Thursday 8 July 2010

எழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.

எப்படித்தான் ஆரம்பிப்பது இந்த தொடர்பதிவுதனை. இப்படி தொடர்பதிவு எழுதுவதற்கு சுனிதா கிருஷ்ணனை பாராட்டி எழுதலாமே என நினைத்தால், சுனிதா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் அவசியமில்லை, அவரைப் போல வாழ முற்படுபவர்கள்தான் அவசியம்.  அந்த அக்கறை எல்லாம் இம்மண்ணில் உள்ளவர்களுக்கு மிகவும் குறைவு.

மீண்டும் ஒரு அழையா விருந்தாளியாய் இந்த தொடர்தனை ஆரம்பித்துக் கொள்கிறேன். இப்படித்தான் அழையா விருந்தாளியாய் பலரின் மனதில் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டுவிட்டார். இவரை எப்படியாவது துரத்தி அடித்து விடவேண்டும் என ஆதி காலத்தில் இருந்தே ஒரு சாரர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனதிலும் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு விட்டார். எப்படி இந்த கடவுளை துரத்தி அடிப்பது என்பதுதான் அவர்களின் சிந்தனை. அசைந்து கொடுக்கமாட்டார் கடவுள்.

எனக்கு எப்படி இந்த கடவுள் அறிமுகமானார், எப்படி பரிச்சயமானார்.

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்

சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

இதோ மேலே எழுதபட்டிருக்கிற தெய்வங்கள் எங்கள் ஊரில் இருப்பவைதான். அய்யனார் எங்கள் தோட்டத்தில் இருக்கிறார். தெற்கே சுடுகாடு செல்லும் வழியில் இருக்கும் முனியாண்டிக்கு பயந்தது உண்டு. கிழக்கே சூரிய நமஸ்காரம் செய்யும் பெருமாளுக்கு கனிந்தது உண்டு.

முனியாண்டி கோவில் பூசாரியிடம் பேய் ஓட்ட வருபவர்கள் மிகவும் அதிகம். அந்த பூசாரி வீடு எங்கள் வீட்டுக்கு அருகில்தான். அடிக்கப்படும் உடுக்கை சப்தமும், பூசாரியின் சப்தமும் என்னை கண்கள் மூடியே இருக்க செய்தது உண்டு.

இதையும் தாண்டி இரு கடவுள்கள் என வணங்கப்படும் கடவுள்கள் எனது ஊரில் உண்டு.  சிறு குழந்தையாக இருக்கும்போதே தவறிப்போன  நாச்சாரம்மாள். இவருக்கென ஒரு வீடு கோவிலாக இருப்பது உண்டு. எனது நாவலில் இவரையும் எழுதியது உண்டு சற்று மாறுதலுடன். இவருக்கு  பூஜைகள் உண்டு.  மற்றொன்று எனது அம்மாவின் அப்பா சமாதி இருக்கும் தோட்டத்து கோவில்.  குரு பூஜை என நடத்தப்படும் அந்த பூஜையில் அத்தை ஒருவர் சொல்லும் அருள் வாக்கு கண்டு நடுங்குவது உண்டு.

இவர்கள் எல்லாம் கடவுள் என ஒருநாள் கூட மறக்காமல் திருநீர் வைத்து செல்லும் வாழ்க்கை மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது, கோவில்களில் தரப்படும் பிரசாதங்கள் போல.

மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி பாலாஜி கோவில், திருமோகூர் கோவில், அஷ்டலட்சுமி கோவில்  என பல கோவில்கள் என்னுள் கடவுளை உறுதிபடுத்தி கொண்டன. இந்தியாவில் இருந்தவரை கோவிலில் இருக்கும் சிலைகள் எல்லாம் கடவுளாகவே தெரிந்தார்கள். அந்த நம்பிக்கை கூட ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது. எதையும் கேள்வியுடன் பார்க்க வேண்டும் எனும் அக்கறை இல்லை.

இப்படியாக என்னுள் இருந்துவிட்ட கடவுள் மெதுவாக மாற ஆரம்பித்தார். இலண்டன் முருகன் கோவிலுக்கு எதிராக தோன்றியதுதான் இலண்டன் மகாலட்சுமி கோவில். அப்பொழுதுதான் இந்த சிலைகளை கடவுள் எனும் பார்வை விலக ஆரம்பித்தது. ஈ.வெ.ராமசாமி எப்படி கோவில் நிர்வாகத்தில் இருந்தபோது அறிந்து கொண்டாரோ அப்படித்தான் நானும் கோவில் நிர்வாகத்தில் இருந்து பல விசயங்கள் அறிந்து கொண்டேன்.

கடவுள் தண்டிப்பார் எனும் அக்கறை தொலைந்து போனது. கடவுள் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை சிதறிப் போனது. மக்களின் நம்பிக்கையை கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. இதே மக்களின் மனம் குறித்த பார்வை கடவுளை வித்தியாசப்படுத்தியது. எனக்குள் இருந்த நம்பிக்கை விலகி ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இருப்பதே இல்லை. கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி மக்களுக்கு அவர் அவரின் கடமையை உணர்த்துவதுதான் எளிதாக எனக்குத் தெரிந்தது.

அன்பினை வளர்க்கும் பக்குவம் அவசியம், வெறுப்பினை வளர்ப்பதல்ல. மற்றவர்களை முட்டாள் என சொன்னால் முட்டாளுக்கு கூட கோவம் வரத்தான் செய்யும். அதைத்தான் இந்த கடவுள் மறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள், அதனால் தங்கள் கொள்கை வெற்றி பெற இயலாமல் மிகவும் தடுமாறுகிறார்கள்.

இப்பொழுது எனக்குத் தெரிந்த கடவுள் இப்படித்தான் எழுதினார் என சொல்வது எத்தனை எளிது.

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல மனிதனே.

நான் எழுதிய எழுத்துக்களில் அதிகம் விமர்சனத்திற்கு உட்பட்டவர் கடவுள் தான். இதுவரைக்கும் அவர் எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை. ஒருபோதும் தெரிவிக்கப் போவதுமில்லை. இந்த மனிதர்கள்தான் தேவையில்லாமல் அல்லாடுகிறார்கள்.

சுனிதா கிருஷ்ணன் ஒரு கடவுளாகத் தெரியலாம். நாம் இன்னலுக்கு உட்பட்ட வேளையில் எதிர்பாரா உதவி செய்பவர்களும் கடவுளாக தெரியலாம், அதை எல்லாம் மறுத்து பேசி கொண்டிருக்க மனமும் இல்லை.

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது

கடவுள் பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறது. அந்த ரகசியம் காப்பாற்றப்படும்.

சொல் என சொல் அதில்
மனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்
இரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது
ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது

எப்படிப்பட்ட தெளிவு கொண்டபோதிலும் கடவுள் பற்றிய மனிதரின் சிந்தனைகளில் பல எனக்கு விளங்குவதே இல்லை.

முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.

அவதாரம் இனிமேல் வருமெனில் அதை ஆதாரத்துடன் காட்டிடும் பண்பு நம்மிடம் இருப்பதால் கடவுள் இனிமேல் அவதாரம் எடுக்காமல் போகலாம். ஆனால் கடவுள் மனிதர் மனதில் எப்போதும் இருப்பார்.

Wednesday 7 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 21

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரி, சிவன் கோவில், வீடு என்றே நேரம் கடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சின்னச் சின்ன விடுமுறை வந்தபோதெல்லாம் சில காரணங்களால் தனது ஊருக்கேச் செல்ல வேண்டியிருந்தது.  மதுசூதனன் கதிரேசனை மாறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் சில சமயங்களில் வைஷ்ணவி சற்று எரிச்சல் அடைந்தாள். ஒருமுறை வைஷ்ணவி கண்டிப்புடன் சொன்னதும் மதுசூதனன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். சிவன் கோவிலுக்கேச் செல்லாத மதுசூதனன் சிவன் கோவிலுக்கு வரத் தொடங்கினான். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்படித்தான் ஒருமுறை சிவன் கோவிலுக்கு வந்த மதுசூதனன் மெதுவாகப் பாடல் பாடினான். என்ன பாடல் என அருகில் இருந்த கேட்ட கதிரேசனுக்கு மனதில் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அந்த பாடல் கதிரேசனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மதுசூதனன், ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இருந்துப் பாடினான்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

 சிவன் கூட இவன் கண்ணுக்கு திருமாலாகத் தெரிகிறாரே என நினைத்துக் கேட்டான் கதிரேசன். ''எனக்குப் பிடித்தபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மதுசூதனன். ''திருப்பிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''எனக்குப் பிடிச்சபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மறுபடியும். கதிரேசனுக்கு மதுசூதனன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. கோவிலிலிருந்து வெளியே வந்து அதே கேள்வியைக் கேட்டான் கதிரேசன்.

''என் இஷ்டத்துக்கு இந்த சிவன் இருப்பார்'' எனச் சொல்லிய மதுசூதனனை ''திருமாலுக்கும் சிவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா, சிவன்கிட்ட அந்த பாடலைப் பாடினியே'' என்றான் கதிரேசன். ''வித்தியாசம் பண்ணினேன், சிவன் கோவிலுக்கு வரலை, இப்போ இந்த சிவன் என்னோட இஷ்டம், வித்தியாசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான் மதுசூதனன். மேலும் ''நான் மாறிட்டேனு நீ நினைக்காதே, அந்த சிவன் தான் இப்போ எனக்காக மாறிக்கிட்டார்'' என்றான் அவன். கதிரேசன் மதுசூதனன் சொன்ன விசயத்தை மிகவும் பலமாக யோசிக்க ஆரம்பித்தான். சிவன் மாறிக்கொள்வாரா? என எண்ணம் வந்து சேர சில நாட்கள் பின்னர் வைஷ்ணவியிடம் கேட்டான்.

''இப்படியெல்லாம் அவன் பேசினானா? நானா அவனை சிவன் கோவிலுக்குப் போக சொல்லலை. ஒருநாள் நான் சிவன் கோவிலுக்குப் போகனும்போல இருக்குனு சொன்னேன், அதுக்கு அவன் சரி தாராளமாப் போனு சொன்னான், கொஞ்ச நாளுல அவனும் வர ஆரம்பிச்சிட்டான், ஏன் இப்படி சொன்னானு தெரியலையே, எப்படியோ சிவன் கோவிலுக்கு வரானே அதுவே சந்தோசம் தான் எனக்கு'' என்றாள் அவளும்.

''சிவன் மாறுவாரா?'' என்றான் கதிரேசன். ''அவனுக்குத்தான் மாறிட்டாரே'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அமைதியானான். ''உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு இருந்தேன்'' என ஆரம்பித்தவள் ''திருமாலுடைய மார்புல அவரோட மனைவி இருக்கிறதாகவும், சிவனோட உடம்புல பாதிய அவரோட மனைவிக்கு தந்ததாகவும் இருக்கிறத பத்தி என்ன நினைக்கிற'' என்றாள்.

''திருமால் பத்தி தெரியலை, ஆனா சிவன் தன்னோட உடம்புல பாதிய மனைவிக்கு தரலை, மனைவியோட உடம்புலதான் பாதிய தான் போய் எடுத்துக்கிட்டார், அப்படித்தான் அவரோட மனைவியும் விரும்பினாங்க'' என்றான் கதிரேசன். ''என்ன சொன்ன?'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் தான் சொன்ன வார்த்தைகளை அசைபோடும் முன்னர் வைஷ்ணவி சொன்னாள். ''மனைவி விருப்பத்திற்கு தன்னை மாத்திக்கிட்டார்ல'' என்றாள். கதிரேசன் அமைதியாக இருந்தான். அவன் வாயிலிருந்தே வந்த வார்த்தைகளை அவனால் நம்ப இயலவில்லை. அன்றெல்லாம் யோசனையாய் இருந்தது.

''திருமாலும் மனைவி விருப்பத்திற்காகத்தான் தன் மார்புல வைச்சிக்கிட்டாருனு நினைக்கிறேன்'' என சொன்ன வைஷ்ணவி ''மொத்த ஆண்குலமும் பெண்கள் விருப்பத்திற்கேற்பவே வாழப் பழகிக்கிட்டாங்க, காதலின் உச்சம் அது'' என்றாள். ''அப்ப நீங்க?'' என்றான் கதிரேசன். ''எங்க பெருமையை நாங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்'' எனச் சிரித்தாள், கதிரேசனும் சிரித்தான். ஆனாலும் கேள்வியில் மனம் நின்றது.

ஒவ்வொரு முறையும் இதே யோசனையாய் இருக்க பூஜை அறையில் கூட பாடத் தோன்றவில்லை. நாட்களும் நகர்ந்து சென்றது. சமணர் கோவில் சென்றுப் பார்க்க வேண்டும் எனும் ஆசையும் வற்றிப் போனது.

இரண்டாம் வருட கோடை விடுமுறையில் சங்கரன் கோவில் சிறிது நாட்கள் சென்றான். நீலகண்டனின் ஒரு வருட காரியத்தில் கலந்து கொண்டான். அங்கே ஈஸ்வரியிடம் சிவன் குறித்து பேசினான். ''இதிலென்ன சந்தேகம்?'' என்றாள் அவள். மேலும் ''உன்னோட வாழவே விருப்பம், இதுக்கு எங்க வீட்டுல யாரும் தடையா இருக்க மாட்டாங்க'' என்றாள். சிவனே கதியென இருந்த கதிரேசனுக்கு ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. கதிரேசன் சந்தோசமாக அன்று பாடினான்.

''எமக்காக உம்மை மாற்றிக் கொள்ளும் பெருமானே
உமக்கொன்றும் சுமையென ஏதும் இல்லையன்றோ
பிட்டுக்கு மண் சுமந்த கோலம் கொண்டே
பாட்டுக்கு பதில்சொன்னாயோ சொல்சிவனே''

(தொடரும்)

Tuesday 6 July 2010

பதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்

எழுத்து வேற, அதை எழுதறவங்க வேற அப்படினு பிரிச்சி பார்க்க சொன்னாலும் சொன்னாங்க. ஆனா என்னால எழுத்து வேற அதை எழுதுறவங்க வேற அப்படினு இனம் பிரிச்சி பார்க்கறதுல ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.  கற்பனை அப்படிங்கிறதுல பாதிக்கு மேல உண்மை இருக்கத்தான் செய்யும், எதுக்குனா கற்பனைனு எழுதப்படற விசயம் மாதிரியே வாழறவங்க இருக்காங்க இந்த உலகத்தில.

நல்ல விசயங்கள் எழுதுறாங்க. நல்ல விசயங்களை மட்டுமே எழுதுறாங்க. இது யாருக்கு தோணும்னா, அதை எழுதுறாங்களே அவங்களுக்குத் தோணும். ஆனா படிக்கிறவங்களுக்கு அப்படித் தோணுமா. பலருக்கு தோணாது, சிலருக்கு தோணும். 

நமக்கு தெரிஞ்சதை எழுதிட்டு ஓரமா இருக்கலாம். நமக்கு பிடிச்சதை படிச்சிட்டு ஓரமா இருக்கலாம். ஆனா எழுத்துனு வரப்ப எதுக்கு இப்படி எல்லாம் எழுதனும் அப்படினு  மத்தவங்களை அதட்ட தோணும், எதுக்குனா நம்மதான் இந்த உலகத்தை என்னமோ மிகவும் நேரான பாதையில செலுத்துரமாதிரி ஒரு அடவடியான எண்ணம் ;)

போன ஜென்ம பகை அப்படிங்கிற மாதிரி போன வருஷ பகை, அதுக்கு முந்தின வருஷ பகை, போன மாச பகை, போன வார பகை அப்படினு புகைஞ்சிகிட்டே இந்த எழுத்து இருந்துட்டு வருதாம். பத்திக்கிட்டு எரியமாட்டிங்குதுன்னு சிலருக்கு கவலை வேற இருக்காம். வெட்டிகிட்டு சாகமாட்டாங்களானு ஒரு கூட்டம் பிராத்தனை பண்ணிகிட்டு திரியறாங்களாம்.

வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லைனு ஒரு பேச்சு அடிபடுது. அப்புறம் என்ன எழுத்து எழவுக்கு இப்படி எழுத்து தகராறு. அது வேற ஒன்னும் இல்லையாம். சண்டைய பார்க்கத்தான் கூட்டம் கூடுமாம். அது மாதிரி ஒருத்தரை இன்னொருத்தர் எழுதி தாக்கிகிட்டா பதிவுலகத்தில் தனக்கென தனி இடம் ஒன்னு சிறப்பா அமைச்சிக்கிடலாம்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றாங்க. ;) நாலு பேருக்கு நாம தெரியனுமா நல்லவங்களுக்கு கெடுதல் பண்ணு அப்படினு ஒரு சொல் வழக்கு இருக்கு. கெட்டவனு பேரு வாங்கிருவோம்னு பயப்படவேணாம் ;)  நல்லவருனு சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து.

இப்போ  எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல  சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.

சரி அதெல்லாம் பிரச்சினை இல்லை, எனக்கு இப்போ இந்த தமிழுல எழுதறவங்க எழுத்து எல்லாம் படிச்சி படிச்சி அவங்களைப் பத்தி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிச்சி தொலைஞ்சிருச்சி. இதுல கொடுமை என்னனா தப்பா எழுதுறதை வைச்சிதான் பிம்பம் பெரிசா உருவாக ஆரம்பிச்சிருச்சி. ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு தீய விசயம் இருந்தால் போதும், அத்தனை நல்ல விசயங்களும் பொசுங்கிப் போய்விடும் அப்படிங்கிற பாலபாடம் எனக்கு கத்து கொடுக்கப்பட்டு  இருக்கறதால இந்த பிம்பம் எல்லாம் மறையவே மறையாது. பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.

யார் அந்த பதிவர்கள்? அப்படிப்பட்ட  பதிவர்களை கை காட்டித்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஏனெனில் என்னை பார்க்க வேண்டும் என எவருக்கும் இனிமேல் நினைப்பு இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் சரியாக செய்து கொள்வார்கள். ;)