Sunday 15 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5

5. துளசிச் செடி

நாச்சியார் சொன்ன கதை பூங்கோதையின் மனதைத்  தைத்துக் கொண்டு இருந்தது. பூங்கோதையின் தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை. தானும் ஒருவேளை அம்மாவாகும் வாய்ப்பு இன்றி போகும் எனில் தனக்குப் பின் தனது சந்ததி எனச் சொல்ல ஏதும் அற்றுப் போயிருக்கும் என நினைக்கும்போது பூங்கோதைக்கு மிகவும் கவலையாக இருந்தது.

''அம்மா என் மேல அமர்ந்த இந்த பட்டாம்பூச்சி ஆணா, பெண்ணா'' பூங்கோதையின் கேள்வி எதனால் எழுந்தது என ஆராயாமல் பட்டாம்பூச்சியினை ஆராய எழுந்தார் நாச்சியார்.

அந்த பட்டாம்பூச்சி வீட்டின் அறையில் இருந்த இரண்டு சன்னல்களில் ஒரு சன்னலில் சென்று அமர்ந்து இருந்தது. பட்டாம்பூச்சியின் அருகில் சென்று அதன் வயிறுப் பகுதியைப் பார்த்தார் நாச்சியார்.

''பொண்ணு'' நாச்சியார் சொன்னபோது பெரும் மகிழ்வோடு சொன்னார்.

''கோதை, ஒரு பட்டாம்பூச்சிக்கு மொத்தம் ஆறு கால்கள் இருக்கும், நாலு கால்கள் போல தோற்றம் இருந்தாலும் ஆறுதான். அதன் வயிறு தட்டையா நேரா இருந்தா அது ஆண், கொஞ்சம் தூக்கலா வளைஞ்சி இருந்தா அது பொண்ணு. இந்த பட்டாம்பூச்சிக்கு கழிவு எல்லாம் வெளியேற்ற தனித்தனி வழிகள் எல்லாம் இல்லை. எல்லாமே நீர் ஆகாரம்தான் அதனால் சிரமம் இல்லை. நீல நிறம், மஞ்சள் நிறம்னு கலந்து கலந்து இருக்கிற இந்த பட்டாம்பூச்சி இங்கேயே இருந்து என்ன சொல்ல நினைக்குதுனு தெரியலை''

''அதுபாட்டுக்கு ஒரு ஓரத்திலே இருக்கட்டும்மா''

''சரி கோதை, கவனமா இரு. நிறைய வருசம் கழிச்சி நான் ஒரு வேலையா நாளைக்கு மதுரை வரைக்கும் போறேன், வர ஒரு வாரம் ஆகும், எது வேணும்னாலும் பாப்பாத்தி கிட்ட கேளு, நானும் போய் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன், உன்னை வந்து பாத்துக்குவா''

''சரிம்மா''

ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பரந்தாமனுக்கு வசுதேவன் கட்டித்தந்த வீடு. கிராமத்தில் கட்டப்படும் வீடுகளில் மொட்டைமாடி வைத்துக் கட்டுவது வழக்கம். ஏதேனும் காயப்போடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவிலில் இருந்து பதினைந்து நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் தான் வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்த மொட்டை மாடியில் நின்று முழுக்கோவிலையும் வெகுவாக இரசிக்கலாம்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும் காலணிகள் கழற்றி வைக்க ஒரு அறை. அங்கேயே கால், முகங்களை கழுவிக் கொள்ள தண்ணீர் வசதி கொண்ட சிறு இடம். அதைத்தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததும் நல்ல விசாலமான வரவேற்பு அறை. பத்து நபர்கள் கூட தாராளமாக படுத்து உறங்கலாம். அந்த அறையில் கீழேதான் அமர வேண்டும், எவ்வித நாற்காலிகளோ, கட்டில்களோ இல்லை. அங்கேதான் பெரும்பாலும் எவரேனும் வந்தாலும் கீழே அமர்ந்து பேசிச் செல்வார்கள்.

அந்த அறை முடியும் இடத்தில் வலப்புறமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சமையல் அறை. நான்கு நபர்கள் தாராளமாக நின்று சமைக்கலாம். கோவில் அன்னதானம், நெய்வேத்தியம் எல்லாம் இங்கே செய்யப்படுவது இல்லை. பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் மட்டுமான சமையல் அறையாக இருந்தது.

வரவேற்பு அறை, சமையல் அறைக்குப் பின்புறம் உறங்குவதற்கான ஒரு அறை அதை ஒட்டிய ஒரு பூஜை அறை. முதல் மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. வீட்டினைச் சுற்றி சின்ன சின்ன மரங்கள் மா, கொய்யா ஆலிவ் என நடப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கோவிலுக்கு என சமைப்பதற்கான சமையல் அறையும், பொருட்கள் சேர்த்து வைக்கும் ஒரு அறையும் இருந்தது. இவற்றில் எல்லாம் இருந்து சற்று தள்ளி மற்றொரு பக்கத்தில் கழிப்பறை.

வீட்டின் முன்பக்கத்தில் வாசல் தாண்டி ஒரு மாடத்தில் துளசிச் செடிகள் இருந்தது. இந்த துளசிச் செடிகளை பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறாள் பூங்கோதை. ஒரு துளசிச் செடி வைத்த இடத்தில் இன்று பல துளசிச் செடிகள் ஆகி இருந்தது. இந்த பெரும் அண்டவெளியில் தங்களைத் தாங்களே நட்சத்திரங்கள் முதற்கொண்டு பெருக்கிய வண்ணம் இருக்கின்றன.

நாச்சியார் கிளம்பியதும் அவரோடு துளசிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வெளியில் வந்தாள் பூங்கோதை. பட்டாம்பூச்சியும் அவள் பின்னால் வந்தது. அங்கே இருந்த ஒரு துளசிச் செடி இலையின் மீது அமர்ந்தது. அதனை பூங்கோதை வெகு ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நாச்சியார் கூட என்னவென ஒரு கணம் அங்கேயே நின்றார்.

தண்ணீர் ஊற்றித் திரும்பியவள் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போனா எனக்கு குங்குமம் பிரசாதம் கொண்டு வாங்கம்மா என்றாள். நாச்சியார் தலையை மட்டும் ஆட்டியவர் துளசிச் செடியில் அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சியை பார்த்தவாறு இருந்தார்.

சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சி அங்கே இருந்து பறந்தது. துளசிச் செடியின் இலையின் பின்புறம் குனிந்து பார்த்தார் நாச்சியார்.

''பெருமாளே'' இரு கைகளைத் தன்  தலைக்கு மேலே தூக்கி வணங்கி நின்றார்.

''என்ன ஆச்சுமா''

''ஒரே ஒரு முட்டையை மட்டும் போட்டுட்டு அந்த பட்டாம்பூச்சி போயிருக்கு'' இலையில் ஒட்டிக்கொண்டு இருந்த முட்டையை பூங்கோதைக்கு காட்டினார் நாச்சியார்.

''எத்தனையோ முட்டைகள் போடும் வழக்கம் பட்டாம்பூச்சிகளுக்கு உண்டு அதுவும் பிரத்யோகமா இலைகள் தேடிப் போகும். இந்த துளசிச் செடியில இருந்து இதுவரைஇத்தனை வருசமா  பட்டாம்பூச்சி எதுவாச்சும் வந்து இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா கோதை''

''இல்லைம்மா''

''முட்டை போட்டுட்டு போறதோட சரி, அதற்கப்புறம் அந்த முட்டையை பாதுகாக்கனும், பொறிக்கனும் அப்படி எல்லாம் பட்டாம்பூச்சிக்கு வழக்கம் இல்லை. நீ இந்த இலையில் தண்ணியை ஊத்திராதே,  முட்டையை சிதைக்கமா பார்த்துக்கோ, நா அடுத்த வாரம் வந்து பாக்கிறேன்''

''சரிம்மா''

துளசிச் செடியின் இலையை பார்த்தவாறு நின்று கொன்று இருந்தாள் பூங்கோதை.

கிருஷ்ணருக்கு தானே சமம் என தன்னைத் தானே உலகுக்கு உணர்த்திய இந்த துளசிச் செடி ஒரு உயிரைத் தாங்கிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Saturday 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 4

4. பட்டாம்பூச்சியின் பரிணாம மாற்றம்

பெருமாள்பட்டியின் சிறப்பு என்னவெனில் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாயில் நீர் வற்றியது கிடையாது. அந்தக் கண்மாய் நீரைத்தான் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல இடம் தாங்கிய கண்மாயினைத்தான் வெட்டி இருந்தனர். கண்மாய்க்கரை எல்லாம் போட்டு முடித்த சில நாட்களில் நல்ல மழை பெய்ததாகவும் அன்றில் இருந்து இன்றுவரை கண்மாயில் நீர் வற்றியதை எவரும் பார்த்தது இல்லை என்றே சொல்வார்கள்.

கிராமத்துக்கு ஏற்றது போன்ற கோவில். கருங்கல்லினால் ஆன கருவறை, அர்த்தமண்டபம், விமானம், இராஜகோபுரம். இராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் இடைப்பட்ட ஒரு இருபது அடியில் ஒரு மண்டபம். அங்கேதான் அன்னதானம் எல்லாம் வழங்குவார்கள். இந்த பெருமாள் கோவிலில் இன்றும் கூட திருமணம் நடத்திக் கொள்பவர்கள் உண்டு. வசதி வாய்ப்புகள் வந்தபிறகு கல்யாண மண்டபம் என நகரங்கள் தேடிப் பயணப்பட்டு போன பிறகு திருமணம் நடத்துவதில் கோவில்கள் முன்னுரிமை இழந்து போயின.

இருந்தாலும் அவ்வப்போது திருமண வைபவங்கள் காணும் இந்த பெருமாள் கோவிலை குண்டத்தூர் மரிக்கொழுந்து ஸ்தபதியார் தானே முன்னின்று செய்து முடித்து வைத்தார். வசுதேவனின் ஓட்டன் வாமனசித்தன் மரிக்கொழுந்துவிடம் தனது கோவில் ஆசையை சொன்னதும் அதற்கு முதலில் கண்மாய் வெட்ட வேண்டும் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்மாய். வறட்சிக் காலங்களில் கூட கண்மாய் வற்றாமல் இருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தது உண்டு, அதன்பின்னரே ஊற்றுநீர் குறித்த தகவல் பரப்பப்பட்டது.

பொதுவாக கிராமம் என்றாலே கருப்பசாமி, முனியாண்டி, அய்யனார், காளியம்மன், அரசமரத்து பிள்ளையார் என சாமிகள் இருக்கும். இந்த ஊரில் பெருமாள் கோவிலைத் தவிர வேறு எந்த கோவில்களும் இல்லாமல் போனதற்கு வசுதேவனின் குடும்பமே காரணமாக இருந்தது எனும் பேச்சு இருக்கிறது. இந்த கிராமத்தில் இறந்து போன எவரையும் குலசாமியாக எல்லாம் இங்கே உள்ளவர்கள் கொண்டாடியது இல்லை. வாமனசித்தன் சொன்னதன்பேரில் எல்லாம் பெருமாளுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்வார்கள்.

அன்றைய தினங்களில் வீட்டுக்கு குறையாமல் ஐந்து பிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் வசுதேவனின் பரன்பரையில் மூன்று பிள்ளைகள் மேல் இருந்தது இல்லை. அதிலும் ஒருவர் மட்டுமே திருமணம் முடித்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. இது தற்செயலாக நடந்து வருவதா, அல்லது திட்டமிட்டு நடக்கிறதா எனத் தெரியாது. வசுதேவனின் தந்தை குசேலபாகனுடன் உடன்பிறந்த சித்தப்பா பார்த்தன் தனக்கு இருபது வயது இருக்கும்போதே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர்தான், அவரோடு எவ்வித தொடர்பும் அதற்குப்பின்னர் இல்லாமல் போனது. இவர்களுது பரன்பரை முன்னால் இருந்தவர்கள் எல்லாம் ஸ்ரீஇராமானுசரிடம் பழக்க வழக்கம் கொண்டு இருந்ததாகப் பேச்சு இன்னமும் கிராமத்தில் இருக்கிறது.

நாராயணி எனும் பெயரைக் கேட்டதும் நாச்சியார் தனது யோசனையில் இருந்து விடுபட்டார்.

''கோதை, இந்த பெயர் எப்படி தேர்ந்து எடுத்த'' நாச்சியார் ஆச்சரியம் கலந்து கேட்டார்.

''அவர்தான் இந்தப் பெயரை எனக்கு முன்னமே சொன்னார், எங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும்னு ஒரு நம்பிக்கை. அவருக்கு அவர் அம்மா மேல நிறைய பிரியம், அவர் அம்மா திரும்ப பிறக்கனும்னு சொல்வார், அதெல்லாம் சாத்தியம் இல்லைன்னாலும் அவரோட ஆசையை சரினு சொல்லுவேன்'' பூங்கோதையின் மீது அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சி அகலவே இல்லை. அந்த அறை பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களால் நிறைந்து இருந்தது.

''இந்த பட்டாம்பூச்சிக்கு உன் மேல என்ன பிரியமோ கோதை, நகராம உட்கார்ந்து இருக்கு. பட்டாம்பூச்சியோட வாழ்நாள் ஒரு வாரத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை இருக்கும். இங்கே இருக்க இந்த பெரிய பட்டாம்பூச்சிகள் நிறைய மாதங்கள் உயிர் வாழும். அவை குளிர் இரத்த வகை, அதனால வெயில் காலத்தில் துடிதுடிப்பா இருக்கும், குளிர் காலம் வந்துட்டா உறைஞ்சி உயிர் போகாம இருக்கிறது எல்லாம் அதிசயம் தான். வெளிச்சூழல் வைச்சிதான் அவை தன்னோட வெப்ப நிலையை சமன்படுத்திக்கும்''

''அப்போ இந்த பட்டாம்பூச்சி எட்டுமாசம் முன்னாடி என் மேல வந்து உட்கார்ந்த ஒன்னாம்மா'' பூங்கோதையின் கேள்விக்கு என்னவென பதில் சொல்வதென தெரியாது புன்னகை புரிந்தார்  நாச்சியார்.

''தெரியலை கோதை, பட்டாம்பூச்சி கதையைச் சொல்றேன். கோதை இப்போ உன்னை மறுபடியும் முதலில் இருந்து இதே வாழ்க்கையை வாழச் சொன்னா இதே போல வாழ்வியானு கேட்டா உன்னால ஆமா, இல்லைனு பதில் சொல்ல முடியும் ஆனா உண்மையில் என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. நம்ம மனிதர்களுக்கு எப்பவுமே கடந்த காலத்தில் என்னவாக நடந்து இருக்கும் எப்படி இருந்து இருக்கும் அப்படினு தெரிஞ்சிக்க ஆசை, அதனால எழுதப்பட்ட பெரும் பழங்கதைகள், சமீபத்திய சிறுகதைகள் என நிறையவே உண்டு.

அதில் ஒன்னுதான் இந்த பட்டாம்பூச்சி கதை. 50மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போய் அப்போ வாழ்ந்த குறுகிய வாழ்நாட்கள் வாழும் டைனோசர்களை சுட்டு தள்ளிட்டு வருவதற்கு ஒரு நிறுவனம் கால இயந்திரம் உருவாக்கி அதில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டி இரண்டு நபர்கள் அதோடு கதைநாயகன் இன்னும் இரண்டு நபர்கள் போவாங்க. எந்த எந்த டைனோசர்களை கொல்லனும் அப்படினு முன்னமே அந்த நிறுவனம் குறியிட்டு வந்து இருப்பாங்க.

அந்த கதைநாயகன் இப்படி நாம பின்னோக்கி போய்ட்டு திரும்பி வந்தா எல்லாம் அப்படியே இருக்குமானு கேட்பான், அது உறுதி சொல்ல முடியாது, அதே வேளையில் தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யனும் மீறி செயல்படக்கூடாதுனு சொல்வாங்க. எடுத்துக்காட்டா ஒரு எலியை மிதிச்சுக் கொன்னா அதனைச் சுற்றிய ஒரு பரிணாம சூழல் மாறிப்போகும் அதனால சுடுவதை தவிர வேறு எதுவும் பாதை மீறிப் போகக்கூடாதுனு கடுமையான விதிகள் போடப்பட்டு இருக்கும்.

அப்படி போனப்ப பாதை மாறி கதைநாயகன் சேற்றில் மிதிச்சு வந்துருவான். வழிகாட்டி பயங்கரமா கோவப்படுவான். திரும்பி மீண்டும் அதே தற்காலத்திற்கு வந்ததும் முதலில் இருந்ததை விட எல்லாம் மாறி இருக்கும். ஏன் இப்படி ஆயிருச்சின்னு பார்த்தா சேற்றில் மிதிச்சதால அதில் இருந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போய் அவனது காலில் ஒட்டி இருக்கும். அந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போனது மொத்த நிகழ்வுகளையே மாற்றி வைச்சிரும். அவனுக்கு என்ன இதுனு புரியறதுக்கு முன்னாலே அந்த வழிகாட்டி அவனை சுட்டுக் கொன்னுருவான். அந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருந்து இருந்தா கதைநாயகன் உயிரோட இருந்து இருப்பானு கதை முடியும்''

நாச்சியார் சொல்லி முடித்ததும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் அந்த அறையை விட்டுப் பறந்தோடின. பூங்கோதையின் கன்னம் தொட்டு மீண்டும் தோளில் அமர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு பட்டாம்பூச்சி.

''அம்மா'' என கண்கள் கலங்கினாள் பூங்கோதை.

''எனக்குப் பிறகு எனக்கான என் சந்ததி இல்லைனு ஆயிருதல கோதை, அப்படி என் சந்ததி ஒன்னு உருவாகி இருந்தா இந்த உலகத்தில் எத்தனை மாற்றம் உருவாகி இருக்கும்னு சொல்ல முடியாதுல, அதுபோல நிறைய மகான்கள், பெரியோர்கள், அறிவியல் அறிஞர்கள் எல்லாம் பிறக்காமல் போயிருந்தானு யோசிச்சா இந்த உலகத்தைப் பத்தி நம்முடைய பார்வை எப்படி இருக்கும். இப்படித்தான் எங்க குடும்பத்தில ஒரே ஒரு சந்ததி தொடர்ச்சி மட்டுமே இருந்துட்டு வந்து இருக்கு அதனால பெரும் மாற்றம் நிகழாமல் போய் இருக்குமோ''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்) 

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 3

3. நாராயணி

நாச்சியார். வசுதேவனின் தங்கை. பெருமாள்பட்டியில் இருந்து முதல் பட்டதாரியாக விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். வசுதேவன் தனக்குப் படிப்பு ஏறவில்லை என விவசாயம் மட்டுமே தனக்குப் போதும் என இருந்து கொண்டார். வசுதேவனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே தனது பெற்றோர்களை இழந்தார். நாச்சியாருக்கு எல்லாமே வசுதேவன் என ஆனது. அந்த ஊரில் வசுதேவனின் தாத்தாவின் தாத்தா கட்டியதுதான் பெருமாள் கோவில். இப்பிணைப்பின் காரணமாகவோ என்னவோ நாச்சியாருக்கு பெருமாள் மீது நிறைய பிடித்தம் ஆனது.

நாச்சியார் தான் படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என பாப்பநாயக்கன்பட்டியில் சென்று பள்ளியில் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது வழக்கம். அதோடு பெருமாள்பட்டியில் உள்ள பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இதற்கு எல்லாம் பணமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என ஒரு சேவையாகவே செய்து வந்தார். அதைத் தவிர்த்த நேரங்களில் எல்லாம் விவசாயம், பெருமாள்தான் அவரது கனவும், வாழ்வும். இப்படிப்பட்ட சேவை மனமோ என்னவோ திருமண வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நாச்சியாரின் மனம் ஈடுபடவே இல்லை.

வசுதேவன் பல வருடங்கள் காத்து இருந்து, தங்கையின் மனம் மாறாது என அறிந்த பிறகு தான் ஒரு திருமணம் பண்ணிக்கொண்டார். மணப்பெண் கோமதி உள்ளூர் மற்றும் அதிகம் படிக்கவில்லை என்பதாலும், நாச்சியார் நல்ல பழக்கம் என்பதாலும் நாச்சியார் அந்த வீட்டின் இளவரசியாகவும் பின்னர் மகாராணியாகவும் வலம் வந்தார், வருகிறார். வசுதேவனுக்கு 23 வயதில் யசோதை எனும் ஒரு பெண் பிள்ளை மட்டுமே. படிப்பில், விளையாட்டில் மிகவும் சுட்டி. யசோதை மதுரை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவப் படிப்புதனை முடித்து இருந்தார். யசோதைக்கு பாப்பநாயக்கன்பட்டி அறிவியல் வாத்தியார் மாணிக்கவாசகரின் மகன் சுந்தரவேலன் மீதான காதல் பாப்பநாயக்கன்பட்டி பள்ளியில் மலர்ந்த ஒன்று அது மதுரை மருத்துவ கல்லூரி வரை வளர்ந்து இருந்தது. இவர்களின் காதல் குறித்து வசுதேவனும் அறிந்தது இல்லை, மாணிக்கவாசகரும் அறிந்தது இல்லை. தனது காதல் நிறைவேற தனது அத்தை நாச்சியாரை நிறையவே நம்பி இருந்தார் யசோதை.

தனது இடது தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சியை கூர்ந்து கவனித்தாள் பூங்கோதை. அது பூங்கோதையைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தது. அதனுடைய வண்ணம் பேரழகாக இருந்தது. இந்த உலகில் எதையும் எட்டி நின்று பார்த்துக் கொண்டால் மட்டுமே பேரழகாக தெரியும், அருகில் சென்றால் பேரழகு மறைந்து போகும் எனும் ஒரு சிறு வழக்கம் உண்டு, ஆனால் பேரின்பம் கொண்ட மனதுக்கு தொலைவிலும் சரி, அருகிலும் சரி பேரழகாக மட்டுமே தெரியும்.

''கோதை, இந்த பட்டாம்பூச்சி இப்போ எதுக்கு வந்து உன்மேல உட்கார்ந்து இருக்கு, நான் சொல்ற கதையை கேட்கவா'' எனச் சிரித்தார் நாச்சியார்.

''தெரியலைம்மா, கதை கேட்கனும்னு வந்து இருக்குமோ, கதையைச் சொல்லுங்கம்மா''

பட்டாம்பூச்சி பறந்து போய்விடக்கூடாது என ஆடாமல், அசையாமல் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. இந்த உலகில் நடனம் என ஆடுவதற்கு நடராசர் பெரும் பெயர் பெற்றவர். ஆனால் அவரே கயிலையில் இருந்து வந்து கண்ணனின் நடனம் காண வந்ததாக பேரழகு மிக்க கற்பனை. அந்தளவுக்கு அருமையான நடனம் ஆடும் வல்லமை கண்ணனுக்கு உண்டு, அவன் ஆடி வந்தால் இந்த உலகம் எல்லாம் ஆடும் எனவே கண்ணனை ஆடாமல், அசங்காமல் வா கண்ணா என அவன் மீதான காதலை வெளிப்படுத்தும் கவித்துவம் பேரழகு. அதே சூழலை பூங்கோதை பட்டாம்பூச்சிக்காக செய்து கொண்டு இருந்தாள்.

''இந்த பட்டாம்பூச்சி உருமாற்றம்தனை கொள்ள பல வருடங்கள் எடுத்துக்கிறது இல்லை. இந்த உலகில் உள்ள உயிரினம் எல்லாம் வெவ்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தவை என்பதற்கு இந்த பட்டாம்பூச்சி எடுத்துக்காட்டு. டைனோசர் காலத்து பட்டாம்பூச்சி, அப்போ உண்டான வெகு மோசமான கால சூழலில் டைனோசர் அழிந்து போனாலும் அழியாம இருந்து கொண்டது இந்த பட்டாம்பூச்சி''

நாச்சியார் சொன்ன விசயத்தைக் கேட்ட பூங்கோதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

''இத்தனை வருசமாகவா இருக்கு இந்த பட்டாம்பூச்சி''

''ஆமா கோதை, பட்டாம்பூச்சிகள் எல்லாம் பூக்கள் உள்ள தாவரங்கள் வரும் முன்னமே இந்த உலகில் வந்த ஒன்று. நீ கவனிச்சிப் பார்த்தா நல்ல இலைகளைத் தேடித் தேடிப் போய் முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளி வரும் இலார்வா, அதன் பின்னான பூச்சி எல்லாம் இலையை மட்டுமே உணவாகக் கொள்ளும். அதற்குப் பிறகு பட்டாம்பூச்சி உருவமாற்றம்தான் பூக்களில் போய் உணவு கொள்ளும் வழியை கற்றுத் தந்தது''

நாச்சியார் சொன்னதும் பட்டாம்பூச்சி சட்டென பூங்கோதையின் இடது தோளில் இருந்து பறந்து போனது. தன்னை கொஞ்சம் அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டாள் பூங்கோதை. அடுத்து சில நிமிடங்களில் நிறைய பட்டாம்பூச்சிகள் அந்த அறையை பேரழகாக மாற்றிக் கொண்டு இருந்தது.

''உங்க கதையைக் கேட்க எல்லோரையும் கூட்டி வந்து இருக்கும்போலம்மா'' என்றாள் பூங்கோதை.

''கோதை, எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியலை, உனக்குப் பெண் குழந்தை பிறந்தா என்ன பெரு வைப்ப கோதை''

நாச்சியார் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அதே பட்டாம்பூச்சி மட்டும் பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. ஓரிடத்தில் அமராமல் பல பட்டாம்பூச்சிகள் அந்த அறையில் பறந்து கொண்டு இருந்தன.

நாச்சியார் தான் பட்டாம்பூச்சிகள் பற்றி மேலும் சொல்வதா, வேண்டாமா என யோசனையில் மூழ்கினார்.

''நாராயணி'' என்றாள் பூங்கோதை.

(தொடரும்)