Wednesday 20 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1

ராஜ நடராஜன் said

//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.


பெங்களூரில் நானும் எனது மாமா மகளின் கணவர் பாபுவும் பேச ஆரம்பித்தபோது இரவு பத்து மணி.  நாங்கள் பேசி முடித்து உறங்க சென்றபோது அதிகாலை நான்கு மணி. இத்தனைக்கும் அவரை அப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன். இதற்கு முன்னர் எனக்கு எனது மாமா மகளை தவிர அவரது குடும்பத்தினர் எவரையும் எனக்கு தெரியாது. 

முதலில் நான் எழுதிய புத்தகங்கள் பற்றிய பேச்சுதான் ஆரம்பித்தது. அப்பொழுது அவரது வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ள தொடங்கியபோது நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். எனது புத்தகங்களை இன்னமும் அவர் வாசிக்கவில்லை, எனது புத்தகங்கள்  நான் கொண்டு செல்ல மறந்து போயிருந்தேன்.  எத்தனையோ எழுத்தாளர்கள் பற்றி சொன்னார். எனக்கு நினைவில் தற்போது இல்லை. வாசிப்பு அனுபவம் இல்லாத எனக்கு பல விசயங்கள் புதிராகவே இருக்கும்.  

அதற்கு பின்னர் அவர் தொடுத்த ஆயுதம் தான் உறக்கமில்லா நிலைக்கு கொண்டு சென்றது. அவர் கேட்ட கேள்வி இதுதான் 'எதற்கு வெளிநாட்டில் போய் வெளிநாட்டிலேயே இருக்கிறீங்க, இந்தியாவுக்கு வந்து ஏதாவது செய்யலாம்ல' கேள்வி அத்தனை சாதாரணமானது இல்லை.  வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்வி. பிறந்த மண்ணை விட்டு சொந்த பந்தங்களை விட்டு எவருக்கோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து தனது சுயத்தை பெருக்கி கொள்ளும் கொத்தடிமைகளா நாம் என ஒவ்வொருவரும் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி. எதற்காக இந்த வெளிநாடு  வந்தோம், திரவியம் தேடுவதே முழு குறிக்கோள் எனில் திரவியம் தேடிய பின்னர் ஊருக்கு அல்லவா செல்ல வேண்டும் என்கிற மனோபாவம் எத்தனை பேரிடம் உள்ளது என்பதை சுய சிந்தனை செய்து கொள்ள வேண்டிய நோக்கத்தில் எழுப்பட்ட கேள்வி அது.

எனது பதில் எப்படி இருந்து இருக்கும்? எனது பதில் கூட தடுப்பு சுவர் எழுப்பக் கூடிய கேள்வி தொனியில் தான் அமைந்தது. 'எதற்கு கிராமத்தை விட்டு பெங்களூர் வந்தீர்கள்?' 
பெங்களூரில் சில காலம் தங்கிவிட்ட நீங்கள் கிராமத்தை அல்லவா முன்னேற்ற திரும்பி சென்று இருக்க வேண்டும். எனது கேள்வி அவருக்குள் சில சலனங்களை ஏற்படுத்தி இருக்கலாம். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என அவர் சொன்னபோதே நல்லதொரு கலந்துரையாடலுக்கு தயாராகிறார் என்றே புரிந்து கொண்டேன். 'வெளிநாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே இந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள்,  'உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போகமாட்டீர்களா? என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. 'எனது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு போகமாட்டேன்' என்றார். 

அவரது எண்ணம் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்பவர்கள் தங்களது அன்னை, தந்தையை அலைகழித்து விடுகிறார்கள். பெற்றவர்களை பெரிதும் பாடாய் படுத்துகிறார்கள் என ஓரிடத்தில் இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தும் எத்தனை கவிதைகள், எத்தனை கதைகள்? அவரது ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதே வேளையில் எப்பொழுது ஒருவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாரோ அப்பொழுதே அவரின் பெற்றோர்கள் அலைக்கழிய தொடங்கி விடுகிறார்கள் என்பதும் மறுக்கவியலா ஒன்று. பெற்றோர்களுடன் உடனிருந்தே பெற்றோர்களை அலைக்கழிக்கும் குழந்தைகளை இன்றல்ல பல வருடங்களாகவே காண்கிறோம். முதியோர் இல்லங்கள் இப்பொழுது மட்டுமே அதிகம் அல்ல. எப்பொழுதும் அதிகம் தான். முன்னால் தெரியாமல் நடந்தது, இப்பொழுது பலருக்கும் தெரிந்தே நடக்கிறது. 

பெற்றவர்கள் மனதில் நினைக்கும் கவலைகள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது. அதற்காக அவர்கள் படும்பாட்டினை கட்டுரையில் வடிக்கவியலாது. பிள்ளைகள் நன்றாக இருந்துவிட்டால் தங்களை தங்கள் விருப்பங்களை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் எனும் அதிக எதிர்பார்ப்புள்ள கவலைகள் ஒருபுறம். இங்குதான் பெற்றவர்கள் வேதனைப்படுகிறார்கள், விம்முகிறார்கள். பிள்ளைகள் அலட்சியம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் தராதரம் உயரும்போது, வசதிகள் வாய்ப்புகள் பெருகும்போது தேவைகள் வித்தியாசப்படுகின்றன. அலட்சிய போக்கு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. 

இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் சென்று வெளிநாட்டில் இருப்பது எதற்கு. எனது பார்வை உங்களது பார்வையாக இருக்கலாம், இல்லாதும் போகலாம். நான் உங்கள் பார்வையை என்னில் பொருத்த வேண்டிய அவசியமோ, எனது பார்வையை உங்களுக்கு மாட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமோ இங்கு இல்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன். 

எனக்கு சிறு வயதில் ரஷ்யா என்றால் கொள்ளை பிரியம். அந்த நாடு மனதில் பதிந்ததன் நோக்கம் என்னவெனில் ரஷ்யா இந்தியாவின் நட்புறவு நாடு என அறிந்து கொண்டதுதான். அதன் காரணத்தினால் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். கம்யூனிச சிந்தனைகளை புரட்டி பார்த்த தருணங்கள் அவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இணைத்து கொண்ட நேரங்கள் அவை. என்னிடம் வெளிநாடு செல்லும் மோகம் இல்லை எனினும் ரஷ்யா எனும் ஒரு தாகம் இருந்தது. அதுவும் பதினொன்னாவது படிக்கும் போது முற்றிலும் தொலைந்து போனது. 

அதற்கு பின்னர் எனது மூத்த சகோதரியை லண்டனிலிருந்து உறவுக்காரர்கள், இவர்கள் சிங்கப்பூரில் பல வருடங்கள் இருந்த பின்னர் லண்டன் வந்தவர்கள்,  பெண் பார்க்க வந்தார்கள். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் மறுப்பு தெரிவிக்க எனது அன்னை மட்டும் போராடி இருக்கிறார். போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறார். பெண் பிள்ளையை தொலை தூரத்துக்கு எதற்கு அனுப்ப வேண்டும் என இருபத்தி ஆறு வருடங்கள் முன்னால் ஏற்பட்ட பலரின் உள சிக்கலை இல்லாதவாறு பண்ணியதில் என் அன்னைக்கு அதிகம் பங்கு உண்டு. 

எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை எல்லாம் இல்லை. வெளிநாடு என்றால் எப்படி இருக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. அதைவிட எனக்கு இந்தியாவில் பிரதமராகும் கனவு ஒன்று இருந்தது. நான் கல்கத்தாவில் பயின்றபோது, டில்லியில் ஆராய்ச்சிக்கு என இருந்த போது இந்தியா என்றால் எனக்கு அத்தனை பிரியம், அதுவும் எனது கிராமத்திற்கு செல்வதென்றால் எனக்கு அத்தனை ஆசை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது எனக்கு பிடித்தமான வேலை. நேரம் கிடைக்கும் போது விவசாயம் செய்வது உண்டு. எனது கனவுகளின் நாயகனாக வாசன் எனும் கதாபாத்திரத்தை நுனிப்புல்லில் வைத்தேன். 

இப்படியெல்லாம் இருக்க நான் வெளிநாட்டுக்கு படிக்க போகவேண்டுமென ஒரு பொய் வேடம் தரிக்க உட்படுத்தபட்டேன். நான் அதற்காக எழுதிய தேர்வு ஒன்றே ஒன்றுதான். எந்த வெளிநாட்டு கல்லூரிக்கும் விண்ணப்பம் போடவில்லை. எனக்கு நமது நாட்டில் படித்து, நமது நாட்டில் இருந்து விடத்தான் கொள்ளை ஆசை. 

(தொடரும்) 

அடுத்த பாகத்தில் முடித்து விட முயற்சிக்கிறேன். 

அடியார்க்கெல்லாம் அடியார் 29

கதிரேசன் அடுத்ததினமே ஈஸ்வரியைச் சந்தித்தான். ''என்ன விசயம்?'' என்றாள் ஈஸ்வரி. அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளைக் கட்டிப்பிடித்தான் கதிரேசன். ஈஸ்வரி திக்குமுக்காடிப் போனாள். ''என்ன காரியம் செய்ற?'' என அவனை புறந்தள்ளி கோபம் கொண்டாள் ஈஸ்வரி. 

''எனக்காக சிவனை உதறிட்டியா?'' என்றாள். கதிரேசன் அந்தக் கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ''ம்'' என்றான் கதிரேசன். ''உன் கொள்கையைத் தூக்கி எறிஞ்சிட்டியே, என்னைத் தூக்கி எறிய உனக்கு எவ்வளவு நேரமாகும்?'' என்றாள். கதிரேசன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். 

''உன்னோட எப்படி என்னால வாழ்க்கையை நடத்த முடியும்'' என்று சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் அவளையே உற்று நோக்கினான். ''நேத்துதான் என்னை தொடரவேணாம்னு சொன்னேன், இன்னைக்கு என்னை வந்து என்னோட அனுமதி இல்லாம கட்டிப்பிடிக்கிற'' என்றாள் மேலும். ''என்ன இது விளையாட்டு'' என்றான் கதிரேசன். ''அந்த சிவன்கிட்டயே கேட்டுக்கோ'' எனச் சொல்லிவிட்டுச் சென்றாள். கதிரேசன் நிலையாய் அங்கேயே நின்றான். மனம் ஈஸ்வரியின் வார்த்தைகளை நம்ப மறுத்தது. 

கதிரேசன் அமைதியாகிப் போனான். ஈஸ்வரியைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோது பேசிட நினைந்து செல்கையில் அவள் பேசாதே போனாள். ஒருநாள் அவளது கரங்களைப் பிடித்து நிறுத்தினான். 

'கல்லும் உன் நெஞ்சோ' என்றான் அவன். ''சொல்லும் சொல்லில் மனம் வை'' என்றாள் அவள். ''கல்லும் உன் நெஞ்சோ'' என்றான் மீண்டும். ''அருணகிரிநாதர் போல், பட்டினத்தார் போல் ஆவாயோ'' என்றாள். கதிரேசன் பதறினான். ''ஏன் இப்படி பேசுற'' என்றான். ''நீதானே தமிழ்ப்புலவர் மாதிரி கல்லும் உன் நெஞ்சோனு கேட்ட'' எனச் சிரித்தாள். ''அதில்லை, அருணகிரிநாதர், பட்டினத்தார்னு சொன்னியே'' என்றான். 

''குடும்ப வாழ்க்கையில ஈடுபட்டுட்டு சிவனேனு நீயும் போயிட்டா என்ன நியாயம்'' என்றாள். ''திருப்புகழ் கிடைச்சது, தத்துவம் சொன்னது'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கை தொலைஞ்சது'' என்றாள். கதிரேசன் அவளை கட்டிப்பிடித்தான் மீண்டும். ''என்னை ஏத்துக்கோ'' என்றான். ''எனக்காக எதுவும் செய்வியா?'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''என்னை வந்து பொண்ணு கேளு'' எனக் கூறிவிட்டுப் போனாள். 

மாதங்கள் கடந்தது. ஈஸ்வரிக்கு கல்லூரிப் படிப்பும் முடிந்தது. கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு, கல்லூரிப் படிப்பை முடித்திருந்த வைஷ்ணவி தனது அப்பா அம்மாவுடன் கல்யாணத்திற்கு முன் தினமே வந்திருந்தாள். அவளிடம் ''மதுசூதனன் வரலையா'' எனக் கேட்டான் கதிரேசன். ''தெரியாது'' என்றே பதில் சொன்னாள் வைஷ்ணவி. 

மதுசூதனனிடம் தொடர்பு கொண்டபோது ''சைவத் திருமணத்திலெல்லாம் கலந்து கொள்ற வழக்கம் எனக்கில்லை'' என கோபமாகப் பேசி இணைப்பைத் துண்டித்தான். கதிரேசன் கலக்கமுற்றான். வைஷ்ணவியிடம் கேட்டபோது ''சிலர் திருந்தறதைப் போல நடிப்பாங்க, ஆனா திருந்தவே மாட்டாங்க, ஏதாவது ஒரு காரணம் வைச்சிட்டே இருப்பாங்க'' என்றாள்.

''அப்படின்னா...'' என்ற கதிரேசனிடம் ''நீ கல்யாண மாப்பிள்ளை, இப்ப அவனைப் பத்தி எதுக்கு, சந்தோசமா இரு, நான் சந்தோசமா இருக்கேன்'' என்றாள். ''வேலை?'' என்றான் கதிரேசன். ''இந்த ஊரில இருக்கிற கம்பெனியில தான் வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன், நாலு நாள் கழிச்சி நேர்முகத் தேர்வு'' என சொன்னாள் வைஷ்ணவி. ''இங்கயா?'' என ஆச்சரியமாகக் கேட்டான். ''ம் கிடைக்குதானுப் பார்ப்போம்'' என்றாள் வைஷ்ணவி. ''ஆச்சர்யமா இருக்கு'' என்றவன் ஈஸ்வரியிடம் வைஷ்ணவியை அழைத்துச் சென்றான். வைஷ்ணவியை முதன்முதலாய் பார்த்த ஈஸ்வரி அன்புடன் அவளை ஆரத் தழுவினாள். வைஷ்ணவி ஈஸ்வரியின் அன்பில் கண்களில் ஈரம் கொண்டாள்.



சிறிது நேரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வைஷ்ணவி கல்யாண மண்டபத்தில் தங்களுக்கான விடுதி அறையில் தங்கிக்கொள்ள விடைபெற்றுச் சென்றாள். ''ரொம்ப அழகான, அறிவான பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா'' என்றாள் கதிரேசனிடம். ''ஆமா, எனக்கு சந்தோசமே'' என்றான் கதிரேசன். ''உன்னை மாதிரி எனக்கும் ஒரு வாழ்க்கை அமையனும்னு எனக்காக சிவனை வேண்டிக்கோ'' என்றாள் வைஷ்ணவி. ''நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும், இதிலென்ன சந்தேகம்'' என்றான் கதிரேசன். ''ம்ம் நான் ரூமுக்குப் போறேன், நீ வீட்டுக்குப் போ'' எனச் சொல்லிவிட்டு நடந்தாள். ''இரு நானும் வரேன்'' என கதிரேசனும் அவளுடன் சென்றான். 

விடுதி அறையில் வைஷ்ணவியின் தாயும் தந்தையும் இருந்தார்கள். கதிரேசனை தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள் வைஷ்ணவி. கதிரேசனிடம் நன்றாக பேசியவர் ''எவ்வளவோ தூரம் தள்ளி இங்க வேலைக்கு வரனும்னு விண்ணப்பிச்சிருக்கா, நாலு நாளு இங்கதான் இருக்கனும்'' என்றார் அவர். ''நாளைக்கு மட்டும் இங்க இருங்க, அப்புறம் எங்க வீட்டுல தங்கிக்கிரலாம்'' என்றான் கதிரேசன். ''அதுக்கு சொல்லைப்பா, எங்களை விட்டு இவ்வளவு தூரம் இவ பிரிஞ்சி வரனுமானுதான், நாலு வருசம் படிக்கிறேனு தனியா போனா'' என்றார் மேலும். ''கவலைப்படாதீங்க சார், நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல, வைஷ்ணவியப் பார்த்துக்கிறோம்'' என்றான் கதிரேசன். அவ்வார்த்தைகளைக் கேட்டு சந்தோசம் கொண்டார்கள். 

கதிரேசனுடன் படித்த சில நண்பர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். பலர் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். செல்லாயி கதிரேசனிடம் ''எங்கப்பா இவ்வள நேரம் போயிருந்த, தலைக்கு மேல வேலை இருக்கு'' என்றார். ''மாமா வரலையா?'' என்றான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னைக்கு உனக்குப் பொண்ணு தரமாட்டேனு சொன்னானோ, அவன் எப்படி வரப்போறான்'' என்றார். ''நம்ம ஊருல இருந்து காலையில வரும்போது அவங்களோடவாவது வரச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். ''உன் தாத்தாகிட்ட போய் கேளு அவன் என்ன சொன்னானு, அண்ணனாம் அண்ணன்'' என்றவர் ''நீ எல்லாம் சரியா இருக்கானு பாரு, நிக்காதே'' என செல்லாயி பரபரப்புடன் திரிந்தார். 

''என்ன தாத்தா, மாமா வரலையா?'' என கட்டிலில் படுத்திருந்தவரிடம் போய்க் கேட்டான். ''வரலைனு சொல்லிட்டான்'' என்றவரிடம் ''என்னவோ சொன்னாராமே'' எனக் கேட்டான் கதிரேசன். ''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்றவரிடம் மீண்டும் மீண்டும் கேட்கவே ''சன்யாசம் போனவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைச்சா நிலைக்குமானு சொல்லி உன் அத்தையையும் போக வேணாம்னு தடுத்திட்டான், அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்துட்டோம்'' என்றார் அவர். கதிரேசனின் மனம் கோபம் கொண்டது. ''அந்த பிள்ளை கூடவா வரலை'' என்றான் கதிரேசன். ''தெரியலைப்பா, அது வரனும்னுதான் நிக்குது'' என்றார். 

கதிரேசனுக்குத் தூக்கமே வரவில்லை. சன்யாசம் போனேனா? என யோசனையிலே தூங்கிப்போனான். அதிகாலையில் புளியம்பட்டியில் இருந்து கல்யாணத்திற்கு பலர் வந்து சேர்ந்தார்கள். லிங்கராஜூவின் மகளும், அவளது அம்மாவும் கல்யாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். செல்லாயி வீட்டினை விசாரித்து வீட்டினை அடைந்தார்கள். அவர்களைக் கண்ட செல்லாயிக்கு மனம் மிகவும் சந்தோசமானது. ''வறட்டு கெளரவம் பிடிச்ச மனுசனை எப்படி திருத்துறது'' என சலித்துக் கொண்டார். அவர்களைக் கண்ட கதிரேசன் மிகவும் மகிழ்ந்தான். லிங்கராஜூவைப் பத்தி எதுவுமே கேட்கவில்லை. 

கல்யாண மண்டபம் நிறைந்து இருந்தது. பட்டு சட்டை பட்டு வேட்டியில் கதிரேசனைப் பார்த்த வைஷ்ணவி ''என் கண்ணே பட்டுடும் போலிருக்கு'' என சொன்னாள். ''சாப்பிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் பிரமாதமான சாப்பாடு, என்ன ராத்திரிதான் தூங்க முடியலை, பையனுக ஒரே சத்தம், விளையாட்டுனு அலங்கோலப் படுத்திட்டாங்க, இதுபோல நேரம் தானே ரொம்ப சந்தோசமா இருக்கும்'' என்றவள் ''நெத்தி முழுசுமா திருநீறு பூசியிருக்க'' என ஆச்சரியமாகக் கேட்டாள். ''உடம்பு பூராதான் பூசியிருக்கேன்'' என்றான் கதிரேசன். ''சிவனை விடலையா?'' என்றாள். ''விடமுடியாத உறவு அது'' எனச் சிரித்துச் சொன்னவன் ''வா மேடையில எங்கப் பக்கத்துலயே இரு'' என்றான் கதிரேசன். ''அதெல்லாம் வேண்டாம், நான் கீழேயே இருக்கேன் அப்பதான் உங்க ரெண்டு பேருடைய வெட்கப்படற முகத்தைப் பார்த்துட்டே இருக்க முடியும்'' எனச் சொல்லிவிட்டு தனது தாய் தந்தையருடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள். 

புரோகிதர் வந்திருந்தார். மேடையில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சற்று நேரத்திற்கெல்லாம் ஈஸ்வரி வந்து அமர்ந்தாள். சேலை மாற்றிவரச் சொல்லி அனுப்பினார்கள். பின்னர் இருவரும் மேடையில் அமர்ந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கியது. ஈஸ்வரியை தனது மனைவியாக்கிக் கொண்டான் கதிரேசன், கதிரேசனை தனது கணவனாக்கிக் கொண்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரியின் முகத்திலும், கதிரேசனின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் யாகம் வளர்த்த தீயினால் வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது. செல்லாயி பேரானந்தம் கொண்டார், தனது துணை உடனிருந்திருக்கக் கூடாதோ என நினைத்தார்.

ஒவ்வொருவரும் பரிசு பொருட்களை வழங்கிச் சென்றார்கள். சிவசங்கரன் வேண்டாம் என மறுக்க இயலாது இருந்தார். வைஷ்ணவி மேடைக்கு வந்தபோது ஈஸ்வரியின் அருகில் நிற்கச் சென்றவளை ஈஸ்வரி வைஷ்ணவியை கதிரேசனின் பக்கத்திலேயே நிற்கச் சொன்னாள். புகைப்படங்களும், அசைபடங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மேடையிலேயே இருந்த கதிரேசனின் அத்தை கதிரேசனுக்கு சங்கிலி ஒன்றை அணிவித்தார். ஈஸ்வரியின் கன்னங்களைத் தடவியவர் ஈஸ்வரிக்கும் ஒரு சங்கிலியை அணிவித்தார். உறவு ஒன்று விலகிப் போகிறதே என்கிற வருத்தமெல்லாம் அங்கே இல்லை. எல்லாருமே உறவுகள் தான் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. 

கல்யாணம் மிகவும் சிறப்பு எனவும், கல்யாணச் சாப்பாடு பிரமாதம் என அனைவரும் பாராட்டிச் சென்றார்கள். மணமக்கள் புளியம்பட்டிக்கு சென்றார்கள், வைஷ்ணவியும் உடன் சென்றாள். பின்னர் இரவு கதிரேசனின் சங்கரன்கோவிலில் உள்ள புதிய வீட்டிற்கு மணமக்கள் திரும்பினார்கள். வைஷ்ணவி தனது பெற்றொருடன் சிவசங்கரன் வீட்டில் தங்கினாள்.

கதிரேசனின் வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்காக அவனது அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
''நீங்க எப்பவும் பாடற பாட்டு பாடலையே?'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன புதுசா மரியாதை?'' என்றான் கதிரேசன். ''நீங்க சிவனோட அடியார்'' என்றாள் ஈஸ்வரி. ''நீயும் தான் சிவனோட அடியார்'' என்றான் கதிரேசன். ''பாடுங்க'' என்றாள் ஈஸ்வரி. ''மரியாதையா இன்னும்'' என்றான் கதிரேசன். கதிரேசனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தவள் ''பாடு'' என்றாள். 

'உமையாளை ஒருபாகமாய் உன்னில் கொண்டோனே ஈசனே
இமையகலாதினி எண்ணக்கமலத்துடன் இணைந்து விட்டாள்
கலங்கும் வாழ்க்கையை ஒருபோதும் ஏற்படுத்திட வல்லேன்
துலங்கும் அன்றோ சொல்சிவனே'

பாடலைக் கேட்டவள் 'பாடலுக்கு என்ன பரிசு தெரியுமா?'' என்றுக் கேட்டுக்கொண்டே கதிரேசனின் இதழ்களில் அன்பைப் பதித்தாள். அன்பு எப்பொழுதுமே தித்தித்துக் கொண்டே தானிருக்கும். 



(தொடரும்) 

Tuesday 19 October 2010

நுனிப்புல் பாகம் 2 (19)

19. இரகசியங்கள் அவசியமில்லை

தெய்வீகம்பாள் மாதவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். மாதவி தான் செய்ய விருப்பப்படும் ஆராய்ச்சி குறித்த குறிப்புகளை தெய்வீகம்பாளிடம் தந்தாள். அனைத்தையும் படித்தப் பார்த்தபின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஓரிரு வாரங்களில் சொல்வதாக தெய்வீகம்பாள் சொன்னார். 

தெய்வீகம்பாள் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். நரம்பியல் துறையில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவருக்கு 52 வயதாகிறது. கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமே தன்னை முடக்கிக்கொண்டார். ஆராய்ச்சி என இதுவரை எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. மாதவி தன்னை தொடர்பு கொண்டு தான் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என சொன்னவுடன் ஆர்வத்துடன் மாதவிக்கு உதவுவதாக கூறினார். 

''
உங்களுக்குப் பிடிச்சிருந்தா நாம இங்கே செய்யலாம்ல மேடம்''

''
இல்லை மாதவி, நாம செய்ய முடியாது, வேற ஒரு முக்கியமான ஒருத்தரை நான் உனக்கு அறிமுகப்படுத்துறேன், அவரோட சேர்ந்து நீ செய்யலாம், எனக்கு இதுல தனிப்பட்ட ஆர்வம்னு எதுவும் இல்லைனு உன்கிட்ட முன்னமே சொல்லி இருக்கேன்''

''
நீங்களும் உடனிருந்தா நல்லா இருக்கும்னு தோணுது, எதுக்கும் நீங்க படிச்சிட்டுப் பிறகு சொல்லுங்க மேடம்''

''
தாராளமா செய்யலாம், உனக்கு என்ன உதவினாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்''

''
தேங்க்ஸ் மேடம்''

மாதவி நம்பிக்கையுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள். மீண்டும் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்ததும் தேவகி கேட்டாள்.

''
போன விசயம் என்ன ஆச்சு மான்?''

''
படிச்சிட்டு சொல்றேனு சொல்லியிருக்காங்க தேவி''

''
இன்னும் இரண்டு வருசம் வெயிட் பண்ணலாம்னு சொன்ன கேட்க மாட்ற''

''
இப்பவே ஆரம்பிச்சாதான் நாம படிச்சி முடிக்கிறப்போ சரியா இருக்கும்''

''
உன்னோட ஐடியாவை வேற யாராச்சும் எடுத்துட்டா என்ன பண்ணுவ''

''
நல்லபடியா நடக்கனும்னு வேண்டிப்பேன்''

''
உனக்கு வரப்போற பேரு வேற யாருக்காவது போயிருமே மான்''

''
தேவி, உலகம் நல்லா இருந்தாலே அதுவே எனக்குப் போதும், பேரு எல்லாம் வாங்கி என்ன செய்யப் போறேன், மாதவினு ஒரு பேரு இலக்கியத்துல மிகவும் பிரபலம் தெரியுமா''

''
கிண்டலா மான்?, நீ தப்பு பண்ற''

''
இருக்கட்டும் தேவி, அப்படி நீ சொல்றமாதிரி யாராவது கையில கிடைச்சி ஆராய்ச்சி செஞ்சா உலகத்துக்குத்தானே நல்லது''

''
உலகம் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் உன் காரியத்தைப் பாராட்டப் போறதில்லை மான், உன்னை ஏமாளினுதான் சொல்லும்''

''
தேவி, அப்படிப் பார்த்தா எல்லாருமே ஏமாளிங்க தான்''

''
மான், என் அண்ணனை நீ ஏமாளியாக்கிறாதே''

''
யேய் தேவி, என்ன திடீருனு, கவலைப்படாதே என் மாமாவை நான் எதுக்காகவும் ஏமாளியாக்கமாட்டேன்''

தேவகி மாதவியை நோக்கி புன்னகை புரிந்தாள். மாதவியும் புன்னகை புரிந்தாள். வகுப்பறை மிகவும் சுவாராஸ்யமாகவே சென்றது. மாதவியின் ஆராய்ச்சியை பற்றி கிண்டலும் கேலியும் ஆச்சரியமும் நிறைந்தே அன்றைய தினம் நகர்ந்து கொண்டிருந்தது. மாதவி இதற்கெல்லாம் சற்றும் கவலைப்பட்டவளாகவோ சந்தோசப்பட்டவளாகவோ தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. 

மாலை, விடுதி வந்ததும் வெகுவேகமாக பெருமாள் தாத்தா எழுதிய கடிதம்தனை ஒரு ஓரத்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள் மாதவி. அந்த விடுதி அறையில் மாதவியுடன் தங்கி இருக்கும் தேவகி மற்றும் தோழி பிரேமாவும் சற்று தாமதமாகவே வந்தார்கள். மாதவி ஆர்வத்துடன் ஏதோ படித்துக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மாதவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என விளையாட வெளியே சென்றார்கள். மாதவி இதையெல்லாம் கவனித்தவள் போல் தெரியவில்லை. பெருமாள் தாத்தா கடிதம் பரப்பரப்பாக இருக்கும் என்றே மாதவியின் முகம் காட்டியது. அனைத்து பக்கங்களையும் படித்து முடித்தவள் கடிதம்தனை பத்திரப்படுத்தினாள். 

அறையை மூடிவிட்டு விளையாடச் சென்றாள். ஆனால் மனம் விளையாட்டில் லயிக்கவில்லை. மரத்தின் கீழ் அமர்ந்தவள் மிகவும் யோசிக்க ஆரம்பித்தாள். திருமாலிடம் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வேண்டிய நிர்பந்தம் பெருமாள் தாத்தாவுக்கு ஏன் வந்தது? அதுவும் மரணம் அடையப்போவது தெரிந்து கொண்டது போல எழுதியிருப்பது குறித்து நினைத்துப் பார்த்தாள். பார்க்காத பெருமாள் தாத்தாவின் முகம் மனதில் வந்து போனது. 

பெருமாள் தாத்தா எழுதிய கடிதத்தின் நகல் இரகசியம் தொலைத்து இருந்தது. மாதவியை நோக்கி பிரேமா வந்தாள். மாதவியை விளையாட வருமாறு அழைத்தாள். ஆனால் மாதவி இன்று முடியாது என சொல்லவே, இப்போழுதே ஆராய்ச்சி பற்றிய அக்கறையா என சொல்லிவிட்டு பிரேமா சென்றாள். 

பிரேமா நாராயணபுரத்தைச் சேர்ந்தவள். அவளது குடும்பம் மிகவும் எளிமையானது. இந்த கல்லூரியில் சேரும்போது முதன் முதலில் அவளது எண்ணத்தை ஈர்த்தவளாக மாதவி தென்பட்டாள். அந்த நிமிடம் மாதவியிடம் நட்பு கொண்டவள்தான் இதுவரை நட்பிற்கு அர்த்தமாகவே இருந்து வருகிறாள். குளத்தூர் எல்லாம் பிரேமா சென்றதில்லை. கல்லூரி விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் மாதவியுடன் செல்ல வேண்டும் என சொல்வாள், ஆனால் தனது வீட்டின் நிலைமையை நினைத்துக்கொண்டு நேராக அவளது ஊருக்குச் சென்று விடுவாள். குளத்தூரிலிருந்து சாத்திரம்பட்டி செல்லும் வழியில் தான் நாராயணபுரம் இருக்கிறது. 

மாதவி பெருமாள் தாத்தா எழுதிய ஒரு முக்கியமான விசயத்தை மனதில் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். மீண்டும் விடுதி அறைக்கு எடுத்துச் சென்று அந்த பக்கத்தைப் பார்த்தாள். 

அதில் கீழ்வருமாறு எழுதி இருந்தது.

'
மறுபிறப்பு என்பதில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. தர்மம் சத்தியம் நேர்மை என வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களே முக்தியடையவர் எனவும் மறுபிறப்பு இல்லை என்பதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. மீண்டும் பிறக்க வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே எனக்கு உண்டு. அதற்காக தீய வழிமுறையை பின்பற்றி மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. எனது உயிரை என்னிடம் இருந்து என்னால் நீக்கிட முடியும் ஆனால் எனது உயிரை மீண்டும் பிறக்க வைத்திட என்னால் இயலுமா என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது நான் வணங்கும் நாராயணன் என்னை ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லுமாறு சொல்வதாகவே ஒருநாள் உணர்ந்தேன். 

அப்பொழுது நான் இருந்த ஊர் எனது முப்பாட்டன்கள் இருந்த சாத்திரம்பட்டியே, அது உங்களுடைய ஊரும் கூட. நான் உணர்ந்ததன் விளைவாக சாத்திரம்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். அங்கே ஆண்டாள் ஆலயத்தில் எனது வாழ்க்கையின் சாரதியாக பார்த்தசாரதி என்பவனைக் கண்டேன். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு விபரீத ஆசை இருப்பதாக சொன்னான். இத்தனை வயதாகியும் திடமாக இருக்கும் என்னை மீண்டும் உருவாக்க வேண்டும் என சொன்னவன் பார்த்தசாரதி. அவனது நண்பனான ஆண்டாளை நேசிக்கும் டாக்டர் விஷ்ணுப்பிரியனை எனக்குக் காட்டினான்.

 டாக்டர் விஷ்ணுப்பிரியன் என்னிடம் ஒரு வாக்குறுதியும் தந்தான். என்னை மட்டும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் என்னுடன் மற்றொரு குழந்தையும் உருவாகும்படி பார்த்துக்கொள்வதாக சொன்னான். நான் இறந்தபின்னரே என்னை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவனிடம் சொன்னேன். எனவே நான் இறந்த செய்தி நீங்கள் அறிந்த பின்னர் டாக்டர் விஷ்ணுப்பிரியனை சென்று சந்தித்து என்னிடம் வாக்குறுதி கொடுத்தபடி நடந்து கொண்டானா என உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில் எனது செல்களை அவனிடம் இருந்து பெற்றுக்கொண்டு என்னை உருவாக்க உரிய முயற்சியைச் செய்ய வேண்டும். இது உங்களுக்கு மட்டுமே நான் சொல்வது. வேறு எவரிடமும் நானாக சொல்லப்போவது இல்லை. நீங்கள் விருப்பப்பட்டவர்களிடம் நான் இறந்த பிறகு சொல்லலாம்' 

மாதவி கண்களை மூடி அமர்ந்தாள். தேவகியும் பிரேமாவும் களைப்புடன் உள்ளே வந்தார்கள். மாதவியை இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 

(
தொடரும்)