேன் எனும் திருப்தி எனக்கு இருக்கிறது.

விரைவில் தமிழ் மின்னிதழில் இடம்பெற்றுள்ள பிறரின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)










Tuesday 11 August 2015

இப்படித்தான் தொடங்கியது

ஒரு ஆரவாரமற்ற அமைதியான இருட்டில் இரவு ஒரு மணி இருக்கும். நார்மன் அந்த கிராமத்தின் தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தான். நார்மன் நல்ல உடற்கட்டும் அழகிய முகவடிவும் ஆறடி உயரமும் கொண்டவன். அவனது முதுகில் ஒரு பை இருந்தது. அந்த கிராமத்திற்கு நான்கே தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மற்றொரு தெருவுடன் சந்தித்து பேஸ்பால் விளையாடும் விளையாட்டுத்திடல் போல சதுரமாக அந்த தெருக்கள் அமைந்து இருந்தன. அந்த தெருக்களின் உட்புறம் வீடுகள் ஒருங்கே கட்டப்பட்டு இருந்தன. எப்படியும் ஒரு ஐம்பது வீடுகள் தேறும். அந்த தெருக்களின் வெளிப்புறம் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பச்சை பசேலென மரங்களும், செடிகளும், கொடிகளும் தென்பட்டன. அந்த பச்சை மரங்களுக்கு ஊடே சில ஆறுகள் சில குளங்கள் எல்லாம் இருந்தன.

நார்மன் எல்லா வீடுகளிலும் எவ்வித வெளிச்சமும் இல்லாது இருப்பது கண்டான். இரவில் வெளிச்சம் எதற்கு என எல்லா வீடுகளும் எண்ணி இருக்கலாம். வடமேற்குத் தெரு முனையில் இருந்து தென்மேற்குத்   தெரு முனைக்குப் போனான். அங்கே ஒரு முப்பது நிமிடங்கள் நின்றான். அப்போது சோவென சொல்லிவைத்தாற்போல் மழை கொட்டியது. நார்மனுக்கு ஓடிவிட வேணும் என்றோ எங்கேனும் ஒளிந்து கொள்ள வேண்டுமென்றோ கொஞ்சமும் தோணவில்லை. மழையில் முழுக்க முழக்க நனைந்தான். அவனது பையும் தான்.

சிறிது நேரம் பின்னர் விடாத மழை என்றாலும் தென்மேற்குத் தெருவில் இருந்து தென்கிழக்குத் தெரு சென்றான். இந்த ஊர் பரிச்சயமற்றது. தான் எந்த தெருவில் நிற்கிறோம் என்கிற அறிவு எல்லாம் நார்மனுக்குக் கிடையாது. தண்ணீர் தாகம் எடுத்தது. அப்படியே மழை நீரை கைகளில் ஏந்தி குடிக்கலானான். என்னதான் மழை நீர் எனினும் ஆற்று நீர் போல மழை நீர் சுவையாக இருப்பது இல்லை. குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மிகவும் சுவையாகவே இருந்து இருக்கக்கூடும், அல்லது தாகத்திற்கு சுவை எல்லாம் பொருட்டு அல்ல என்று இருக்கலாம்.

நார்மன் அப்படியே அங்கே அமர்ந்துவிட்டான். அமர்ந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். மழை நீர் தந்த மயக்கம். மழை நார்மனைக் கண்டு இரக்கம்  கொள்வதாக ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரங்கள் மேல் கொட்டிக்கொண்டு இருக்கிறது. சில்லிட்டுப் போகும் குளிரில் மனிதர்கள் உறங்க இயல்வதில்லை ஆனால் நார்மன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். சிறிது நேரத்தில் மழை நின்றது. அவனில் இருந்த தண்ணீர் எல்லாம் மலையில் இருந்து கிளையில் இருந்து இலையில் இருந்து கொட்டும் நீர் போல கொட்டிக்கொண்டு இருந்தது.

காலையில் ஆறு மணி வரை எவருமே அவனை கவனிக்கவில்லை. ஒரு ஏழு மணி இருக்கு. நடுத்தர வயது மிக்க பிரதேஷ் என்பவர் நார்மனைக் கண்டுத் திடுக்கிட்டார். எப்படி இப்படி ஒரு மழையில் நனைந்து உறங்கிக் கொண்டு இருக்க இயலும் என அவர் யோசித்தவாரே  நார்மனைத் தொட்டு எழுப்பினார். நார்மன் எழுந்தான்.

''யார் நீ, எவரைப் பார்க்க வேண்டும் இப்படியா இந்த மழை நீரில் உறங்குவது, என்னுடன் கிளம்பி வா''

நார்மன் சற்றும் யோசிக்காமல் அவருடன் கிளம்பினான்.

''எனது பெயர் நார்மன் தேச்ரன். எனக்கு வீடு ஊர் என்று எதுவும் இல்லை. எப்படியோ இந்த கிராமத்தில் வந்து சேர்ந்து விட்டேன்''

''அதற்காக அதோ அந்த வீட்டின் திண்ணையில் நீ அமர்ந்து இருக்கலாம் உறங்கி இருக்கலாம், இப்படியா தெருவில் விழுந்து இருப்பது. இந்த உலகில் நல்ல மனிதர்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?''

''எவரை எனக்குத் தெரியும். அதனால் நான் செல்லுமிடத்து ஏதேனும் உண்டு உறங்கி வாழ்ந்து கழிக்கிறேன்''

பிரதேஷ் வீடு கிழக்குத் தெருவில் இருந்தது.

''சோபியா, நமது வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார். முதலில் நல்ல சூடான காபி தயார் செய்''

''யார் அந்த விருந்தாளி''

''இதோ இவர்தான், அந்த தெரு முனையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நான்தான் எழுப்பிக் கொண்டு வந்தேன், இவர் குளிக்கட்டும். மாற்று ஆடைகள் தந்துவிடுகிறேன். நீ சாப்பாடு கூட தயார் செய்''

நார்மனுக்கு எதுவும் புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என யோசித்தான். பிரதேஷ் சொன்னது போல குளித்து அவரது ஆடைகளை உடுத்திக்கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் விசாரிக்கையில் அவர்களுக்கு எவருமே உறவினர்கள் இல்லை என்பது தெரிந்து கொண்டான். அன்றே அவர்களை கொல்ல  வேண்டும் என முடிவு செய்தான் நார்மன்.

நிற்க.

இப்படித்தான் ஒரு கதை தொடங்கியது. அதை எங்கு எப்படி எவ்வாறு முடிப்பது என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.




Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Wednesday 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன். 

Saturday 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?

Wednesday 15 July 2015

பூமி சுற்றலும் அவள் சுற்றலும்

எங்கே சுற்றுப் பார்க்கலாம் என சுற்றச் சொன்னவுடன் சரசரவென சுற்றி தலை கிறுகிறுத்துப் போச்சு என எல்லாமே தன்னைச்சுற்றி சுற்றுவதாக சொன்னான்.  ஆமாம் இந்த பூமி எப்படி சுற்றுகிறது எனக் கேட்டால் சுற்றவேண்டும் எனும் வேண்டுதல் போல என சொல்லிவிட்டுச் சென்றான். அவனை மீண்டும் அழைத்து அப்படி என்ன வேண்டுதல் என்றேன். மனிதர்கள் பாப பரிகாரத்திற்கு பிரகாரம் சுற்றுவது போல என்றான். எதையுமே குதர்க்கமாக சொல்லிச் செல்லும் அவனை எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். திடீரென சிறகுகள் இல்லை என்றால் பறவைகள்  இல்லைதானே என்பான். எத்தனையோ முறை என்ன என்னவோ சொல்லிவிட்டுப் போவான். எதற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என எனக்கு அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என எண்ணிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை அவன் அப்படி வேறு எவரிடமும் பேசியது இல்லை. 

என்னை நீ பைத்தியம்னு நீ நினைச்சல, இல்லைன்னு சொல்லாத எதுக்குனா உன்னை நான் பைத்தியமுன்னு நினைச்சேன் என்றான். சரி இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பூமி எப்படி சுற்றுகிறது என சொல்லிவிட்டுப் போ என்றேன். நான் பேசும்போது நீ குறுக்கேப் பேசக்கூடாது என கட்டளை இட்டான். நான் கேள்வி கேட்கலாமா என்றேன். உனக்கு ஒருதரம் சொன்னாப் புரியாது, கேள்வி கேட்கறது பேசறதுல ஆகாதா என்றவுடன் சரி என அமைதி ஆனேன். 

ஆமா, நீ அந்த புள்ளை  பின்னாலே சுத்திட்டு திரியற உனக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லையா என்றான். அவ என்னோட காதலி அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம் என்றேன். அவதான் உன்னை சுத்தி வரணும் ஆனா நீ அவளைச் சுத்தி வரியே. என்னைக்காவது நிலாவை சூரியன் சுத்தி வந்து இருக்கா என்றான். அவள் சூரியன், நான் நிலா அப்படின்னு வைச்சிக்கோ, விசயத்துக்கு வா என்றேன். இப்போ என்னோட தொனி வேறமாதிரி இருக்கும். அதனால சொல்றதை மட்டும் கேளு என அவன் ஆரம்பித்தான். 


துகள்கள் தூசிகள் சேர்ந்த போதே இந்த சுற்றுதலை தாம் உருவாகும் முன்னரே நட்சத்திரங்கள் கோள்கள் கற்றுக்கொண்டுவிட்டன. நேர்உந்து விசை. கோண உந்துவிசை என இரண்டு விசைகள் உண்டு. நேர்  உந்து விசை ஒரு பொருளின் வேகம் மற்றும் நிறை மட்டுமே சம்பந்தப்பட்டது. கோண உந்து விசை ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோண வேகம் சம்பந்தப்பட்டது. 



                                                                               நன்றி கூகிள் 

நேராக எறியப்பட்ட பொருள் தான் கொண்ட நேர் உந்து விசையால் சுற்றிச்சுற்றி வராது. நேராக ஓரிடத்தில் சென்று விழும். வட்டப்பாதையில் நேர் எதுவும் கிடையாது. இது நேர் உந்து விசைக்கு உண்டானது. 


எப்போது நேர் உந்து விசையானது கோண உந்து விசை ஆகிறதோ அப்போது  எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டு இருக்க அந்த பொருளானது சீராக சுற்றிக்கொண்டே வரும்.அப்படித்தான் கோள்கள் உருவாக காரணமாக இருந்த இந்த துகள்கள் தமக்குள் சுற்றுத்தன்மையை உண்டாக்கின. "They started with spin and still spinning" அப்படி சுற்றியதால் உருண்டை வடிவம்தனை கோள்கள் கொண்டது. கோண உந்து விசை. பூமி இப்படித்தான் சுற்றுகிறது. 

எந்த ஒரு அணுவிலும் உள்ள எலக்ட்ரான்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. அவை புரோட்டான்களை மையம் கொண்டு சுற்றுபவை. சுற்றும்போது அவை ஒரே இடத்து நிலை கொள்வதில்லை. புரோட்டான்கள் கூட சுற்றுபவைதான் +1/2 -1/2 சுற்றுக்கொண்டவை.

தன்னைத்தானே சுற்றி சூரியனை சுற்றுவது பூமி. பூமியின் சுற்றுப்பாதையை பிற கோள்கள் நிலா சூரியன் இவற்றின் விசைகள் கூட தீர்மானிக்கின்றன. நிலாவானது பூமித் தன்னைத்தானே சுற்றுவதன் வேகத்தை வருடத்திற்கு இத்தனை வேகம் என குறைத்து பாதிக்கச் செய்கிறது. காலப்போக்கில் நாட்கள் நீள வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் நாள் என்பது ஆறு மணிநேரம். 

                                                                                நன்றி கூகிள் 





மேலே காட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளதுபோல மையநோக்கு விசை (Centripetal force), மையவிலக்கு விசை (centrifugal force)  ஈர்ப்பு விசை (gravitational force) கோண உந்தம் (angular momentum) என்பதெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்த செயற்கை கோள் (satellite) பூமியைச் சுற்றிவருகிறது. நிலா மற்றும் பூமிக்கும் அதே நிலை எனினும் தனக்குள் இருந்த இருக்கும் Angular momentum (கோண உந்தம்) ஒன்றுதான் இந்த சுற்றும் கலையை பூமிக்கு கற்றுத்தந்தது.




Friday 10 July 2015

நுனிப்புல் பாகம் -3 9

பகுதி - 8

9. மரபியல் உலகம்

இவ்வுலகில் இந்த குழந்தைகள் விசித்திரம். எப்படி குழந்தைகள் ஒரு விஷயத்தை அறிந்து கொள்கின்றன எப்படி ஒரு பழக்க வழக்கத்தை பின்பற்றுகின்றன என்பது மற்றொரு அதிசயம். பசிக்காக மட்டுமே குழந்தை. பின்னர் தனக்கு இன்னது தேவை என கருதி அழும் குழந்தை. குழந்தைகள் உலகம் புரிந்து கொள்ள இயலாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு எல்லாவித மரபணுக்கள் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலையானது குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாறுபாட்டினை உண்டாக்கும். வாசன் இந்த இரண்டு குழந்தைகள் எப்படி வளர்ந்து என்னமாதிரியான மனிதர்களாக உருவாகி வருவார்கள் என யோசித்தான்.

மறுநாள் சாரங்கன் நேராக விநாயகம் பெரியவர் வீட்டிற்கு வந்து இருந்தார். விநாயகம் அவரை வீட்டுக்குள் வரவிடாமல் மந்தையில் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றார்.

''அவ்வளவு கோபமா உனக்கு''

''சாரங்கா, நீ பண்ணி இருக்கிற காரியம் தெரியுதா, இன்னும் நீ மாறலை''

''எனக்கு சம்பந்தம் இல்லை, இல்லைன்னா உன்னை எதுக்கு வந்து பார்க்கபோறேன்''

''சொல்ல வந்த காரியத்தைச் சொல்லு''

''இங்கே நிலம் விலைக்கு வாங்கணும்''

''நான் தரமாதிரி இல்லை, நீ வேணும்னா இங்கே யார் தராங்கனு கேட்டு வாங்கிப்போடு. எனக்கு எந்தவித ஆட்சேபணை  இல்லை''

''அவங்க வந்தப்ப நீ அப்படி சொல்லி இருக்கலாமே, எதுக்கு முத்துராசு அவங்க மேல கையை நீட்டினான். அதுதான் அவங்க கொலைபண்ண முயற்சி பண்ணி இருக்காங்க''

''அவங்க என்ன பேசினாங்க, நீ என்ன பேச சொல்லி அனுப்பின, வாசன் மேல அவங்க காட்டின மரியாதை. சாரங்கா உன்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை''

விநாயகம் விறுவிறுவென அங்கிருந்து சென்றார். சாரங்கனை நோக்கி சிலர் யாருமே உனக்கு நிலம் இங்கே தரமாட்டாங்க, பேசாம வேற ஊருல நிலம் வாங்கிப்போட்டு வாழுற வழியைப் பாரு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முத்துராசு அங்கே வந்தார்.

''இன்னும் இங்கதான் திரியிற''

''ராசு, உன்னோட ஆட்டத்தை எல்லாம் வேற யார்கிட்ட வேணா வைச்சிக்கோ''

''இப்ப நீ கிளம்பலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஊர்த் துரோகி''

சாரங்கன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவர் இனி இந்த குளத்தூர் பக்கம் வரக்கூடாது என்கிற நினைப்புடன் போனாலும் மனதில் ஏற்பட்ட அவமானம் அவரை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேணும் என எண்ணிக்கொண்டே இருக்கச் செய்தது. வாசன் அவரை வழியில் கண்டான்.

''ஐயா, என்ன இந்தப்பக்கம்''

''நிலம் வாங்கலாம்னு வந்தா யாரும் மரியாதை தரல, அந்த விநாயகம் என்னை ஒரு மனிசனா கூட மதிக்கமாட்டேன்கிறான். இந்த ராசு என்னை ஒரு எதிரியாகவேப் பார்க்கிறான். நீ என்ன என்னை சொல்லப்போற''

''உங்களை என்ன சொல்லப்போறேன் ஐயா. நீங்கதான் இன்னும் என் மேல கோவத்தில இருக்கீங்க. எப்படியும் நீங்க திரும்பி வரத்தான் போறீங்க. ஒவ்வொருமுறை ஏதேனும் திட்டம் இல்லாமலா வரப்போறீங்க. நிலம் வாங்குற அளவு உங்களுக்கு காசு ஏது''

''நீயும் என்னை எதிரியாப் பார்க்குற. எனக்கு காசு எப்படி வந்ததுனு உனக்கு கவலை வேணாம். நிலம் தர முடியுமானு சிலர்கிட்ட கேட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் வந்து வாங்கிக்கிறேன்''

''எனக்குத் தெரிஞ்சி உங்களுக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க. உங்களோட செய்கை எல்லாம் நல்லா இல்லை ஐயா''

''வாசா, உன்னை நான் எப்படியும் ஒழிச்சி கட்ட நினைச்சி இருந்தா அதை என்னைக்கோ செஞ்சிருக்க முடியும். எனக்கு அது தேவை இல்லை.''

''வேற என்னதான் உங்க எண்ணம்''

''நானும் இந்த ஊருல வாழணும். என்னை ராசு நீ அந்த விநாயகம் எல்லோரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டீங்க''

''நீங்கதான் போனீங்க. மறந்துரவேணாம்''

முத்துராசு அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்.

''எனக்குத் தெரியும் நீ இப்படிதான் பண்ணுவ''

கல் ஒன்றை எடுத்து சாரங்கனின் பக்கத்தில் எறிந்தார். சாரங்கன் படும் கோபம் கொண்டவராக அனுபவிப்பீங்க என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''என்னண்ணே இப்படி பண்றீங்க''

''வாசா, உனக்குத் தெரியாது. இவன் விஷம். சரி நான் தோட்டத்திற்குப் போறேன்''

''வீட்டுக்கு வரை போயிட்டு வரேன்ணே''

வாசன் நேராக ஐவரதன் அஷ்டவரதன் இருவரையும் பார்க்க சென்றான்.

பூங்கோதையிடம் எப்படி இருவரையும் அடையாளம் காண்பாய் என்றான். ஐவரதன் வலது கையில் கட்டப்பட்ட கயிறு, அஷ்டவரதன் இடது கையில் கட்டப்பட்ட கயிறு என அடையாளம் காட்டினாள்.

நமது மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாக இருக்கும். இந்த மரபணு ஒன்று செயல்பாட்டு தன்மையும். மற்றொன்று அடங்கிய தன்மையும் கொண்டு இருக்கும். எந்த மரபணு வெளிப்படுகிறதோ அதன் குணாதிசயம் வெளிப்படும். இப்போது இந்த இரண்டு குழந்தைகளிடம் உள்ள மரபணு ஒருவருக்கு ஒன்று வெளிப்பட்டும், மற்ற குழந்தைக்கு மற்ற மரபணு வெளிப்பட்டும் இருந்தால் அதுவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட பழக்கம் உருவாகும் என இந்த மரபணுக்கள் தீர்மானிக்க இயலது எனினும் சில அடிப்படை இயல்புகள் மாற வாய்ப்பு இருக்கும் என்றே வாசன் நினைத்தான்.

''ரெண்டு பேரும் எதிர்மாறான குணம் கொண்டு இருந்தா என்ன செய்வீங்க பூங்கோதை''

''வளரட்டும்ணா பார்க்கலாம். அந்த செடிகள் எல்லாம் என்ன அண்ணா பண்ணி இருக்கீங்க''

''அப்படியேதான் இருக்கு. பார்க்கலாம்''

வாசன் தோட்டத்திற்கு திரும்பிச் சென்றான். முத்துராசு தோட்டத்தில் மயக்கமாகி விழுந்து இருந்தார்.

(தொடரும்)





Tuesday 7 July 2015

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16

பாதை - 15

இதுவரை ஆராய்ச்சியில் என்ன செய்து இருக்கிறோம் என எவரேனும் கண்டுகொள்ள வேண்டுமெனில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரைகள் மூலம் அறிய இயலும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக ஆராய்ச்சி செய்வதால் அவர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு மீறி நமது சுய சிந்தனைகளுக்கு எல்லாம் அங்கே வேலை இல்லை. இது எல்லாம் தவறு, இது அவசியமா என்ற கேள்விகள் எழுப்பினாலும் இதோ இதைச் செய்தால் போதும் எனும்போது சரிதான் என தலையாட்டிவிட்டுப் போகத் தோன்றும்.

பொதுவாக ஆராய்ச்சியில் என்ன காரணம் என அறியாமலே பல விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுதான் காரணமோ என்ற சிந்தனையில் கூட ஆராய்ச்சி நடக்கின்றன. பொதுவாக செல்கள், திசுக்கள் என தொடங்கப்படும் ஆராய்ச்சியில் அத்தனை குற்ற உணர்வு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சி குற்ற உணர்வு ஏற்படுத்தாமல் போனதே இல்லை. ஒரு உயிரைத் துடிதுடிக்க கொன்று அந்த உயிரில் இருந்து மூச்சுக்குழல் எடுத்து அதை வெளியில் பொருத்தி என செய்யப்படும் ஆராய்ச்சி சற்று மன சங்கடமாகவே இருக்கும். சங்கடப்பட்டால் முடியுமா என நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படி என்னதான் ஆராய்ச்சி? வேறு ஒன்றும் இல்லை. Guinea pigs இல் இருந்து அதன் மூச்சுக்குழல் பிரித்து எடுக்க வேண்டும். அந்த மூச்சுக்குழலை சின்ன சின்னதாக ஒரு செமீ க்கு வெட்ட வேண்டும். அந்த சின்ன வளையங்களை மேல் கீழ் உள்ள கம்பி ஒன்றில் மாட்டி அதை இதற்கே உரித்தான  உப்புக்  கரைசலில் 37 டிகிரி செல்சியசில் வைத்து விட வேண்டும். எப்போதும் 5% கார்பன் டை ஆக்சைடு உள்ள காற்று செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இப்போது சில மூலக்கூறுகள் இந்த வளையங்களை கடினமாக்கும். அப்படி ஓரளவு  ஆக்கியபின்னர் நாம் தயாரிக்கும் மூலக்கூறு இந்த கடினமாக்கலை எளிதாக்குமா என பார்க்க வேண்டும். இவ்வளவுதான் ஆராய்ச்சி. இதை எவர் வேணுமென்றாலும் செய்யலாம். இதற்கு முனைவர் பட்டமோ பட்டப்படிப்போ ஒரு அவசியமும் இல்லை. இது ஒரு சாதாரண வேலை.

ஆனால் இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் தான் இந்த ஆராய்ச்சியின் தன்மையை முடிவு செய்யும். கடினமாக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகளாக  இருக்கும். அப்படி வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகள் கடினமாக்கும்போது அதை எல்லாம் நமது மூலக்கூறு எளிதாக்கினால் எப்படி சாத்தியம் என பல விசயங்களை வைத்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

எழுதவே முடியவில்லையே என்பதற்காக எழுதத் தொடங்கிவிட்டேன். தொடர்ந்து தொடர்வேன்.

(தொடரும்)