Friday 27 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11

11. உயிர்களின் பேரன்பு

நாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.

''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''

யசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''

''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''

''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''

''அதை நீங்க கேட்கலையா அத்தை''

''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''

''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''

நாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட்டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.

''என்னங்க அத்தை, பதில் காணோம்''

''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''

''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''

நாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.

''பாமா இருக்காங்களா''

''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''

''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''

''ம்ம், சொல்றேங்க''

நாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.

''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''

''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''

''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''

பூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.

''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''

''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''

''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''

''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''

''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''

''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''

''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.

நாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.

''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''

''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''

''நிறைய யோசிக்கிறாரு''

''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''

சரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.

பாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.

நம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.

(தொடரும்)

Tuesday 24 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10

10 மும்முலையாள்

''அத்தை, நீங்க ஏன் பாமாவை நம்ம ஊருக்கு வரச் சொன்னீங்க''

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக யசோதை நாச்சியாரிடம் கேட்டாள்.

''நல்ல பொண்ணா மனசுக்குப் பட்டுச்சு யசோ''

''நான் கூட வண்ணத்துப்பூச்சி பத்தி எதுவும் இருக்குமோனு நினைச்சேன் அத்தை''

''அதெல்லாம் இல்லை, ஆனா இந்த உலகத்தில நமக்கு எது எது எல்லாம் வளர்க்கனும்னு ஆசை இருக்குப் பார்த்தியா''

''நான் எதுவும் வளர்க்கிறது இல்ல, நீங்களும் எதுவுமே வளர்த்தது இல்லையே அத்தை''

''உன்னை வளர்த்தேனே அது போதாதா அது போல நிறைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்து இருக்கேனே யசோ. நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவோமோ''

''என்னங்க அத்தை, அதிசயமா, பெருமாள் கோவில் தவிர்த்து எங்கேயும் நீங்க போனது இல்லையே, இப்ப மட்டும் என்னவாம்''

''அன்னைக்கு அழகர் கோவிச்சிட்டுப் போன மாதிரி எனக்கென்ன மீனாட்சி மேல கோவமா என்ன, எனக்குப் பிரியம் பெருமாள் மட்டும்தான் மத்த கோவில்களுக்குப்  போகமாட்டேனு எல்லாம் இல்ல, போக வேண்டிய சூழல் எதுவும் அமைஞ்சது இல்ல. பேதம் பார்த்தல் பிழைனு இருக்கு யசோ ஆனா ஒன்றின் மீது மட்டுமே அன்பு செலுத்துதல் பிழை இல்லை ''

''மீனாட்சி கோவிலுக்குப் போகனும்னு என்ன சூழல் இப்போ அத்தை''

''கோதை, குங்குமம் பிரசாதம் வாங்கிட்டு வரச் சொன்னா, வாங்காம போனா அவ மனசு பாடுபடும் இல்லையா அதுவும் பிள்ளைத்தாச்சியா இருக்கா, நாளன்னைக்கு ஊருக்குக் கிளம்பனும். அங்க வேற துளசிச் செடியில முட்டை எப்படி இருக்கோ, எப்படியும் நான் போகப் போறப்ப கம்பளிப்பூச்சி மாதிரி உருமாறி இருக்கும்''

''வண்ணத்துப்பூச்சி நினைப்பாவே இருக்கீங்க, கோதை கிட்ட பேச வேண்டியதுதானே அத்தை, ஒரு போன் வைச்சிக்கோங்கனு சொன்னா உலக அதிசயமா வேணாம்னு சொல்றீங்க என்ன பண்றது. நீங்க சொன்னது போல நாளைக்கு கோவிலுக்குப் போகலாம் ஆனா சாயந்திரம்தான் போகனும், நீங்க பள்ளிக்கூட விசயமா யாரையோ பாக்கனும்னு சொன்னீங்க,  பாத்துட்டு வந்துருங்க''

''ஆழ்வார் திருநகரிக்குத்தான் போகனும். சடகோபனு ஒருத்தரைப் பார்க்கச் சொல்லி இங்க இருந்து ஒருத்தர் கடிதம் கொடுத்து இருக்கார். அவர் மூலமா ஏதாவது ஆகுதானு பாக்கனும்''

''இந்த வயசுக்கு அப்புறம் எதுக்குங்க அத்தை அலைச்சல், அதுவும் தூத்துக்குடி பக்கம் போகனும் வேண்டாத வேலையாக எனக்குப்படுது''

''நல்ல விசயங்களுக்கு வயசு தடை இல்லை யசோ''

யசோதை வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து கொண்டாள். சடகோபன் எனும் பெயர், ஆழ்வார் திருநகரி எனும் ஊர் நாச்சியார் மனதில் அளவிலா மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. நாச்சியாருக்கு நம்மாழ்வார் என்றால் ஒருவித ஈர்ப்பு உண்டு. நம்மாழ்வார் குறித்து அவர் படித்த விசயங்கள் அவருக்குள் எப்போதும் ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கும்.

அடுத்த தினம் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் நாச்சியார். யசோதை வேலைக்குப் போய்விட்டு மாலை சற்று வேகமாகவே வந்து விட்டாள். யசோதை நாச்சியாருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனாள்.

''அந்தக் காலத்தில் பெண்களின் ஆட்சி இருந்ததாக எழுதி இருக்காங்க, வீட்டில கூட மீனாட்சி ஆட்சியானு கேட்கறது அதுக்குத்தான அத்தை''

''பெண்கள்தான் உலகம்னு இருந்துச்சி, அப்புறம் ஆண்கள் உலகம்னு மாத்திக்கிட்டாங்க மறுபடியும் பெண்கள் உலகம்னு ஆகிரும்''

''அப்போ உங்க பெருமாள்''

''பெருமாள் எப்பவும் பெருமாள்தான் யசோ''

மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். மக்கள் எப்போதுமே கோவிலில் கூட்டமாகத் தென்படுகிறார்கள். தெய்வம் பல மனிதர்களின் தேவையின் ஒன்றாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து வந்து இருக்கிறது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது ஏமாற்றத்தின்போது கூட தொலைந்து விடாமல் இருப்பது என்பது ஆச்சரியங்களில் ஒன்றுதான்.

நாச்சியார் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தபோது மூன்று மார்பகங்கள் கொண்ட ஒரு சிலையின் முன்னர் நின்றார். யசோதை நாச்சியார் நின்றதைப் பார்த்து வியப்பு கொண்டாள்.

''அத்தை, இந்தக் கதை உங்களுக்குத் தெரியுமா?''

''குழந்தை இல்லாம மன்னன் பையன் வேணும்னு யாகம் செஞ்சப்ப மூன்று வயசு பெண் குழந்தையா யாகத்தில் இருந்து தோன்றி  மூன்று மார்பாகங்களோடவே வளர்ந்து பெரும் ஆட்சி செஞ்சி கடைசியில் சிவனை மணக்கப் போறப்ப சிவனைப் பார்த்ததும் மூன்றாவது மார்பகம் மறைஞ்சி போனதுதான''

''ம்ம் ஆழ்வார்கள் பெருமாள் கதை தவிர்த்து இது எல்லாம் படிச்சி இருக்கீங்க அத்தை, ஆனா எனக்குச் சொன்னது எல்லாம் இராமானுசரும் ஆண்டாளும் மத்த ஆழ்வாரும் மட்டும்தான், இதுல இருந்து ஒன்னு புரிஞ்சிக்கிறலாம். நம்ம உடம்புல உடல் உறுப்புகள் தேவை இன்றி வளரவும் செய்யும், உடல் உறுப்புகள் குறையவும் செய்யும். நிறைய மாற்றங்கள் கொண்ட மனிதர்கள் பிறக்கத்தான் செய்றாங்க ஆனா குறைந்த அளவில்தான் அந்தமாதிரி மாற்றங்கள் இருக்கு இப்போ கூட இப்படி மூன்று மார்பகங்கள் கொண்டவங்க அங்க அங்க இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது ஆனா மீனாட்சியை மும்முலையாள் அப்படினு கூப்பிட்ட  மாதிரி இப்போ கூப்பிட முடியாது அதுவும் இதை பாலினங்களில் உள்ள குறைபாடுனு சொல்றாங்க''

''முக்கண்ணன்னு சொல்றாங்க, இப்போ அப்படி யாரும் இருக்கிறது இல்லை யசோ''

''இதெல்லாம் உண்மையானு தெரியலைங்க அத்தை, ஆனா படிக்க, கேட்க ஆர்வமாத்தான் இருக்கு''

கோதைக்கு என குங்குமம் பிரசாதம் வாங்கிக் கொண்டார் நாச்சியார். யசோதையின், வேலனின்  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட ஆர்வம் நாச்சியாருக்கு சற்றுப் புதிராக இருந்தது.

மனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.

(தொடரும்)




Sunday 22 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9

9. மனிதர்களின் உலகம்

நாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன்  விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.

யசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.

''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''

''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''

''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும். இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப்  போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''

''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''

''நல்லா யோசியுங்க அத்தை''

நாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.

புதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.

தனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.

''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''

''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''

நாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.

''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''

''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''

நாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.

''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''

சுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.

பணம் மனிதர்களை நிறையவே மாற்றி அமைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள்  கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.

அன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.

யசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.

நாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.

இருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.

''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும்  தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''

''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''

''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''

நாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும் இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.

பாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.

இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.

(தொடரும்)