Monday 12 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 22

கதிரேசன் சங்கரன்கோவிலில் சில தினங்களே தங்கி இருந்தான். ஈஸ்வரி மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தது கதிரேசனுக்கு மனமகிழ்ச்சியை தந்தது. இந்த வருடத்துடன் படிப்பு முடிந்து விட்டதாகவும் இனிமேல் வேலை தேட வேண்டும் என சொன்னான் கதிரேசன். மேற்கொண்டு படிக்கலையா எனக் கேட்ட ஈஸ்வரியிடம், குடும்ப சூழல், நான் வேலைக்கு செல்வதுதான் இப்போதைக்கு நல்லது என்றான் கதிரேசன்.

 ஈஸ்வரி தனது தந்தையிடம் கதிரேசன் வேலை விசயம் பற்றி கூறியதும் அவர் சங்கரன்கோவிலில் ஒரு நல்ல வேலை வாங்கி தருவதாக சொன்னார். இந்த விசயம் பார்வதிக்கு தெரிய வந்தது. அவர் அமைதியாகவே இருந்தது ஈஸ்வரிக்கு கூட ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நல்ல நிறுவனத்தில் பயிற்சி வேலையாளராக கதிரேசனுக்கு இடம் வாங்கித் தந்தார் சிவசங்கரன். கதிரேசன் ஊருக்குச் சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பியபோது,  ஈஸ்வரி கதிரேசனிடம் ஒரு தனி அறை பார்த்து தங்கிக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டாள். கதிரேசனுக்கு அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. சரி என சொல்லி அவளின் தந்தையின் மூலமாகவே ஒரு அறை வாடகைக்குப் பார்த்து வைத்தான். சிவசங்கரன், கதிரேசன் மீது அளவு கடந்த மரியாதை வைத்து இருந்தார்.

புளியம்பட்டிக்குச் சென்ற கதிரேசன் தனக்கு வேலை கிடைத்த விசயத்தைச் சொன்னதும் மிகவும் சந்தோசம் கொண்டார் செல்லாயி. இரண்டு தினங்களில் திரும்ப வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக கதிரேசனுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறையவில்லை. 'எப்படிப்பா காய்ச்சலோட போவ, எதுக்கும் அவருக்கு ஃபோன் போட்டு சொல்லிரு'  என்றார் செல்லாயி. காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போனது. மருத்துவரிடம் சென்று ஊசி போட்டும், மாத்திரை எடுத்தும் குறையவில்லை. அந்த நிலையில் கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். சிவசங்கரன் உடல் நலம் சரியானபின்னர் வா என சொல்லியது கதிரேசனுக்கு மனதிற்கு தெம்பை கொடுத்தது.

இரத்தம் பரிசோதனை செய்ததில்  ஒரு குறையும் தெரியவில்லை. ஆனால் காய்ச்சல் இருந்து கொண்டே இருந்தது. வீட்டின் மூலையில் முடங்கிப் போனான் கதிரேசன். ஒரு வாரம் மேல் ஆகியது. உடல் மெலியத் தொடங்கியது. கதிரேசன் பேசுவதையே நிறுத்தி இருந்தான். செல்லாயி பதறினார். ஊரில் இருந்த பூசாரியும் தனது பங்கிற்கு வைத்தியம் செய்யத் தொடங்கியவர் பையன் உடம்புல என்னவோ இருக்கு என சொல்லி ஓட்டம் பிடித்தார். கதிரேசன் உணவு உண்ண மறுத்தான். வெறும் நீர் மட்டுமே குடித்தான். காய்ச்சல் உடலில் ஏற்படும் சில மாற்றத்திற்கான அறிகுறிதான்.  பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்குப் போவோம் என கதிரேசனை அழைத்துச் சென்றார் செல்லாயி.

நடக்க சிரமப்பட்டான் கதிரேசன். கோவிலின் உள்ளே சென்றதும் சிவனை நோக்கி ''இந்தா உன் பிள்ளை'' என சொன்னார் செல்லாயி. சிறிது நிமிடத்தில் கோவிலில் கதிரேசன் மயங்கி விழுந்தான். உடல் அனலாக கொதித்தது. மயக்கம் தெளிவித்தார்கள். பேச முடியாமல் தவித்தான் கதிரேசன். கோவில் குருக்கள் திருநீரு பூசிவிட்டார். இந்தா சாப்பிடு என பச்சிலை சாறு கொண்டு வந்து வாயைத் திறக்க வைத்து ஊற்றினார்கள். உடல் நலம் சரியில்லாமல் போவோர்க்கு இந்த பச்சிலை சாறுதனை கோவிலில் தருவது வழக்கம்.  பின்னர் சிவன் கோவிலில் ஓரிடத்தில் கதிரேசனைப் படுக்க வைத்தார்கள். செல்லாயி அழுது கொண்டே இருந்தார். குருக்கள் கவலைப்படாதேம்மா என ஆறுதல் சொன்னார்.

சிலமணி நேரங்கள் ஆனபின்னர் கதிரேசன் தனது கைகளை கால்களை அசைத்தான். விழிகளை திறந்தான். ''பசிக்கிறது'' என்றான். உடல் வியர்த்துக் கொட்டி சில்லென ஆகி இருந்தது. கோவில் பிரசாதம் கொண்டு வந்து தந்தார்கள். சாப்பிட்டான். செல்லாயிக்கு உயிர் வந்தது. சாப்பிட்டவன் பாடத் தொடங்கினான்.

''தவமதை புரியாது தனித்தே இருந்த என்னுள்
சிவமது புகுந்ததோ மெய்யும் மறந்தேன்
என்னை உன்பிள்ளை என்றே இவர் ஒப்புவிக்க
முன்னை விதிசெய்தனையோ சொல்சிவனே''

வீட்டுக்கு கதிரேசன் செல்லாயியுடன் நடந்தான். ''நீ என் பிள்ளை தான்'' என்றார் செல்லாயி. கதிரேசன் சிரித்தான். ''தீர்க்க முடியாத பிரச்சினைனா மட்டும் சிவனாம்மா பொறுப்பு'' என்றான். ''இல்லப்பா, நாமதான் பொறுப்பு'' என கண்கள் கலங்கினார். ''நாம மட்டுமாம்மா பொறுப்பு'' என்றான் கதிரேசன். ''கதிரேசா'' என அவனது கைகளைப் பிடித்து விக்கித்து அழுதார் செல்லாயி.

(தொடரும்)

Sunday 11 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 11



சுதந்திரமான கிருத்திகா

சுந்தரன் தனது வீட்டினுள் சென்றதும், திருவேற்காடு கோவிலில் வாங்கி வந்த பிரசாதங்களையெல்லாம் மேசையின் மேல் எடுத்து வைத்தான். வாசனின் கவிதைப் புத்தகம் எடுத்தான், கையில் இருந்து தவறி விழுந்தது, மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் வாங்கிய துணிகள், பொருட்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்தான். அறையை சுத்தம் பண்ணினான். மின் விசிறியை சுழலவிட்டான். குளித்தான். சாமி படம் முன்னால் விளக்கேற்றி வணங்கினான். தெய்வீகப் பாடலை இசைக்க விட்டான்.
 

திருவேற்காடு கோவிலில் தான் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றையும் நினைவுப் படுத்திக் கொண்டே வந்தான். ஒன்று மட்டும் அவனது மனதில் அகலாமல் நின்றது. ஏழு வயதுக்குட்பட்ட இருபது குழந்தைகள் வரிசையாய் அம்மனிடம் உலகம் செழித்தோங்கிட வேண்டிய காட்சிதான் அது. அந்த குழந்தைகள் ஆஸ்ரமத்தில் இருந்து வந்து இருப்பதாக கூறினார்கள். அதனை நினைத்துக்கொண்டிருக்கும்போதே வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

சுந்தரன் வீட்டை விட்டு வெளியே வந்தான். யாரும் காணவில்லை. வீட்டின் பக்கவாட்டில் பார்த்தான், அங்கும் யாரும் இல்லை, ஆனால் மல்லிகை வாசம் மட்டும் அடித்தது. வீட்டுக்குள் செல்லலாம் என திரும்பியவன் மலர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த கிருத்திகாவைப் பார்த்தான்.
 

''நீங்கதானா பெல் அடிச்சது''

''ஆமா''

''என்ன திடீருனு இந்த நேரத்தில''

''வீட்டுக்குள்ள போகலாமா''

''எதுனாலும் இங்கேயே பேசலாம்''

சுந்தரனையே அமைதியாக பார்த்துக் கொண்டு புன்னகைத்தாள் கிருத்திகா.

''சரி வாங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்து பேசலாம்''

கிருத்திகா சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். வீடெல்லாம் சுத்தமாக இருந்தது கிருத்திகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பக்திமயமான பாடல் மனதிற்கு இதமாக இருந்தது. நாற்காலியை எடுத்துப் போட்டான் சுந்தரன்.

''உட்காருங்க''

''ம், எனக்கு காபி வேணும்''

''காபியா?, சேகர் ஐயா வீட்டுல போய் வாங்கிட்டு வரேன், இங்க குடிக்க தண்ணி மட்டும்தான் இருக்கு''

''அப்படின்னா தண்ணி மட்டும் போதும்''

தண்ணியைக் குடித்தாள் கிருத்திகா.
 

''எங்க போயிருந்தீங்க இன்னைக்கு''

''திருவேற்காடு கோவிலுக்கு, உங்களுக்கு என்ன வேணும், பாரதி அனுப்பினாளா? பாரதியை எனக்கு சின்ன வயசுல பிடிக்கும், இப்போ இங்க வந்து பழகினதும் சின்ன வயசு ஞாபகம் வந்துருச்சு''

''ம் பாரதி அனுப்பலை நீங்க வந்துட்டா சொல்லச் சொல்லி இருந்தேன், உங்ககிட்ட நானாதான் பேசனும்னு வந்தேன்''

''என்ன பேசப் போறீங்க''

''நீங்க தப்பா எந்த முடிவும் எடுக்கக் கூடாது''

''அவ மாதிரியே பேசறீங்க, ம் ஊர்லேயே இருந்திருந்தா நினைவு திரும்பியிருக்காது, பரவாயில்லை உடனே தெளிவுப்படுத்திட்டா இல்லைன்னா தேவையில்லாத கற்பனையை வளர்த்துட்டு மறக்க முடியலைனு புலம்பிட்டுத் திரிஞ்சிருப்பேன், வாசன் சொன்னா கேட்பா ஆனா இனி வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்''

''நான் சொன்னாலும் கேட்பா, வாசன்கிட்ட என்ன சொன்னீங்க''

''காதல் பண்றதாகவும், உதவனும்னு சொன்னேன்''

''பாரதிகிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருந்து இருக்கலாமே''

''இது சிக்கலான விசயம், ஆனா இப்போ மறந்துட்டேன், அம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்டேன் மனசெல்லாம் ரொம்ப லேசா இருக்கு''

''வருத்தம் எதுவும் இல்லையே''

''வருத்தம் இருக்கறமாதிரி எனக்குத் தோணலை''

''அம்மன் அருளா''

''ஆமாம்''

''எங்ககிட்ட நீங்க எப்பவும் நல்லா தாராளமா பேசலாம் எங்களோட நண்பனா இருங்க''

''எனக்கு உங்களோட நட்பு கிடைச்சது எனக்கு சந்தோசம்''

சுந்தரனுக்கு கிருத்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தது மன நிம்மதியை தந்தது. வெறும் புன்னகை மட்டுமே செய்து செல்பவள் தனது மேல் அக்கறை கொண்டு தான் நன்றாக இருக்க வேண்டும் என தனது தோழியின் மேல் வைத்திருக்கும் பாசத்தில் வந்து இருப்பதை கண்டு சுந்தரனுக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கிருத்திகாவிற்கும் சுந்தரன் மேல் மரியாதை வந்தது. திருமால் பற்றிய விசயங்கள் சொன்னாள்.
 

''என்ன பேர் சொன்னீங்க''

''திருமால் சிரிப்பாற்றனூர்''

''அந்த ஆஸ்ரமத்தில இருந்துதான் இன்னைக்கு கோவிலுக்கு குழந்தைங்க வந்திருந்தாங்க''

''வாசன் எதுவும் உங்ககிட்ட சொல்லலையா?''

''நான் இதெல்லாம் கேலி பண்ணுவேன், அதான் என்கிட்ட இதுபத்தி சொல்லலை''

''இனிமே கேலி பண்ண வேண்டாம், எனக்கு உதவி தேவைப்பட்டா கேட்கிறேன்''

கிருத்திகா சுந்தரனிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினாள். சுந்தரன் பிரசாதங்களை எடுத்துக் கொடுத்தான். சந்தோசமாக வாங்கிக் கொண்டாள். சுந்தரன் மனம் நிம்மதியானது. பாரதியிடம் விபரங்களை தனது வீட்டிற்கு வந்ததும் அலைபேசியில் சொன்னாள். பாரதி மிகவும் சந்தோசப்பட்டாள். மரபியலைப் பற்றி ஒருநாள் தனக்குச் சொல்லித்தர வேண்டும் என மீண்டும் கேட்டாள் கிருத்திகா. பாரதி பார்ப்போம் என்றாள். மரபணுக்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருப்பதாய் கிருத்திகா கண்டாள்?
 

(தொடரும்)

Friday 9 July 2010

விரைவில் வெளியாகவிருக்கும் புத்தகம்


                                                   தொலைக்கப்பட்ட தேடல்கள்.

அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களின் நயினார் பதிப்பகத்தின் மூலம் வெளியாகவிருக்கும் ஏழு சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி பொன்.வாசுதேவன்.

எழுத்து என்பது ஒரு கனவு உலகம். அந்த கனவு உலகம், கற்பனை உலகம் மிகவும் அழகாகவே இருக்கிறது. நான் எழுதும் எழுத்துதனை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எழுத்துக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த எழுத்து, இலக்கியம் அல்ல ஒரு ஏக்கம்.

இந்த நூல் பற்றி ஒரு பார்வை, அது எனதுடையதாகவே இருக்கட்டும் என அணிந்துரை, வாழ்த்துரை, ஆசியுரை என எதுவும் இல்லாமல் முன்னுரை மட்டுமே அணிந்து வந்து இருக்கிறது. விழா அறிவிப்பினை பொன்.வாசுதேவன் சிறிது நாட்கள் பின்னர் அறிவிப்பார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பொழுதே வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.



                                முன்னுரை

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை  அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது. 


நன்றி.