Saturday 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)


Friday 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)