Tuesday 11 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 2

அம்மா நிறையவே வாதிட்டார்கள் இதோடு என் தங்கையும் சேர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். காதல் என்பது தசைகளால் ஆனது. காதல் என்பது கவர்ச்சி என்றெல்லாம் சொன்னவர்களை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவள் முகம் பொலிவாக இருப்பதைப்போல எனக்குள் ஒருவித எண்ணம் ஏற்பட்டது. உனக்கு என்ன ஆச்சுனாலும் உன்னைத்தான் கட்டிப்பேன் என அவளிடம் அன்று சொன்னது இன்று நினைவில் ஆடியது. எல்லாம் என் விதி என அம்மா மீண்டும் வந்து சத்தம் போட்டுச் சென்றார். ஒரு குழந்தையைப் போல இவளது நடவடிக்கைகள் இருப்பதாக நினைத்தேன், இவளது மூளை நரம்புகளில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ அச்சம் ஏற்பட்டது. இத்தனை நேரம் தூங்கும் அளவுக்கு இவளது உடலில் அப்படியென்ன ஒரு மாற்றம் திடீரென வந்து இருக்கும். நான் வேலைக்கு கிளம்பும் அன்றுவரை நன்றாகத்தான் இருந்தாள், எப்போது வருவாய் எனக்கேட்டபோது ஒரு மாதம் கழித்து வருவேன் எனச் சொல்லிச்சென்றபோது சரியென்றுதானே சொன்னாள், ஊரைவிட்டுப் போய் அடுத்தநாள் என இவளது அம்மா சொன்னாரே அதற்குள் என்ன நடந்திருக்கும் நிறைய யோசித்து அயர்வாக இருந்தது.

ஊரறிந்த காதல் என்றெல்லாம் இல்லை, பழகியது பேசியது எல்லாம் ஊருக்கு சாதாரணமான ஒன்றாகவே இருந்தது. நான் மணம் முடிக்கப்போகும் பெண் பேரதிர்வை எனக்குள் தந்து கொண்டு இருந்தாள். காம இச்சையின்றி ஒரு ஆண் வாழ்வது எல்லாம் அத்தனை எளிதான ஒன்றல்ல என கதைகளில் படித்து இருக்கிறேன் அதுவும் மனைவி நோய்வாய்ப்பட்டபின்னர் அவளை காத்துவரும் கணவன் வேறொரு பெண்ணுக்கு மயங்கி அவளே தஞ்சம் என போன கதை மனதில் தைத்துக்கொண்டு இருந்தது. அதுதான் நிதர்சனம் என அந்தக் கதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இதோ இவள், எனக்கென்ன என என்னால் இவளை விட்டுவிட்டு நான் கடந்து போயிருக்கலாம். இவளது பெற்றோர்களும் என்னிடம் வந்து எதுவும் கேட்டு இருக்கப்போவது இல்லை, எதை நிரூபிக்க இவளை இப்போது எனது வீட்டில் தூங்க வைத்து இருக்கிறேன். அறையில் விளக்கொளி இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.

''போய்த்தூங்கு ராமா''

''அம்மா நான் செய்றது சரினு படுது பணத்தை எல்லாம் இவளுக்கு செலவு பண்ணிருவேனு நினைக்காத தங்கச்சிக்கு சேர்த்து வைச்சிருக்கல்ல''

''எதுனாலும் பண்ணு போ தூங்கு''

''இங்கனயே இருக்கேன்ம்மா நீங்க தூங்குங்க''

''சொன்னா கேட்கவா போற''

மணி பன்னிரண்டு இருக்கும். புனிதா எழ முயற்சித்தாள். அவளைத் தூக்கி அமர வைத்தேன்.

''என்ன செய்து''

அவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்ணீரைத் துடைத்தேன்.

''பேசு''

''அம்மா''

''நான் இருக்கேன்''

''ம் அம்மா''

என் அம்மாவை அழைத்தேன்.

''இவளை பாத்ரூம் கூட்டிப்போம்மா''

''நீயே பாத்துக்கிறேனு சொன்ன''

திட்டியபடி அவளை அழைத்துச் சென்றார். திரும்பவும் அமர வைத்ததும் எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது ஒடுங்கிய விழிகளில் எனது காதலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

''ஆஸ்பத்திரிக்குப் போவோம்''

''ம்''

''எப்படி இப்படி ஆச்சு''

''ம்''

புதிய இடம் அவளை இப்போது எழுப்பி இருக்கக்கூடும் என நினைத்தேன். கண்களை மூட இருந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தேன். மெதுவாக விழுங்கினாள். இப்படியே இருந்தால் முதுகு வலி, இருதய நோய் என எல்லாம் வந்து சேரும் என அவளை நடமாட செய்தேன். தோளில் சாய்ந்து மெல்ல நடந்தாள்.

''நம் காதல் உன் உயிர் காக்கும்''

எனக்கே அபத்தமாக இருந்தது.

''ம்''

அவளது இந்த தூக்கம் ஒருவித நோய். சில மணி நேரங்கள் தூங்கியவள் எழுந்தாள்.

''அம்மா''

நானே அவளை பாத்ரூம் அழைத்துச் சென்றேன். எல்லாம் இயல்பாக நடக்கிறது இந்த தூக்கம் மட்டும் தான் அவளை செயல் இழக்கச் செய்கிறது, குறித்து வைத்தேன். அதிக தூக்கம் ஆற்றலை குறைத்து இருக்கிறது. விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவளது அப்பா அம்மா தாத்தா உடன் வந்தார்கள். என் அம்மாவும் தங்கையும் இன்னமும் கோபத்தில் இருந்தார்கள். நோயில் உள்ள எவரையும் பரிதாபமாக பார்க்க வேண்டியது இல்லை, அன்பாக நடத்தினால் போதும். டாக்டர் பரிசோதித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவளது தாத்தாவை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றேன்.

மருத்துவமனையில் கல்லூரி நண்பன் சுரேந்திரனைக் கண்டேன், விபரம் சொன்னேன். அவன் என்னிடம் சொன்ன விசயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

''ஏன்டா உனக்கு இந்த அக்கப்போரு, நல்ல வேலை, சம்பளம் ஊருல வேற பொண்ணா இல்லை நா சொல்றத கேளு, இவ உறுப்புகள எல்லாம் இப்பவே எடுத்து வித்துட்டா நல்ல காசு பார்க்கலாம் நாளாக நாளாக யாருக்கும் உதவாது நா எல்லாம் அரேஞ் பண்றேன் நீ ஓகே சொல்லு''

முதுகில் குத்துபவனை எல்லாம் உடனே அழிக்கும் ஒரு வரமோ அல்லது இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படாத மனிதர்கள் இருக்க வரமோ இருக்காதா என்றே அவனை நான் உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே நடந்தேன்.

''அவரு என்ன சொன்னாரு''

''ஒன்னுமில்ல தாத்தா''

மருத்துவரை சந்தித்து ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கண் விழித்தாள்.

''அம்மா''

மரணத்தைவிட நோய் கொடியது என கத்தவேண்டும் போலிருந்தது. என்னை மருத்துவ அறை வாசம் உலுக்கியது. பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்று பிச்சிப்பூவும் மல்லிகையும் வாங்கி வந்து அவளது தலை நிறைய வைத்தேன் விழிகள் திறந்தே இருந்தன.

''என்ன''

''ம்''

''அமுதன் இவங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கனும் அதுக்கு முன்னால ப்ளட் டெஸ்ட் பண்ணனும்''

''சரி டாக்டர், நாளைக்குப் பண்ணலாம்''

அலுவலக மேலதிகாரி மணியனிடம் விபரங்கள் சொன்னேன்.

''எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லு''

ஒரு நண்பனாகவே என்னைப் பார்த்தவருக்கு உதவுவதில் சிரமம் இல்லை.

''பணம் இருக்கு, வேலைக்கு வர நாள் ஆகலாம்''

''சரி, கவலைப்படாதே''

''தாத்தா ஊருக்குப் போங்க''

''இங்க இருக்கேன் ராமா''

''வேண்டாம்''.

வேறு வழியின்றி ஊருக்குப் போனார். நர்ஸ்களிடம் விபரங்கள் சொன்னேன். உடனே இருக்கச் சொன்னவர்கள் உதவிக்கு அழைக்கச் சொன்னார்கள். குளித்து தயார் ஆனேன். அமுதன் காலையில் வந்து ரத்த சோதனைக்கு அழைத்துச் சென்றார்.

''உங்க பொண்டாட்டியா சார்?''

''இல்ல, காதலி''

மணியனிடமிருந்து அழைப்பு வந்தது.

''எந்த வார்ட்? ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன். உனக்குத் துணையா ஒரு டூ டேஸ் இங்க இருக்கேன்''

மணியனை நினைக்க கண்ணீர் முட்டியது. கட்டிக்கொண்டு அழுதேன்.

''லுக் பி ஸ்ட்ராங். ஐ ஆம் வித் யூ''

புனிதாவுக்கு ரத்தம் எடுத்து வந்தபின் அவளை மணியன் பார்த்த மறுகணம் சொன்னார்.

''சிவா யூ ஆர் கிரேட்''

மணியனின் கண்களில் இருந்த கண்ணீர்த்துளிகள் எனது கண்களில் பட்டுத் தெறித்தது. என் அம்மாவும் அவளது அம்மா தாத்தா வந்து இருந்தனர். கஞ்சி கொடுத்தோம்.

''ராமா நிறைய செலவு ஆகுமேப்பா''

''அதைச் சொல்லத்தான் இங்க வந்தியாம்மா''

''பத்தாயிரம் அடுத்த மாசம் வேணும்''

''சரி''

ராமா என எனது கையைப் பிடித்து அவ்ளதானு நினைச்சேன் என குலுங்கி குலுங்கி அழுதார் அவளது அப்பா. சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணியன் கிளம்பினார். ரத்தப் பரிசோதனையில் ஹீமோக்ளோபின் குறைவு எனும் குறை தவிர வேறு குறை ஏதுமில்லை என்றார்கள். மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தனர். பழச்சாறு என தந்தார்கள். தேறிவிடுவாள் எனும் நம்பிக்கை உற்சாகம் தந்து கொண்டு இருந்தது. எல்லாம் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு என அறிந்து அதை சரி செய்ய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியன் பண உதவி செய்தார்.

புனிதா குணமாகத் தொடங்கினாள். அமுதன் முகத்தில் கூட மகிழ்ச்சி நிலவியது.

''சார் அடுத்த வாரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்''

புனிதா பேசத் தொடங்கினாள். என் பிரபஞ்சத்தின் தேவதை. அன்று இரவு சுரேந்திரனைக் கண்டேன். விபரங்கள் சொன்னேன். என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சற்றும் எதிர்பாராதபோது ஓங்கி எனது வயிற்றில் கத்தியால் குத்தினான். எனது அலறல் கேட்டு சிலர் ஓடிவந்தார்கள்.

''நீ சாவு''

தலைதெறிக்க என்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான்.

நான் செத்துரக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டே நோயை விட மரணம் கொடியது என கத்த வேண்டும் போலிருந்தது. மயக்கமானேன்.

எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள் புனிதா. இவ்வுலகில் இவர் எப்போது இறப்பார் என பிறர் நினைக்கும்படியாய் ஒருபோதும் நாம் வாழவே கூடாது.

முற்றும்

Monday 10 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 1

பேசுவதைக் கேட்க முடியாமல் சொல்பவரைப் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருந்தாள். நான் சிவராமன் வந்து இருக்கிறேன் என்றேன். கண்அசைப்பாள் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவளது அம்மாவிடம் கேட்டேன்.

''எப்ப இப்படி ஆனா''

''நீ போன மாசம் ஊரைவிட்டுப் போன மறுநாள்''

''நல்லாதானே இருந்தா''

''யாருக்கு எப்ப என்ன வரும்னு யாருக்குத் தெரியும்'' இடைமறித்தார் தாத்தா.

வீட்டில் வெட்கையாக இருந்தது.ஓடுகளில் பதியப்பட்ட கண்ணாடி வழியே சூரிய ஒளி அவளது முகத்தின் அருகில் விழுந்து கொண்டு இருந்தது. முகம் பெரும் சோகத்தில் இருப்பது போல எனக்குத் தென்பட்டது.

செடி தனது மலர்களுடன் வாடி வதங்கி கிடப்பது போல அவளது உடல் தரையில் பாயின்மீது கிடத்தப்பட்டு இருந்தது.

''ஊருக்கு எப்ப வந்த, உட்காரு''

''இப்ப''

அவளது தலைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். மல்லிகைப்பூ வாசம்தனை அப்போதுதான் கவனித்தேன். மல்லிகைப்பூ தலைக்கு அடியில் நசுங்கிக் கிடந்தது. நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறு குங்குமம். அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை நல்லவனாக்கிய முகம் அது எனக்குள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு சேர்த்த முகம் அது.

''இந்தா மோர் குடி''

அவள் மீது சிந்திவிடாதபடிக்கு சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.

''தினமும் இவளை குளிப்பாட்டி துணி மாத்தி இவ பக்கத்திலேயே என்னை உட்கார வச்சுட்டா''

''சாப்பிட்டாளா?''

''கஞ்சி கரைச்சி கொடுத்தேன்''.

''எப்போ கண் முழிப்பா?''

''ஆறு மணிக்கு''.

''டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?''

''பணத்துக்கு எங்க போறது''

அவளது கைகளைப்ற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடக்க வேண்டும் போல் இருந்தது.

''நடப்பாளா?''

''ஒரு ஆளுப் பிடிச்சிக்கனும் இது என்ன எழவு நோயுனு தெரியலை''

''பேசுவாளா?''

''அம்மானு சொல்வா''.

''எத்தனை மணி நேரம் முழிச்சிருப்பா?''

''ஒரு நாற்பது நிமிசம் அப்புறம் படுத்துருவா''.

''ஆளுக அடையாளம் தெரியுதா?''

''ம் தெரியும்''

எப்போது ஆறு மணி ஆகும் என்று இருந்தது. அவளது தாத்தா என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பதினோரு மணி பேருந்துதனை தவறவிட்டு கண்மாய் காடு என கடந்து வீடு வந்து சேர்ந்ததும் அம்மா என்னிடம் சொன்னார்.

''ராமா புனிதா படுத்தபடுக்கையா இருக்கா''

நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

''என்னம்மா சொல்ற?''

''அதான்டா சுந்தரமூர்த்தி மக புனிதா''

எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் இந்த பூமிக்குள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் அதிர்வுகளை விட படுபயங்கரமாக இருந்தது. என்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

''பார்த்துட்டு வரேன்மா''

''சாப்பிட்டு போ''

''இப்ப வேணாம்''

தெருவில் கண்டவர்களின் வரவேற்புக்கு தலையாட்டி அழுகையை அடக்கிக்கொண்டு கேள்விகளுடன் அமர்ந்து இருக்கிறேன்.

''செத்துப் போயிருவாளோனு பயமாருக்கு''

''அப்படி சொல்லாதீங்க''

''எப்பப்பாரு இப்படியே சொல்லிக்கிட்டு என் பேத்தி சாகமாட்டா சாகுற வயசா இது'' தாத்தா இடைமறித்தார்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு என்வீடு நோக்கிச் செல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். அந்த தெருவின் கடைசி வீடு இது இருபுறமும் வரிசையாக ஒரே அமைப்பினால் ஆன இருபது இருபது வீடுகளை கொண்ட நீண்ட மிகவும் சுத்தமான தெரு இது. தெருவினைப் பார்த்த போது எத்தனை எத்தனை கற்பனைகளை இந்த தெரு எனக்குத் தந்து இருந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலவில்லை.

''ஆறு மணிக்கு வரேன்''

கனத்த மனதுடன் கண்ணீர் திட்டுகளுடன் வீட்டுக்குப் போனேன்.

''சாப்பிடுப்பா''

அம்மா என கட்டிப்பிடித்து ஓ வென அழ ஆரம்பித்தேன்.

''என்னாச்சு''

''புனிதா எப்போ நல்லா ஆவா''

கதறலில் ஊடே சொன்னேன்.

''அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்''

''நல்லா ஆயிருவாம்மா''

''அழாத கண்ணைத் துடைச்சிக்கோ எத்தனை நாளு லீவுல வந்த''

''ஒரு வாரம்''

''பேய் எல்லாம் ஓட்டிப் பார்த்தாங்க தேறலை''

பேய்! எனது பிரபஞ்சத்தின் தேவதை அவள். அவளது வருகைக்குப் பின்னரே எனது கிராமத்தின் தெருக்கள் எல்லாம் அழகு பெற்றன. அவள் வசிக்கும் தெருவினைக் கடக்காமல் ஒருபோதும் எனது தெருவுக்கு சென்றது இல்லை. அவள் இந்த கிராமத்திற்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். பத்தாவது முடித்து இருந்தாள். நான் +2 முடித்து இருந்தேன். கல்லூரிக்குச் சென்று விடுமுறையில் வரும்போதெல்லாம் அவள் மீதான ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. எதேச்சையாக அவளிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. அவளது முகம் பார்த்ததில் இருந்து நல்லவனாக வாழ வேண்டும் எனும் ஆவல் அதிகரித்தபடி இருந்தது. கோபம் கொள்வது தவறு எனும் எண்ணம் புத்திக்கு ஏறி இருந்தது. எனது உலகம் அவளைச் சுற்றி அமையத் தொடங்கியது. சாப்பிட்ட பின்னரும் பசித்தது என்ன காரணம் என யோசித்தபோது அவள் சாப்பிட்டு இருக்கமாட்டாளோ என எண்ண வைத்தது +2 முடித்த பின்னர் படிப்பதை நிறுத்தி இருந்தாள். பண கஷ்டம் எனும் காரணம் போதுமானதாக இருந்தது.

விவசாயத்தில் கூலி வேலை செய்து பிழைப்பது பெரும் கடினம். பக்கத்து மில்லில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினார் அவளது அப்பா. யார் என்ன விபரம் இதற்குமுன்னர் எந்த ஊரில் இருந்தார்கள் ராமநாதனின் வீட்டிற்கு எப்படி குடி வந்தார்கள் எனும் கேள்விகள் பலநாட்களாக எனக்குத் தோனவில்லை. ஒருமுறை அம்மாதான் என்னிடம் மாந்தோப்புல இவங்க இருந்து இருக்காங்க. ராமநாதன் அண்ணனோட தூரத்துசொந்தம் அந்த அண்ணன் பிசிண்டிக்கு போறதால இங்க வந்துட்டாங்கன்றபோது இங்க எதுக்கு வரனும் எனும் கேள்வி என்னுள் மகிழ்ச்சியைத் தந்து இருந்தது.

''ராமா சாப்பிடுப்பா''

கொஞ்சமாக சாப்பிட்டேன், விழுங்குவதற்கு கடினமாக இருந்தது. ஆறு மணிக்கு முன்னரே புனிதாவின் வீட்டிற்குச் சென்றேன். மாலை நேரத்து இருள் சூழ்ந்து கொள்ளும் வேளையில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தது. மனம் துடிதுடித்தது. அவளது அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வந்து இருந்தார்.

''வா ராமா''

அவளது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் போலத் தெரிந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன்.

''எழுந்தாளா?''

''இன்னுமில்ல''.

ஆறு மணி ஆனது. எழவில்லை. என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாளா, வீட்டுக்குள் போதிய வெளிச்சமில்லை. நிமிடங்கள் ஓடின. முகம் பிரகாசமாகத் தெரிய மறுத்தது. அம்மா என்றபடி எழ எத்தனித்தாள். மெதுவாக அவளைத் தூக்கி சுவரோரம் அமர வைத்தார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே அம்மா என அழைக்க கைத்தாங்கலாக வீட்டுக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தார்கள்.

''நான் சிவராமன்''

''ம்''

ஒற்றை வார்த்தை சன்னமாக கேட்டது. எனது பிரபஞ்சத்தின் தேவதை.

''நான் என்னோட கூட்டிட்டுப் போறேன்''

''சிரமம் ராமா''

என்னை அடையாளம் கண்டுகொண்டாளா எனத் தெரியாமல் தவித்தேன். அவள் மீண்டும் உறக்கத்தில் விழும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் பரபரத்தது. நானே அவளுக்கு ஆற்றலும் எல்லாம் என நினைத்தேன்.

''நான் கூட்டிட்டுப் போறேன், குணமாக்கிரலாம்''

'வேண்டாம் ராமா''

''புனிதா என்னோட வரியா''

''ம்''

''நான் கூட்டிட்டுப் போறேன்''

உடலில் எவ்வித தசையும் இல்லையோ எனும் அளவுக்கு ஒடுங்கிப்போயிருந்தவளின் கையைப்பிடித்தேன். இறுகப்பற்றிக் கொண்டாள். கஞ்சி கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். இந்த கன்னங்களைத்தான் எப்படியெல்லாம் என்னுள் வர்ணித்தேன் என நினைத்தேன். அவள் படும்கஷ்டங்களைக் கண்டு எனக்கு கண்ணீர் முட்டிநின்றது இறுகப்பற்றிய கையை விடவில்லை. இறுகப்பற்றிக்கொள்ள எங்கிருந்து வந்தது இந்த ஆற்றல்? போதும் என தலையை மெதுவாக ஆட்டினாள்.

''எல்லா உணர்வுகளும் இருக்கின்றதா''

பேசுவதுப் புரிந்தது போல பார்த்தாள்.

''ம்''

என் மீது அவளை சாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிரமம் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்தேன்.

''தூங்கிருவா''

விழிகள் என்னிடம் ஏதோ கெஞ்சுவது போல தென்பட்டது.

''கண்ணை மூடாதே''

''ம்''

சிரிக்க மறந்து இருப்பாள் என தோனியது.

வீட்டுக்குள் சென்றதும்தான் தாமதம்.

''என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க''

''சொன்னா கேட்கலை''

என்னுடன் வந்து நின்றார்கள் அவளது அம்மா அப்பா தாத்தா.

''நான் பார்த்துக்கிறேன்''

அவளை அமர வைத்தேன்.

''நாளைக்கு நான் காலையில ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போறேன்''

வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

''ஏன் இப்படி பண்ற''

''உனக்கு அறிவே இல்லையாண்ணா''

அம்மாவுடன் தங்கையும் சேர்ந்து கொண்டாள். பலர் திட்டத் தொடங்கினார்கள்.

''நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசாம போயிருங்க''

அவளின் முன் கோபம் அழுகை எல்லாம் எனக்கு வராது. மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். தூங்கிருவா என்றது போலவே தூங்கத் தொடங்கினாள்.

''எப்போ எந்திரிப்பா?''

''காலையில எட்டு மணி''.

தூங்காத என்றேன் தூங்கிப் போனாள்.

(தொடரும்)


Friday 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.



Tuesday 2 August 2016

காதலினும் கல்யாணம் பெரிது

காதல் பருவம் எது என்று கேட்டால் காதல் வரும் பருவம் தான் காதல் பருவம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. காதல் எப்படியும் கல்யாணத்தில்தான் சென்று முடிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை ஆனால் காதல், கல்யாணத்தில் சென்றுதான் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

இன்று அலுவலகத்திற்கு  நடந்து செல்லும்போது ஒரு தேநீர் கடையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. இதுவரை அப்படி எவரையும் சந்திக்கவே இல்லை என்பதுதான் ஒரு வேதனையாக இருந்தது. வேறு ஒருவரை உற்றுப்பார்த்தல் அநாகரிகமான செயல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அழகிகள் அழகன்கள் எல்லாம் தெருவில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உற்றுப்பார்த்தால் நம்மை நோக்கிய அவர்களின் கண்களும், புருவங்களும் சுளுக்கிக்கொள்ளும். அதற்காகவே எதற்கு இந்த வீண் வம்பு என மரம் பார்ப்பதும், செடி பார்ப்பதும், மண் பார்ப்பதும், வானம் பார்ப்பதும் என அவ்வப்போது அவர்களை பார்ப்பதும் என சாலையில் நடக்கும்போது பொழுது போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென மேலதிகாரி சுரேஷ் மாயதேவன் அழைத்தார். உள்ளே சென்றதும் அங்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு ஒரு யுவதி அமர்ந்து இருந்தாள். என்னோடு வேலை பார்த்தவனின் காலி வேலைக்குத்தான் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என யூகித்துக் கொண்டேன்.

''இவங்கதான் தீபா ராமநாதன், நம்ம அலுவலகத்தில் புதுசா இன்னைக்கு ஜாயின் பண்ணி  இருக்காங்க. உன்னோட புராஜக்ட்லதான் இவங்க ஒர்க் பண்ண இருக்காங்க. உன்னோட அறையில் இருக்கிற பக்கத்து சீட் இவங்களுக்கு அரேஞ் பண்ணி இருக்கு.

தீபா, இவர் தான் தீபக் சொக்கநாதன். இந்த அலுவலகத்துல ரெண்டு வருசமா வேலை பார்க்கிறார். இவரோடதான் உங்க புராஜக்ட் ஒர்க். எல்லாம் இவர் உங்களுக்கு சொல்வார். நீங்க இவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினா போதும். அவர் எனக்கு அப்டேட் பண்ணுவார்''

''சரிங்க  சார்''

மழலையின் குரலை விட மங்கையரின் குரலே அழகு என ஒரு திருக்குறள் எதற்கு எழுதவில்லை என தோனியது. திருவள்ளுவர் காதல் எல்லாம் புரிந்து இருக்கமாட்டார், நேராக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றுதான் இருந்து இருப்பார் என நினைக்கத் தோனியது.

''தீபா இதுதான் உங்க சிஸ்டம், டேபிள் சேர் எல்லாம்''

''சரிங்க தீபக்''

சார் என்று அழைப்பாள் என்று பார்த்தால் நேரடியாக பெயர் கொண்டே அழைத்துவிட்டாள்.

''இந்த அலுவலகம் எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா?''

''இது ஏன்னா சுற்றுலாத்தளமா, சுற்றிப் பார்க்க''

''எது எது எங்க இருக்குனு தெரிஞ்சிக்கலாமே''

''எல்லாம் சொல்லிட்டாங்க, இருக்கிறதே மூணு புளோர். புராஜக்ட் எதுவரைக்கும் போயிருக்கு''

''பத்து பெர்சென்ட் கூட ஆரம்பிக்கலை, இந்த ப்ரொஜெக்ட் சேன்க்சன் ஆன நேரம் அவன் வேலையை விட்டுட்டுப் போயிட்டான்''

''எதுக்குப்  போனார்?''

''ம்ம் கல்யாணம் பாரின் பொண்ணு, இனி அவன் பாரின் செட்டில்''

''பொறாமையா இருக்கீங்க போல''

இத்தனை சகஜமாக பேசுவாள் என்று எவர் எதிர்பார்த்தது.

''பொறாமைப்பட்டுக்கிட்டாலும், இதுக்கு முன்ன வேற எங்க வேலைப்  பார்த்தீங்க?''

''இதுதான் முதல் வேலை''

''ஒரு பயம் எல்லாம் இல்லையா''

''ஏன் இங்க சிங்கம், புலி, பாம்பு, பல்லி எல்லாம் வேலை செய்யுதா?''

''இல்லை''

அதற்குப் பின்னர் எதுவும் பேசாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய கேள்விகள் வேலையைப் பற்றி கேட்டாள். என்னைப் பற்றி, என் குடும்பம் பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை.

உணவு கொண்டு வந்து இருந்தாள். மத்தியானம் நேராக உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றாள். வழக்கம்போல வெளியில் உள்ள கடையில்  வாங்கிக்கொண்டு உணவு உண்ணும் இடம் வந்து அமர்ந்தேன். அங்கு சாப்பிட்டுக் கொண்டு  இருக்கும் பதினைந்து நபர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். அலுவலகத்தில் மொத்தம் 19 பேர்தான். பெரிய அலுவலகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த அலுவலகம் ஆரம்பித்தே ஐந்து வருடங்கள்தான் ஆகிறது. அங்கு இருந்த அனைவருக்குமே கல்யாணம் ஆகி இருந்தது. கழுத்தில் தாலி இல்லை இருந்தாலும் இந்த தீபா பற்றிதான் தெரியவில்லை. சிலர் தம்பதி சமேதரராக வேறு வேலையில் சேர்ந்து இருந்தார்கள். சில காதல் திருமணம், சில பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். அவர்களை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தார்கள்.

''தீபக், உனக்குத் துணைக்கு இதோ தீபா. இன்னும் கல்யாணம் ஆகலை. யாருக்கு முதலில் கல்யாணம் ஆகுதுனுப் பார்ப்போம்''

இந்த தர்மலிங்கத்திற்கு இதுவே வேலை.

''தீபாவுக்குத்தான் முதலில் ஆகும், அவங்கதான் பொண்ணு''

இது சுந்தரமூர்த்தியின் அடுத்த யூகம்.

''என்னோட கல்யாணம் காதல் கல்யாணம் தான். நமக்குப்  பிடிச்ச நம்மைப் பிடிச்சவர் தான் வாழ்க்கைத் துணை அப்போதான் நம்மளப்  பெத்தவங்கள  சந்தோசமா வைச்சிக்கிற முடியும்''

தீபாவின் இந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் சற்று ஆச்சரியத்துடன் பாராட்ட வைத்தன.

''சூப்பர் தீபா, உங்க மனம் போல பையன் அமைய வாழ்த்துக்கள்''

தர்மலிங்கமும், சுந்தரமூர்த்தியும் ஆசிர்வாதம் செய்தார்கள். அவர்கள்தான் இந்த அலுவலகம் ஆரம்பிக்கும்போது சேர்ந்த மூத்த பணியாளர்கள். மேலதிகாரிக்கு நண்பர்கள் என்று கூட சொல்லிக்கொள்வார்கள்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. இத்தனைக்கும் தீபாவின் கடின உழைப்புதான் காரணம் என்று சொல்ல வேண்டும். தீபாவை மிகவும் பிடித்து இருந்தது. தீபாவின் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மேலதிகாரி என்னை அழைத்து வேறொரு புராஜக்ட் கொடுத்து தீபாவுடன் சேர்ந்து செய்யுமாறு கூறினார். சந்தோசமாக சம்மதம் சொல்லிவிட்டு வந்தேன்.

''அடுத்த புராஜக்ட் கூட நாம ரெண்டு பேரும்  சேர்ந்து பண்ணனும்னு சொல்லி இருக்கார்''

''சக்ஸஸ் கொடுத்தாச்சு, இனிமே எல்லா புராஜக்ட் நாம சேர்ந்துதான் பண்ண வேண்டி இருக்கும்''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

''என்ன கேட்டீங்க''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

அறையில் பெரும் நிசப்தம் நிலவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் தீபா பேசினாள்.

''தீபக், பெண்கள் தேவதைகள் அல்ல, ஆணின் தேவைகள் அப்படினு நினைக்கிற கிறுக்கர்கள் இருக்கிற இந்த உலகத்தில நீங்க  நிறையவே வித்தியாசமாத்தான் இருந்தீங்க . இந்த ஒரு வருச  பழக்கத்தில உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். உங்களோட அம்மா, அப்பா, அக்கா அப்படினு உங்களோட குடும்பம் உங்களுக்கு எத்தனைப் பெரிசுன்னு புரிய எனக்கு நிறைய நாட்கள் ஆகலை. என்னோட குடும்பத்தைப் பத்தி உங்ககிட்ட  நான் எதுவும் சொன்னது இல்லை.

என்னோட அண்ணன் காதல் கல்யாணம்தான். அண்ணியோட அம்மா அப்பா கல்யாணத்தை ஏத்துக்கலை. எங்க குடும்பம் ஏழைக்குடும்பம் தான் ஒரு காரணம். ஆனா வீட்டுக்கு வந்த அண்ணி ஒரே மாசத்துல என்னை, எங்க அம்மா, அப்பாவை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. நாங்க எந்த பிரச்சினையும் பண்ணாம வேறு வீட்டிற்கு வாடகைக்கு வந்துட்டோம். ஒரு ஆறு மாசம் கழிச்சி அண்ணி தன்னோட தப்பை உணர்ந்து எங்களை கூப்பிட்டாங்க. ஆனா நாங்க போகலை. வாரம் ஒருதரம் அவங்களைப்  பார்க்கிறதோட சரி. அவங்க அம்மா அப்பா கூட அவங்களை மன்னிச்சிட்டு ஏத்துக்கிட்டாங்க. இதுவே என் அண்ணன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாமலோ அல்லது அந்த பொண்ணு என் அண்ணனை கல்யாணம் பண்ணாமலோ போயிருந்தா இந்த காதல் எல்லாம் பண்ணினது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆகி இருக்காது.

காதல்னு சுத்திக்கிட்டு இருக்கிறதைவிட இப்படி எதுவுமே காதல் அது இதுனு சொல்லாம தனக்குப் பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறது கூட நல்லா இருக்கு.

இந்த புராஜக்ட் உங்களோட சிந்தனை, முழு உழைப்பு. ஆனா நான்தான் எல்லாம்  பண்ணின மாதிரி ஒரு தோற்றம் நீங்க  உண்டாக்கின போதே உங்களோட மனசில நான் இருக்கேனு தெரிஞ்சிக்கிட்டேன். ஐ லவ் யூனு சொல்ல உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறப் போகுது.

காதல்னு சொல்லிட்டு அதை கேவலப்படுத்தறதை விட கல்யாணம்னு சொல்லி ஒரு உறவுக்குள்ள உரிமையோட போறது எனக்கு உங்களைப் பார்த்தபிறகுதான், பழகின பிறகுதான் தெரிஞ்சது. முதமுத காதல் கல்யாணம்தான் பண்ணுவேன்னு சொன்னதை கூட மாத்திக்கிட்டேன். ம்ம் நிச்சயம் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன், நிறைய காதல் இருக்கு''

நான், அப்பா, அம்மா, அக்கா, மாமா, அக்காவின் குட்டிப்பையன் என தீபாவின் வீட்டிற்குச் சென்றோம்.  தீபாவின் அப்பா மிகவும் தயங்கினார். தீபாவின் அம்மா கூட எங்களால நிறைய செய்ய முடியாது. கல்யாணம் ஆனப்பறம் பிரச்சினை எதுவும் இதனால வந்துரக்கூடாது என்று  சொன்னபோது என் உறுதியோடு என் அம்மாவும் அப்பாவும் அப்படியொரு நிலை வராது என உறுதி அளித்தார்கள். அப்பா அதோடு நில்லாமல் மேலும் தொடர்ந்தார்.

''கல்யாணம் பண்ணுறது பெரிசு இல்லை, இந்த காலத்தில கடைசி வரைக்கும் சேர்ந்து சந்தோசமா வாழுறதுதான் குதிரைக்கொம்பா இருக்கு. கல்யாணம் ஆனபிறகு அவங்களை நாம தொந்தரவு பண்ணக்கூடாதுனு நினைக்கிறாங்க''

''அவங்க விருப்பம் போல இருக்கட்டும்''

கல்யாணத்திற்கான ஏற்பாடு எல்லாம் செய்து தேதி குறித்தாகிவிட்டது.

''தீபக், நம்மளோட என் அம்மா, அப்பா சேர்ந்து உங்க வீட்டுல உங்க அம்மா அப்பாவோட வந்து இருக்கட்டுமா?''

இப்போதைய வீட்டினை விட ஒரு பெரிய வீடு ஒன்று பார்க்க தீபாவுடன் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.












Friday 22 July 2016

கபாலி - ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி

எப்போதாவதுதான் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுவும் ரஜினி படம் என்றால் எப்போதாவது வரும் என்பதால் எளிதாக தியேட்டருக்குச் சென்றுப் பார்க்கலாம். கபாலி திரைப்படத்தை பார்க்க இதுவரை சென்று இராத ஒரு தியேட்டரை தேர்வு செய்து முன்பதிவு பண்ணியாகிவிட்டது. அதிக விலை எல்லாம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலை தான்.

அரைமணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்றால் அங்கே கூட்டமே இல்லை. நிம்மதியாக இருந்தது. கூட்டம் என்றாலே ஒருவித அலர்ஜி போலாகிவிட்டது. கூட்டம் என்பது ஒரு ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. கூட்டம் என வந்துவிட்டால் மக்கள் செயல்பாடுகள் மாறிவிடுகிறது.

உண்பதற்கு அருந்துவதற்கு என வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் முன்னர் தியேட்டருக்குள் சென்றால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தார்கள். மகிழ்ச்சி. பின்னர் ஒவ்வொருவராக வரத்தொடங்கி கணிசமான கூட்டம் சேர்ந்துவிட்டது. நல்லவேளை பெரும் விசில் அடித்து ஆரவாரம் செய்யும் நபர்கள் இல்லாது இருந்தனர். ஒரு புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது ஒரு சினிமா பார்க்கும் போதோ தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. இருப்பினும் விசில் அடிக்கும் மிகச் சிறிய  கூட்டம் இருந்தது.

ரஜினி. என்னைப் பொருத்தவரை ஒரு மந்திரச்சொல். எவர் என்ன சொன்னாலும் எத்தனை பேசினாலும் அது குறித்து கவலைப்படுவது இல்லை. சில பாடல்கள், விளம்பரங்கள் என முடிந்து படம் தொடங்குகிறது. உள்ளுக்குள் ஒருவித உணர்வு. ரஜினிக்கான உணர்வு அது. வார்த்தைகளில் சொல்ல இயலாது. ரஜினியின் அறிமுக காட்சி என ஆரம்பிக்கும் முன்னர் ஒரு கதைச்சுருக்கம் சொல்லப்படுகிறது. படிப்பறிவு நிறைந்த சமூகம் என முடிவு கட்டிவிட்டார்கள். மலேசியா. மலேய மொழி.

வன்முறை காட்சிகளுடன் தொடங்குகிறது. படத்தோடு நம்மை ஒன்றிவிடும்படியாக அடுத்தடுத்து என காட்சி நகர்கிறது. ஒரு மெல்லிய காதல் இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு இழப்பினைத் தாங்க இயலாமல் தவிக்கும் இரக்க மனது. ஒரு கட்டத்தில் ரஜினி படமா என நினைக்கும் அளவுக்கு காட்சிகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. ஒரு படைப்பாளியின் பார்வையில் அந்த படைப்பு வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். அப்பா என அழைத்து மனம் உருக வைக்கும் காட்சிகள். எதிர்பாராத திருப்பங்கள் என மிகவும் அருமையாக முதல் பகுதி நகர்கிறது. படைப்பாளி என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளும் போது காட்சிகள் மிகவும் அழகாகின்றன. சலிப்பின்றி படம் நகர்கிறது. துரோகம், அடிமைத்தனத்தில் இருந்து மீளல் என பல விசயங்கள். தமிழ்நேசன் நல்ல பெயர்.

இடைவேளைக்குப் பின்னர் அதே வேகத்தில் நகரும் படம் காதலை மீண்டும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது. அன்பில் உலக உயிர்கள் வாழும். ஏதேனும் நடக்குமோ என நினைக்கும்படியான காட்சிகள். இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் இயக்கம் என களைகட்டிவிட்டது படம். பாடல்கள் கதையோட்டத்தோடு இணைகின்றது இடைஞ்சலாகவே இல்லை.

கடைசியாக வழக்கமான தமிழ் சினிமாவாக மாறிவிடுகிறது. எப்போதும் போல ஹீரோ வெற்றி பெறுகிறார். ஆனால் எழுதப்பட்ட வசனங்களை உற்று கவனித்தால் தமிழ்நாட்டின் சாபக்கேடு உலகின் சாபக்கேடு புரியும். கடைசியில் அப்படியே படமும் முடிகிறது ஏதோ ஒரு வெறுமை ஒட்டிக்கொண்டது போல இருந்தது. இனியும் இந்த படம் தொடராதா எனும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்த ஒரு படத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என  விரும்பியது இல்லை. ஏனோ கபாலி அப்படியொரு எண்ணத்தை ரஜினிக்காகவே விதைத்துச் செல்கிறது. ஆங்கில மொழி  சரளமாக படத்தில் ஆங்காங்கே வருகிறது. சரி சரி எல்லாம் படித்தவர்கள்தான். ஆனால் முட்டாள்கள் போலவே செயல்படுவார்கள் என முடிகிறது படம். உலகின் சாபக்கேடு அது.

நல்ல நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படைப்பு. வித்தியாசமான ரஜினி. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கபாலி ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி. 

Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



Wednesday 15 June 2016

இறந்தது போல இருந்தது இல்லை இறந்தது

மாறா மரபு - முன்னுரை


ஒருவேளை இப்போதே இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வந்து இருக்கத் தேவை இல்லைதான்.

இறப்பு பற்றிய நினைப்பு  ஒன்று வேதனைபடுபவனுக்கும்  மற்றொன்று சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பவனுக்கும் வந்து சேர்கிறது.

இவ்வுலகில் நிறைய விசித்திரங்கள் நடைபெறுவது உண்டு. பொருள் பணம் என எதுவும் இல்லாதவன் கூட இறப்பது குறித்து யோசிப்பது இல்லை. எப்படியேனும் வாழ்நாளை கழித்து விட வேண்டும் எனும் அக்கறை மட்டுமே இருக்கும். பொருள் பணம் இருந்தும் இறப்பது குறித்த சிந்தனை கொண்டவர்களும்  உண்டு.

இந்த உலகில் மரணத்தை வென்று விடும் ஒரு அரிய  வாய்ப்பு கிட்டிவிடும் எனில் அதைவிட மிகச் சிறந்த ஒரு விஷயம் இருக்கவே இயலாது. ஆனால் எத்தனை பேர் இந்த உலகில் வாழ வேண்டும் என பிரியம் கொள்கிறார்கள்.

இன்னும் அவன் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். தான் பெற்ற பெயர், படிப்பு, நட்பு, உறவு என என்னவென்னவோ அவனது மனதில் வந்து நிழலாடியது. அவனுக்கு இன்னமும் திருமணம் ஆகி இருக்கவில்லை.

இத்தனையும் விட்டுவிட்டு இறந்து போய்விட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையுடன் அவனது பொழுது கழிந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அவனது யோசனை மரபணுக்கள் மீது உட்கார்ந்து கொண்டது. இந்த மரபணுக்களில் மாற்றம் செய்துவிட்டால் மரணத்தை வென்றுவிடலாம் எனும் ஒரு யோசனை. அதன்படி அவனது சிந்தனை இன்ட்ரான் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இன்ட்ரான் எக்சான் எல்லாம் மரபியலில் ஒரு முக்கிய கூறு, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஆனால் அவனது எண்ணம் இரண்டுமே வெவ்வேறு என்று எண்ணத் தோனியது. அவனைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. இன்ட்ரான்கள் இல்லாது போனால் மனிதன் நோயின்றி வாழ இயலும் என கணித்து வைத்தான்.

பிறவா வரம் வேண்டும் என பாடி வைத்தவர்கள் பலர். இறவா நிலை வேண்டும் என துடிதுடித்தவன் அவன். அவனது சிந்தனையும் செயலும் அதைச் சுற்றியே இருந்தது.

எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதுவெல்லாம் கற்பனை ஆகிறது. எப்போது கற்பனை சாத்தியம் ஆகிறதோ அப்போது அது சாதனை ஆகிறது. அவனது கற்பனை சாத்தியமா என அவனால் கூட சொல்ல இயலாது. ஆனால் சாதிக்கப்போவதாகவே அவன் எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவன் இப்படித்தான் பிரபலமாக சொல்லிக் கொண்டான். உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என்  வாழ்வின் இலட்சியம். கேட்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

மனிதன் நோயினால் மட்டுமே மரணம் அடைவது இல்லை என அவன் சிந்திக்க மறந்து இருந்தான்.

எத்தனையோ உயிரினங்கள் தோன்றியும், அழிந்தும் போன இந்த பூமியில் இறந்தது போல இருந்தது இல்லை... இறந்தது. 


நன்றி

அன்புடன்
வெ. இராதாகிருஷ்ணன்
இலண்டன்
  

Saturday 16 April 2016

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு -9

பகுதி 8   பகுதி 7 பகுதி 6  பகுதி 5 பகுதி 4  பகுதி 3 பகுதி 2 பகுதி 1

9. 

ரகுராமன் தான் சொன்ன நாளுக்கு முன்னதாகவே கல்லூரியில் இருந்து தோணுகாலுக்குச் சென்றான். அவனைப் பார்த்த அழபா, பழனிச்சாமி சுப்பிரமணியன் என எல்லோரும் சந்தோசம் கொண்டார்கள். எத்தனை நாள் இருப்ப என்றவர்களுக்கு சனிக்கிழமை காலையில் கிளம்ப இருப்பதாக கூறினான். அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

ரகுராமன் முதலில் தனது ஊரில் உள்ள அனைவரையும் தனது பக்கம் திருப்ப வேண்டும் என ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஊரின் மந்தையில் அனைவரையும் வெள்ளிக்கிழமை இரவு வருமாறு கூறினான். பெயர், சின்னம், கொடி  எல்லாம் தனது மனதில் பதித்துக் கொண்டு தன்னோடு எடுத்துக் கொண்டான். ஆனால் எவருமே அவனது பேச்சை கேட்டது போலத்  தெரியவில்லை. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஊரில் இருந்தவர்கள் சத்தம் போட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ரகுராமன் சின்ன கூட்டமாவது வர வேண்டும் எனத் தொடர்ந்தான். ரகுராமனுடன் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள். 

அன்று இரவு கொஞ்ச நபர்கள் வந்து மந்தையில் அமர்ந்தார்கள். ரகுராமனின் வீட்டில் அனைவருமே வந்துவிட்டார்கள். ரகுராமன் ஊருக்குப் பொதுவான ஒலிப்பெருக்கி மூலம் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்கள் வந்து சேர்ந்தார்கள். 

''நான் மக்கள் ஒற்றுமை இயக்கம் அப்படின்னு கட்சியை இந்த இடத்தில் வைச்சி நான் ஆரம்பிக்கிறேன், அதுக்கு உங்களுடைய ஆதரவுதான் வேண்டும். கட்சியோட சின்னம் இதயம். இதை எப்படியும் நடத்திக்காட்டுவேன். நம்ம ஊருல இருக்க எல்லாரும் இனிமே இந்த மக்கள் ஒற்றுமை இயக்கத்தோட உறுப்பினராக மாறனும்''

கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். 

''கால காலமா நாங்க ஆதரிக்கிற கட்சியை விட்டுட்டு வானு சொன்னா நாங்க வர முடியுமா? அதுவும் நீ சின்னப்பையன் வேற உனக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்னு கட்சி ஆரம்பிக்கிற. பேசாம எங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ணாத''

ரகுராமன் அவரை அமரச் சொன்னான். அவரும் மறு பேச்சு பேசாமல்  அமர்ந்தான்.

''நீங்க வேற வேற கட்சி உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனா நான் நம்ம ஊருக்காரன் ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்ப நம்ம ஊரே என்னை ஏத்துக்கலைன்னா அப்புறம் எப்படி மத்த ஊர்க்காரங்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறது. நம்ம ஊர்த்தலைவர் ராமசுப்பு ஐயா என்னோட கட்சியை ஆதரிக்கனும். அப்படி நீங்க ஆதரிக்காட்டியும் பரவாயில்லை இதுதான் கட்சி, இதுதான் சின்னம். கட்சிக்கொடி ஒரு வெள்ளை நிற பின்னணியில் ஒரு சாம்பல் நிற புறா''

ராமசுப்பு எழுந்தார். 

''நீ கட்சி ஆரம்பி ஆதரவு கேளு ஆனா ஆதரிக்கிறதா, வேணாமானு அவங்க அவங்க முடிவு செய்யட்டும், என்னோட கட்சியை விட்டுட்டு நான் மாறமாட்டேன். நான் கிளம்பறேன்''

ஊர்த் தலைவர் ராமசுப்பு கிளம்பிச் சென்றதும் அவரோடு பலரும் கிளம்பிப் போனார்கள். இன்னும் பலர் அமர்ந்தபடியே இருந்தார்கள். 

''அடுத்த வருசத் தேர்தலுக்குள்ள நம்ம கட்சியை பெரிசாக்கி எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கணும். எந்த கட்சிகாரங்களையும் நாம திட்டிப் பேசக்கூடாது. நீங்க எல்லோரும் வந்து இந்த கட்சி பெயர், சின்னம், கொடி இதை எல்லாம் ஆசிர்வதிக்கணும்''

பலர் எழுந்து வந்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ரகுராமனின் அம்மா, அப்பாவும் வந்தார்கள். 

''சொல்லச் சொல்ல கேட்க மாட்ற, ஆனா முடிவு பண்ணிட்ட அதுக்கான வழியைப் பாரு''

ரகுராமனின் அப்பாவின் வார்த்தை அவனுக்குள் பெரும் பலம் ஒன்றை உருவாக்கியது. ரகுராமன் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தான். 

''ஒவ்வொரு சனிக்கிழமை இங்கே வருவேன். நீங்க என்ன பண்ணனும்னா நம்ம ஊரை சுத்தமா வைச்சிருக்கணும், ஒருத்தருக்கு உதவினா ஓடோடிப் போய்  செய்யணும். கிரிக்கெட் விளையாடறது எல்லாம் மறந்துருங்க. காசு விசயத்தில் சரியா இருங்க. கல்குறிச்சி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி அப்படின்னு முதலில் போவோம்''

அழகர்பாண்டி குறுக்கிட்டான். 

''அருப்புக்கோட்டை வேணாமா''

''போவோம், புதிய கட்சி உதயம்னு ஒரு பெரிய விளம்பரம் தருவோம்''

''பணம் செலவாகுமே, நீ வேலைக்குப் போனா பரவாயில்லை, படிக்க வேற செய்ற''

''விவசாய நிலத்தில வர பணம் கொஞ்சம்  ஒதுக்குவோம், நீங்க எல்லாம் வேலை செய்ற பணம் இதுல போடுவோம். நமக்கு ஆதரவு தர பெரியவங்க எல்லாம் கட்சி உறுப்பினர்களாக மாத்துவோம்''

எல்லாம் விபரமாக சொல்லி முடிக்க இரவு பத்து ஆனது. ரகுராமன் வீட்டிற்குச் சென்றான். 

''விளையாட்டுத்தனமில்லை, இப்பவே உனக்கு எதிரிங்க தயாராகி இருப்பங்க''

அப்பாவின் எச்சரிக்கை மனதில் ஓடியது. எவரைப் பற்றியும் குறை சொல்லாமல் மக்களுக்கு நிறை செய்வதே பணி  என்று இருந்தால் எதற்கு எதிரிகள் உருவாகப் போகிறார்கள் என யோசித்தான் ரகுராமன். 

ஊரில் இருந்தே தொடங்க வேண்டும் எனும் தனது எண்ணத்தால் தன்னுடன் சண்முகப்பிரியாவை அழைத்து வரவில்லை. நாளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என உறங்க ஆரம்பித்தான். 

மக்களுக்காக உழைக்கும் நோக்கம் உடைய கட்சிகள் தனித்தனியாக இருப்பதன் அவசியம் என்ன, கொள்கைகள் அற்ற கட்சிகள், கொள்கைகள் வெவ்வேறான கட்சிகள் கூட்டணி என அமைத்துக் கொள்வதன் அவசியம் என்ன? மக்கள் எப்போதும் தமது சிந்தனைகளை தமக்குள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். 

(தொடரும்) 

Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)