Wednesday 2 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14

14. தாய்மையின் மனம்

பூங்கோதை பட்டாம்பூச்சி பற்றி சொன்னதும் பாமாவின் இடது தோளில் இருந்து பறந்து போனது பட்டாம்பூச்சி. பாமாவுக்கு பெருமாள்பட்டி மிகவும் பிடித்துப் போனது. தேர்வு முடிந்ததும் பெருமாள்பட்டிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாமா. நாச்சியார் பாமாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.

சில முடிவுகள் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படுபவைகள். அச்சூழலுக்கு அவை சரியெனப்படும். சூழல் மாறிட எடுத்த முடிவுகள் தவறாகத் தோன்றும். எல்லாச் சூழலுக்கும் அதே முடிவு என்பது அறிவுடைமை ஆகாது, ஆனால் அதைத்தான் நேர்மை, கொள்கைப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர்.

பூங்கோதையை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் நாச்சியார். பிள்ளை பெறுதல் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் இச்சமூகத்தில் சொல் வழக்கு உண்டு. உயிரில் உயிர் தோன்றி உயிர் பிரித்தல் என்பது பாலூட்டிகளில் மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களில் நடக்கும் ஒன்று.

இதுபோன்ற முதல் கர்ப்பம் தரித்தச் சூழலில் தானும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என பெண்ணின் மனம் நிறையவே அல்லாடும். இந்த தருணங்களை அழகுற நேசித்தல் பெண்ணுக்குரிய பெருமிதம். இக்கால கட்டங்களை வாழ்நாள் எல்லாம் அசைபோடும் நினைவுகளை சுமக்கும் பெண்ணின் மனம். அதோடு மட்டுமல்ல இனம் புரியாத ஒரு அச்சமும் வந்து சேரும். பூங்கோதைக்கும் அந்த அச்சம் ஏற்பட்டது.

''குழந்தைப் பிறக்கறப்ப நான் செத்துப் போனா என் பிள்ளையை நீங்க கவனிச்சிக்கோங்கம்மா''

பதறிப்போனார் நாச்சியார்.

''கோதை, இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா குழந்தையைப் பெத்து பெரிய ஆளா வளர்க்கிற வழியப் பாரு''

''மனசுல என்னமோ தோணிச்சிம்மா'' பூங்கோதையின் மனதில் ஒரு வித வலி.

நாச்சியார், பூங்கோதையின் தலையை வருடியபடி சொன்னார்.

''எதுக்கும் கவலைப்படாத கோதை, உன்னை பெருமாள் கைவிடமாட்டார்''

மனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.

''இத்தனை வருசமா என்னை பெருமாள் இந்தக் குழந்தைக்காக காத்திருக்க வைச்சிட்டாரும்மா''

மனதில் ஏற்படும் இரணங்களை சுமந்தபடியே தமக்கு ஒரு விடிவுகாலம் வராதா என ஏங்கியபடியே நாட்களை கடத்துகின்றனர். அவர்களை இச்சூழலுக்கு உண்டாக்கும் எல்லாக் காரணிகளை விட இறைவனே எல்லாவித பொறுப்பும் பெரும்பாலானவருக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இயக்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இயங்காமல் இருப்பது என்பது எத்தனை கடினமான செயல்.

பூங்கோதையின் வேதனையை நாச்சியாரால் புரிந்து கொள்ள முடிந்தது.

''இருக்கிற நிலைமைக்கு மகிழ்ச்சியா இருக்கப் பழகிக்கிரனும் கோதை, இப்போவாவது தாயாகும் வாய்ப்பு கிடைச்சதுனு நிம்மதியா இரு''

''இல்லைம்மா, திடீருனு இப்படி தோனுது, அதை மனசில வைச்சிக்க முடியாம உங்ககிட்ட கொட்டிட்டேன்''

''ம்ம், கவலைப்படாத எல்லாம் நல்லா நடக்கும்''

பூங்கோதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நாச்சியார் பாமாவுக்கென ஒரு வீடுதனை உள்ளூரில் வாடகைக்குப் பார்த்து வைத்தார். நகரங்களில்தான் வாடகைக்கு என விடப்படும் வீடுகள் உண்டு எனில் கிராமங்களில் கூட வாடகைக்கு வீடு விடப்படுவது உண்டு.

வசுதேவனிடம் பள்ளிக்கூடம் குறித்தும், ஆழ்வார் திருநகரி செல்ல வேண்டியது குறித்தும் விரிவாகப் பேசினார் நாச்சியார். வயதான பிறகு இது எல்லாம் தேவை இல்லை என வசுதேவன் மறுத்துவிட்டார். நாச்சியாருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாமா நினைவுக்கு வந்து போனாள். பாமா வந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு ஆழ்வார் திருநகரி செல்லத் திட்டமிட்டார்.

''அண்ணா, இதை எனக்காக பாமா செய்வா, அவளே வழி நடத்துவா, நான் பக்கபலமா இருப்பேன், கோவிலுக்குப் பக்கத்தில சின்ன இடம் கிடைச்சா போதும்ண்ணா''

''ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசி செய்ய வேண்டிய காரியம், நான் கலந்து பேசிட்டு சொல்றேன்மா''

''அண்ணா அப்புறம் ஒரு முக்கியமான விசயம். யசோதை, சுந்தரவேலனை கல்யாணம் பண்ணுவேனு இருக்கா, மாணிக்கவாசகர் பையன்''

இதைக் கேட்ட மறுகணம் வசுதேவன் மிகவும் கோபம் கொண்டார்.

''நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, என்ன மனசில நினைச்சிட்டு இருக்கா. எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான்''

''பதட்டப்படாம அவளோட விருப்பப்படி செய்ற வழியப் பாருங்கண்ணா''

வசுதேவன் இனிமேல் எதுவும் அதிகம் சொல்லக்கூடாது என அமைதி ஆனார்.

''யோசிக்கிறேன்மா''

நாச்சியார், வசுதேவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார். தான் திருமணம் பண்ணமாட்டேன் என்றபோது சரி, உன் விருப்பம் ஆனா உன் மனசு மாறும்னு நினைக்கிறேன் என பல வருடங்கள் காத்து இருந்தார், அதன்பின் தன் மனம் மாறவில்லை என அறிந்ததும் தன் வழி என போய் விட்டார். தான் பெற்ற பிள்ளை என்றதும் நிறைய உரிமை எடுத்துக் கொள்வது போல் நாச்சியாருக்குப் பட்டது.

யசோதையின் ஆசையை நிறைவேற்றுவது நாச்சியாருக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. துளசி இலைகளை தினமும் உண்டு தன்னை வளர்த்துக் கொண்டு இருந்தது பட்டாம்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இருக்கும் அச்சிறு கம்பளிப்பூச்சி.

(தொடரும்) 

Sunday 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13

13 மன்னுபுகழ் பட்டாம்பூச்சி

பெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.

கிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.

வியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

மந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.

''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''

தானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.

''நாச்சியார் அம்மா''

''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''

நன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.

பாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.

''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.

''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''

தான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.

''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.

''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''

''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''

''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''

''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''

புன்னகை புரிந்தாள் பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.

''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''

''பசி எல்லாம் இல்லைம்மா''

''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''

சமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.

சமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.

''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.

''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.

''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''

நிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.

''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.

துளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.

ஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.

(தொடரும்)


பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12

12. கண்ணி நுண் சிறுத்தாம்பு

பாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.

இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.

திருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத்  தொடங்கினாள்.

முன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.

பெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.

''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''

எவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.

''பெருமாள்பட்டியில நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''

''சொந்தமா''

''இல்லை''

''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.

ஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும்  என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.

கருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.

''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''

''மதுரை''

துளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.

''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''

''வரப்போ வருவாங்க''

கோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.

அவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.

''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.

''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''

''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''

''ம்ம் கேளுங்க''

''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.

பாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.

''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''

''ம்ம் நிறைய''

''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''

''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''

''ஏதாவது ஒன்னு''

''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''

''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

(தொடரும்)