Wednesday 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் 23


23. பாமரத்தனம்

சடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.

நாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.

''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''

''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''

பாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள். 

''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''

''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''

பாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.

சடகோபன் கலகலவென சிரித்தார்.

''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப  உணரட்டும்''

சடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.

''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''

''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.

வாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.

பாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.

பாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.

''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''

பாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்

''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''

பாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.

''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம்  ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''

சில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.

அன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.

''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.

பாமா புன்னகை புரிந்தாள்.

''நான் நானாகவே இருக்கேன்மா''

நாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.

(தொடரும்)

Monday 14 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் -22

22. வயதற்ற கனவுகள்

நாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''

''சரிங்கம்மா''

''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''

பாமா சிரித்தாள்.

''என்னாச்சு பாமா''

''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க.  எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''

''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''

''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''

''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''

''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''

நாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.

''கல்யாணம் பண்ணு பாமா''

''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''

''என்னை மாதிரியா?, இன்னொரு நாச்சியார் வேணாம்''

பாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.

''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா?''

''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''

விருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.

ஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.

கம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.

கம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.

தருகை நீண்ட தயரதன் தரும்
இருகை வேழத்தி இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

சாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.

சடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.

''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா?'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.

''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''

சடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.

''நீ ஒரு பாமரத்தி''

சடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில்  நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.

'கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் 
எனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு 
நீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது 
உன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'

பாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.

(தொடரும்)






Sunday 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21

21 மரபணுக்கள்

யசோதை, சில தினங்களுக்குப் பிறகு பாமாவை மதுரைக்கு வருமாறு அழைத்தாள். தான் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், அவரும் பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்கலாம் எனவும் சொன்னதாக சொல்லி சனிக்கிழமை அன்று அவரைச் சந்திக்க பதிவு செய்து இருப்பதாகச் சொன்னாள்.

அது எப்படி செய்ய இருக்கிறார்கள் என பாமா கேட்டதும் மிகவும் சுருக்கமாகச் சொன்னாள் யசோதை.

''வண்ணத்துப்பூச்சிகளுக்கு இரண்டு வாழ்வு பாமா. ஒன்னு கம்பளிப்பூச்சியா இருக்கிறது, மத்தது வண்ணத்துப்பூச்சியா மாறுரது. கம்பளிப்பூச்சியில இருந்து வண்ணத்துப்பூச்சியா மாறும் சமயத்தில் முதல் இருந்த செல்கள் எல்லாம் உடலோட அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றும் அப்போ அந்த செல்கள் நிறைய எதிர்ப்புகள் மேற்கொண்டு தங்களை அங்கே நிலைநிறுத்தி வண்ணத்துப்பூச்சியை உருவாக்கும். முதலில் இருந்த செல்களில் உள்ள டிஎன்ஏவும் புதுசா உருவாகுற டின்ஏவும் ஒன்னுதான் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனா வெளிப்படுத்தும் ஜீன் இருக்கில்ல அது மாறுது''

பாமா தான் கேட்டுக் கொண்டு இருப்பது தனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என எவ்வித ஐயமும் கேட்காமல் தொடரச் சொன்னாள்.

''முதலில் இருக்கிற செல்களில் உள்ள ஜீன்கள் கம்பளிப்பூச்சி நிலைக்கு தன்னை வெளிப்படுத்துது ஜீனோடொம் கலந்த பீனோடோம். இரண்டாவது புதுசா உருவாகிற செல்களில் உள்ள ஜீன்கள் வண்ணத்துப்பூச்சியை வெளிப்படுத்திருது இதுவும் ஜீனோடொம் கலந்த பீனோடோம். டாக்டர் என்ன சொன்னாருன்னா சிறகுகள் உருவாக்குற  ஜீன்களை ஹார்மோன் மூலமா ஆக்டிவேட் பண்றது. ஈசோடின் ஹார்மோன் இதைச் செய்யும்னு சொல்றார். வண்ணத்துப்பூச்சி ஜீனோம் எல்லாம் பிரிச்சி வைச்சி இருக்காங்க, பண்ணிரலாம்னு சொல்றார். செலவு எல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ஹார்மோனுக்கான செலவு மட்டும்தான். அதான் அதைச் செய்யறப்போ நீ இருக்கனும்னு நினைக்கிறேன்''

அதைக் கேட்டதும் பாமாவுக்கு அளவிலா மகிழ்ச்சி. கட்டாயம் வரேன் என்றாள்.

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று அவளது நினைவில் ஆடியது. எத்தனை வருடங்களாக இந்த பாசுரங்களை எல்லாம் மனனம் செய்து வருகிறாள் என்பது வியப்புக்குரிய ஒன்று. மகிழ்வான தருணங்களிலும் சரி, சோகமான தருணங்களிலும் சரி அவளுக்கு பாசுரம் பாடத் தோனும்.

நின்றனர் இருந்தனர்
கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர்
கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர்
என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வோடு
நின்ற எம் திடரே

பாமா பாடிய அடுத்த கணம் அவளது சிந்தனையில் பொறி தட்டியது.  யசோதை சொன்ன விசயங்கள் அப்படியே பொருந்திப் போகும்படியான பாசுரம் இது என வியப்பு அடைந்தாள். இதை எல்லாம் எண்ணி எழுதப்பட்ட பாசுரம் அல்ல அது என அவள் அறிவாள் அவளது அறிவால்.

பூங்கோதையிடம் ஓடிச்சென்று நாராயணிக்கு கை கால் வந்துரும்க்கா என அளவிலா மகிழ்ச்சியோடு சொன்னாள். நாராயணி புன்னகை புரியத் தொடங்கி இருந்தாள். கைகள் இருந்தால் எப்படி நம்மைக் கண்டதும் குழந்தைகள் நீட்டுமோ கால்களை ஆட்டுமோ அதுபோல பாமாவை காணும் போதெல்லாம் நாராயணியின் கை கால் தசைகள் ஆடும். இதைக்கண்டு மிகவும் பூரிப்பு அடைந்து இருக்கிறாள் பூங்கோதை.

இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. அன்போடு இருப்பதே உயரிய செயல். எப்போது ஒருவருக்கு நம்மீது வெறுப்பு தோன்றுகிறதோ அப்போது அவர்களிடம் வெறுப்பை நெருப்பென காட்டி நம்மை நாமே சுட்டெரித்து விடாமல் அமைதியாக தெளிந்த நீரோடை போல அவர்களிடம் இருந்து விலகிப் போவது சிறந்தது. ஆனால் இந்த உலகம் அப்படி விலகிப் போவோர்களை ஏளனம் பண்ணி, அடிமைப்படுத்தவே நினைக்கும். பேரன்பினால் ஆனது உலகம் என்று சொன்னாலும் உலகம் அப்படியாக உருவானது இல்லை. ஒன்றின் உணவாக மற்றோன்றின் உடல் எப்போது தேவை என்று ஆனதோ அப்போதே அன்பு என்பதன் பொருள் விலங்கு உண்ணும் உயிர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் பேரன்பினால் ஆனது உலகம் என மனம் மகிழ்கின்றோம்.

நாச்சியாரிடம் விபரத்தைச் சொன்னாள் பாமா.

''ஒரு மாசமோ, இரண்டு மாசமோ அது உயிரோட இருந்துட்டு இறக்கப் போகுது அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்''

வசுதேவன் இப்படிச் சொல்வார் என பாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாச்சியார் தான் வசுதேவன் மனம் புரிந்தவராக அமைதியாகச் சொன்னார்.

''உசிரு, உசிருதாண்ணே, ஒருநாள் வாழ்ந்தாலும் இறக்கையோட வாழ்ந்தோம்னு இருக்கும் அதுவும் நினைச்ச இடத்துக்குப் பறக்கும். இப்போதான் எனக்கு உரைக்குது. எதுக்கு ஒரு பட்டாம்பூச்சி கோதை, யசோதை, பாமா தோளில் போய் உட்கார்ந்து இருந்துச்சுனு, என்னை வைச்சி அது ஏதோ ஒரு விளையாட்டை நடத்திட்டு இருக்கு''

வசுதேவன் சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார்.

''திருவிளையாடல் புராணம், விஷ்ணுவோட பத்து அவதாரங்கள் புராணம் மாதிரி சொல்ற நாச்சியார், நம்மை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிக்கு உணர இயலுமா''

''உணரும், உணர்ந்துதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துட்டு இருக்குண்ணா''

நாச்சியார் சொன்ன மறு நிமிடம் மன்னிப்பு கேட்டார் வசுதேவன். பாமாவுக்கு வியப்பாக இருந்தது. சட்டென மாறும் மனநிலை அவளுக்குப் புதிராக இருந்தது.

''என் அண்ணன் எப்பவுமே என்னை இப்படி சோதனை பண்ணுவார், நான் உறுதியா இருந்தா பேசாம மறுப்பு தெரிவிக்காம சம்மதம் சொல்லிருவார்'' என்றார் நாச்சியார்.

பாமாவும் புன்னகை புரிந்தார்.

சிறகுகள் முளைத்து விடும் பட்டாம்பூச்சி காண அவள் பேராவலோடு இருந்தாள். அவளது மனம் நாராயணிக்காக வேண்டிக்கொண்டது.

(தொடரும்)