Friday 11 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18

18. உயர்வறவுயர்நலம்

தன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.

யசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள்  எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

''யசோதை, எப்படி இருக்கீங்க?''

அவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.

''நல்லா இருக்கேன், நீங்க?''

''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''

''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''

நடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.

''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.

''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''

பாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.

''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''

''கை கால் வளருமா''

''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''

பாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.

பொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.

''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.

''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''

''முயற்சி பண்ணுங்க யசோதை''

கட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது.  இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்கே வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.

''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.

''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.

தன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.

உயர்வறவுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன்
துயரறுசுடரடி தொழுதெழன்மனனே

பாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.

பாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.

(தொடரும்)

Thursday 10 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17

17. ஊனமறு நல்லழகே

கம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.

வெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.

ஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செல்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.

விருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.

கால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.

கை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

உள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.

''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.

பூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவரும்  இல்லை.

வசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.

''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.

''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.

''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''

தாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.

''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''

வசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

யசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.

பேருந்தில் பாடல் ஒலித்தது.

''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''

பாமாவின் அருகில் வந்தாள் யசோதை.

''பாமா''

பாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Sunday 6 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16

16. இமேகோ செல்கள்

துளசிச் செடியில் இருந்த அச்சிறு கம்பளிப்பூச்சி தனது தோல்களையே ஒரு கூடு போல உண்டாக்கிக் கொள்ளத் தொடங்கியது. வேறு சில பூச்சிகள் வேறு சில பொருட்கள் கொண்டு புழுக்கூடு கட்டும் ஆனால் பட்டாம்பூச்சி அப்படி இல்லை. ஒரு நல்ல இலையினைப் பார்த்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது. வெகு வேகமாக காற்று அடித்தால் அடித்துச் செல்லப்படும் நிலையைப் பொருட்படுத்தாமல் இலையினை பிடிமானமாகக் கொண்டு தனக்குள் ஒரு பெரும் உருமாற்றத்திற்காக தயார்படுத்திக் கொண்டு இருந்தது.

தினம் நகர தான் சுரக்கின்ற திரவத்தை வைத்துக் கொண்டே கம்பளிப்பூச்சி தன்னை மொத்தமாக கரைக்க ஆரம்பித்து இருந்தது. கம்பளிப்பூச்சியும் இல்லை, பட்டாம்பூச்சியும் இல்லை. பச்சை வண்ண திரவமாக மாறி இருந்தது. தனது உருவத்தையே மொத்தமாக கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி, செல்களோடு மட்டுமே இருக்கும் இந்த நிலை இந்த உயிரினத்தின் ஒரு ஒப்புயர்வற்ற நிலை.

இதையே மனித மன வாழ்வுக்கும் சொல்லலாம். எண்ணங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு ஒரு முழு மனிதனாக உருவாதல். இந்த மனநிலையை நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.

அடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.

அடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.

இறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.

பச்சை திரவத்தில் இருப்பது இமேகோ செல்கள். அவை அதுவரைக்கும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. அப்படியே அவைகள் அழிந்து போய் இருந்தால் ஒரு பட்டாம்பூச்சி எனும் இலக்கை அவைகள் அடைந்து இருக்காது.

தோலினுள் பச்சை திரவம் வடிவம் ஏதும் எடுக்காமல் அப்படியே இருந்தது. இமேகோ செல்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரைவில் துவங்கும்.

பூங்கோதை தனக்கு அவ்வப்போது வலி ஏறுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். பாமா தேர்வுகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். யசோதை மேலும் ஒரு கருத்தரங்கு சென்று உடலில் கை கால்கள் எப்படி உருவாகிறது, அதை எப்படி எல்லாம் நம் வழிக்கு மரபணு மூலம் மாற்றலாம் என அறிவை வளர்த்ததோடு சில முக்கிய நபர்களின் தொடர்பும் பெற்றுக் கொண்டாள்.

இந்த பூமியில் இருக்கும் நீர் எல்லாம் ஒரு காலத்தில் தான் ஒரு மழை என்று அறியாது. பச்சை திரவமாக இருந்த இமேகோ செல்கள் செயல்பாட்டினைத் தொடங்க ஆரம்பித்தது. இதில் ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவெனில் கம்பளிப்பூச்சியாக இருந்தபோது இருந்த நிகழ்வுகளை எல்லாம் அந்த செல்கள் நினைவில் சுமந்து கொண்டு இருப்பதை ஒரு ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.

ஒரு பட்டாம்பூச்சி உருவாக ஒவ்வொரு நிலையில் ஒரு வாரம் என குறைந்தது ஒரு மாதம் ஆகிறது. எப்படி துளசிச் செடி இலையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தன்னில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தயார் ஆனதோ அது போல தலைகீழாக தன தலையைத் திருப்பியபடி வெளி உலகுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தது பூங்கோதையின் குழந்தை.

அடுத்த சில தினங்களில் வலி அதிகம் இருப்பதாகத் துடித்தாள் பூங்கோதை. பாப்பாத்திதான் உடனே நாச்சியாருக்கு தகவல் சொல்லி வசுதேவன் வாகனத்தை தயார் செய்து விருதுநகர் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

பரந்தாமன் கோவில் கதவு அடைக்கும் நேரம் வரை உருவமாக அங்கே நின்று கொண்டு மனம் எல்லாம் பூங்கோதை மீது நிலைத்து இருந்தது. பாப்பநாயக்கன்பட்டிக்குத் தகவல் சொல்லி கோவிந்தனை கோவிலை மாலை முழுதும் பார்த்துக் கொள்ள தகவல் சொன்னான் பரந்தாமன்.

துளசிச் செடியில் பட்டாம்பூச்சியின் உருமாற்றம் நிகழ்த் தொடங்கி இருந்தது.

(தொடரும்)