Tuesday 13 July 2010

ஒரு மருந்தை உருவாக்க

எந்த நோய் எது காரணி
நொந்து போன வாழ்க்கை இது.

வந்த நோய் பல காரணி
நாய் படும் பாடு இது

எந்த மூலக்கூறு எப்படி
வேலை செய்யும்
கண்டு கண்டு பெண்டு நிமிரும்

பத்தாயிரம் மூலக்கூறுகள்
உருவாக்கிய பின்னர்
அதில் பத்து கூட தேறாது

செலவழிச்ச பணம் கணக்கு
பார்த்தா உலை வைக்க மனசிருக்காது

செல்கள், திசுக்கள் என
செல்லரிக்காத ஆய்வு
சொல்லில் வைச்சாலும்
புரியுமோ இந்த நோவு

விலங்குகளில் வில்லங்கமில்லாம
நல்ல முடிவு வந்தாலும்
மருந்தாகும் நிலை நிலையில்லை

மூணு கட்ட ஆய்வு  மனிசரிடம்
தாண்டி வந்தப்பறமும்
முழுசும் உறுதியில்லை

ஒரு பிள்ளை பெற
பத்து மாசம்
ஒரு மருந்து உருவாக்க
பத்து வருஷம்

வணிகம் தான் பண்றோம்
வாய் கிழிய பேசு
எங்க உசிரும் இதுல
போகிறதை ஒரு
ஓரமாவாச்சும் சொல்லு

வருமுன் காப்போம்னு
ஒரு வழி செஞ்சி வைச்சா
அதை வக்கனையா எழுத
காசா பணமா!

நுனிப்புல் (பாகம் 2) 12

12. திட்டத்தில் தொய்வில்லை


வீட்டிற்கு வந்ததும் தாயிடமும் தந்தையிடமும் எதுவும் பேசாமல் இருந்தான் வாசன். தந்தை இராமமூர்த்தி வாசனிடம் ஜாதக நோட்டுகளை தந்து பத்திரப்படுத்தச் சொன்னார். வாசன் மறுபேச்சு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான். தாய் இராமம்மாள் வாசனிடம் பேசினார்.

''என்னப்பா கோவமா இருக்கியா?''

''இல்லம்மா''

''பின்ன ஏன் ஒருமாதிரி அமைதியா உட்கார்ந்து இருக்க, வாப்பா சாப்பிடு''

''இல்லம்மா பசிக்கல, நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்க, சாத்திரம்பட்டி எங்கம்மா இருக்கு''

''தெரியாதுப்பா, உங்கப்பாகிட்ட கேளு''

தந்தை குறுக்கிட்டார்.

''சாத்திரம்பட்டியா? சத்திரம்பட்டியா?''

''சாத்திரம்பட்டி''

''சத்திரம்பட்டிதான் தெரியும், சாத்திரம்பட்டி தெரியாது, பெருமாள் தாத்தாவோட முற்பாட்டனார் எல்லாம் அந்த ஊரில தான் இருந்தாங்கனு அவர் சொன்னதா நீதான சொன்ன''

''ம் சொன்னேன்பா ஆனா அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சிக்கிறனும்னு அக்கறை அப்போ இல்ல, இப்போ வந்திருக்குப்பா''

''அப்படி என்ன அக்கறை? பொண்ணு எதுவும் அங்க இருக்கா''

''பொண்ணு இருந்தா மாதவியை என்ன செய்றது''

தாய் சிரித்துக்கொண்டே சொன்னார்.

''உனக்குனு மாதவி இருக்கறப்ப, அப்படி அந்த ஊரில பொண்ணு இருந்தா அந்த பொண்ணைத்தான் வேண்டாம்னு சொல்லனும்''

''இப்போ எதுக்கு வீண் பேச்சு, நான் காலையில வியாபாரம் பண்ண போகனும், நீ சாப்பிட வரியா இல்லையா வாசா''

''எனக்கு பசிக்கலைப்பா, நீங்க சாப்பிடுங்க''

வாசன் மாடிக்குச் சென்றான். ஜாதக நோட்டுகளை பத்திரப்படுத்தினான். மாதவி எழுதிய 'உருகும் உயிர்' கதையை எடுத்துப் பார்த்தான். ஒரு சில பக்கங்கள் புரட்டினான். அவள் எழுதியிருந்த கதையில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு ஒரே ஜாதகம் எனக் குறிப்பிட்டிருந்ததைத் தேடினான். பக்கம் சரியாக ஞாபகத்துக்கு இல்லாமல் போனதால் கதையை மூடினான். மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவன் தான் சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு கேசவன் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லாமல் நேராக பெரியவர் வீட்டினை நோக்கி நடந்தான்.

பெருமாள் கோவிலில் இருந்து வந்த விஷ்ணுப்பிரியன் மந்தையில் வாசன் முன்னால் எதிர்பட்டார்.

''என்ன வாசன் பதட்டமா இருக்கிறீங்க, கேசவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன், ரொம்ப சந்தோசப்பட்டார், பூங்கோதைக்கும் உண்மையை சொல்லிட்டேன், ஆமா உங்களை கொஞ்ச நேரமா ஆளையே காணோமே''

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க நீங்க''

''நல்ல காரியம்தான் பண்ணி இருக்கேன் வாசன், அவங்களுக்குனு ஒரு குழந்தை பிறக்கும் அதுதானே சந்தோசம்''

''தயவுசெய்து இதைப்பத்தி கேசவனோட அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்லிராதீங்க டாக்டர்''

''நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க, பெரியவங்ககிட்ட கட்டாயமா சொல்லனுமே, அவங்களை ஏமாத்தி நடத்துன கல்யாணம்தானே, அவங்களை ஏமாத்தலைன்னு கட்டாயம் சொல்லனும்''

''பெரிய பிரச்சினை பண்ணனும்னு முடிவோடதான் இருக்கீங்களா டாக்டர்''

''பிரச்சினையா, எது பிரச்சினை? உண்மையை சொன்னது பிரச்சினையா''

''ஏதாவது பண்ணுங்க, என்னை விடுங்க''

''நீங்கதானே எல்லாத்துக்கும் காரணம், நீங்க கேசவன்கிட்ட சொல்லாம இருந்து இருந்தா கல்யாணம் நடந்துருக்குமா''

''இப்ப என்ன பண்ணனும் சொல்லுங்க டாக்டர்''

''என்னோட வாங்க''

இருவரும் கேசவன் வீட்டினை அடைந்தார்கள். கேசவனின் வீட்டின் ஒரு அறையில் பார்த்தசாரதியும் சுபாவும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் அவர்களைப் பார்த்தார்.

''இப்ப எதுக்கு நீங்க இரண்டு பேரும் சண்டை போடுறீங்க, இரவில அமைதியா இருக்கப் பழகுங்க''

''எல்லாம் உங்களால வந்ததுங்க, யாருக்குத்தான் தூக்கம் வரும்''

சுபாவின் பதிலைக் கேட்டவுடன் விஷ்ணுப்பிரியன் சிரித்தார். ஜோதி அமைதியாய் அமர்ந்து இருந்தார். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பக்கத்து அறையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். மணமக்கள் மாடி அறையில் மகிழ்வுடன் இருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் சொன்னார்.

''இப்போ என்ன நடந்து போச்சு, நீங்க பேசுறது மாப்பிள்ளையோட அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா''

''இப்போதான் ஒன்னுமில்லைனு ஆயிருச்சே, தெரியட்டும் விஷ்ணு இப்பவே போய் நீயே சொல்லு அதோ அந்த ரூமிலதான் இருக்காங்க''

பார்த்தசாரதி சற்று கோபமாகவே சொன்னார். ஜோதி பார்த்தசாரதியை அமைதிபடுத்தினாள். பார்த்தசாரதி தொடர்ந்தார். வாசன் அமைதியாய் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். மாதவி இப்பொழுது இங்கே இருக்கக்கூடாதா என வேண்டினான்.

''விஷ்ணு, நீயும் சுபாவும் சேர்ந்து போட்ட திட்டம்தான் இது''

''என்னை இதுல சேர்க்காதீங்க, இதுக்கு நான் பொறுப்பில்லை, இவர் எல்லாம் சரியாத்தான் பண்ணினார், இப்போ பண்ணலைனு சொல்றார், நான் கரு உருவானதை எல்லாம் பார்த்தேன், எல்லாம் நல்லபடியாத்தான் இருந்தது, பூங்கோதைக்குத் தெரியும். நாம நம்ம ஊருக்குப் போனதுமே டெஸ்ட் எடுத்துப் பார்த்துருவோம், இந்த மனுசன் இப்படி பண்ணுவாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை''

சுபா ஆத்திரமாக பேசினாள். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை கோபமாக பார்த்தார். வாசன் பார்த்தசாரதியை வெளியில் அழைத்தான். பார்த்தசாரதி வர மறுத்து சொன்னார்.

''வாசன் நீங்க இனிமே தலையிட வேண்டாம், என்னால உங்களுக்குத்தான் தேவையில்லாத பிரச்சினை, உங்க வார்த்தையை நம்பித்தான் கேசவன் சரினு சொன்னார், இப்போ இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில கொண்டு வந்து உங்களை நிறுத்திட்டேன்''

வாசன் தலைகுனிந்தவாறே நின்றான். விஷ்ணுப்பிரியன் அந்த அறையை விட்டு வெளியேறினார். விஷ்ணுப்பிரியன் வெளியேறினதும் வாசன் மூவரிடமும் மாதவி வரைந்து சொன்ன படம் பற்றி கூறினான். சுபா அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்தாள். மாதவியை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறினாள், ஆனால் வாசன் வேண்டாம் என மறுத்தான். சுபா ஜோதியிடம் விபரம் கூறினாள். ஜோதி பார்த்தசாரதியிடம் விளக்கினாள். பார்த்தசாரதி அரண்டு போனார். தன் தங்கையின் நிலைகுறித்து வேதனை அடைந்தார். மிகப்பெரும் தவறிழைத்துவிட்டதைப் போல் உணர்ந்தார். கண்கள் கலங்கியது. வாசன் சமாதானம் சொன்னான். இனி எந்த ஒரு டெஸ்ட்டும் தேவையில்லை என சுபா முடிவுக்கு வந்தவளாய் காணப்பட்டாள்.

விஷ்ணுப்பிரியன் கேசவனின் தாய் தந்தையர் இருக்கும் அறைக்குச் சென்று விபரங்களை கூறினார். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் விஷ்ணுப்பிரியனிடம் இதில் என்ன இருக்கிறது என்பதுபோல் பேசியது விஷ்ணுப்பிரியனுக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது. விஷ்ணுப்பிரியன் விடைபெற்றுக்கொண்டு சென்றதும் கேசவனின் தாய் தந்தையர்கள் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்தனர். கேசவனிடமும் பூங்கோதையிடமும் இதுகுறித்து எதுவும் கேட்கவேண்டாம் என முடிவு செய்தனர்.

மீண்டும் சுபா இருக்கும் அறைக்குத் திரும்பிய விஷ்ணுப்பிரியன் அனைவரும் அமைதியாய் இருப்பதைப் பார்த்தார். வாசன் அங்கே காணவில்லை.

''எங்கே வாசன்?''

''பெரியவர் விநாயகம் வீட்டுக்குப் போறேனு போயிட்டார்''

''நானும் அங்க போறேன், அங்கேயே தூங்கிக்கிறேன்''

வாசன் பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தான். விஷ்ணுப்பிரியன் பெரியவரின் வீட்டின் உள்ளே நுழைந்தபோது வாசற்படியில் காலை இடறிக் கொண்டவர், ஆண்டாளே என காலைப் பிடித்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை வேதனையுடன் பார்த்தான்.


(தொடரும்)

Monday 12 July 2010

பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள்

குழந்தை பெற்று கொள்வது குறித்த காரணம் தேடுவதில் எனது நேரம் செலவாகி கொண்டிருந்தது. பிள்ளைகள் பெற்று கொள்வதன் அவசியம் குறித்து பலமுறை எனது மனைவியிடம் பேசியாகிவிட்டது. அனால் ஒரு முறை கூட எனது மனைவியின் மனதில் மாற்றம் ஏற்படவில்லை. குழந்தை பற்றி பலரும் கேட்க தொடங்கி இருந்தார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று இருக்கிறோம் என சொன்னாலும் எங்களுக்குள் ஏதோ பிரச்சினை என பேச ஆரம்பித்தார்கள்.

 ஊர் பேச்சுதனை ஒரு காரணமாக எனது மனைவியிடம் எடுத்து சொன்னேன். அதற்கு எனது மனைவி அதனால் என்ன, நமக்கு உண்மையிலே குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போனால் என்ன செய்து இருப்பீர்கள் என கேட்டு வைத்தார். நான் விளையாட்டாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என சொன்னேன்.  நான் விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் எனது மனைவி அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். எந்த பெண்ணை கல்யாணம் செய்ய போகிறீர்கள் எனும் கேள்வி எனது மனைவியிடம் இருந்து தினமும் வந்து கொண்டிருந்தது. எனக்கு அயர்ச்சியாகிவிட்டது.

எனது அம்மாவும், அப்பாவும் ஒரு ஜோசியரிடம் எங்களை செல்லுமாறு கூறினார்கள்.  நான் முதலில் திட்டவட்டமாக மறுத்தேன். ஆனால் எனது மனைவி வாருங்கள் என என்னை வம்பாக இழுத்துக் கொண்டு போனார். அந்த ஜோசியர் எங்களை பார்த்து நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இருக்கிறது என சொன்னார். வெறும் பார்வையில் ஒரு பெண்ணை கர்ப்பம் அடைய செய்வது எந்த உலகத்தில் சாத்தியம் எனும் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல்  எனது மனைவியை நோக்கி ஒரு வாக்கியம் சொன்னார். இவருக்கு மற்ற பெண்களால் பிரச்சினை வரும், இவர் உங்க சொல்பேச்சுபடி நடக்கவில்லை எனில் வீட்டில் தினமும் சண்டைதான் என்றார். இதுவரை நான் எனது மனைவியிடம் சண்டை போட்டதே இல்லை. எனக்கு மற்ற பெண்களிடம் எவ்வித தொடர்பும் கிடையாது. ஜோசியர் அவ்வாறு சொன்னது எனக்கு நகைப்பை ஏற்படுத்தியது. ஜோசியரின் வீட்டில் நடக்கும் விசயத்தை எங்களுக்கும் சொல்லி இருக்கலாம் என மனதில் நினைத்துக் கொண்டேன். எனது மனைவி இந்த விசயத்தை எப்படி எடுத்துக் கொள்வார் என என்னால் அப்போது எண்ணிப் பார்க்க இயலவில்லை.

எனது வேலை இடத்தில் புதிதாக ஒரு பெண் வேலைக்கு வந்து சேர்ந்தார். பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். எனது இருக்கைக்கு அருகில் தான் அவரது இருக்கை. அவர் வேலைக்கு புதிது என்பதால் என்னிடம் அடிக்கடி வேலை குறித்து கேட்பார். அவர் குரல் மிகவும் நன்றாக இருந்தது. சில தினங்களில் என்னுடன் மிகவும் அன்புடன் பழக ஆரம்பித்தார். நானும் அவருடன் நன்றாக பழகினேன். எங்களுக்குள் ஓரிரு மாதத்தில் நல்ல நட்பு வளரத் தொடங்கியது. ஒரு முறை அலுவலக கோப்புதனை பார்வையிட்டபோது அவரது பிறந்த தினமும் எனது பிறந்த தினமும் ஒரே நாளோடு மட்டும் இல்லாமல் அதே வருடம் அதே மாதம் என இருந்தது. இதை உறுதி செய்ய வேண்டுமென அவரிடம் கேட்டபோது அது உண்மை என தெரிந்து கொண்டேன். எனக்குள் அத்தனை மகிழ்ச்சி.

அவருக்கு திருமணம் ஆகி இருக்கவில்லை என்பதையும் அவர் மூலமே அறிந்து கொண்டேன். ஒரு ஞாயிறு அன்று அவரை எனது வீட்டுக்கு வர சொல்லி இருந்தேன். அவரைப் பற்றி முதன் முறையாக எனது மனைவியிடம் சொன்னதுடன் ஞாயிறு அன்று அவர் வருவதாக சொன்னேன். அந்த பெண்ணுடன் திருமண எண்ணம் இருக்கிறதா  என கேட்டார். எனக்கு கோவம் வந்தது. எதற்கு இப்படி சந்தேகம் கொள்கிறாய் என கேட்டேன். நீங்கள் சந்தேகம் படும்படியாக நடந்து கொள்கிறீர்கள் என கோவமாக சொன்னார். முதன் முதலாக அன்றுதான் வேலை இடத்தில் இருக்கும் பெண்ணுக்காக எனது மனைவியிடம் சண்டை போட்டேன்.

அன்று இரவு இருவரும் சாப்பிடாமல் உறங்கிப் போனோம். ஜோசியரை செமத்தியாக உதைவிட வேண்டும் என எண்ணிக் கொண்டேன். காலையில் எனது மனைவி என்னிடம் பேசவே இல்லை. எனது மனைவி பேசாமல் இருப்பது இதுதான் முதல் முறை. பேச சொல்லி மிகவும் கெஞ்சினேன். அந்த பெண்ணை வரச் சொல்லவில்லை என சொன்னேன். ஆனாலும் பேசாமலே இருந்தார். எப்போதும் போல் செய்வதை சரியாகவே செய்தார். சாப்பாடு எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால் எனக்குத்தான் சரியாக சாப்பிட இயலவில்லை. வேலைக்கு கிளம்பும்போது அந்த பெண் வரட்டும் என்று மட்டும் சொன்னார். புன்னகை புரிந்தேன்.

வேலைக்கு செல்லும் வழியில் எனது மாமா மகள் என்னை தொடர்ந்து வந்தாள். அதை கவனிக்காதவாறு நான் சென்று கொண்டிருந்தேன். வேகமாக வந்த எனது மாமா மகள் கடும் கோபம் கொண்டவளாய் என்னை சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். என்ன ஆக வேண்டும், நீங்கள் என்னை இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என விருப்பபட்டதாகவும், நான் வேலைக்கு செல்வதில் தடை எதுவும் இல்லை என்றும் அத்தை எனது அப்பாவிடம் இன்று காலை சொன்னார் என சொன்னதும் எனக்கு கடுமையான கோபம் வந்தது.

உன்னை கல்யாணம் பண்ண வேண்டுமென எனக்கு என்ன தலை எழுத்தா என நானும் அவளை திட்டினேன். இனிமேல் என்னுடன் பேசாதீங்க மாமா என கோபமாக சென்றுவிட்டாள். இந்த விசயத்தை அப்படியே வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பெண்ணிடம் கொட்டினேன். இரண்டாம் கல்யாணம் பண்ணுவது தவறா என கேட்டாள். மிகவும் தவறு என்று சொன்னேன். எனக்கு அப்படியெல்லாம் தோணவில்லை, பிடித்தால் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் என்றார். கல்யாணம் ஆகாதபோது அப்படித்தான் இருக்கும், ஆனபின்னர் வேறு நினைவு இருக்காது என்றேன். சிரித்தார். 

மாமா மகள் சொன்னதை அன்று எனது மனைவியிடம் சொன்னேன். உங்க மாமா மகளை சொல்லி வையுங்க, அப்படி ஒரு நினைப்பு இருக்கா அவளுக்கு என போன முறை பாராட்டு வாங்கிய எனது மாமா மகள் இந்த முறை நன்றாக திட்டு வாங்கினார். எனது மனைவி அன்று இரவே எனது அம்மாவுடன் பெரிய சண்டை இட்டார் . அப்படி எதாவது செய்ய நினைத்தால் உங்க குடும்பத்தை உண்டு இல்லை என பண்ணிவிடுவேன் என்றார். எனது அம்மா மிரண்டு போனார். எனது அப்பாவும் நடுங்கினார். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குழந்தை பெற வேண்டுமெனில் எனது மனைவி வேலைக்கு போக வேண்டும் என்கிறார் என்று அந்த சண்டையில் சொல்லி வைத்தேன். எதுனாச்சும் செஞ்சி தொலையுங்க, தனி வீடு கூட பாருங்க என எனது அப்பா மனம் உடைந்து சொன்னார். எனது மனைவியிடம் இருந்து இதை என் அப்பா எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மீது தவறு இருப்பதால் வேறு பேச்சு எதுவும் பேசவில்லை.

அடுத்த சில தினம் வீடு அமைதியாக இருந்தது. நான் மிகவும் கவனமாக இருக்கத் தொடங்கினேன். இந்த நிலையில்தான் என்னுடன் வேலை பார்க்கும் திருமணமாகாத பெண் ஞாயிறு வீட்டுக்கு வந்தார்.  அந்த பெண் என்னை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். சார்தான் எனக்கு எல்லாம் மேடம் என யதார்த்தமாகத்தான் சொன்னார். முகநக மட்டும் எனது மனைவி செய்ததை என்னால் அறிய முடிந்தது.  இதுவே ஜோசியரை பார்க்காமல் இருந்து இருந்தால், எனது அம்மா ஒரு புரளி கிளப்பாமல் இருந்து இருந்தால்  எனது மனைவி மிகவும் மகிழ்ந்து இருப்பார், ஆனால் ஜோசியரை பார்த்துவிட்ட காரணத்தினால் அந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக அன்று கதைகட்டி என்னை சின்னாபின்னமாக்கிவிட்டார். எனது அம்மாவைப் போலவே நீயும் பேசுகிறாய் என சொன்னேன். எதுவும் அவர் காதில் விழுந்தபாடில்லை.

படிப்பை முடித்து இருந்த எனது மாமா மகளும், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பெண்ணும் எனக்கும் எனது மனைவிக்கும் இடையில் தினமும் சண்டையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப்பற்றி பேசி சண்டை இழுக்காமல் எனது மனைவியால் இருக்க இயலவில்லை. இந்த நேரம் பார்த்து எனது மாமா மகளின் காதலன் அவளை நிராகரித்து தொலைத்த செய்தி எனக்கு எட்டியது. ஒரு வேலை விசயமாக மாமா மகளை பார்க்க நினைத்த நான், இந்த விசயம் கேள்விப்பட்டு மாமா மகளுக்கு ஆறுதல் சொல்ல சென்றேன். என்னைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள்.

அவனுக்கு கட்டாய திருமணம் பண்ணி வைச்சிட்டாங்க மாமா என என்னுடன் பேசாதீர்கள் என சொன்னவள் அந்த அழுகையின் ஊடே சொன்னாள். அவள் அழுததை பார்த்தபோது எனக்கும் அழுகை வந்தது. அந்த துன்பமான சூழலிலும், நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு வேலை காலி இருப்பதை அவளிடம் சொல்லி வேலையில் சேர சொன்னேன். அதோடு மட்டுமில்லாமல் நான் சொன்ன தைரியம் அவளை உறுதி உள்ளவளாக மாற்றியது. என்னிடம் அன்றொரு தினம் அவள் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள். நானும் மன்னிப்பு கேட்டேன்.

இந்த வேலை விசயம் பற்றி எனது மனைவியிடம் சொன்னேன். அந்த வேலையை ஒரு பையனுக்கு வாங்கி தரவேண்டியதுதானே அதென்ன உங்க மாமா மகளுக்கு என பொரிந்தார். எனக்கு எனது மாமா மகள் மீதும், வேலை இடத்தில் இருக்கும் பெண் மீதும் அதிக மரியாதை உருவாகி இருந்தது. ஆனால் எனது மனைவியை விட்டு கொடுக்க என்னால் இயலவில்லை. எது நடந்தாலும் எனது மனைவியிடம் சொல்லிவிடுவேன். இதனால் ஜோசியர் சொன்னது போலவே இருவரால் எனது வாழ்வில் புயல் உருவாகி கொண்டு இருந்தது. அதை என்னால் தவிர்க்க இயலவில்லை. எனது மனைவியின் எச்சரிக்கையை மீறி நான் அந்த இரண்டு பெண்களுடன் நட்புடன் தான் இருந்தேன். எனது மனைவி என்னுடன் சண்டை போட்டாலும் அந்த நட்பை என்னால் தொலைக்க இயலவில்லை, என் மனைவியின் மீதான காதலும் தொலையவில்லை.

திருமணம் ஆகி சரியாக பதினைந்து மாதங்கள் பின்னர் என்னிடம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என எனது மனைவி சொன்னதும் என்னால் நம்ப இயலவில்லை. வேலைக்கு செல்ல வேண்டும் என கேட்பாய் அல்லவா என்றேன், அப்படி கேட்கமாட்டேன், எனது தவறுக்கு மாமா அத்தையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றார். எனது மனைவியின் இந்த மாற்றத்திற்கு எது காரணம் எனும் யோசனையுடன் சாந்தி முகூர்த்தத்திற்கு தயாராகி கொண்டிருந்தேன்.