Sunday 2 March 2014

காதல் மட்டும்

                                                  காதல் மட்டும் - சிறுகதை

                                                   வெ.இராதாகிருஷ்ணன்

இந்த வாழ்வு நமக்காக என்ன வைத்து இருக்கிறது எனத் தெரியாது. ஆனால் பல மகிழ்ச்சியானத் தருணங்களும், மறக்க இயலாத நினைவுகளும் நம்முடனே வந்து சேர்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மனதுக்குப் பிடித்துப் போன சுபாவைப் பற்றி முன்னரே நிறைய அறிந்து வைத்திருந்தேன். சுபாவிடம் காதலைச் சொல்லும் அளவுக்கு அத்தனை தைரியம் அப்போது இருந்தது இல்லை. அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி ஆனபிறகும் மனதில் அவளது எண்ணமாகவே இருந்தது. பருவத்தில் வரும் காதல் போல மாறிவிடும் என்று பார்த்தால் அவள் மீதான காதல் தொடர்ந்தபடியே இருந்தது.

ஒருமுறை அவளைச் சந்தித்தபோது நான் என்ன படிக்கிறேன் என்ன செய்கிறேன் என மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். ஒருவேளை அவளும் என்னைக் காதலித்துக் கொண்டு இருக்கக்கூடும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போதும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றபிறகு ஒருமுறை அவளைப் பார்த்தேன். அப்போதும் அவள் குறித்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் இருப்பது கண்டு நானே என் மனதை எண்ணி வியந்தேன்.

அப்போது நான் சேர்ந்த வேலை குறித்துச் சொன்னேன். அவளோ தற்போது தான் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் எனச் சொன்னாள். சூழல் சரியானப்பிறகு வேலைக்குப் போ எனச் சொல்லிவிட்டு வந்தேன். என்றோ பார்க்கிற முறையில் கூட சில சொற்களை மட்டுமே பேசிவிட்டு வந்தது எனக்குப் புரியாமல் இருந்தது. அப்போதுதான் வீட்டில் என் அம்மா என்னிடம் எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொன்னார். நான் அவசரம் அவசரமாக மறுத்துவிட்டு சுபாவை காதலிப்பதாகச் சொன்னேன். வீட்டில் அன்று பெரியப் பிரச்சினை ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்கக் கூடாது என அடுத்த வாரமே சுபாவைச் சந்தித்தேன்.

''சுபா உன்னை நான் நிறைய வருசமா காதலிக்கிறேன் ஆனா உன்கிட்ட சொல்ல தைரியம் வந்தது இல்லை, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா''

''தீபக் உன்னை எனக்கும் நிறையப் பிடிக்கும், ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது வேணும்ன்னா காதலிக்கலாம்''

சுபா சொன்னதை நினைத்து நினைத்து எனக்கு அன்று உறக்கமே இல்லை. காதலின் அடுத்த நிலை கல்யாணம் என்றுதானே சொல்லப்பட்டு இருக்கிறது. காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனில் கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்கலாம் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. எதற்கு இப்படி சட்டென திருமணமே வேண்டாம் என சொன்னாள் என்பது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் போகட்டும் என இருந்தேன்.

திடீரென ஒருநாள் சுபாவை பெண் பார்க்க போவோம் அவளுக்குத் தகவல் சொல்லிரு என வீட்டில் சொன்னதும் அவள் சொன்ன விசயத்தைச் சொன்னதும் வீட்டில் கோபம் கொண்டார்கள். நாம போய் பேசுவோம் இல்லைன்னா உனக்கு வேறு பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் என உறுதியாகச் சொன்னார்கள்.

சுபாவின் வீட்டிற்கு பெண் பார்க்கச் சென்றோம். சுபா எவ்வித கோபமும் இல்லாமல் மெல்லிய குரலில் சொன்னாள்.

''நானும் தீபக்கும் காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேன், இப்படியே காதலித்தபடியே இருப்பேன்''

அவ்வளவுதான், என் அப்பா கடுமையாகச் சத்தம் போட்டார்.

''அடுத்த சந்ததினு இல்லாம ஆயிரும் இந்தப் புள்ளையை இங்கேயே தலைமுழுகிட்டு வா'' விறுவிறுவென வெளியேறினார்.

''எங்களை மன்னிச்சிருங்க'' என நானே மன்னிப்பு கேட்டேன்.

''நாங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்கமாட்டேங்கிறா. கல்யாணம் பிடிக்காதுனு ஒரேயடியா சொல்றா நாங்க என்ன பண்ணட்டும்'' சுபாவின் தந்தையின் குரல் உடைந்து போயிருந்தது.

வேறு வேலை தேடிக்கொண்டு அதைக் காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறியபோது சுபாவை சென்று அழைத்தேன். அவள் வர மறுத்தாள். சுபாவுடன் இருந்த தொடர்புக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால் மனதில் அவளது எண்ணங்களே இருந்தது. வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பது என்பது அனலில் பட்ட புழு போல மனம் துடித்தது. காலம்தான் எத்தனை வேகமாகச் செல்லக் கூடியது. ஒரு வருடத்திற்குள் தங்கையின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதற்காகவே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சுபாவை சந்தித்து பேசியபோது அவள் மனதில் எவ்வித மாற்றமும் இல்லை.

''சுபா என்னைத்தான் நீ நினைச்சிட்டு இருக்கியா''

''நீ என்னைய நினைச்சிட்டு இருக்கிறப்ப நான் உன்னை நினைச்சிட்டு இருக்க மாட்டேனா''

''கல்யாணம் பண்ணிப்போம் சுபா, என் தங்கை லதாவுக்கு கல்யாணம் பண்ற இடத்தில ஒரு வரன் இருக்கு அதை எனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறாங்க''

''நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோ தீபக், வாய்ப்பைத் தவற விட்டுறாத''

அவளது சொற்கள் என்னைச் சீண்டுவது போல இருந்தது.

''உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லைன்னா இப்படியே இருக்கிறேன்''

''காதலிச்சிக்கிட்டே''

சிரித்தாள். அவளையும் விட்டு விலக இயலாமல் வேறொன்றை கைப்பற்ற மனம் இல்லாமல் தவித்தேன். அவளது உறுதி என்னை வியப்படையச் செய்தது. மறுபடியும் என்னோடு வருமாறு அழைத்தேன். அதற்கும் சம்மதிக்க மறுத்தாள்.

தங்கையின் வளைகாப்பு வந்தது. அப்போது ஊருக்கு சென்றபோது அவள் ஒரு வேலையில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.

''இப்போதாவது சொல் சுபா''

''தெய்வீகம்னா என்ன தீபக்''

''தெரியல, நீயே சொல்''

''சாத்திரம், சடங்கு, வழிபாடு எனும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாத தூய்மை, உண்மைதான் என்னைப் பொருத்தவரை தெய்வீகம்''

''அதுக்கென்ன, அதுக்கு ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லனும்''

''சாத்திரம் சடங்குகளில் விருப்பம் இல்லை''

''சரி சேர்ந்து வாழ்வோம்''

''காதலித்தால் சேர்ந்து வாழனும்னு இருக்கா என்ன''

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சென்றுவிட்டேன். வாரம் ஒருமுறை சுபா மறுக்காமல் என்னை அழைத்துவிடுவாள். நானும் அவளை அழைத்துப் பேசுவது உண்டு. கல்யாணம் என்ற பேச்சை நான் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.

தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, அவனுக்கு மொட்டை எடுக்கும் போது என ஊருக்கு வந்து போனேன். நான் சுபா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுவே என் முடிவு எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். சுபா குறித்து என் பெற்றோர்கள் எதுவும் தவறுதலாகப் பேசாது இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

சுபாவின் வீட்டிற்குச் சென்று என் தங்கையின் கணவர் வீட்டார் சென்று  மிரட்டவும் அவளது பெற்றோர்களை வேறு வீடு பார்க்கச் சொல்லி வீட்டின் உரிமையாளர் சொன்னதும் எனக்கு சுபா தகவல் சொன்னாள். நான் உடனே அவள் வேலை புரியும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டினை வாங்க ஏற்பாடு செய்து அவர்களை அங்கே குடியமர்த்தினேன். அப்போது கூட அவள் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும் நான் இந்த உதவியை ஏற்றுக்கொள் உனக்கு யாரும் தொல்லை தரமாட்டார்கள் என உறுதி சொன்னேன். அப்போது கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் மனமாற்றம் அவளுக்கு ஏற்படவில்லை.

எனது தங்கை கணவர் வீட்டில் இனிமேல் சுபாவிற்குத் தொல்லை தந்தால் நானே காவல் நிலையத்தில் புகார் தருவேன் என மிரட்டி வைத்தேன். இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என தங்கை சொற்களை அள்ளி வீசினாள். எங்களுக்கு வயது முப்பத்தி மூன்று ஆனது. சுபாவின் பெற்றோர்கள் சுபாவை எவ்வித வறுபுறுத்தலும் பண்ணாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வருடமே என் அம்மா நோய்வாய்ப்பட்டது கண்டு ஊருக்கு ஓடோடி வந்தேன்.

''நான் சாகுறதுக்கு முன்னே கல்யாணம் பண்ணிக்கோப்பா, இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க மகிழ்ச்சியா இருந்தா போதும்''

அந்தச் சொற்கள் என்னைக் கலங்க வைத்தது. சுபாவின் வீட்டை நோக்கிச் சென்றேன். அவளது தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

''சுபா உன் அப்பா, என் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்போம்''

''தீபக் காதலிச்சிட்டே இருப்போம், கல்யாணம் மட்டும் வேண்டாம்'' அவளது விழிகளும் கலங்கி இருந்தது.

சுபாவின் அம்மாதான் சொன்னார்.

''தம்பி அவதான் இப்படி இருக்கிறானா நீங்க ஏன் உங்க வாழ்க்கையை வீணாக்கனும் பேசாம ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருங்க''

எத்தனை எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. மனதில் சுபா நிறைந்து இருந்தாள்.

''சுபாதான் என்னுடைய மகிழ்ச்சி'' சொல்லிவிட்டு நடந்தேன். கலங்கிய விழிகளின் ஊடே சுபாவின் இதழ்களில் புன்னகை நிறைந்து இருந்தது. சுபாவுக்கு வீடு வாங்கித் தந்த விசயம் தெரிந்து தங்கை என்னுடன் ஏகத்துக்குச் சண்டை போட்டாள்.

''பெத்த தாய் உசிர விட உன்னோட காதல் பெரிசா ஒரு கல்யாணத்தை பண்ணித்தொலை''

அச்சிறு பெண்ணின் சொற்கள் என்னை அதிர்வுறச் செய்தன.

''அன்னைக்கு உறவு வேணாம்னு சொன்ன, இன்னைக்கு என் வீடு உனக்குச் சொந்தமா''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

''அம்மாவின் கைகளைப் பிடித்தபடி என்னை மன்னிச்சிருமா'' என்றேன்.

''நீ என்ன தப்பு பண்ணின, காதலிச்சிட்டுதான இருக்க உன் மேல, அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் இல்லைப்பா, தங்கமான பொண்ணுப்பா ஏனோ அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை'' அம்மாவின் அந்த மனமாறுதல் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே அம்மா இறந்து போனார்.

சுபா கதறி அழுத காட்சி என்னை என்னவோ செய்தது. ஈமகாரியங்கள் முடித்த பின்னர் வேலைக்குச்  செல்ல கிளம்பினேன். அப்பா என்னுடன் வர மறுத்தார். தங்கையிடம் அப்பாவை அழைத்து போகச்  சொன்னேன். அங்க என்ன வாழுது என்றாள். அம்மாவின் நகைகள், புடவைகள் எல்லாம் என் தங்கைக்கு என ஆனது. அப்பாவை அழைத்துச் செல்ல தங்கை மறுத்த கணத்தில் அப்பா உடன் செல்ல மறுத்தார். சுபாவும் அங்குதான் நின்று கொண்டு இருந்தாள்.

''டேய் பெத்தது நீங்க உங்க வழினு போயீட்டீங்க, பெறாத மகளா எங்களை கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்குச்சி'' சுபாவை கைகாட்டி குலுங்கி குலுங்கி அழுதார். எனக்கு அப்போது சுர் என தைத்தது. வலித்தது.

சுபா வேறொரு அறை சென்று மிச்சம் அழுதாள்.

அவளைத் தேற்றிட நன்றி சொல்லிட எங்கே சொற்கள் தேடுவேன். பார்த்துக்கோ சுபா என வேலைக்குச் சென்றேன். இனம் புரியாத வலி. 

மேலாளரிடம் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னேன். அவர் என்னை சத்தம் போட்டதில் மொத்த அலுவல சுவர்களும் விரிபட்டன. முகத்தில் முழிக்காதே என சொன்ன சொற்களில் சட்டென எழுந்தேன். வீடு வந்தேன்.

ஊருக்குத் திரும்பி வந்து அப்பாவுடன் அன்றுதான் மனம்விட்டு பேசினேன். அப்பாவுடன் தங்கி அங்கேயே வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்குப் பணிவிடை செய்வது நிறைவாக இருந்தது. அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் அப்பா. எங்களை விட்டுட்டு நீ அப்படி போயிருக்கக் கூடாதுப்பா எனவும் ஊடே சொல்லிக் கொள்வார். 

பிரம்மச்சரியம் என்பது தவம். 
எவ்வித கறையின்றி 
நான் வாழ்வதற்கு நீ துணை. 
உன்னை முதிர்கன்னி என்றே பிறர் 
சொன்னாலும் காதல் இளமை நீ 

சுபாவை நினைத்து கவிதை என எதையோ மனதில் உளறினேன். 

சுபாவின் அப்பாவின் நிலைமை மோசமாகியது. மருத்துவ பலனின்றி மற்றொரு உயிர் போனது. சுபா மனம் மாறவே இல்லை, நானும் மனம் மாறிக் கொள்ளவில்லை. 

சுபா தனது வேலையை விட்டுவிட்டு அவளது அம்மாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை பார்க்க இருப்பதாகச் சொன்னாள். எனக்கும் சரி என்றானது. அந்த வீட்டை தங்கையின் பெயருக்கு எழுதித் தந்தேன். தங்கை, என்னை மன்னிச்சிருண்ணா என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வீடு கிடைத்த நிம்மதி. 

சில மாதங்கள் கழித்து சுபாவை குழந்தைகள் காப்பகத்தில் பார்க்கச் சென்றேன். துள்ளித்திரிந்த குழந்தைகள் பார்த்து சொன்னேன். 

''இந்நேரம் நமக்கும் இப்படி குழந்தைகள் இருக்கும்ல சுபா''

''காதல் மட்டும்'' சிரித்தாள். 

''தாய்மை என்பது ஒரு பெண்மையின் அடையாளம். அந்த தாய்மை உணர்வு வேண்டாமா சுபா'' 

சின்னக் குழந்தையை அள்ளியணைத்தாள். நானொரு காதல் அன்னை என்றாள். 

விக்கித்து நின்றேன். மற்றொரு குழந்தையை அள்ளியணைத்தேன் நான். எங்கெங்கோ சென்று நிராதவற்ற  குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறாள். அவளது பணி பெரியது. சில வருடங்களில் அவளது அம்மாவும் இறந்து போனார். வாழ்க்கை வேகமாக நகரத் தொடங்கியது. ஐம்பதைத்  தொட்டு இருந்தோம். அப்பா தள்ளாடியபடி இருந்தார். இன்னும் ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆனா ஒன்னு நான் உன் அம்மாவை எப்படி அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேனோ அதைப்போல நீயும் அந்தப்பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சி நின்னுட்ட என்றார். வலியில் கூட அவருக்குள் ஏதோ ஒருவித மகிழ்ச்சி.

ஒருநாள் குழந்தைகள் காப்பகம் சென்று அவளிடம் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

''பிரம்மச்சரிய வாழ்க்கை எதற்கு'' 

''கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று வாழ்ந்து பின்னர் தனித்து விடப்படுவது கொடுமை தீபக்'' 

எனக்கு அதன் பொருள் புரிந்தது. 

''இது மானுட வாழ்க்கை அல்லவே. காதல் புரிந்து கல்யாணம் பண்ணி இல்லறமே நல்லறம் சுபா'' 

''அது சாதாரண மனிதர்கள் செய்வது. உனக்கு அதில் உடன்பாடு இல்லை'' அழுத்தமாகச்  சொன்னாள். 

''என்ன சுபா, இத்தனை வருடங்கள் காதல் மட்டும் எனச் சொல்லிட்டே இருந்த எதற்கு இத்தனைப் பிடிவாதம் இப்போவாச்சும் சொல்லு''

''மனசுக்குப் பிடிச்சவங்க நிறைய. காதலானது கல்யாணம் எனும் சடங்குக்கு உட்பட்டால் களங்கம் தீபக்.  கலவியில் ஈடுபட்டு சுகித்திருப்பது காதல் இல்லை. இனப்பெருக்கம் செய்யப் பிறந்த பிறவிகள் இல்லை நாம். காதல் மட்டும் புரிந்திடவே நாம்''

''இப்படியே அனைவரும் நினைச்சா இந்த பூமி என்ன ஆகும்'' 

என் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் . நான் அதில் கலங்கி இருந்தேன். 

''இவ்வுலகம் எப்படி உருவாச்சி தீபக்'' 

அம்மா என ஓடிவந்து ஒரு குழந்தை சுபாவின் கழுத்தை அணைத்து பின்னால் வந்து கட்டிக்கொண்டது. 

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தாள். 

''என்னம்மா''

''சாமி கும்பிட வாம்மா''

நானும் சுபாவுடன் சென்றேன்.

''என்ன கும்பிட்ட சுபா''

''இந்த அண்டப் பெருவெளியில் கடவுள் ஒரு புதிர். உயிர் இன்னொரு புதிர். கும்பிட எதுவும் இல்லை''

''இந்த உலகம் கடவுள் படைத்தது என் புரிதல்''

சிரித்தாள். 

''என்ன''

''என்னை இப்பவும் நீ இரசிக்கிறல'' 

''இத்தனை வருடங்கள் இதேதான்''

அதற்கு பின்னர் சுபா சொன்ன விசயம் கேட்டு அதிர்ந்தேன். அப்படி நடக்க சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோனியது. ஒரு செல் உயிரி சரி. எப்படி இப்படி அவள் சிந்தித்தாள்? பல செல்கள் கொண்ட உயிரி தானாக பல்கி பெருகும் காலநிலை ஒன்று வரும் எனவும் அங்கே காதல் மட்டும் நிறைந்து இருக்கும் எனவும் எப்படி அவளால் யோசிக்க முடிந்தது.

''சுபா புரியலை''

''பல செல்கள் உயிரியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பருவகாலத்தில் உடலில் இருந்து உதிர்ந்து புதிய அதேபோல உயிரிகள் தோன்றும் தீபக்''

''விதை இல்லாத மரம் சாத்தியமில்லை'' 

''தண்டு வெட்டி மரம் வளரும்'' 

''நினைச்சேப் பார்க்க முடியலை சுபா''

''இனப்பெருக்கத்தில் இரண்டு வகை எப்போதுமே இருக்கு, எப்போ காதல் மட்டும்னு ஆகுதோ அப்போ நான் சொன்னது நடக்கும், மனுசங்க கல்யாணம் குழந்தைகள்னு விருப்பம் கொள்ளாத காலம்னு ஒன்னு உருவாகும் அப்போ நான் சொன்ன ஸ்டெம் செல்கள் குழந்தைகள் உருவாகும்''

அவளது சிந்தனை என்னவோ செய்தது. சில வருடங்கள் கழித்து அப்பா இறந்து போனார்.  மணமுடிக்காமல் காலம் காதலினால் மட்டுமே கடந்தது.

''ஏதேனும் வருத்தம் இருக்கா தீபக்''

''காதல் மட்டும்''

உடலைவிட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கியது. சுபா ஆவலோடு தழுதழுத்த குரலில் சொன்னாள். 

''இதோ அறிவியல் கண்டுபிடித்துவிட்டது, பல செல்கள் உயிரி தானாக பல்கும், பரிணாமத்தில் ஒரு மாற்றம் நிகழும். இனப்பெருக்க உறுப்புகளற்ற உயிரிகள் தோன்றும்''

''இல்லை சுபா, அப்படியே நிகழ்வுகள் உண்டானாலும் இந்த உலகம் இப்படியே இருந்தால் தான் நல்லது. காதல் புரிவது அதிசயம். அதிலும் காதலுக்கு மட்டுமே வாழ்வது ஆச்சரியம்''

மலர்ந்த முகத்துடன் கண்கள் மூடினாள். அவளது விழிப்பார்வையில் இனி நான் விழமாட்டேன் என எண்ணியபோது என் கண்கள் மூடியது. காதல் மட்டும். 

Wednesday 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .

Tuesday 25 February 2014

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - பாபிலோன் ஓரினச்சேர்க்கை

எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.

ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.

பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.


                                                            படம் நன்றி: விக்கிபீடியா

இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.

பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.

வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.

பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு  நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி  கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.

இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

                                படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள்  லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.

பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.

இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.

உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும். 

பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்

(தொடரும்)