Tuesday 6 July 2010

எனது மனைவி போடும் கடிவாளம்

பெண் பார்த்துவிட்ட வந்த பின்னர் எனது மனம் நிலை கொள்ளவில்லை. மனதுக்குள் எனது மனைவி வேலைக்கு செல்ல விருப்பப்படுவாளோ எனும் எண்ணம் சுற்றிக்கொண்டே இருந்தது. நானும் காரணம் தேடி தேடி அலுத்துப் போனேன். எந்த ஒரு காரணமும் சிக்கவில்லை.

சில வாரங்களிலேயே வேலையில் சென்று சேர்ந்தேன். காலையில் ஏழு மணிக்கு கிளம்பினால் சரியாக எட்டு மணிக்கெல்லாம் எனது அலுவலகம் சென்று சேர்ந்து விடுவேன். மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். பின்னர் வீடு வந்து சேர சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் ஆகிவிடும். அலுவலகத்தில் இருக்கும்போது எனது வருங்கால மனைவிக்கு அவ்வப்போது தொலைபேசி அலைப்பு செய்து பேசுவேன். அப்போதெல்லாம் இந்த வேலை விசயம் பற்றி கேட்கத் தோணவில்லை. ஏதாவது நினைத்துவிடுவாரோ எனும் அச்சமும் இருந்தது.

அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் களைப்பு தீர குளித்துவிட்டு, நன்றாக சாப்பிட்டுவிட்டு தொலைகாட்சியில் தொடர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். பெண் பார்த்துவிட்டு வந்தபின்னர்தான் இந்த தொலைகாட்சித் தொடர் எல்லாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். எப்படியும் ஒரு காரணம் கண்டு பிடித்துவிட வேண்டும் எனும் ஆசைதான். ஆனால் சில தொடர்களில் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவன் என காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தொடர்களில் நடிப்பவர்களுக்கு நிச்சயம் வலித்து இருக்காது, ஏனெனில் அவர்கள் செய்வது ஒரு வேலை தான். ஆனால் அவர்களைப் போல வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் மனதின் வலி எப்படியிருக்கும்? எனது மாமா மகள் ஞாபகம் வந்தது. தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.

மாமா மகள் படித்துக் கொண்டிருந்தாள். எனது வேலை பற்றிய எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். வேலைக்கு போகமுடியாத‌ நிலைமை வந்தால் நான் எல்லாம் செத்துருவேன் மாமா என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலையில் சேர்ந்து கொண்டு அங்கு வேலையில் ஏற்படும் இன்னல்களை கண்டு செத்துவிடலாம் என சொன்ன சகோதரிகள் கண்ணுக்கு முன் வந்தார்கள். எனது அலுவலகத்தில் பல பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் எல்லாம் 'ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்' என அலுத்துக் கொள்ளாத நாட்களே கிடையாது. என் வருங்கால மனைவி வேலைக்குப் போக வேண்டும் என சொன்னால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு அவள் மிக சர்வ சாதாரணமாக சொன்னாள். காரு வாங்கனும், வீடு வாங்கனும், விலையுயர்ந்த பொருள் வாங்கனும், அதுக்கெல்லாம் பணம் வேணும்னு சொல்லுங்க மாமா. இதுக்கெல்லாமா காரணம் தேடுவாங்க என்றாள். நல்ல வேளை நான் தப்பிச்சேன் என்றாள்.

அன்றிலிருந்து காரணம் தேடுவதை தவிர்த்து இருந்தேன். எங்கள் திருமணம் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது. சாந்தி முகூர்த்தம் அன்று சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சொன்னாள் எனது மனைவி. என்ன காரணம் என கேட்டேன். பிள்ளைகள் பிறந்தால் பணம் அதிகம் தேவைப்படும், அவளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலும் வந்து சேரும் என்றாள். அதற்காக கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரியாகவா வாழ்வது என்றேன். அப்படித்தான் சில காலங்கள் வாழ வேண்டும், இப்போதுதான் நீங்களும் வேலைக்கு சென்று இருக்கிறீர்கள், அதனால் சில வருடங்கள் ஆகட்டும் என்றாள். எனக்கு மிகவும் வெறுப்பாகிவிட்டது. ஒரு சராசரி மனிதன் என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். கோபத்துடன் அப்படியே தூங்கியும் போனேன்.

சில நாட்கள் அவளுடன், எனது மனைவி என சொல்லாமல் இருப்பதற்கு எனது கோபம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், தேனிலவு சுற்றுலா சென்றேன். படுபாதகியாக இருந்தாள் அவள். கருவுறாமல் இருக்க தடுப்பு சாதனம் என எதையும் உபயோகிக்கவும் கூடாது என சொல்லிவிட்டாள். கட்டை பிரம்மச்சாரியாக என்னை இருக்க வைத்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கல்யாணம் பண்ணினோமா, அடுத்த சில வருடத்தில் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெற்றோமா என நினைத்திருந்த எனக்கு அவளின் செயல்பாடு அவள் மீதான வெறுப்பு கல்யாணம் பண்ணிய சில தினங்களில் ஆரம்பித்து இருந்தது.

அவள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தாள். எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்தது. காதல் மட்டுமே கல்யாணத்தின் வெற்றிப்படி என்றாள். கல்யாணம் என்பது நாமிருவரும் பிள்ளைகள் பெற்று கொள்ள செய்து கொள்வதல்ல என்றாள். எனக்கு இதெல்லாம் கல்யாணம் முன்னால் பேசவில்லையே என்று தோணியது. இவள் வேலைக்குப் போக வேண்டுமெனில் என்ன காரணம் சொல்லலாம் என தேடி வைத்திருந்த எனக்கு, இவள் வேலைக்குப் போகாமலிருக்க தயார் செய்து வைத்திருந்த காரணம் என்னை அலைக்கழித்தது.

சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கும். ஒரு முறை எனது மாமா மகள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளிடம் தாம்பத்யம் இல்லாமல் நாங்கள் வாழும் விசயத்தை சொல்லிவிட்டேன். என்ன மாமா இது, உங்க இரண்டு பேருகிட்ட இருக்க அந்தரங்க விசயத்தை எல்லாம் என்கிட்ட சொல்றீங்க என்றாள். இல்லை நீ அவகிட்ட பேசிப் பாரு என்றேன். எனக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எனது மாமா மகள் அவளிடம் பேசினாள்.

அன்று இரவு என்னிடம் எனது மனைவி, கோபம் தீர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள், உங்க மாமா பொண்ணு என்கிட்ட பேசினாங்க. ரொம்ப நல்ல பொண்ணுங்க. வாழ்க்கையில் ரொம்பத் தெளிவா இருக்காங்க. வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிட்டுதான் கல்யாணம் எல்லாம், அதுவரைக்கும் காதல் தான். காதல் பண்றப்ப இந்த விசயத்தையெல்லாம் யோசிக்க வேண்டியதில்லைனு சொன்னாங்க. நாம ரெண்டு பேரும் தாலி கட்டிட்டு காதல் பண்றதா நினைச்சிக்குவோம், என்ன சொல்றீங்க என்றார் எனது மனைவி.

எனக்கு கடிவாளம் போடப்பட்டதாய் நினைத்துக் கொண்டேன். அழகான எனது மாமா மகள் மீது எனக்கு ஆசை ஒருபோதும் வந்தது இல்லை. அடுத்த பெண்கள் மீதும் எனக்கு எவ்வித ஆசை வந்ததும் இல்லை. எனது மனைவி எனும் உரிமையால் மட்டுமே எனக்கு ஆசை வந்தது. அந்த ஆசை கூட நிராகரிக்கப்படும்போது மிகவும் கோபம் வந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல கோபம் இல்லாமல் மனைவியை அதிக அளவு நேசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் எனக்கு எழுதப்பட்டதல்ல என புரியத் தொடங்கியது.

இப்பொழுது பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும் என எப்படி எனது மனைவியை எனது வழிக்கு கொண்டு வருவது என ஒரு காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

Monday 5 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 20


அறைக்கதவைத் திறந்த கதிரேசனுக்கு வைஷ்ணவியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ''உள்ளே வா'' என அழைத்தான். வைஷ்ணவி அறைக்குள் நுழைந்ததும் ''சிவன் கோவிலுக்குள்ள வந்த மாதிரி இருக்கு'' என்றாள். ''உட்கார்'' என சொன்னான். தண்ணீர் ஊற்றி கொடுத்தான். சில பலகாரங்கள் எடுத்து வைத்தவன் ''இது அம்மா செஞ்சி கொடுத்தனுப்பினது'' என்றான். ''நல்லாவே உபசரிக்கிற'' என்றவள் ''சிவன் கோவில் மாதிரியே இருக்கு'' என்றாள் மீண்டும். ''காலேஜ்ல நடந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?'' என்றவளிடம் ''கஷ்டமில்லை'' என்றான் கதிரேசன். மேலும் அவனே தொடர்ந்தான்.

''நீ ஏன் சிவன் கோவிலுக்கு வரதில்லை'' எனக் கேட்டான் கதிரேசன். ''மதுசூதனன் என்னை சிவன் கோவிலுக்குப் போக வேணாம்னு சொன்னதால சிவன் கோவிலுக்கு வரதில்லை'' என்றாள் வைஷ்ணவி. ''ஓ ஏன்?'' எனக் கேட்ட கதிரேசனிடம் ''அவனுக்குப் பிடிக்கறதில்லை, அதனால வேணாம்னு சொன்னான், நானும் சரினு கேட்டுக்கிட்டேன்'' என்றாள் வைஷ்ணவி.

''அவனுக்குப் பிடிக்கலைனு உனக்குப் பிடிச்சதைச் செய்யாம இருப்பியா?'' என்றான் கதிரேசன். ''அதுதானே காதல், அவனுக்கு எதுப் பிடிக்குமோ அதைத்தான் நான் செய்வேன்'' என்றாள். ''கொஞ்சம் சிந்திச்சிப் பாரு, உனக்குப் பிடிச்சதை அவன் செஞ்சிருக்கலாம்தானே'' என்றான் கதிரேசன். ''நீ என்ன சொல்ல வர'' என்றவளுக்கு ''அவன் உனக்குப் பிடிச்சதையும் செய்யலாமே'' என்றான் மீண்டும்.

''யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்துத்தான் வாழனும், அதுதான் காதல், எனக்கு அவனுக்காக விட்டுக்கொடுக்கிறதுல்ல எதுவும் சிரமமாத் தோணலை'' என்றாள் வைஷ்ணவி சாப்பிட்டுக் கொண்டே. ''ரொம்ப நல்லாருக்கு'' என்றாள். ''ம்ம், அம்மா எதையுமே ரொம்ப ரசிச்சி செய்வாங்க'' என்றான் கதிரேசன். ''அதான் ருசியா இருக்கு'' எனச் சிரித்தாள் வைஷ்ணவி. 

''இதே மதுசூதனன் சொல்றதை உன்னால செய்ய முடியாம போனா என்ன பண்ணுவ?'' என்றான் கதிரேசன். ''அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்னோட காதல் அங்கே இல்லாம போயிருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. அப்பொழுது இனிப்பு ஒன்றை எடுத்து வைத்தான் கதிரேசன். ''இது யார் பண்ணினது, கடையில வாங்கினியா?'' என்றாள் அவள். ''அம்மா செய்தது, கெடாமத்தான் இருக்கு'' என்றான் மேலும். சுவைத்துப் பார்த்தவள் ''ரொம்ப ரொம்ப நல்லாருக்கு'' என்றாள். ''செய்ற முறையில செஞ்சி, பாதுகாக்கிற முறையில பாதுகாத்தா பதார்த்தங்கள் அத்தனை சுலபமா கெடாது'' என்றான் கதிரேசன். ''நல்லாவே பேசற'' என்றாள் அவள். 

''சினிமா, கூத்து, கொண்டாட்டம், பொண்ணுங்க, போதைப் பொருள், கேம்ஸ், புகழ், பேரு, பணம்னு இருக்கிற இந்த உலகத்துல இப்படி சிவனே கதினு நீ இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு, இதே நீ ஒரு வைணவ குடும்பத்தில பிறந்திருந்தா சிவன் மேல இப்படி பக்தியா இருந்திருப்பியா?, என்னை மாதிரி ஒரு வைணவப் பொண்ணு உன்னை காதல் பண்றேனு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா?'' என்றாள் வைஷ்ணவி. பல நாட்களாக பேசாமல் இருந்தவளுக்கு நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். ''தெரியலை'' என்றான் கதிரேசன். 

''இதே சிவன் ஒரு சைவ சமயக் கடவுளா இல்லாம இருந்திருந்தா நீ தொழுதிருப்பியா?'' என்றாள் மேலும். கதிரேசன் தெரியலை என்றே சொன்னான். ''இராமன் சிவனைத் தொழுததாகவும், அர்ச்சுனன் சிவனைத் தொழுததாகவும் ஏன் அந்த திருமாலே சிவனைத் தொழுததாகவும் புராணங்களிலே எழுதப்பட்டிருக்கு, உனக்குத் தெரியும்தானே, ஆனா எங்கேயாவது சிவன் திருமாலைத் தொழுதார்னு எழுதியிருக்கிறதாப் படிச்சிருக்கியா?'' என்றாள் அவள். ''தெரியலை'' என்றான் கதிரேசன். ''என்னோடப் பேசப் பிடிக்கலையா?'' என்றாள் வைஷ்ணவி. ''அப்படியெல்லாம் இல்லை, எனக்கு நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் தெரியலைனு சொன்னேன்'' என்றான் கதிரேசன். 

''நீ வைணவத்துக்கு மாறலைன்னு உன்னோட கோவமாயிட்டான் மதுசூதனன், நான் இப்படி இருக்காதேனு அவன்கிட்ட சொன்னேன், அதுக்கு அவன் நீ மாறுவனு சொல்லியிருக்கான், நாங்கதான் உன்கிட்ட அவ்வளவா பேசாம இருந்தோம், தப்பா எடுத்துக்காதே'' என்றாள் அவள். ''உன்னோட விருப்பத்துக்கு இல்லாம, அவனோட விருப்பத்துக்கே வாழறதா இருந்தா உனக்குனு வாழ்க்கை இல்லையா?'' என்றான் கதிரேசன். ''அவனுக்கா அது தோணனும், எனக்கு அவனுக்காக வாழறதுல சிரமம் இல்லை'' என்றாள் அவள். 

''கொஞ்ச நேரம் இரு, இதோ வந்துருரேன்'' என கீழே சென்றான் கதிரேசன். சற்று நேரத்தில் காபியுடன் மேலே வந்தான். ''இந்தா காபி'' என வைத்தான். ''நீ போட்டதா?'' என்றாள் அவள். ''இந்த வீட்டு அம்மா போட்டது, என்னக் கேட்டாலும் உடனே பண்ணிக்கொடுத்துடுவாங்க, என்னை அவங்களோட பையன் மாதிரி பார்த்துப்பாங்க, எனக்கு இவங்க முன்ன உறவு இல்லை, ஒட்டு இல்லை. இப்போ எனக்கு என்னோட அம்மாவாத் தெரியறாங்க'' என்றான் கதிரேசன். ''ம்ம், காபி நல்லா இருக்கு, நீ குடிக்கலையா?'' என்றாள். ''இல்லை, பூஜை பண்ணிட்டு சாப்பிடனும்'' என்றான் கதிரேசன். ''நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உன்கிட்ட பதில் இல்லையா?'' என்றாள் அவள்.

''சிவனை ஒரு சமயக் கடவுளாத்தான் நீ பார்க்கிறயா?'' என்றான் கதிரேசன். ''அப்படித்தான் உலகம் பார்க்குது'' என்றாள் வைஷ்ணவி. ''திருமால் கூட சிவனைத் தொழுதுட்டு வரதால அவர் ஒரு சமயக் கடவுள்னு ஆகுமா?'' என்றான் கதிரேசன். வைஷ்ணவி அமைதியானாள். 

''சாதி, சமயம், மொழி, மதம், இனம், நிறம் இப்படியெல்லாம் இருக்கிற பேதத்தைத் தாண்டி ஒன்றானவன் சிவன்'' என நிறுத்திய கதிரேசன் ''அப்படித்தான் ஒவ்வொரு உயிரினமும், எல்லா பேதங்களையும் தாண்டியவை'' என்றான் அவன். ''நீ சொன்னியே மதுசூதனுக்காக வாழறதுல ஒரு சிரமமும் இல்லைனு அதுக்கு காதல் தான் அடிப்படைனு, அதுபோலத்தான் ஒற்றுமைக்காக உலக அன்புக்காக ஒற்றுமையா வாழறதுல இந்த உலக உயிர்களுக்கு என்ன சிரமம் இருந்துறப் போகுது'' என்றான் கதிரேசன்.

''அப்படின்னா நீ சிவனே எல்லாம்னு சொல்றதில்ல என்ன அர்த்தம் இருக்கு?'' என்றாள் அவள். ''இறைவனை அன்பே உருவானவனு பொதுவாத்தான் சொல்லி வைச்சாங்க, ஆனா சிவம் தான் அன்பு, அன்பு தான் சிவம்னு பிரிச்சிப் பார்க்க முடியாம வைச்சது சிவனுக்குத்தான்'' என கதிரேசன் சொன்னதும் ''நீ பேச்சுப் போட்டியில கலந்து பேசியிருக்கனும், நான் எதுக்கு வந்தேன்கிறதையே மறந்துட்டேன்'' என தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். 

'சமணமும் தமிழும்' என இருந்தது. ''மயிலை சீனி வேங்கடசாமி எழுதினது, கடைக்குப் போனேன், கண்ணுலப் பட்டுச்சு உனக்குத் தரலாம்னு வாங்கினேன், இப்ப சொல்றேன் நீ என்னோட நல்ல நண்பன்'' என்றாள் அவள். ''நன்றி வைஷ்ணவி, ஆனா மதுசூதனன் ஏதாவது சொல்லப் போறான்'' என்றான் கதிரேசன். கலகலவென சிரித்தாள் எந்த கவலையுமின்றி. பின்னர் விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் இரவு சிவனுக்கு பூஜை செய்து பாடினான். 

''அழிப்பது உன்செயலாம் பிரித்தே வைத்தனர் வேலையை
பழிப்பது பற்றி சிறிதும் அஞ்சாதோர்
தீயவை யாவும் நல்லவையாக்கும் திறன் கொண்டோனே
தீயது எவைஎவையென சொல்சிவனே''

(தொடரும்)

Sunday 4 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி


10. சோதிடம்தனில் சோதி

வாசன் சோலையரசபுரம் அடைந்தான். சோதிட சாஸ்திரி வீட்டில் வாசனது அம்மா, அப்பா, மாமா பொன்னுராஜ் அமர்ந்து இருந்தனர். அப்படி என்னதான் இங்கு செய்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எனும் ஆச்சரியத்துடன் சோதிட சாஸ்திரி வீட்டினுள் நுழைந்தான்.

நம்பெருமாள்... ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். பரந்த நெற்றி. அந்த பரந்த நெற்றியில் மட்டும் ஒற்றைச் சிவப்பு இராமம். கட்டி வைக்கப்பட்ட தலைமுடி. உடலெல்லாம் பூசப்பட்ட விபூதி. வாசனைப் பார்த்ததும் நம்பெருமாள் கேட்டார்.

''இதுதான் பையனா''

''ஆமாம் சாமி''

''உட்கார் தம்பி, என்ன பண்ணிட்டு இருக்க, உனக்கு பிடிச்ச விசயம் எது"

வாசன் நம்பெருமாளை வணங்கியவாறே அங்கே கேள்விக்குறியுடன் அமர்ந்தான்.

''விவசாயம் பார்த்துட்டு இருக்கேன், பிடிச்ச விசயம்னு ஒண்ணுமில்லை சாமி''

நம்பெருமாள் சிரித்துக்கொண்டே ஜாதக நோட்டு இரண்டினை எடுத்து அதனுடன் தனித்தனியாய் சில காகிதங்களையும் எடுத்து வைத்தார்.

''உனக்கு சாமி அருள் வருமா''

''வராது சாமி''

''இன்னைக்கு காலையில கோயிலுல உனக்கு என்ன நடந்துச்சு சொல்ல முடியுமா''

''எனக்குத் தெரியலை, என்ன நடந்துச்சுனு சொல்ல முடியலை, மயக்கமா வந்தது அவ்வளதான் தெரியும்''

''அப்ப என்ன நடந்ததுனு சொல்லுப்பா''

''என் சுயநினைவில நான் இல்லை''

வாசன் நம்பெருமாள் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே மூவரையும் பார்த்தான். ஏன் இப்படி இங்கே வந்திருக்கிறார்கள், இதுகுறித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலாவது ஏதாவது ஒரு விளக்கம் கிடைக்கும் என யோசித்தான்.

''உன் ஜாதகத்துல பகை கிரகங்கள் எல்லாம் மறைஞ்சி நிற்குது, சனி கிரகம் சாந்தப் பார்வை பார்க்குது, உன் ஜாதகத்துல எப்படி கிரகங்கள் எல்லாம் அமைஞ்சி இருக்கோ அதே மாதிரிதான் இந்த ஜாதகத்திலயும் கிரகங்கள் அமைஞ்சி இருக்கு''

வாசன் ஜாதக நோட்டினைப் பார்த்தான். நம்பெருமாள் சொன்ன விசயங்கள் புரியாதவனாக மேலும் கீழும் பார்த்தவன் நம்பெருமாளை நோக்கி பதில் சொன்னான்.

''எந்த கிரகம் எங்க நின்னா என்ன, சுத்துற வட்டத்தில ஒழுங்காச் சுத்தினா எந்த பாதகமுமில்லை சாமி''

''ஓ, தம்பிக்கு சோதிடத்தில நம்பிக்கை இல்லை போலிருக்கு, இதோ இந்த இரண்டு ஜாதகத்தையும் பாரு, ஒரே மாதிரி எல்லாம் எழுதி இருக்கு, இந்த மாதிரி ஒரே மாதிரி அமையறது ரொம்ப அபூர்வம், ஆனா எல்லாம் தசை, புக்தி, ராசி, லக்னம்னு எல்லாம் ஒரே மாதிரி இருக்கு''

''நீங்களா எழுதி வருசம் மட்டும் மாத்தி இருந்து இருப்பீங்க''

வாசன் பதில் சொல்லிக்கொண்டே அம்மாவைப் பார்த்தான். ஆனால் அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.

''நான் எழுதினதா?, தம்பி இந்த ஜாதகம் எழுதினவங்க யாரு தெரியுமா?''

''தெரியாது சாமி''

''இது சோதிட சிகாமணி அனந்தன், வாசன் அப்படிங்கிற உனக்கு எழுதினது, இது சோதிட கலைஞர் அச்சுதன் இதோ இவரோட மகள் மாதவிக்கு எழுதினது, இந்த ஜாதகம் எழுதினதுக்கு அப்புறம் இந்த இரண்டு பேருமே இதுவரைக்கும் எந்த ஜாதகமும் எழுதினது இல்லை. அவங்க ஊரை மாற்றம் பண்ணிட்டு போனவங்கதான், இவங்களை எனக்குத் தெரியும், என்ன பண்றாங்கனு தெரியும்''

வாசன் குழப்பமானான். அம்மாவைப் பார்த்து கேட்கவேண்டும் போல் இருந்தது. எதற்காக இருவரது ஜாதகத்தையும் எடுத்து வரவேண்டும், இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறதெனில் ஆணாக நானும், பெண்ணாக அவளும் ஏன் பிறக்க வேண்டும், யோசித்தான், கேட்டான்.

''ஒரே மாதிரி ஜாதகம்னா ஏன் பொண்ணு, ஆண் பிறக்கனும் சாமி''

''அது அப்படி அமைகிற சாதகம், அதுக்குத்தான் ஜாதகம். ஜாதகம், பிள்ளை கருவா உருவாகறப்பவே கணிக்கிறது, பிள்ளை பிறக்கறப்ப வைச்சி கணிக்கிறது இல்லை, இப்ப எல்லாம் எந்த நேரம் நல்ல நேரம்னு பார்த்து பிள்ளை பிறக்க வைச்சி ஜாதகம் எழுதுறாங்க''

நம்பெருமாள் சொல்லிக்கொண்டே சிரித்தார். வாசனுக்கு இடைஞ்சலாக இருந்தது. கரு உருவாகும் போது யார் எப்படி அறிந்து கொண்டு கணிப்பது? இதுகுறித்து கேட்கலாமா என நினைத்தவன் அமைதியானான்.

''நான் கிளம்பறேன் சாமி''

''உன் ஜாதகம் பத்தி எதுவும் கேட்காம போறியே, இந்த இரண்டு ஜாதகத்துக்கும் நல்லப் பொருத்தம் இருக்கு, தாராளமா கல்யாணம் செய்து வைக்கலாம், தெய்வாம்சம் நிறைஞ்ச ஜாதகம், ஒன்னுப் பார்த்தா ஒன்னு பார்க்க வேண்டியதில்லை, இரண்டும் ஒன்னு தான், ஜாதகத்தைப் பார்த்ததும் உன்னைப் பார்க்கனும்னு தோணிச்சி அதான் வரச் சொன்னேன்''

''ரொம்ப சந்தோசம் சாமி''

வாசன் எழுந்தான். ராமமூர்த்திதான் கேட்டார்.

''ருதுவான ஜாதகம் சாமி''

''அது எல்லாம் தேவையில்லை, நீங்க தைரியமா போங்க, ஜாதகமே இவங்களுக்குப் பாத்திருக்கக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர்னு பிறந்து இருக்காங்க அந்த காலத்திலே சொல்வாங்களே எங்க பகவான் பிறக்கிறாரோ அங்கே பத்தினியும் பிறந்துருவானு அதுமாதிரி இந்த ஜாதக அமைப்பு''

வாசன் கலகலவென சிரித்தான். நம்பெருமாள் கண்களை மூடினார். மூவரும் வாசனைப் பார்த்தார்கள். வாசன் சிரித்துக்கொண்டே இருந்தான். சிரிப்பொலி நின்றதும் நம்பெருமாள் கண்களை திறந்தார்.

''தெய்வ நம்பிக்கையை வளர்த்துக்கோப்பா''

தெய்வம், மனதில் சொல்லிக்கொண்டான் வாசன். நாராயணா என மனதில் நினைத்தான்.

''நாராயணா''

வாசன் சொன்னதைக் கேட்டார் நம்பெருமாள். அம்மூவரையும் அங்கிருந்து கிளம்பச் சொன்னார் நம்பெருமாள். ஜாதகத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் கிளம்பினார்கள். வாசனை அழைத்தார் அம்மா.

''நீங்க கிளம்புங்கம்மா, நான் வரேன், சாமிகிட்ட கொஞ்சம் பேசனும்''

மூவரும் வீட்டினை விட்டு வெளியேறினார்கள். வாசன் வீட்டை நன்றாகப் பார்த்தான்.

''சாமி எனக்கு ஜாதகம் எழுதினவங்களோட முகவரி வேணும், நான் சிரிச்ச காரணம் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ ஆனா சொல்லிருரேன், எனக்கு நீங்க எங்களை அந்த பகவான் ஸ்தானத்தில வைச்சிப் பேசினது கேலிப்பொருளாப் பட்டது அதான் சிரிச்சேன் சாமி, என்னை மன்னிக்கனும்''

''நீ யாருனு நீயா தெரிஞ்சிக்கிறவரைக்கும் யாரு என்ன சொன்னாலும் அப்படித்தான் இருக்கும், இந்தாப்பா முகவரி''

நம்பெருமாள் எழுதியதை வாங்கிப் படித்த வாசனின் கைகள் நடுங்கியது. சாத்திரம்பட்டி!

''இந்த ஜாதகங்களை யார்கிட்டயும் போய் காட்ட வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லி இருக்கேன்பா, அதனால அதை பத்திரமா பாதுகாக்கிறது உன்னோட கையிலதான் இருக்கு''

வாசன் நம்பெருமாளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முகவரித் தாளினை மடக்கி வைத்தான். சாத்திரம்பட்டி! பெருமாள் தாத்தா! அனந்தன், அச்சுதன், திருமால்! மனது ஒருமுறை துடித்து அடங்கியது. அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தான். மூவரும் காத்துக்கொண்டிருந்தனர்.

''இப்ப என்னாச்சுனு இப்படி ஜாதகம் பார்க்க வந்தீங்க, கேசவன் பூங்கோதை வீட்டுக்கு வந்திருந்தாங்க என்ன ஏதுனு விவரம் சொல்லாம இப்படி பண்ணி இருக்கீங்க, கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ஜாதகம் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணனுமா,ஏன்மா இப்படி''

''மருமகனே, புதன்கிழமை திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, எப்ப வருவீங்கனு தெரியாது, அதான் இப்ப ஜாதகம் பாத்துரலாம்னு பாத்தோம், எங்க மனசுக்கு இப்ப சந்தோசமா இருக்கு''

பொன்னுராஜ் சொன்னதும் தாய் சொன்னார்.

''நாளைக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதுல அதான்''

தந்தையும் தன் பங்குக்கு சொன்னார்.

''உன்கிட்ட சொல்லி இருந்தா நீ விட்டுருக்க மாட்ட, நல்ல காரியம் தானேனு வந்துட்டோம்''

வாசன் மூவரையும் பார்த்து மெளனமானான். பேருந்துக்குச் செல்வதற்காக வாசனை அழைத்தனர். வாசன் தான் மிதிவண்டியில் வந்ததாக கூறினான். அனைவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு தான் மிதிவண்டியில் வருவதாக கூறினான் வாசன்.

இருள் முழுவதுமாக சூழ்ந்துவிட்டது. பொன்னுராஜ் வாசனுடன் வருவதாக கூறிவிட்டு அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வாசனுடன் சென்றார்.

''மாமா ரொம்ப பயப்படறீங்க, மாதவிக்கு நல்ல நல்ல வரன்கள் எல்லாம் கிடைக்கும், இப்படி தேவையில்லாம கவலைப்படறது எதுக்கு மாமா''

''மருமகனே, உங்க அத்தை மனசு மாறினா என்ன பண்றது, அதுக்காகத்தான் இந்த முன்னேற்பாடு, எல்லாம் முத்துராசு சொன்னதால வந்த யோசனை''

''அத்தை உங்க வார்த்தை மீறமாட்டாங்க, ஆமாம் எவ்வள நேரமா இங்க உட்கார்ந்து இருந்தீங்க மாமா''

''அவரைப் பார்க்க எவ்வளவு நேரம், அவரைப் பார்த்ததும் ஜாதகத்தை பார்த்தவர் எங்களை எதுவும் பேசக்கூடாது உடனே பையன் அல்லது பொண்ணைப் பார்க்கனும்னு சொன்னார், அதான் கூப்பிடச் சொல்லி தர்மலிங்கத்துகிட்ட சொல்ல சொன்னோம், அவர் சாத்திரம்பட்டியிலதான் இருந்தாராம், இங்க வந்து மூணு மாசம்தான் ஆகுதாம் மருமகனே''

வாசன் மிதிவண்டியின் வேகத்தை குறைத்தான். காற்று இதமாக வீசியது. வாசனது கண்கள் வேகமாக துடித்து அடங்கியது.

''என்ன மருமகனே, நான் ஓட்டவா? மாசு கட்டுப்பாடுனு நீ மட்டும்தான் பேசற, ஸ்கூட்டருல வந்து இருக்கலாம்தானே''

''நானே ஓட்டறேன் மாமா, இவருக்கு குடும்பம் இருக்கா''

''ஒரு பையன், கல்யாணமாகி அவங்க எல்லாம் நாக்பூரில குடியிருக்காங்களாம், இவங்க மட்டும்தான் இங்க வந்து இருக்காங்க, இவருக்கு இதுதான் தொழில்''

வாசன் சரியெனக் கேட்டுக்கொண்டான். ஊருக்குள் வந்தபோது மணி இரவு எட்டாகி இருந்தது. கேசவனிடம் இனி எப்படி பேசுவது என புரியாமல் விஷ்ணுப்பிரியனை பற்றி யோசித்தான். விஷ்ணுப்பிரியன் பெருமாள் கோவிலில் அமர்ந்து இருந்தார்.

(தொடரும்)