Tuesday 1 November 2011

அறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)

பேரனூரில் ஒரே ஒரு பெருமாள் கோவில். மற்ற கோவில்கள் எதுவும் இல்லை. இந்த பெருமாள் கோவில் மிகவும் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்றது. தினமும் குறைந்தது இருபது பேராவது இந்த பெருமாள் கோவிலில் தனியே வீற்றிருக்கும் வசந்தபெருமாளை தரிசிக்க வந்துவிடுவார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சற்று அதிகமாகவே வருவார்கள். 

இந்த கோவிலில் வேலை பார்க்கும் பட்டாச்சாரியார் ராமனுஜம் குடும்பம்தான் கோவிலை பரமாரித்து வருவதோடு வரவு செலவு கணக்கு எல்லாம் பார்த்து வருகிறார்கள். இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது. சின்ன கட்டிடமாக ஆரம்பித்து கோவில் எனும் சொல்லும்படியாய் வந்து நிற்கிறது. ராமானுஜத்தின் தாத்தா, அப்பா என பூசாரியாக இருந்து வந்த கோவில் தற்போது முப்பது மூன்று வயதான ராமானுஜத்தின் கைகளில். 

பூசாரிக்கே உரிய தோற்றத்துடன் இருக்கும் ராமானுஜத்திற்கு ஒரே பையன் எட்டு வயதாகும் ஸ்ரீராம். முன் தலையில் இருக்கும் முடி வழித்து பின்புறம் அழகாக கட்டப்பட்ட முடி. நெற்றியில் இடப்பட்ட ராமம். நாலு முழ வேஷ்டியை பாங்காக கட்டிய பாங்கு என ஸ்ரீராம் அந்த பெருமாள் கோவிலில்தான் எப்பவும் இருப்பான். பள்ளிக்கு செல்லும் வழக்கம் எல்லாம் இல்லை. கோவிலை சுற்றி இருக்கும் நிலத்தில் ஓடியாடி விளையாடுவது, தந்தைக்கு உதவி செய்வது, புத்தகம் படிப்பது என அவனது பொழுது போகும். அவனது தாய் சத்தியவதி கற்று தந்ததில் இருந்துதான் எழுத படிக்க கற்று கொண்டு வருகிறான். 

பேரனூருக்கு புதிதாக வேலைக்கு வந்த ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். சுறுசுறுப்பாக வேலை செய்து திரியும் ஸ்ரீராமனை பார்த்த ஆசிரியர் ராமானுஜத்திடம் பேச்சு கொடுக்கலானார். 

'சாமி, யாரு இந்த பையன்?'

'என்னோட பையன் தான்'

'பள்ளிக்கூடம் போகறது இல்லையா'

'இல்லை, ஆத்துல படிச்சிட்டு, கோவிலுக்கு வந்துருவான், அவனுக்கு இந்த பெருமாளுனா இஷ்டம், எனக்கடுத்து அவன்தான் இந்த பெருமாளை பார்த்துக்கிரனும்' 

'நாலு எழுத்து படிச்சி வேற வேலைக்கு போகலாம் இல்லையா'

'போலாம், எங்க குடும்பத்தில இருந்தவா எல்லாம் படிச்சி நகரம்னு போய்ட்டா, ஆனா எனக்கு இந்த பெருமாளை விட்டு போக மனசில்லை அதான் இங்கனயே இருந்துட்டன்'

'உங்களோட கூட பிறந்தவங்க'

'ரெண்டு அண்ணா, ஒரு தமக்கை இருந்தா, அவாதான் கிராமத்தை விட்டு போய்ட்டா, நான், என் ஆத்துக்காரி, இதோ இவன், நாங்கதான் இந்த பெருமாளுக்கு துணை' 

ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாளை வணங்கிவிட்டு ஸ்ரீராமை அழைத்தார். 

'நீ பள்ளிக்கூடத்துக்கு படிக்க வரியா'

'வீட்டுல படிச்சிட்டு இருக்கேன், இங்கயும் படிக்கிறேன், எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கலை' 

ஸ்ரீராமின் மழலை குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகள் ஆசிரியர் ராமமூர்த்திக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. 

'உனக்கு சயின்ஸ், மேத்ஸ், இங்கிலீஸ் வரலாறு, பூகோளம் எல்லாம் படிக்கனும்னா பள்ளிகூடத்துக்கு போகனுமே, அதெல்லாம் எப்படி வீட்டுல படிப்ப' 

'அம்மா சொல்லி கொடுத்துட்டு இருக்கா'

'எனக்கு பள்ளிகூடத்துக்கு போக நேரமாச்சு, சாயந்திரம் வந்து பார்க்கிறேன்'

ஆசிரியர் ராமமூர்த்தி செல்வதையே  பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவர் அவனது கண்களில் இருந்து மறைந்ததும் தனது தந்தையை பார்த்தான். 

'நோக்கு பள்ளிக்கூடம் போக ஆசை வந்துடுத்தா'

'இல்லை, இதோ இந்த பெருமாள்கிட்ட இருக்கறதே போதும்'

அன்றைய தினம் எல்லாம் ஸ்ரீராம் மிகவும் யோசனையாகவே இருந்தான். தனது பெரியப்பாவின் வீடுகளுக்கு எல்லாம் செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் புது புது விளையாட்டு பொருட்கள், தொலைக்காட்சி என வலம் வருவதை கண்டு மகிழ்வுடன் அவர்களுடன் பொழுது கழித்திருக்கிறான். அவர்கள் தங்களோடு வந்து படிக்க சொல்லியபோது ஸ்ரீராம் மறுத்துவிட்டான். 'பெருமாளுக்கு யார் இருக்கா' என்பதே அவனது வாசகமாக இருக்கும்.

'புள்ளைய உன்னைப் போலவே கெடுத்து வச்சிருக்கே' என ஏகத்துக்கும் ராமனுஜம் திட்டு வாங்கி வருவார். இதன் காரணமாகவே சில வருடங்களாக தனது சகோதர சகோதரிகள் வீட்டுக்கு போவதையே நிறுத்திவிட்டார். 

சாயந்திரம் வருகிறேன் என சொன்ன ஆசிரியர் கோவிலுக்கு வரவில்லை. ஸ்ரீராம் எட்டி எட்டிப் பார்த்தான். அவர் கண்ணுக்கு எட்டவில்லை. கோவில் நடை சாத்தி வீட்டுக்கு வர இரவு எட்டு மணியாகிவிடும். 

ஸ்ரீராமின் வீடு மூன்று அறைகள் கொண்டது. வீட்டுக்கு முன்னர் சிறிது இடம் காலியாக இருக்கும், இரண்டு புறமும் மலர் செடிகள் பூத்து குலுங்கும். வீட்டு கதவை திறந்ததும் படிகள் ஒவ்வொன்று மேலாக செல்லும். அந்த படிகளின் இருபுறம் திண்ணைகள் இருக்கும். அந்த திண்ணைகள் முன் கட்டைகளான காற்று சென்று வரும்படியான, வெயில் வந்து போகும்படியான தடுப்பு இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் திண்ணையில் யார் இருக்கிறார்கள் என பார்ப்பது கடினம். அதற்கடுத்து சமையல் அறை. தக்காளி, புடலங்காய் என சமையல் மூக்கை துளைக்கும். அதற்கடுத்து அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணை மற்றும் போர்வைகள். வீட்டுக்கு பின்புறம் செல்ல ஒரு கதவு. வீட்டின் பின்புறத்தில் ஒரு அழகிய நந்தவனம். இங்கிருந்து பூக்கள் பறித்துத்தான் பெருமாளுக்கு மாலையாய் கட்டி சாத்துவது வழக்கம். ஒரு ஓரமாய் கழிவறை, குளியல் அறை.  இந்த வீடே ஒரு கோவில் போல்தான் இருந்தது. 

அன்று வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீராம் தனது அம்மாவிடம் சென்று அன்று நடந்த விசயத்தை சொன்னான். 

'பள்ளிகூடத்துக்கு போறியா' 

'வேணாம், நீங்களே சொல்லிக்கொடுங்க'

'முதல்ல சாப்பிடு, அப்புறம் சொல்லித் தரேன்'

சாப்பிட அமரும்போது வீட்டு வாசலில் ஆசிரியர் ராமமூர்த்தி வந்து நின்றார். 

'உள்ளே வாங்கோ'

'இல்லை, நான் இந்த திண்ணையிலே உட்கார்ந்து இருக்கேன்'

'அட வாங்கோ, ஆச்சாரம் எல்லாம் பார்க்காதீங்கோ, வந்து சாப்பிடுங்கோ' 

ஸ்ரீராம் ஆவலுடன் ஆசிரியர் கையை பிடித்து வந்தான். அவரும் மறுக்க இயலாமல் அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார். 

'வீட்டுல எப்பவும் சைவம் தான், வேற எதுவும் எதிர்பார்த்துராதீங்கோ'

'இல்லை இல்லை, தெரிஞ்சதுதானே'

'பையன் நீங்க வருவீங்கன்னு சாயந்திரம் எல்லாம் எதிர்பார்த்துட்டு இருந்தான்' 

'ஒரு வேலையா நகரத்துக்கு போக வேண்டியதா போச்சு, அதான் வந்து பாத்துட்டு போலாம்னு வந்தேன், பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாமே'

'நீங்கோதான் சொல்லனும், நாங்களும் சொல்லிப் பாத்துட்டோம், அவன் பெருமாளுக்கு யார் இருக்கா அப்படின்னு கேட்கறான். ஆமா உங்க ஆத்துக்காரி, குழந்தைங்க'

'நான் கட்டை பிரமச்சாரி, இனிமேதான் பொண்ணு தேடனும்'

சாப்பிட்டு முடித்து திண்ணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீராம் ஆசிரியரை பார்த்துவிட்டு அம்மாவிடம் படிப்பு சொல்லிக் கொடுக்க சொன்னான். 

ஸ்ரீராம் படிப்பதை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். 

'சாமி, சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க இப்படிப்பட்ட அறிவாளிய அடைச்சி வைச்சிராதீங்க'

'நான் என்ன பண்றது, அவன் பெருமாளே கதின்னு இருக்கான், வற்புறத்தி என்ன பண்றது'

ஸ்ரீராம் பள்ளிக்கு செல்லவே இல்லை. வருடங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. ஆசரியர் ராமமூர்த்திக்கு திருமணம், குழந்தையும் பிறந்தது. ஸ்ரீராம் பெருமாள் கோவிலிலேயே வாழ்க்கை நகர்த்தினான். 

ஆசிரியர் ராமமூர்த்திக்கு ஸ்ரீராம் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படும். காலம் செல்லும் வேகத்துக்கு எவரும் ஈடு கொடுக்க இயல்வதில்லை. ஸ்ரீராமுக்கு தமக்கை ஒன்று பிறந்தது. அவள் பள்ளிக்கூடம் போகலானாள். 

தமக்கை பள்ளி சென்றதால் ராமமூர்த்தி குற்ற உணர்வு குறைந்தவராக காணப்பட்டார். வாலிப பருவம் அடைந்தான் ஸ்ரீராம். தந்தை சொல்லிக் கொடுக்காத வேதம் எல்லாம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தர ஆரம்பித்தான் ஸ்ரீராம். ராமனுஜம் பெருமிதம் கொண்டார். 

ஒரு நாள் ஸ்ரீராமை பார்த்த ஆசிரியர் ராமமூர்த்தி மகிழ்வுடன் பேசினார். 

'ஸ்ரீராம், நானும் இந்த ஊருல பத்து வருசமா இருக்கேன், நீ பள்ளிக்கூடம் வரலைன்னாலும் நீ ரொம்ப நல்லா சொல்லி தரேன்னு என் பையன் வந்து சொன்னான்' 

'வேதம், மந்திரங்கள் எல்லாம் ஒரு குலம் மட்டுமே கத்துகிரனும்னு இல்லையே, நாளைக்கு என் பிள்ளை என்னைப் போல இந்த பெருமாளுக்கு துணையா இருப்பானுனு நான் உறுதியா சொல்ல முடியாது, அதான் என் தாத்தா, அப்பா செய்யாததை நான் செஞ்சிட்டு வரேன்'

ஸ்ரீராமை கைகள் எடுத்து வணங்கினார் ராமமூர்த்தி. பள்ளியில் ஒழுக்கம் குறைந்து இருக்கிறது என கவலைப்பட்ட ராமமூர்த்தி ஸ்ரீராம் சொல்லிகொடுக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து மாணவர்கள் மிகவும் ஒழுக்கமாக பாடம் படிப்பதை கண்டு பிரமிப்பு அடைந்தார். 

ஸ்ரீராம் வீட்டுக்கு பெற்றோர்கள் வந்து நன்றி சொல்லி சென்ற வண்ணம் இருந்தார்கள். ராமனுஜத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. 

காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஊரில் இருந்த குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து நகரம் எல்லாம் சென்று கொண்டிருந்தார்கள். பேரனூர் பிள்ளைகள் தனித்து தெரிந்தார்கள். ராமமூர்த்தி பெரும் மகிழ்வு அடைந்தார். 

'பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாத மனிதர்களை வளர்க்கும் பள்ளிக்கூடம் வேணும், பெரிய கல்வி கற்று பெரிய சம்பாதிப்பு சம்பாதிச்சாலும் ஒழுக்கம், நேர்மை தவறாத அந்தணர்கள் பலரை இந்த ஊரில உருவாக்கி இருக்கேன், அதுவரைக்கும் எனக்கு சந்தோசம் தான், குலத்தினால் வருபவர்கள் அந்தணர்கள் அல்ல, குணத்தினால் வருபவர்களே அந்தணர்கள்' என்றான் ஸ்ரீராம். 

'நீ நிறையவே சாதிச்சிட்ட' என்றார் ராமமூர்த்தி.

'அறத்திற்கு உட்பட்டு வாழ பழகி கொண்ட மனிதர்களால் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைகளில் இருந்தும் சுலபமாக விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும்'. என்றான் ஸ்ரீராம். 

ஆசிரியர் ராமமூர்த்தியின் மகன் தனது மேற்படிப்பை முடித்து விட்டு பேரனூர் வந்து அடைந்தான். பெருமாள் கோவில் மணியோசை அவனது காதில் இன்னிசையாக கேட்டது. 

Monday 31 October 2011

கைரேகை காவியம் - 1

இது ஏமாற்று கலை அல்ல. இது ஒரு அற்புதமான விசயம். அறிவியல் சார்ந்ததாக இருக்கலாம்.  இந்த கை ரேகை எப்படி அமைகிறது, எப்படி மாறுகிறது போன்ற விசயங்களை அலசப் போகும் ஒரு தேடல். சிறு வயதில் இருந்தே சோதிடம், கை ரேகை போன்றவை மனதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பின. ஆவலுடன் பல புத்தகங்கள் படித்தேன். ஆனால் இவையெல்லாம் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த இந்த சோதிடம், கை ரேகை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்தேன். அவ்வப்போது படித்து பார்க்க ஆர்வம் ஏற்படும்.  எத்தனையோ விசயங்கள் இருக்க இந்த கை ரேகை குறித்த சிந்தனை எழுந்த காரணம் எனது கல்லூரியில் பயிலும் ஒரு வெள்ளைக்கார பெண் தான். 

சமீபத்தில் வாழ்க்கையில் காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை. நல்லவனா, நமக்கு சரிபட்டு வருவானா என பழகி பின்னர் கல்யாணம் பண்ணுவது எல்லாம் அவசியமில்லாத ஒன்று. பழகும் வரை சரியாக இருந்துவிட்டு கல்யாணம் பண்ணிய பின்னர் அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனவே திருமணம் பண்ணிய பின்னர் எப்படி இருக்கிறார்களோ அதுபோல வாழ்க்கை மாற்றி அமைத்து கொண்டாலே போதுமானது என பேசிய விசயத்தை அப்படியே அவளது காதலனிடம் அவள் போய் சொல்ல அவனோ இவளிடம் இனிமேல் நமக்கு சரிபட்டு வராது, பிரிந்து விடுவோம் என கூறி இருக்கிறான். இவளோ விளையாட்டுக்கு சொல்கிறான் என நினைக்க அவன் உண்மையிலேயே பிரிந்து விடுவதாகவே கூறி இருக்கிறான். இந்த விசயத்தை என்னிடம் சொன்னபோது எனக்கோ பக் என்று இருந்தது. என்ன மனிதர்கள்? 

நல்லவேளை இப்பொழுதாவது சொன்னானே என மனதை தேற்றி கொண்டாள். வேறு சில காரணம் இருக்கும் என்றேன். இல்லை இல்லை ஒரு வருடம் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாளை மறுநாள் கூட ஒரு இடத்தில் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் இந்த விசயத்தை சொன்னதும் அவன் இவ்வாறு செய்துவிட்டான் என்றாள். ஆம் நான் பேசியது காதலை கொச்சைபடுத்தும் விசயம் தான். காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை என காதலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. நேசம் என்பது, காதல் என்பது புரிந்து கொள்ளும் என்றுதான் எனக்குள் ஒரு வரையறை வைத்து இருந்தேன். ஆனால் உலகில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை. அவளது கையை காட்ட சொன்னேன். காட்டினாள். அவளது கைகளில் காதல் ரேகை எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு மனைவி, ஒரு காதலி, அப்புறம் ஒரு காதலி என எனது கைகளில் இருந்த ரேகைகளை காட்டினேன். சிரித்தாள். இந்த கை ரேகை ஒரு சுவாரஸ்யமான விசயம். இப்படி அவளது கை ரேகையை பார்த்து கொண்டிருந்தபோது பலரும் வந்து கைகளை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ ஒரு மாதிரியாகிப் போய்விட்டது. எனக்கு கை ரேகை எல்லாம் பார்க்க தெரியாது. எல்லாம் மறந்து போய்விட்டது. சில காலம் தாருங்கள், படித்துவிட்டு வருகிறேன். இதையெல்லாம் நம்ப கூடாது, ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என சொல்லிவிட்டு இந்த கை ரேகை குறித்த ஆய்வில் இறங்கி விட்டேன். இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்ததும் அருகில் இருந்த எனது மனைவி அவளது கையை என்னிடம் காட்டினாள். கொஞ்சம் பொறுத்து கொள், சொல்கிறேன் என சமாளித்து இதோ எழுதி கொண்டிருக்கிறேன். 

இந்த கைரேகை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கைரேகை பற்றியது. எந்த காரணத்திற்கு அந்த கதையை எழுதினேன் என அந்த கதையிலேயே குறிப்பிட்டு இருந்து இருப்பேன். இந்த ஜோதிடம், கைரேகை, நாடி சோதிடம் எல்லாம் மக்களை ஒரு மயக்க நிலையில் வைத்திருப்பவை என்றாலும் இதன் மேல் அனைவருக்கும் ஒருவித நாட்டம் இருப்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சில மனிதர்கள் முகத்தின் குறிப்பை அறிந்து அகத்தில் இருப்பதை சொல்லிவிடுவார்கள். அதுபோல மருத்துவர்களிடம் சென்றால் மருத்துவர் நமது கண்களில் ரத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்து நமது நோயினை தீர்மானிப்பார். இந்த கையும் ரேகையும் அப்படித்தான். ஒரு கையானது எப்படி மடக்கப்படுகிறது, எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பது பொறுத்து கையில் ரேகைகள் அமைந்துவிடும். 

இது மிகவும் உன்னதமான கலை. இந்த அற்புதமான கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் தாரளாமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இப்படி இருக்கிறதே, அப்படி இருக்கிறதே என நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படுபவர்களாக இருந்தால் தயவு செய்து கைரேகையை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். 

இந்த கைரேகை குறித்து பல விசயங்கள் என்னை ஆச்சர்யம் அடைய செய்து இருக்கின்றன. பல வருடங்கள் முன்னர் மதுரை மீனாக்ஷி கோவில் ஒன்றில் அமர்ந்து இருந்த ஒருவர் எனது கைரேகையை பார்த்து நீ மீனம் ராசி என்றார். தவறாக சொல்கிறீர்கள், நான் மீன ராசி இல்லை என்றேன். அவர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் தம்பிக்கு கைரேகையில் நம்பிக்கை இல்லையோ என்றார். தவறுதனை தவறு என்றுதானே சொல்ல முடியும் என்றேன். ஆனால் அவர் நீங்கள் மீன ராசி தான், இந்த அம்மனுக்கு தெரியும் என்றார். ஆச்சர்யமாக போய்விட்டது. எங்கேனும் நான் ராசி சொல்லி அதை ஒட்டு கேட்டாரா என எனக்கு தெரியாது. ஆனால் கை ரேகை மூலம் எனது ராசியை மிக சரியாக கணித்த அந்த மனிதரை நான் தவறவிட்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சில மனிதர்கள் அதிசயமானவர்கள். 

பார்மசி கல்லூரியின் விடுதியில் மாலை ஒன்றில் வெளியில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க எனது கையை பார்த்துவிட்டு கையை மூடிக்கொள் எவரிடமும் காட்டாதே என சாலமன் ரேகையை சொல்லி சென்ற ஒரு மனிதரை மனது இன்னமும் நினைத்து கொண்டுதானிருக்கிறது. இரண்டு கைகளையும் இணைத்து பார்த்துவிட்டு அழகான மனைவி அமைவாள் என்று ஒருவர் சொன்னது குறித்து இன்னமும் இரண்டு கைகளை அவ்வப்போது இணைத்து பார்த்து அழகு பார்ப்பேன். சில பல  ரேகை வளர்கிறதா, தேய்கிறதா என சோதனை செய்வேன். சனி மேடு, குறு மேடு என ஆயுள் ரேகை, புத்தி ரேகை என பல விசயங்கள் ஆச்சர்யம் பட செய்கின்றன. இவையெல்லாம் உழைக்கும் மனிதருக்கு பெரிய விசயமாக படுவதில்லை, நேரமும் இருப்பதில்லை. 

பெருவிரலில் இரண்டு ரேகைகள் இணைந்து ஒரு வளையம் போலிருந்தால் பணம் அதிகமிருக்கும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் வந்த பணம் கரைந்தோடும் என சொல்வதும் சிரிப்பாக இருக்கும். அத்தனை ரகசியங்களை நமது உடலைமைப்பு வைத்திருப்பதை சாமுத்ரிகா லட்சணம் என பிரித்து வைத்தார்கள். பிறப்புறுப்புகள் கூட எப்படி எப்படி இருக்கும் எனவும் எப்படி பட்ட கனவானுக்கு எப்படிபட்ட மனைவி பொருத்தம் என்றெல்லாம் எப்படி சிந்தனை செய்தார்கள். ஆராய்ச்சி செய்து சொன்னார்களா? எத்தனை பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டார்கள் என்பதெல்லாம் தேடலில் கிடைக்குமோ தெரியாது. 

ஆட்காட்டி விரலில் அமைந்திருக்கும் ரேகை அமைப்பானது ஒரு பெரிய விசயத்தை சொல்லும் என்கிறார்கள். அதைப்போல இந்த ரேகை அமைப்பு எவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிறார்கள். இதனால்தான் படிக்காத காலத்தில் கை ரேகையை நகல் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கை ரேகைக்கும் மரபணுக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க கூடும் என்றால் இரட்டை குழந்தைகளின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவை. 

ஆனால் இதை மட்டும் நம்பி அவரவர் வாழ்க்கையை தொலைத்தல் என்பது மிகவும் தவறு. எனவே இந்த கைரேகை, சோதிடம் எல்லாம் ஒரு குறியீடாக மட்டுமே வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. 

(தொடரும்) 

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்).