Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)


Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)




Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்?