Monday 8 December 2014

நிலத்திற்கடியில் வாயுத்தொல்லை - மீத்தேன்

பூமி உருவானபோது பூமியில் ஹைட்ரஜனும் ஹீலியமும், மீத்தேனும், அம்மோனியாவும், நீராவியும் கொஞ்சம் நைட்ரஜனும், கரியமிலவாயும் நிறைந்தே இருந்தன. சிறிது காலங்களில் ஹைட்ரஜனும், ஹீலியமும் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து நிறைய வெளியேறிப் போனது.

விண்வெளி கற்கள், கோமெட்கள் எல்லாம் தண்ணீர், அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு இன்னும் பிற வாயுக்களை பூமியில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்தன. கொதிநிலையில் இருந்த பூமி சற்று குளிர்ச்சி அடையத் தொடங்கிய காலம் அது.

மீத்தேன்  நீராவியுடன் இணைந்து வேதிவினை புரிந்து வளிமண்டலத்தில் நிறைய கரியமில வாயுவை, ஹைட்ரஜனை உண்டாக்கியது. பூமியில் அப்போதெல்லாம் நிறைய எரிமலைக் குழம்புகள் வெடித்துச் சிதறும். அப்படி வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்புகளாலும் கரியமில வாயு, பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் ஆனது. இதெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட நான்கு பில்லியன் ஆண்டுகள் முன்னர்.

நாட்கள் ஆக ஆக நீராவி குளிர்ந்து நீர் ஆனது. நிறைய மழை பெய்து கடல் உருவானது. அப்படி உருவான கடலில் இந்த அம்மோனியாவும், கரியமில வாயுவும் மூழ்கி புதிய மூலக்கூறுகள் உருவாகின. கிட்டத்தட்ட மூன்றரை பில்லியன் ஆண்டுகள் முன்னர் பாக்டீரியாக்கள் உருவானதாக சொல்லப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் வளிமண்டலத்தில் மீத்தேன், அம்மோனியா கரியமிலவாயு எல்லாம் கணிசமான அளவில் குறைந்து போயின. இந்த பாக்டீரியக்களில் சில கரியமில வாயுவையும் ஹைட்ரஜனையும்  இணைத்து மீத்தேன் மற்றும் தண்ணீர் உண்டாக்கியது. இந்த வேதிவினை இந்த பூமியில் முன்னரே வேறு விதமாக நடந்தது என்றே குறிப்பிட்டு இருந்தோம். எந்த மீத்தேன் அதிக வெப்பத்தினால் நீராவியுடன் இணைந்து கரியமில வாயு, ஹைட்ரஜன் உண்டு பண்ணியதோ அதே மீத்தேனை இந்த பாக்டீரியாக்கள் உண்டு பண்ணிக் கொண்டு இருந்தன. அப்போது ஆக்சிஜன் குறைவாக இருந்த காலம்.

பின்னர்  நாட்கள் நகர நகர நைட்ரஜன் வளிமண்டலத்தை ஆக்கிரமித்து கொண்டது. அதற்குப் பின்னர் பாக்டீரியா, பாசி, தாவரங்கள் எல்லாம் கரியமில வாயு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடத் தொடங்கிய காலம் வந்ததும் கரியமில வாயு நமது வளிமண்டலத்தில் முற்றிலும் குறைந்து போனது. ஆக்சிஜன் நமது வளிமண்டலத்தில் நிறையத் தொடங்கியது. அதிக குளிர்ச்சி ஏற்பட கொஞ்ச நஞ்சமிருந்த மீத்தேன் எல்லாம் வளிமண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டு பனிக்கட்டி வடிவத்தில் மீத்தேன் உருமாறிக் கொண்டது.

இந்த பூமியில் ஆக்சிஜன் 30 சதவிகிதம் இருந்த காலம் உண்டு. அதற்குப் பின்னர் ஒரு மோசமான விளைவுகளால் ஆக்சிஜன் 12 சதவிகிதமாக குறைந்து கரியமில வாயு அதிகரிக்க நிறைய உயிரினங்கள் இறந்து போயின. பின்னர் இந்த தாவரங்களின் உதவியால் ஆக்சிஜன் தற்போது 21 சதவிகிதமும், கரியமில வாயு 0.04 சதவிகிதமும் நைட்ரஜன் 78 சதவிகிதமும் மற்ற வாயுக்கள் ஒரு சதவிகிதமும் உள்ளது. நாமும் சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த மீத்தேன், கரியமில வாயு எல்லாம் எங்கே போயின? எவரேனும் வெளியில் இருந்து வந்து திருடிப் போனார்களா என்றால் அதுதான் இல்லை. எல்லாமே இந்த பூமியில் பதுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த பூமி பாறைகளால் ஆனது. அந்த பாறைகளுக்குள்  இந்த வாயுக்கள் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. நிலக்கரி வடிவில் இந்த வாயுக்கள் ஒளிந்து கொண்டன. மனிதனுக்கு நிறைய அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கத் தொடங்கியதுதான் பெரிய பிரச்சினை.

நிலக்கரியாக மாறி இருந்த இவைகள் எல்லாம் நாம் இந்த நிலக்கரியை எரிக்கத் தொடங்கியதும் வெளியேறத் தொடங்கின. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு பெருமளவில் வெளி வந்தன. நமது தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்த வாயுக்களின் அளவை நமது வளிமண்டலத்தில் நிரப்பிக் கொண்டு வருகிறோம்.

இந்த பூமியின் வெப்பநிலையை மாற்றக்கூடிய வாயுக்கள் என கரியமில வாயுவும், மீத்தேனும் என குறிப்பில் ஏற்றி வைத்துவிட்டார்கள். இந்த மீத்தேன் அதிலும் வெப்பநிலையை 23 மடங்கு கரியமில வாயுவை விட அதிகரிக்கும் சக்தி கொண்டது என கண்டறிந்து உள்ளார்கள்.

மீத்தேன்? கொடுமையானதா? நச்சு வாயு என்றெல்லாம் எவரும் இதனை குறிப்பிடவில்லை. ஆனால் நச்சுத்தன்மை வேறு வழியில் உண்டு பண்ணக்கூடியது. மீத்தேன் ஹைட்ரோகார்பன் வகையறாவை சேர்ந்தது. நிறைய சேர்க்கப்பட்ட கழிவுகள், அரிசி உபயோகிக்கும் நிலங்கள், மாட்டு சாணங்கள் என இந்த மீத்தேன் நீக்கமற நிறைந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற வகையில் மீத்தேன் ஒன்று. எப்படி பெட்ரோல், டீசல் எரிவாயுவாக பயன்படுகிறதோ அதைப்போல இந்த மீத்தேன் எரிவாயுவாக பயன்படக்கூடியது. எரிக்கும் போது பெட்ரோல், டீசலை விட இந்த மீத்தேன் அதிக அளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் சேர்ப்பதில்லைதான். ஆனால் இதுவெல்லாம் போக பாறைகளுக்குள் இந்த மீத்தேன் பதுங்கி இருக்கிறது. நிலக்கரிச்  சுரங்கத்தின் பெரும் சவால் இந்த மீத்தேன். உலகில் இந்த மீத்தேன் வாயுவை வெளியேற்றியே பின்னரே நிலக்கரி எடுப்பது வழக்கம்.

இந்த மீத்தேனால் வேறு என்னதான் பிரச்சினை?

1. இந்த மீத்தேன் வெடித்து சிதற வைக்கும் வல்லமை கொண்டது. எளிதில் தீப்பற்றக் கூடியது.
2. இந்த மீத்தேன் தண்ணீரில் கலந்து கலப்படம் உண்டு பண்ணினால் மரணத்தை கூட உண்டுபண்ணும்.
3. இந்த மீத்தேன் அதிக அளவில் வெளியேறினால் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் விபரீத விளைவுகள்  ஏற்படும். மனிதர்களுக்கு தலைவலி மயக்கம் போன்றவை ஏற்படும்.
4. இந்த மீத்தேன் பூமியை வெப்பம் அடைய செய்யும், காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.
5.இந்த மீத்தேன் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கேடு தரக்கூடியது.
6.இந்த மீத்தேன் கார்பனை உள்ளே வெளியே என மாற்றும் வல்லமை கொண்டதால் தாவரங்களுக்கும், தாவரங்கள் வளரும் நிலங்களுக்கும் பிரச்சினை உண்டுபண்ணக் கூடியது.

மீத்தேன் ஆக்சிஜனை மெல்ல மெல்ல மென்று விழுங்கினால் என்ன ஆகும் என ஆக்சிஜன் சுவாசித்து வாழும் நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இப்போது ஒரு விவசாய நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அங்கே நிலத்திற்கு பல அடி தூரத்தில் கிரானைட் கற்கள் இருக்கின்றன. எவருக்கும் இந்த கிரானைட் கற்கள் விபரம் தெரியாது. ஒருமுறை கிணறு வெட்ட அந்த நிலத்தை தோண்ட உள்ளே கிரானைட் கல் இருப்பது தெரிய வருகிறது என வைத்துக் கொள்வோம். விவசாய நிலம் வைத்திருப்பவர் என்ன செய்வார்? அந்த நிலத்தை எல்லாம் தோண்டி கிரானைட் கல் எடுக்கவே முற்படுவார். ஆக அங்கே விவசாய நிலம் இனி கிரானைட் பூமியாக மாறும். அதோடு சுற்றுப்புறம் எல்லாம் மாசுதன்மை அடையும்.

இதே பிரச்சினைதான் இப்போது தமிழகத்தில் பெருமளவில் மீத்தேன் பிரச்சினை குறித்து பேசப்பட்டு வருகிறது. மீத்தேன் மூலம் எரிவாயு நமக்கு கிடைக்கும். எவர் இல்லை என்று சொன்னது. ஆனால் அப்படி மீத்தேன் வாயுவை எடுக்கும் இடமானது எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை வேண்டாமா? என்பதே மக்களின் உள்ளக் குமுறல்.

எதற்கு எடுத்தாலும் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் மக்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்றே அரசு கேட்கிறது. முதலில் பாதுகாப்பு அவசியம். கல்குவாரிகள், மணல் லாரிகள் என பூமியை சுரண்டித் திண்ணும்  தொழில் முதலைகளின் வயிற்றுப் பசிக்கு ஏழைகளின் பாமர மக்களின் வயிற்றில் வயலில் அடிக்கத்தான் வேண்டுமா? இந்த தொழில் முதலைகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பரந்த சாலைகள் வேண்டும் என பல விவசாய நிலங்கள் பறிபோயின. அதாவது ஒரு எல்கையோடு நின்று போனது. எவரும் நிலத்தைத் தோண்டி சாலை போடவில்லை.கட்டிடங்கள் எழுப்பி இன்னும் பல விவசாய நிலங்கள் பறிபோயின. நிலக்கரி சுரங்கங்களுக்கென இன்னும் பல நிலங்கள் பறிபோயின.
இப்போது இந்த மீத்தேன் வாயு.

மீத்தேன் வாயுவை எடுக்கும்போது 1 சதவிகித மீத்தேன் கூட வளிமண்டலத்தில் கசிந்தால் அதன் விளைவு விபரீதம் என்கிறார்கள். மீத்தேன் வளிமண்டலத்தில் கசிவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பல நாடுகள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மீத்தேன் இருக்கிறதா என ஒரு நாடு அதுவும் விளைநிலங்கள் அருகில் திட்டம் தீட்டுவது என்னிடம் தங்க ஊசி இருக்கிறது, கண்ணில் குத்திக் கொள்கிறேன், அது தங்கம் கண்ணை ஒன்றும் செய்யாது என சொல்வது போல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்னர் அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கிடையாது. பெரிய அளவில் பேசி முடிவு எடுக்க வேண்டியது. அதன் பின்னர் மக்களை மிரட்டி அதை சாதிக்க வேண்டியது. கூடங்குளம் அணு உற்பத்தி முதற்கொண்டு மக்களின் பலவீனத்தினை தனக்கு பலமாக அரசு பயன்படுத்தி வருகிறது.

பூமிக்குள் எப்படி செய்வார்கள், என்ன செய்வார்கள் என்பதெல்லாம் பாமர மக்களுக்கு புரியாது. புரியவும் வேண்டாம். போபாலில் விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் அதிகம். ஈவு இரக்கமற்ற தன்மையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள். ஒரு பாலத்தை ஒழுங்காக கட்டத் தெரியாத பொறியியல் வல்லுநர்கள்.

மக்கள் போராடுவார்கள். பின்னர் அடங்கிப் போய்விடுவார்கள். நமது திட்டம் செயல்படும் எனவும் பணம் தந்தே அடிமைபடுத்தி விடலாம் எனவும் எண்ணம் கொண்டு இருப்போர் பலர்.

Natural gas comprises 95% of methane என நமது வாயை மூடிவிடவே எல்லா முயற்சிகளும் நடக்கும். இந்த பூமி எல்லா பிரச்சினைகளையும் சமாளித்தே வந்து இருக்கிறது. காவேரியும் சமாளிக்கும், சமாளிக்கட்டும்.



Friday 5 December 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 23

பகுதி 22  இங்கே

அன்று இரவும் கோரனைத்  தேடி சென்றேன். அவனும் அவனது அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

''இனி அவனை ஒன்னும் பண்ண வேண்டாம், ஊரை விட்டே ஓடிட்டான்ல அது போதும்''

''ம்ம்''

''நாளைக்கு காலேஜுக்குப் போ''

''முருகேசு இருக்கான்''

''அவன் கிடக்கான், அவன் கிட்ட எதுவும் சொல்லிக்கிற வேணாம்''

''ம்ம்''

இனி அங்கே நிற்பதில்லை என வீடு நோக்கி நடந்தேன். கோரன் எதுக்கு ஆசிரியரை கொல்ல  முயற்சிக்க வேண்டும், ஆசிரியர் எதற்கு ஊரை விட்டே ஓட வேண்டும் எனும் கேள்விகளுடன் வீடு சேர்ந்தேன்.

''காயூ, வாத்தியாருக்கும் கோரன் குடும்பத்திற்கும் ஏதோ  தகராறு இருக்கு போல''

''அதுக்கு என்ன இப்போ, நீ கோரனை  பத்தி பேசறது நிறுத்து, நான் படிக்கணும்''

''படி, உன்னை யாரு பிடிச்சிட்டு இருக்கா''

''ஏன்  பிடிச்சித்தான் பாரேன்''

''கத்துவ, அதானே''

''பிடிக்கிறதுக்கு எல்லாம் யாரும் கத்தமாட்டாங்க''

''உன் அக்காவைப் பார்க்க போலாமா''

''எதுக்கு இப்ப பேச்சை மாத்துற, உனக்கு அவளைப் பார்க்க ஆசை. அப்படித்தானே''

''அவளை எதுக்குப் பார்க்கணும், எனக்கு உன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை''

''சும்மா சொல்லாதே''

''நிசமாவே இல்லை, உன் அக்காவைப் பார்த்துட்டு வரலாம்னு தான் சொன்னேன்''

''சரி போலாம்''

காயத்ரிக்கு கோரன் பற்றிய பேச்சு பிடிக்காமலே இருந்தது. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனோம். கோரன் வந்து இருந்தான்.

''கோரன் உன்கிட்ட பேசணும்''

''தேவை இல்லை''

விறுவிறுவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்குச்  சென்றான். சிறிது நேரம் அங்கிருந்தவன் வெளியில் வந்தான்.

''கோரன் நில்லு''

''உயிரோட நீ இருக்கணுமா  வேணாமா?''

''என்ன ஆச்சு உனக்கு''

''என்னோட விசயத்தில தலையிடாதே''

''நீ எதுக்கு இப்படி நடந்துக்கிற''

கத்தியை எடுத்துக் காட்டினான். நான் மிரண்டு போனேன்.

''ஒரே சொருகு, குலை வெளியே வந்துரும்''

நான் அங்கிருந்து நகன்றேன். அவன் கல்லூரியில் இருந்து வெளியே போனான். நான் கல்லூரி முதல்வர் அலுவலகம் சென்றேன்.

''கோரன் எதுக்கு வந்தான்''

'' வேலையை விட்டுப் போன பொரபுசர் பத்தி விசாரிச்சான், தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்''

அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சொன்னார்.

எனக்கு வகுப்பில் அவன் அருகில் சில நாட்களாக இல்லாதது ஒரு மாதிரி இன்றும் இருந்தது. அவன் இருந்தால் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பான்.

திடீரென கோரன் வகுப்பில் நுழைந்தான்.

''முருகேசு, வெளியே வாடா''

வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் அவனை நோக்கி நீ உள்ள வர வேண்டியது தானே என்றார். உன் வேலையை மட்டும் பாரு என அவரை நோக்கி கத்தியவன் என்னை நோக்கி வாடா என கத்தினான். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் எழுந்து வேகமாக அவனை மடக்கிப் பிடித்து அவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்தார்கள். அந்த கத்தியை வாங்கிய சோபன் கோரனை  நோக்கி இதுதான் நீ படிக்கிற லட்சணமா எனக் கேட்டான். ஆமாம், ஒரு வாத்தியார் ஒழுங்கா இல்லைன்னா அப்படித்தான் ஆகும், எனக்கு என்ன நடந்தது தெரியுமா?

மொத்த வகுப்பும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. கோரன் தன கதையை சொல்ல ஆரம்பித்தான்

(தொடரும்)


Wednesday 26 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3

சனிக்கிழமை வந்தது. எனக்கு எழவேப் பிடிக்கவில்லை. என்னவொரு கொடுமை.  கல்யாண வீடு போல அம்மா மாற்றிக்கொண்டு இருந்தார். புது சேலை  உடுத்த செய்து முடித்த பலகாரங்கள் என அன்று ஒரு பொம்மையாக செயல்பட்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை படித்து என்ன பிரயோசனம்? என்று எனக்குள் உண்டான மனநிகழ்வு என்னை அவ்வப்போது தின்று கொண்டிருந்தது. வந்து அமர்ந்தார்கள். அப்போது அவனைப் பார்த்தேன். இவனா எனக்கு கணவன் என்று எனக்குள் எழுந்த கேள்வி இன்னும் அதிர்ச்சியை தந்தது.

 பொண்ணை வரச்சொல்லுங்க என்ற சம்பிரதாயம் எல்லாம் இல்லை. நானும் பலகாரங்களுடன் சென்று அமர்ந்தேன். உன் அப்பா எல்லா விபரமும் சொன்னார். உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதான் உன்னை பொண்ணு பார்க்க வந்தோம் என்றார். என் பையன் கூட கல்யாணம் பிடிக்காதுனு உன் அப்பாகிட்ட சொல்லி இருந்தேன். உன்னோட போட்டோ பார்த்ததும் மனசு மாறிட்டான் என்றவரிடம் எனக்கு கல்யாணம் பிடிக்கலை என்றேன். அப்பா  முகம் பார்க்க எனக்கு தெம்பில்லை எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. அவன் நான் சொன்னதும் ஹேய் என துள்ளி எழுந்தான் மகிழ்ச்சியுடன். 

வாங்க போகலாம் என்றே அழைத்தான். இருப்பா என அதட்டினார் அவனின் அப்பா அப்படியே அமர்ந்தான் இங்க பாரும்மா இப்படி பேசாத என தொடங்கி எனக்கு தரப்பட்ட அறிவுரையில் எனக்கு வெறுப்பு அதிகமாகியது எப்போ கல்யாண தேதி என்றார் அப்பா. அதிர்ந்தேன். வர்ற 4ம் தேதி என்றார் அவனின் அப்பா. அவன் ஏதும் பேசாமல் இருந்தான். எனக்கு பையனைப் பிடிக்கலை என நேரடியாகவே சொல்ல இயலாமல் தவித்தேன். ஏன் அப்பா?! என் பார்வைக்கு வலிமை இல்லை. அப்பா சொன்னார் பிடிச்சி கல்யாணம் பண்றவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சேர்ந்தா இருக்காங்க? என்ற கேள்வி என்னை பலவீனமாக்கியது. இதோ இவ கூட என்னைப் பிடிக்கலைனு சொன்னா, கூட சேர்ந்து வாழலை என அம்மாவை காட்டினார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நானும்தான் இதோ இவ பண்ணாத அழிச்சாட்டியமா? என்று அவன் அப்பா சொன்னதும் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. 

அப்பா நீங்களா இப்படி? அம்மாவை அடிமைப்படுத்தியதோடு அடுத்தவர் முன் அவமானப்படுத்துவது என்றே கேட்க துடித்தேன். அம்மாவும் முதல பிடிக்கலை அப்புறம் இவரே உலகம்னு ஆகிருச்சி என்றதும் அவனின் அம்மாவும் அதே பல்லவி பாடினார். எனக்கு இந்த திருமணம் பிடிக்காமல் போனது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், வேறு வழியின்றி எதனையும் ஏற்றுக்கொள்வது. இப்படி கூட மனிதர்கள் இருக்க இயலுமா? என்ற எனது கேள்விக்கு அப்போதே பதில் சொன்னேன். என்னால் கல்யாணம் பண்ண இயலாது என்று தீர்மானமாக எழுந்தேன். அவனும் திருமணம் பண்ண இயலாது என எழுந்தான். அப்படியே வெளியே சென்றான். இந்த கல்யாணம் நடக்கும் என அவனின் அப்பா சொல்லி சென்றார். என்னை அவமானப்படுத்திட்டல்ல என அப்பா என்னை அடிக்க வந்தார் ஏன்டீ இப்படி கேவலப்படுத்தற என அம்மா பங்குக்கு சத்தம் போட்டார் எனக்கு கல்யாணமே வேண்டாம் என சொல்லி பார்த்தேன் நீ கேட்கலை என அழுதேன். அப்புறம் ஏன்டீ சம்மதிச்ச என்றார் அம்மா. திட்டம்போட்டு கேவலப்படுத்திட்ட என்ற அப்பா குரலில் வேதனை தெரிந்தது. எனக்கு அவனைப் பிடிக்கலை என்றேன். வேற யாராச்சும் பாருங்க, அவனுக்கே என்னைப் பிடிக்கலை என்றேன். நீ கல்யாணம் பண்ணு, இல்லைன்னா எக்கேடு கெட்டுப் போ என அப்பா சொன்னது எனக்கு நிறைய வலித்தது. 

அப்பா என்னால உங்களை மாதிரி வாழ முடியல என்ற எனது நிலையை எப்படி சொல்வது, அம்மா என்னால் எப்படி உன் வாழ்க்கை வாழ இயலும். அம்மாவிடம் நிறைய அழுது எல்லாம் புலம்பினேன் எக்கேடு கெட்டுப் போ என்றார் அம்மா. வீட்டில் அன்றிலிருந்து திருமணப்பேச்சு எடுக்கவே இல்லை. என் தோழி என்னிடம் போன் பண்ணி சொன்ன விசயம் எனக்கு ஆச்சரியம் தந்தது சில நாட்களில் ஊருக்கு வந்தவள் இதோ இவனே என் காதலன் என ரமணனை காட்டினாள் என்னால் நம்ப இயலவில்லை. ரமணன் என்னைப் பார்த்து சிரித்தான். அவளது வீட்டில் ஏற்றுக்கொண்டது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி வாழ இயலும்?

எனக்கு இந்த திருமணம் என்பதெல்லாம் பிடிக்கவே இல்லை. எல்லோரும் திட்டினார்கள். கல்யாணமற்ற வாழ்வு முழுமை பெறாது என்றே சொன்னார்கள். தோழியின் திருமணம் வந்தது. உலகில் திருமணம் என்பது என்னவென எனக்குப் புரியவே இல்லை. வாழ்த்து சொல்லி வீடு வந்தேன். நல்ல வரன் வந்து இருப்பதாக அப்பா சில மாதங்கள் கழித்து சொன்னார். வீடு வந்து பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு வீட்டார் சம்மதம் சொன்னார்கள். எனக்கு சம்மதமே இல்லை. கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஒரு பெண் குழந்தை. என் கதையை அவள் செய்ய மறுத்த திருமணத்திற்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

திருமணத்தை வெறுக்கும் பெண்களே நீங்கள் எப்படி என சொல்லிவிட்டுப் போங்கள். (முற்றும்)