Friday 7 October 2011

வாகை சூட வா

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது? படம் வெளியாகி  அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.

இலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும்? கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.

வாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.

இந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.

'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.

அழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.

நகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.

அறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.

கிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.

ஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.

படிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளியட்டும்.

இவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.

பாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா? 

Wednesday 5 October 2011

தடைகற்கள்

பாதையில் பல கற்கள்
போதையில் விழுந்தவனை போல
தடுமாறி கிடக்கின்றன
தள்ளி வைப்பார் எவருமில்லை

கற்களால் குத்துபட்டோ வெட்டுபட்டோ
கடந்து சென்றவர்கள் மிச்சம்
கற்களை கடத்தி வைத்தவர்கள்
கொஞ்சம் கூட மிச்சமில்லை

தடைகற்கள்தனை பிறர் தாண்டிய விதம்
தாண்டுவோரை மலைக்க வைப்பதில்லை
வெட்டுபட்டும் குத்துபட்டும்
கடந்து கொண்டே இருக்கிறார்கள்

தடைகற்கள் அகற்றுவதாய்
சாமியும், சாமி துதிபாடும் பூசாரியும்
தலைவரும், தலைவர் துதிபாடும் தொண்டரும்
மனிதர்களில் குறைச்சல் இல்லை

தடைகற்கள்தனை பொடிப்பொடியாய்
உடைத்துப் போட்டாலும்
தடைகற்கள் தடைகற்களாய்
உடை உடுத்தி கொள்தல் அபாயமோ!

Saturday 24 September 2011

தூக்கு தண்டனை வேண்டாமெனும்

இதுவரை மனித அறிவிற்கு எட்டியவரை இந்த உலகத்தில் பூமியில் தவிர வேறு கிரகங்களில் ஜீவராசிகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பூமியை போலவே வேறு கிரகங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு, அந்த கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. 

இப்படியொரு அரிய வாய்ப்பினை பெற்ற பூமியில் நிம்மதியாக வாழ்ந்து விட வேண்டும் என்கிற முனைப்பு பலரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் அல்லது சிக்கி கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டுக்குள் அடங்காத வாழ்க்கையில் இப்படி வாழ்வதே பெரும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள் பலர். 

பொருளாதார சரிவு ஒருபுறம். தொலைந்து போகாத தீவிரவாத போக்கு ஒரு புறம் என இந்த பூமி தொடங்கிய தினம் முதல் இதுவரை பல இன்னல்கள் மறையவில்லை. சமுதாய மாற்றம் என்பது அத்தனை எளிதாக நடைபெறும் எனும் கனவு கனவாகவே இருக்கப் போகிறதோ எனும் அவ நம்பிக்கை வந்து போகிறது. 

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என அனைவருமே இந்த வாழ்க்கையில் மிகவும் எளிதாக தப்பிவிடுகிறார்கள். இவர்கள் அத்தனை எளிதாக பிடிபடுவது இல்லை, இவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரமே தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருவதற்கு காரணமாகும். ஹசாரே ஒவ்வொரு அதிகாரிகளின் வீடு சென்று ஊழல் செய்கிறார்களா என ஆராயவாப் போகிறார், வேண்டா வெறுப்பாக மசோதா இயற்றிய அரசு கடுமையாக நடந்து கொள்ளத்தான் போகிறதா? இப்படித்தான் மொத்த உலகமும் திண்டாடி கொண்டிருக்கிறது. 

போதை பொருள் விற்பனை என ஒரு பக்கம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கயவர்கள் கூட்டம், தெரிந்தே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இதை கண்டு கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதுதான் ஆச்சரியம். 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை நடந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அவரின் உயிர் எடுக்கப்பட்ட விதம், அவரின் உயிர் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணம் என நியாயங்களும், எதிர் விவாதங்களும் என பிரிந்து நின்றவர்கள் பற்றி நினைக்கும்போது இவர்களும் வாழ்கிறார்கள் என்கிற நினைப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். தவறு செய்ய திட்டமிட்டவர்கள், தவறு செய்ய துணை போனவர்கள் என தெரிந்தும் நியாயம், அநியாயம் என விவாதிக்கப்பட்டு சட்டம் என ஒரு தீர்ப்பு எல்லாம் சொன்ன பிறகும் அநியாயம், நியாயம் என பேசி கொண்டிருப்பவர் பற்றி நினைக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் எனும் நினைப்பு மிஞ்சி நிற்கும். 

பொது விவாதம் எல்லாம் முள்ளுக்கு முள் சரியா என்பதுதான். கொடுமைகள் செய்ய கொஞ்சமும் பயம் இல்லாத, எதைப்பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காத இந்த உலகில் உலா வந்து கொண்டிருக்கும் பல அர்த்தமற்ற பிறப்புகள் பற்றிய சிந்தனை அவசியமில்லாததுதான். 

இலங்கை மாநகரில் தீவிரவாத கொடுமைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை? அத்தனை உயிர்களை பறித்த மன சாட்சியே இல்லாத ராணுவ வீணர்கள் எந்த சவ சட்டத்திடம் அனுமதி பெற்றார்கள்? அத்தனை கொடுமைகளையும் நிறைவேற்றிய பின்னரும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கேவல பிறப்புகள் இன்றும் உலகில் உலா வருகிறதே? அந்த பிறப்புகளுக்கு  உலக அமைப்பு தூக்கு தண்டனை தர வேண்டும் என தீர்மானித்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்! ஒவ்வொருவருக்கும் தான் செய்கிற காரியத்திற்கு அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

உலகில் மிக அதிகமான மக்கள் சூழ்நிலைகளால் தவறு செய்கிறார்களாம். ஆனால் சூழ்நிலைகளை காரணம் காட்டி பிற உயிர்களை பறிக்கும் உரிமை எவருக்குமே இல்லை என வீர வசனம் பலருக்கும் அத்துப்படி. அப்படி பிற உயிர்களை பறிக்கும் கொடுமைகளை செய்ய துணை நிற்கும், பிற உயிர்களை எடுத்து தொலையும் மற்ற உயிர்கள் இவ்வுலகில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியம்தானா என்பதற்கான விவாதம் கூட தேவை இல்லை. 

திருத்தப்படாத சட்டம், திருந்த முடியாத வட்டம். 

எவராவது எழுதலாம் தூக்கு தண்டனை வேண்டுமெனும் என.