Monday 10 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 11

கதிரேசனுக்கு ஈஸ்வரியின் வார்த்தைகள் மனதில் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தன, அதே வேளையில் நீலகண்டனின் வார்த்தைகள் மனதில் சின்ன ஆறுதலை தந்து கொண்டிருந்தது. இரவெல்லாம் யோசித்தான். திருஞானசம்பந்தருக்கு நடந்த திருமணம் நினைவில் ஆடியது. திருமணம் நடந்த மறுகணமே திருஞானசம்பந்தர், அவரது மனைவி என அனைத்து குடும்பத்தாரும் சிவனுடன் இணைந்து ஐக்கியமானது நினைவில் வந்து ஆச்சரியம் தந்தது. ஒருவழியாய் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவுக்கு வந்த மறுகணம் நிம்மதியாக தூங்கியும் போனான்.

மறுதினம் கோவிலில் வைத்து ஈஸ்வரியிடம் ''நீ என்னை காதலிப்பாயா?'' என்று கேட்டான் கதிரேசன். ''காதலைச் சொல்லிக் கொண்டா காதல் புரிவார்கள்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே?'' என்றான் கதிரேசன். '' பெண்கள், ஆண்கள் போல் காதலில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்கள் பெண்கள். நிதானமாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்துக்கொண்ட முடிவில் எந்த ஒரு மாற்றமும் அவர்களால் செய்து கொள்ள முடியாது. அவசரப்பட்டு எடுத்த முடிவால் அல்லோகலப்படும் ஆண்களும் சரி, நிதானமாகவே எடுத்த முடிவால் அல்லோகலப்படும் பெண்களும் சரி, காதலில் மிக அதிகம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே?'' என்றான் கதிரேசன் மீண்டும். ''அந்த சிவனை போய் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?'' என்றாள் அவள். ''எனக்கு இதுவரை சிவன் உடனடியாக எதற்கும் பதில் சொன்னதில்லை'' என்றான் கதிரேசன்.

மாணிக்கவாசகர் பாடியது தெரியுமா? என்றாள் ஈஸ்வரி. கதிரேசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாணிக்கவாசகர் பற்றி தாத்தா போலவே கேட்கிறாளே என யோசனையுடன் ''என்ன பாடினார்?'' என்றான் கதிரேசன்.

'வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்'

'கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன; ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும்'

இப்படியெல்லாம் பாடி இருக்கிறார் என அவள் பாடிக் காட்டியபோது கதிரேசன் அவளது குரல் இனிமை கண்டு போற்றினான். ''குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது ஈஸ்வரி'' என்றான். ''மனதுக்குப் பிடித்தவர்கள் எதைச் செய்தாலும் இனிமையாகத்தான் இருக்கும், மனதுக்குப் பிடிக்காது போனால் நல்லதே செய்தாலும் கசக்கத்தான் செய்யும், இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே'' என்றாள் ஈஸ்வரி.

''நீ என்னை காதலிப்பாயா?'' என மறுபடியும் கேட்டு வைத்தான். ''மாணிக்க வாசகர் பாடியதன் அர்த்தம் தெரியுமல்லவா?, நீ சிவனே கதி என இருந்தால் என் கதி என்ன ஆகும்? நான் மிகவும் யோசித்துத்தான் எதையும் சொல்ல முடியும், எதற்கும் என் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்'' என வெகுவேகமாகச் சென்றுவிட்டாள். கதிரேசன் அச்சம் கொண்டான். நீலகண்டன் தாத்தாவை நினைக்கும்போது மனம் படபடவென அடித்தது. ஆனால் ஈஸ்வரி அவளது தாயிடம் கேட்கமாட்டாள் என நினைத்து ஆறுதல் கொண்டான். இருந்தாலும் தான் தவறிழைத்து விட்டோமோ என அச்சம் கொண்டு வீட்டுக்குச் செல்லாமல் சங்கரன் கோவிலின் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தான்.

சங்கரன் கோவிலில் இருந்த  தெருக்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. தெருக்களின்  இருபுறமும் வீடுகள் திண்ணைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மாடமாளிகைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதமாகவே கட்டிடங்கள் இருந்தன. சுவர்கள் வெண்மையாகவே இருந்தது ஆச்சரியம் தான். தரைகளில் கால் இடறி விட கற்கள் ஏதும் சிதறிக் கிடைக்கவில்லை. தெருவில் இருந்து எட்டிப் பார்த்தால் கோவில் கோபுரம் பிரகாசமாகவே தெரியும். அந்த மதிய வெயிலிலும் தாமிரபரணி ஆற்றில் தலை நனைத்து விட்டு வரும் காற்று மிகவும் சுகமாகவே வீசிக் கொண்டிருந்தது. இதே ஊரில் தனது வாழ்க்கையை கழித்துவிட வேண்டுமென கணக்குப்  போட்டுக்  கொண்டது கதிரேசன் மனம்.

வீட்டிற்குச் சென்ற ஈஸ்வரி அவளது அம்மாவிடம் கதிரேசன் கேட்ட விசயத்தையும் தான் சொன்ன விசயத்தையும் அப்படியே ஒப்பித்துவிட்டாள். பார்வதிக்கு கோபம் வந்தது. ஈஸ்வரியைத் திட்டியவர், என்ன முறையில்லாமல் நடந்து கொள்கிறான் அவன் என உடனே தனது தந்தையிடம் நடந்த விசயத்தைக் கூறினார். நீலகண்டன் பார்வதியை பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால் பார்வதி ''இது பொறுமையாக இருக்கக்கூடிய விசயமல்லப்பா, சின்ன பிள்ளை மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியிருக்கான் அவன். அவனை சிவன் பக்தனு சொல்றீங்க, என் கணவர் வந்தா பிரச்சினை ஆகும், அவனை கண்டிச்சி வைங்கப்பா, விருந்தாளியா வந்த இடத்தில ஏன் இப்படி நடந்துகிறான் அவன்'' என்றே போர்க்கோலம் கொண்டாள் பார்வதி. அதுவரை அமைதியாய் இருந்த ஈஸ்வரி ''அம்மா அவன் என்னை காதலிக்கிறேனு சொல்லலைம்மா, அவனை நான் காதலிப்பேனானுதான் கேட்டான், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குமா'' என்றாள் ஈஸ்வரி. பார்வதி ஈஸ்வரியை உக்கிரக் கண்களுடன் பார்த்தாள். நீலகண்டன் பார்வதியை சமாதானப்படுத்தினார்.

கதிரேசன் மாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டில் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து விவாதித்து கொண்டு இருந்தார்கள். கதிரேசனை கண்டதும் அறையில் நிசப்தம் நிலவியது. கதிரேசனின் மனதில் பயம் மிகவும் அதிகமாகவே தொற்றிக் கொண்டது.

(தொடரும்)

Saturday 8 May 2010

நுனிப்புல் (பாகம் 2) 2

2. நிச்சயதார்த்தம்

கேசவனின் உறவினர்கள் பெண் அழைப்பிற்காக காலை பதினொரு மணிக்கு திருமலையை அடைந்தனர். திருமலையில் பூங்கோதையும் அவரது வீட்டாரும் தயாராகிக் கொண்டு இருந்தனர். பூங்கோதையின் வீட்டில் அனைவரும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

குளத்தூரில் இன்று இரவு நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, நாளை காலையில் பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூங்கோதைக்கு இத்தனை அவசரமாக திருமணம் அவசியமா? என கேட்டவர்களுக்கு பூங்கோதையின் பெற்றோர்கள் சோதிடத்தினை காரணமாக காட்டினார்கள். இத்திருமண விசயம் பூங்கோதையை அவரவர் வீட்டு மருமகளாக கொண்டு வர நினைத்த சிலருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்கோ போய் திருமணம் செய்கிறார்கள் எனப் பேசிக் கொண்டார்கள். விஷ்ணுப்பிரியன் ஒரு முக்கியமான திட்டத்துடன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தயாராகிக் கொண்டு இருந்தார். ஒரு திருவிழாவிற்குச் செல்வது போல் திருமலை ஊர் அசைந்தது.

கேசவனின் உறவினர்கள் நன்றாக உபசரிக்கப்பட்டார்கள். சிறிது நேரம் கழிந்த பின்னர் அனைவரும் கிளம்பிட தயாராகினர். அப்பொழுது பூங்கோதை ஏதோ நினைவுக்கு வந்தவளாக தனது தாயிடம் கூறினாள்.

‘’அம்மா ஆண்டாள் கோவிலுக்குப் போய்ட்டுப் போகலாம்’’

இதைக்கேட்டுக் கொண்டிருந்த கேசவனின் மாமா கண்ணையன் கூறினார்
.
 ‘’இப்பவே நேரமாச்சு, கோவிலுக்குப் போய்ட்டு போனா நிச்சயதார்த்த நேரம் கடந்திரும்’’

உடனிருந்தவர்களும் அதையே சொன்னார்கள். பூங்கோதை அண்ணி ஜோதியைப் பார்த்தாள். பூங்கோதையைப் பார்த்து ஜோதி சொன்னார்
.
‘’நேத்து தான போன கோதை, இன்னைக்கு காலையிலே போயிருக்கலாம்ல, இப்ப நாம கிளம்பிட்டு இருக்கையிலே கோவிலுக்குப் போகனும்னு சொன்னா எப்படி?

பூங்கோதை நகராமல் நின்றாள். ஜோதி யோசித்தவளாய் அத்தையிடம் கூறினாள்.

‘’அத்தை எல்லாரையும் கிளம்பச் சொல்லுங்க, அவங்கள இரண்டு பேரு மட்டும் நம்மளோட கோவிலுக்கு வரட்டும், சாமி கும்பிட்டுட்டு கோவிலிருந்து அப்படியேப் போவோம்’’

நேரமாகி விடும் என்றவர்கள் சரியான நேரத்திற்குப் போகனும் என வேண்டியபடியே ஆண்டாள் கோவிலுக்கு அனைவரும் சென்றார்கள்.

திருவில்லிபுத்தூர், கரிசல் பூமி. பல வருடங்களுக்கு முன்னால் பாம்புகள் குடி கொண்ட புற்றுக்கள் அதிகமாக இருந்த நிலமாய் இருந்தது. யாருமில்லா அந்த புதர்களும், மரங்களும் நிறைந்த அந்த நிலங்களில் வேட்டையாட இரண்டு அரசகுமாரர்கள் வந்தனர். அதில் ஒருவனை பாம்பு தீண்டி விட அவன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தான். இதனை அறிந்து கொண்ட அரசன் அங்கிருந்த பாம்பு புற்றுகளை, புதர்களை அழித்து ஒரு நகரத்தை நிர்மாணிக்க உத்தரவிட்டான். அப்படி உருவாக்கப்பட்ட அந்த நகரத்திற்கு இறந்து போன அரசகுமாரரின் பெயரை அடிப்படையாய் வைத்து வில்லிபுத்தூர் என பெயரிட்டான்.

அந்த வில்லிபுத்தூரிலே விஷ்ணுசித்தர் எனும் இயற்பெயர் கொண்ட பெரியாழ்வார் கண்டெடுத்த பெண் பிள்ளை தான் ஆண்டாள். பெரியாழ்வாரும் ஆண்டாளும் பெரும் பேறு பெற்றவர்களாயினர். ஆண்டாள் பிறந்த காரணத்தால் வில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆனது. அதே வேளையில் இந்த பெரியாழ்வாரே தன்னை பெண்ணாய் பாவித்து பாக்கள் இயற்றியதாய் கருத்துக்கள் உண்டு. அது சரி, யார் தான் உண்மையை உண்மையாக இருக்க விட்டார்கள்?

திருமலையில் இருந்து கிளம்பியவர்கள் மதிய வேளையில் திருவில்லிபுத்தூரினை அடைந்தனர். மணப்பெண் கோலத்தில் இருந்த பூங்கோதை துளசி மாலைகள் வாங்கிக்கொண்டு ஆரவாரமற்ற கோவிலுனுள் அமைதியாய் நுழைந்தாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு கோவிலுக்குச் செல்லாமல் செல்வதா என பூங்கோதையுடன் வந்திருந்தவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர்.

பூங்கோதை கோவிலில் பரிச்சயப்பட்ட ஒரு தூணிற்கு அருகில் சென்றாள். நின்ற பூங்கோதையிடம் அம்மா கேட்டார்.

‘’என்னம்மா இங்க நின்னுட்ட?’’

‘’எல்லோரையும் கூட்டிட்டுப் போம்மா, இதோ வரேன்’’

பூங்கோதைக்கு அழுகையாய் வந்தது. ஜோதி பூங்கோதையின் கைகளைப் பிடித்து அழைத்தாள்.

‘’வா கோதை’’

பூங்கோதைக்கு தெரிந்த துளசி விற்கும் சிறுமி பூங்கோதையிடம் வந்தாள்.

‘’எல்லாம் நல்லபடியா நடக்கும்க்கா, தைரியமாப் போய்ட்டு வாக்கா’’

ஜோதி மீண்டும் பூங்கோதையை அழைத்தார்.

‘’வா கோதை நேரமாகுது’’

விஷ்ணுப்பிரியன் ஒவ்வொரு நிகழ்வினையும் கவனித்துக் கொண்டே வந்தார்.

இந்த தூணிற்கு அருகில்தான் மூன்று மாதங்களாய் பெருமாள் அமர்ந்து இருந்தார். கோவில் மூடுவதற்கு முன்னர் கிளம்பிச் செல்பவர், கோவில் திறந்ததும் வந்து அமர்ந்து கொள்வார். கோவில் பிரசாதம்தனையும், அங்கு இருப்பவர்கள் தரும் உணவையும் அருந்திவிட்டு எங்கும் செல்லாமல் அந்த மூன்று மாதங்கள் மட்டும் அங்கு ஏன் வந்தார், எதற்கு செல்கள் தர சம்மதம் சொன்னார் என்பது விளங்க முடிவதில்லை.

இந்த கோவிலுக்கு வந்த பின்னர்தான் வேறு எங்கோ சென்று இருக்கிறார், அவர் அவ்வாறு செல்லும்போது பார்த்தசாரதியிடம் சொல்லிக் கொள்ளவில்லை. பெருமாள் இரவோடு இரவாக கிளம்பியவர்தான். பார்த்தசாரதி இவரை எங்கு தேடுவது என சில இடங்களில் தேடியதோடு விட்டுவிட்டார். அச்சமயம் குளத்தூர் வந்த பார்த்தசாரதி இவரைப் பற்றி விசாரிக்காமல் போனது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. ஊரைச் சொல்லாமல் பெருமாள் விட்டுவிட்டார் என்பது நாம் அறிந்ததே.

பூங்கோதை ஆண்டாளை வழிபட்டாள். தாயார் தனது அருளையெல்லாம் அவளுக்கு அள்ளித் தருவது போல் ஒரு உணர்வு அவளுக்குள் வந்து போனது. அனைவரும் அவசரப்படுத்தினார்கள். அவசரமாக ஏன் ஆண்டாளை வணங்க வேண்டும்? அமைதியாய் பக்தி செலுத்தி ஆனந்தபடத்தானே ஆலயம். ஆண்டாளை வணங்கிவிட்டு அனைவரும் கிளம்பினார்கள்.  கண்ணையன் கேட்டார்.

‘’பொண்ணுக்கு சாமினா ரொம்பப் பிடிக்குமோ’’

‘’எப்பவும் ஆண்டாளையே நினைச்சிட்டு இருப்பா’’

பூங்கோதையின் தாய் மோகனா சொல்லிக்கொண்டே அனைவரும் கோவில் விட்டு வெளியே வந்தனர். குளத்தூரை நோக்கி வாகனங்கள் விரைந்து சென்றது. மழை பெய்யத் தொடங்கியது. சாலையின் இருபுறங்களிலும் காற்றாலை மழையை சுழற்றிக் கொண்டு இருந்தன.

மின்சாரம் இல்லாமல் இன்று எதுவும் இல்லை என்றாகிவிட்டது. பொதுவாக மின்சாரத்தை படிம பொருட்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய், நிலக்கரி போன்றவைகளை மூலதனமான எரி பொருட்களாக பயன்படுத்தி உருவாக்குவார்கள். இப்படி இவைகளை எரிப்பதால் கரியமில வாயு அதிக அளவில் உருவாகின்றது. அப்படி உருவாகும் கரியமில வாயு அதிக அளவில் உருவாவதால் இந்த கரியமில வாயு ஒரு படிமத்தை ஓசோன் வளையத்தின் கீழ் வளிமண்டலத்தில் உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் கரியமில வாயுவின் படிமமானது சூரியக்கதிர்கள் பூமியிலிருந்து வெளிச்செல்லும்போது வெளியே விடாமல் மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி விடுகிறது. அப்படி உள்ளே வந்துவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் இந்த ஒளிக்கதிர்கள் பூமியினை வெப்பமாக்குகின்றன. இதனால் இன்று உலகில் பெரும் பிரச்சினையாக கருதப்படும் இந்த வெப்பமாதல் வினை பெரும் வினையாகத்தான் இருக்கின்றது. ஆனால் இன்று இதனை தவிர்க்க சூரிய ஒளியால் மின்சாரம் உருவாக்குவது, மற்றும் இந்த காற்றாலைகளால் மின்சாரம் உருவாக்குவது, அணைக்கப்பட்ட அதாவது அணை கட்டப்பட்ட தண்ணீரிலிருந்து மின்சாரம் உருவாக்குவது என பூமியினை பாதுகாக்க பல வழிகளை முயற்சி செய்து வருகிறார்கள். பேசாமல் விநாயகம் பெரியவர் தான் வாங்கி இருக்கும் நிலங்களில் இந்த காற்றாலைகளை நிறுவலாமே! எதற்கு திருவில்லிபுத்தூர் நெகாதம் செடி? செடியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாமோ?

வாகனங்கள் சற்று தாமதமாகவே குளத்தூரை வந்தடைந்தன. அனைவரும் அவசரம் அவசரமாக இறங்கினார்கள். பெரியவர், வாசன் மற்றும் பலர் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். வாசன் இதனை தனது வீட்டுத் திருமணமாக கருதினான். மாதவியும் தேவகியும் வந்து இருந்தார்கள். திருவிழா முடிந்து மீண்டும் ஊருக்கு வந்தது, அவர்களுக்கு ஊரிலேயே இருந்தது போல் இருந்தது.

குளத்தூரில் கால் வைத்ததும் விஷ்ணுப்பிரியன் மிகவும் தீவிரமாகத் திட்டம் தீட்டினார். எப்படி திட்டம்தனை ஆரம்பிக்கலாம் என எண்ணியவர் வாசனிடமிருந்து தொடங்க வேண்டும் என முடிவு பண்ணினார். சுபா, விஷ்ணுப்பிரியன் தீவிர யோசனையில் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. சுபா தன் அருகில் நின்று கொண்டிருந்த ஜோதியிடம் சொன்னார்.

‘’ஜோதி, விஷ்ணு பலமான யோசனையில் இருக்கறது போல இருக்கு, முகமே சரியில்லையே கவனிச்சியா’’

‘’எல்லாம் கோதையோட கல்யாண விசயமாத்தான் இருக்கும், எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாதில்ல’’

‘’இல்லை ஜோதி எனக்கு என்னமோ இவரே பிரச்சினை பண்றமாதிரிதான் தெரியுது’’
‘’என்ன சுபா நல்ல காரியத்துக்கு வந்து இருக்கறோம், நீ இப்படி யோசிக்கிற, நீ ஏதும் கேட்காத அவர்கிட்ட, நீயே இல்லாத பிரச்சினையை கிளப்பிருவ போலிருக்கே சுபா’’
‘’ஆண்டாளை வேண்டிக்குவோம்’’

அனைவரும் வாசன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். விஷ்ணுப்பிரியன் பூங்கோதையின் திருமணம் முடியும்வரை காத்திருப்பது என முடிவு செய்தார். எப்படியும் தனது திட்டத்தினை நிறைவேற்றியே தீர்வது என்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார்.

ஊர் விழாக்கோலம் பூண்டு இருந்தது. சிறுவர்கள், சிறுமியர்கள் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தனர். சுமதி விளையாடாமல் மிகவும் யோசனையில் இருந்தாள். இத்திருமண விழாவினை வெகு சிறப்பாக நடத்திட வாசன் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தான். நிச்சயதார்த்தம் வாசனின் வீட்டில் வைத்து நடத்திட முடிவு செய்து இருந்தார்கள். பூங்கோதையின் கல்லூரித் தோழர்கள், தோழிகள் திருமணத்திற்கு வந்து இருந்தார்கள்.

திருமணத்திற்கு என வெளியூரிலிருந்து இரவே வந்தவர்களுக்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. விநாயகம் தனது வீட்டில் பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். திருமலை மக்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஊரின் பெரியவர்களின் தலைமையில் வாசனது வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்தது. பழங்கள், மலர்கள் என ஏந்திய தட்டுகள் அணிவகுத்து அறையில் அமர்ந்திருந்தன. வீடு மிகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கேசவன் வீட்டின் வெளியில் இடப்பட்ட பந்தலில் அமர்ந்து இருந்தான். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இரவு நேர உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஊர் ஒளி வெள்ளத்தில் மகிழ்ச்சியில் குளித்து சிலிர்த்தது.

விஷ்ணுப்பிரியன் சுபாவிடம் தான் பெரியவர் வீட்டில் சென்று தங்கிக்கொள்வதாக கூறினார். சுபா எதுவும் பேசாமல் சரியென சம்மதம் சொன்னாள். வாசன் கேசவனுக்கு நன்றிதனை தெரிவித்துக் கொண்டான்.

‘’இன்னைக்கோட போறதா மாப்பிள்ளை, எந்த ஒரு பிரச்சினையும் இல்லாம வாழ்ந்து காட்டுறதலதான் இருக்கு மாப்பிள்ளே, நிச்சயம் வாக்கை காப்பாத்துவேன்’’

வாசன் நெகிழ்ந்து போனான். கேசவன் பேச்சு கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
நாடகத்தில் நடித்தவர்கள் நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டு பேசிக் கொண்டார்கள்.
‘’திருவிழாவில் பார்த்து கல்யாணம் பேசிக்கிட்டாங்க’’

‘’ரொம்ப வேகம் தான்’’

கேலியும் கிண்டலுமாய் இரவு மெல்ல நகர்ந்தது. பூங்கோதை அயர்வில் உறங்குவதற்கு வாசனின் அறைக்குச் சென்றாள்.

பூங்கோதையினைக் கண்டதும் வாசனின் அறையிலிருந்த மாதவி வரவேற்றாள்.

‘’வாங்க’’

‘’தூக்கமா வருது, அதான் இங்கு தூங்கலாம்னு வந்தேன்’’

‘’ஓ தாராளமா தூங்குங்க’’

அறையில் பூங்கோதைக்கு படுத்து உறங்கிட வழி செய்து தந்தாள் மாதவி. அலங்காரம் களைந்து விட்டு அயர்ச்சியில் கண் அயர்ந்தாள் பூங்கோதை. பூங்கோதையின் தாய், அண்ணி இருவரும், சுபா மற்றும் சிலரும் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் அங்கேயே தூங்கச் சொல்லிவிட்டு தேவகியுடன் மாதவி வாசனது அறையில் இருந்து வெளியே நடந்தாள்.

வீட்டு பந்தலில் பார்த்தசாரதி மற்றும் சிலருடன் வாசன் பேசிக் கொண்டு இருந்தான். மாதவியும் தேவகியும் செல்வதைக் கண்ட வாசன் அவர்களிடம் சென்று கூறினான்.
‘’மாதவி நீ எங்க போற, பூங்கோதை கூடவே கல்யாணம் முடியற வரைக்கும் இரு, நாங்க உங்க வீட்டுக்குப் போறோம்’’

‘’சரி மாமா’’

மாதவியும் தேவகியும் அறைக்குத் திரும்பினார்கள். பூங்கோதை மட்டும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். மற்றவர்கள் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பக்கத்து அறையை தயார் செய்து தந்துவிட்டு பூங்கோதையுடன் மாதவியும் தேவகியும் தூங்கினார்கள். நடு இரவில் திடீரென விழித்து எழுந்த பூங்கோதை அறையின் மின் விளக்கைப் போட்டுவிட்டு மாதவியை எழுப்பினாள்.

(தொடரும்) 

Friday 7 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 10

முதலில் கதிரேசன் எடுத்துக்கொண்டது திருஞானசம்பந்தர் பற்றியது. தினமும் சிறிது சிறிதாக  படிக்க ஆரம்பித்தான். தனது கல்லூரிப் படிப்பும் படிக்க வேண்டும் என்பதால் அவனால் முழு கவனமும் இதில் செலுத்த இயலவில்லை. நாளடைவில் கல்லூரி படிப்பையே வேண்டாம் என ஒதுக்கும் அளவுக்கு மனம் நினைத்தது. இது குறித்து நீலகண்டனிடம் கூறியபோது பக்திக்காக அனைத்தையும் துறந்துவிடுவது என்பது நல்லதில்லை, இந்த உலகத்துக்கு ஏற்றதுமில்லை என்றே பதில் அளித்து இருந்தார்.

வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் கதிரேசன். கதிரேசன் வந்து செல்வதையே மிகவும் சந்தோசமாக கருதினார் செல்லாயி. கதிரேசனும் தனது எண்ணத்தை அன்னையிடம் கூற அவரோ வழக்கம்போல பதறினார். 'ஏன்பா உன் மனசு இப்படி போகுது' என்றே அழுதார். கதிரேசன் தனது மனநிலையை மறைக்க விரும்பவில்லை என்று அன்னையிடம் சொன்னபோது அன்னை ஆறுதல் உற்றார். மறைத்து வாழாத வாழ்க்கை அத்தனை சுலபமில்லை என்பதை அவர் அறிந்து இருந்தார். இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.

திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு படித்தபோதுதான் சமண சமயம் பற்றி தெரிந்து கொண்டான் கதிரேசன். கி.பி ஆறாம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை நடந்த விசயங்கள் அவன் மனதை என்னவோ செய்துவிட்டது. அப்படிப் படித்தபோதுதான் திருநாவுக்கரசர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற விசயம் அறிந்து கொண்டான். அவனுக்கு மனதில் பல கேள்விகள் எழத் தொடங்கியது. ஒவ்வொரு கேள்வியையும் நீலகண்டனிடமே கேட்டுக் கொள்ள நினைத்தான். ஆனால் யாராலும் எளிதாக பதில் சொல்ல முடியாது என்ற ஒரு முடிவுக்கு வந்தான். ஆனால் தொடர்ந்து படிப்பதை நிறுத்தவில்லை ஆனால் பாடல் பாடுவதை சற்று காலம் நிறுத்தி இருந்தான்.

முதல் தேர்வு வந்தது. தேர்வோடு விடுமுறையும் வந்தது. அப்பொழுது நீலகண்டன் தனது மகள் இருக்கும் சங்கரன்கோவிலுக்குச் செல்வதாக குறிப்பிட்டு கதிரேசனையும் அழைத்தார். கதிரேசனுக்கு அவருடன் செல்ல மனம் இசைந்தது. ஊருக்குச் சென்று அன்னையிடம் கூறிவிட்டு வருவதாக சொன்னான். நானும் உடன் வருகிறேன் என நீலகண்டனும் கிளம்பினார். புளியம்பட்டியில் ஒருநாள் மட்டுமே தங்கினர். அப்பொழுது செல்லாயி நீலகண்டனிடம் தனது மகனின் நிலையைச் சொல்லி வருந்தினார். நீலகண்டன் மேலும் விசயங்கள் கூறி, கவலை வேண்டாம், எல்லாம் சிவன் பார்த்துக் கொள்வான் என்றார். சற்று ஆறுதல் அடைந்தார் செல்லாயி.

இருவரும் சங்கரன் கோவில் அடைந்தனர். தந்தையை சந்தோசத்துடன் வரவேற்றாள்  பார்வதி. தந்தையுடன் வந்த கதிரேசனையும் புன்னகையுடனே வரவேற்றாள். வீட்டினில் அவர்கள் அமர்ந்து இருக்க நீலகண்டனின் இருபது வயதான பேரன் சங்கரனும், பதினேழு வயதான பேத்தி ஈஸ்வரியும் உள்ளே நுழைந்தனர். வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். ஈஸ்வரியைக் கண்ட கதிரேசனது  மனம் முதன் முதலாய் ஒரு பெண்ணைக் கண்டு சற்றே அல்லாடியது.

ஈஸ்வரியும் கதிரேசனை தெரிந்தவள் போல் நன்றாகப் பேசினாள். இரண்டு நாட்கள் கடந்த வேளையில் சங்கரன்கோவிலில் இருந்த சிவன் ஆலயத்தில் அமர்ந்திருந்த கதிரேசன் தன்நிலை மறந்து நன்றாக உறங்கிவிட்டான். மாலைப் பொழுதும் கடந்து கொண்டிருந்தது. யாரும் அவனை எழுப்பிவிடாமல் சென்றது ஆச்சரியமாக இருந்தது. ''சிவனே என்ன பாவம் செய்துவிட்டேன்'' என்று சொல்லியவாரே அவனாகவே எழுந்தான். ''தூங்கினது பாவம் இல்லை'' என்றார் அருகிலிருந்தவர். சிவன் கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ஈஸ்வரியைக் கண்டான் கதிரேசன்.

ஈஸ்வரியிடம் அவளைக் கண்டதும் தனது மனதில் ஏற்பட்ட சலனத்தை நேரடியாகவேச் சொன்னான். அவள் பதிலேதும் பேசாமல் புன்னகைத்தவள் சிறிது இடைவெளிவிட்டு ''நீ சிவனே கதினு இருக்கறவனு எங்க தாத்தா சொல்லிட்டு இருந்தாரு'' என்றாள். ''ஆமாம் எனக்கு குடும்ப பந்தமே வேண்டாம்'' என்றான் கதிரேசன். ஆறு மாதம் இளையவளாக இருந்தாலும் துணிச்சலுடனே பேசினாள். ''வேண்டாம்னு நினைச்சப்பறம் எதுக்கு மனசு அலைபாயனும்'' என்று சொல்லிவிட்டு கோவில் நோக்கிச் சென்றாள். கதிரேசனின் மனம் ஓரிடத்தில் இல்லை.

கதிரேசனின் மனம் சஞ்சலம் கொண்டதை அறிந்து கொண்டார் நீலகண்டன். சிலநாட்கள் விடுமுறை இருக்கும்போதே செல்லலாம் எனச் சொன்ன நீலகண்டனிடம் விடுமுறையை கழித்துவிட்டுச் செல்லலாம் என கதிரேசன் சொன்னபோது நீலகண்டன் சஞ்சலத்திற்கான காரணம் தெரிந்து கொண்டார். ''சிவனை மட்டும் நீ நினைச்சி வாழ முடியுமா?'' என்றார் நீலகண்டன். கண்கள் நீரால் நிறைந்தது கதிரேசனுக்கு. ''சைவம் குடும்ப பந்தத்தை வெறுக்கச் சொல்லலை'' என்றார் நீலகண்டன். கதிரேசன் மனம் எதுவென முடிவுக்கு வரமுடியாமல் தள்ளாடியது.

(தொடரும்)