Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம். 

Thursday 20 February 2014

காமத்தின் மீதேறி

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான்  ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின்  நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. 

ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின்  சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது. 

அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது. 

கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை  என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு. 

தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. 

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு. 

குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும். 

இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல்  இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது. 

திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை 
அடைத்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
வலி தான். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை
திறந்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
சுகம் தான். 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''  இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு  மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது. 

விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது  விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது. 

மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது. 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' 

இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான். 

உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு. 

காமத்தின் மீதேறி
பணம் பண்ணும் 
கயமைத்தனம் சமூகத்தில் 
புரியவொண்ணா செயல் 
காமத்தின் மீதேறி 
இளம் பிஞ்சுகளை 
இயந்திர பொருளாக்கி 
பெண் இனத்தை 
பேதலிக்க செய்யும் 
கொடிய சமூகம் 

நிகழ்ச்சி முடிவடைகிறது. 

காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும். 

Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்)