Thursday 6 May 2010

ஒரு இயக்குநர் தேடும் கதை

எப்படியாவது திரைப்படத் துறையில் இயக்குநர் ஆகிவிட வேண்டுமெனும் கனவு பலருக்கும் இருக்கிறது. இதற்காக வெயில், மழை, உணவு, நட்பு என எதையும் பொருட்படுத்தாமல் அந்த கனவினை நிறைவேற்ற பாடுபடும் பலர் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

ஆனால் இவர்களில் பலர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பினை பெறுவதே இல்லை. இவர்களின் மன நிலை ஒரு கனவு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் வெகு சிலரே தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்து கொள்கிறார்கள்.

திரைப்படத்துறையில் கால் பதிக்க கதையை தேடி அலையும் இயக்குநர்களை விட, கதை சொல்ல துடிக்கும் இயக்குநர்களே அதிகம். ஒரு வரியில் எவர் ஒருவர் கதையை சொல்கிறாரோ அவரே சிறந்த கதை உடையவர். ஆனால் ஒரு வரி கதையை எப்பிடி திரைப்படம் ஆக்குவது. அதுதான் இயக்குநரின் சிந்தனைக்கு சவால். எப்படிப்பட்ட நல்ல கதையையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவது இயக்குநரிடம் உள்ளது.

ஒரு வரி கதையின் துணை கொண்டு நான்கு  பாடல்கள், ஒரு சண்டை, சில நகைச்சுவைகள்  என திரைக்கதை எழுதிவிட்டால் ஒரு திரைப்படம் தயார் ஆகிவிடும். இப்படி கதை வேண்டும் என ஓடித் திரியும் இயக்குநர்களின் மத்தியில் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் ஒரு கதாநாயகன், ஒரு வில்லன், ஒரு காதலி என அடிதடிகளுடன் கூடிய படங்களும் எடுக்கப்படுகின்றன. இந்த படங்களுக்கு கதை என்பதை விட எடுக்கப்படும் விதமே முக்கியம்.

எத்தனையோ இயக்குநர்கள் என்ன கதைகள் வைத்து இருக்கிறார்கள், கேட்டால் எனது இருபது வருட கனவு என சொல்பவர்களும் உண்டு. மேலும் பார்க்கும் விசயத்தையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டு இதோ ஒரு கதை என சொல்பவர்களும் உண்டு. குறும் படங்கள் எடுத்ததும் பெரிய திரைப்படம் எடுத்துவிடலாம் என எண்ணுபவர்களும் உண்டு.

இப்படியெல்லாம் இந்த கால கட்டடத்தில் இருக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு இயக்குநராகும் கனவுடன் ஒருவர் கதை தேடிக் கொண்டு இருந்தார். அவர் தேடத் தொடங்கிய வருடம் 1920. அப்போது அவருக்கு வயது 18. அவரால் என்ன கதை என முடிவு செய்ய முடியவில்லை. அப்போது வெறும் ஊமைப்படங்கள் மட்டுமே.  விவசாயம் பார்த்துக் கொண்டே இருந்தவர் திரைப்படங்களை பார்த்து பார்த்து என்ன கதை இது என்ன கதை இது என சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒரு நல்ல கதை அவருக்கு கிடைத்த பாடில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்களையும், நல்ல விளைநிலங்களையும் ஊரைச் சுற்றி உருவாக்கினார். 1976 ல் நோய்வாய்ப்பட்டார். தன்னால் ஒரு நல்ல கதையை உருவாக்க முடியவில்லை எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. செத்துப் போய்விடுவோமோ எனத் துடிதுடித்தார். தனது மகனை அழைத்தார். எனது கதையை ஒரு திரைப்படம் ஆக்கிவிடு என சொல்லிவிட்டு உயிர் துறந்தார்.

திரைப்படத்தில் கதை வேண்டும் என கேட்பவர்களே உங்கள் வாழ்க்கையை ஒரு நல்ல திரைப்படம் ஆக்கும் அளவுக்கு வாழ வேண்டும் என எண்ணியது உண்டா. இதோ ஒரு இயக்குநர் ஆகும் கனவுடன் நானும் கதை செதுக்க ஆரம்பித்து விட்டேன்.

காமம் - 5

காமம் - 4

எந்த ஒரு ஆணும்  சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை  அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.

எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.

தாய், சகோதரி என  வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு  வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை  கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும்  காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.

இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு.  உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள்  தருவதை  மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.

இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?

(தொடரும்)

Wednesday 5 May 2010

நுனிப்புல் (பாகம் 2 ) 1



1. பாரதி கண்ட திருமால்

‘’உண்மையும் அதன் உணர்வுதனையும்
இதுநாள்வரை அறிந்தது இல்லை
இனியும் அறியப்போவது இல்லை
இது உண்மையா? சொல்லத் தெரியவில்லை’’

அன்று சனிக்கிழமை. பாரதி அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றிவிட்டு, கிருத்திகாவை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள சிரிப்பாற்றனூரில் இருக்கும்  திருமால் வீட்டினை அடைந்தார்கள். நாற்பத்தைந்து நிமிட பேருந்து பயணம் உல்லாசமாக இருந்தது. சூரியன் சுடாமல் ஒளி தந்து கொண்டு இருந்தது. பாரதி முகவரியை மீண்டும் சரிபார்த்துக் கொண்டாள். பாரதியும் கிருத்திகாவும் பேசிக்கொண்டார்கள்.

‘’இதுதான் அந்த வீடு’’ 

‘’கதவை தட்ட வசதியில்லாம திறந்தே இருக்குய்யா, உள்ளே போவோம்யா’’

ஓடுகளால் வீட்டின் கூரை மேயப்பட்டு இருந்தது. மாடியின்றி கீழ்தளம் மட்டுமே கொண்டு அனைத்து அறைகளும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. வீட்டினைச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர்களுக்கு உள்ளே மரங்களும், பூச்செடிகளும் வளர்ந்து குளிர்ச்சியை தந்து கொண்டு இருந்தது. வீட்டின் சுற்றுப்புறம் மிகவும் அழகாக பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது.

பாரதியும் கிருத்திகாவும் வீட்டின் வாசற்படியில் சென்று நின்ற பொழுதில் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டினுள் இருந்து வெளியே வந்தார். பாரதியைப் பார்த்து திருமால் கேட்டார்.

‘’யாரைப் பார்க்கனும்?’’

‘’திருமால் பெரியவரைப் பார்க்கனும், என் பெயர் பாரதி, இவ என் தோழி கிருத்திகா’’

‘’என் பெயர்தான் திருமால்’’

பாரதியும் கிருத்திகாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘’வாசலிலேயே நிற்கிறீங்க, உள்ளே வாங்க’’

திருமால் மிகவும் திடகாத்திரமான உடலமைப்பை கொண்டு இருந்தார். முகத்தில் புன்னகை மட்டுமே தவழும் என்பது போன்ற முக அமைப்பு. சீரிய கண்கள். பேச்சில் பணிவு என மிகவும் பண்பட்ட இளைஞராக இருந்தார். ஒரு வயதான மனிதரைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வந்த பாரதிக்கும் கிருத்திகாவுக்கும் திருமாலைப் பார்த்ததும் மிகவும் வியப்பாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இவர் உண்மையிலே திருமால் தானா என ஐயம் கொள்ள வேண்டி இருந்தது. இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

இருவரும் வீட்டினுள் நாற்காலியோ, மேசையோ, கட்டிலோ இல்லாமல் இருப்பதைக் கண்டனர். திருமால் போர்வையினை தரையில் விரித்து அமருமாறு சொன்னார். இருவரும் வீட்டின் சுவர்களை வட்டமிட்டபடியே அமர்ந்தனர். சுவர்களும் தரையும் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. பூஜை அறை இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லாமல் இருந்தது.

‘’ஏதாவது சாப்பிட கொண்டு வரட்டுமா’’

‘’தண்ணீர் மட்டும் போதும்’’

‘’உங்களுக்கு என்ன வேண்டும் பாரதி?’’

பாரதி வியப்பிலிருந்து மீளாதவளாக காணப்பட்டாள்.

‘’இல்லை, ஒன்றும் வேண்டாம்’’

திருமால் அங்கிருந்து அருகில் இருந்த சமையல் அறைக்குள் சென்றார். பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள்.

‘’என்னது சம்பந்தமே இல்லாம இருக்கே’’

‘’பேசித் தெரிஞ்சிக்குவோம்யா, சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கோம்யா’’

தண்ணீரை கிருத்திகாவிடம் தந்தார் திருமால். பாரதியைப் பார்த்துக் கேட்டார்.

‘’பாரதிக்கு இன்னும் சந்தேகம் தீரலையா?’’

தண்ணீர் மிக மிகக் குளிர்ச்சியாக இருந்தது. பாதித் தண்ணீரைக் குடித்த கிருத்திகா பாரதியிடம் தண்ணீர் தந்தாள்.

‘’குடித்துப் பார்யா’’

‘’வேண்டாம் கிருத்தி, நீயே குடி’’

திருமால் பாரதியிடமும் கிருத்திகாவிடமும் கேட்டார்.

‘’என்ன விபரமா என்னைத் தேடி வந்து இருக்கீங்க’’

‘’வாசன் உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னான்’’

‘’எந்த வாசன்?’’

கிருத்திகா விபரம் சொல்லத் தொடங்கினாள்.

‘’குளத்தூர் பெருமாள் உங்களுக்கு கடிதம் போட்டாரில்லையா? அவருக்கு நீங்க போட்ட கடிதம்தனை குளத்தூரிலே இருக்க வாசன்கிட்ட கொடுத்து உங்களைப் பார்க்கச் சொல்லி இருக்கார், வாசன் இங்க வரமுடியாததால இவகிட்ட உங்ககிட்ட விபரம் கேட்டுச் சொல்லச் சொல்லி இருந்தார், அதான் நானும் இவளும் வந்தோம்’’

‘’ஓ குளத்தூர் பெருமாளா’’

‘’ம்’’

திருமாலின் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தது.

‘’போன வருசம்தான் எனக்கு கடிதம் அவர்கிட்ட இருந்து வந்தது... இப்ப அவர் எப்படி இருக்கார்?’’

‘’இப்போ அவர் உயிரோடில்லை, நீங்க அவரோட கடிதம் வைச்சி இருக்கீங்களா?’’

திருமால் மெளனத்துடன் தலையாட்டினார். தன்னிடம் கடிதம் இருப்பதாக தெரிவித்தார். சிறிது நேரம் பின்னர் பேசினார்.

‘’அவசரப்பட்டுட்டார், அவர் எழுதின கடிதம் என்னோடவே இருக்கட்டும்’’

சொல்லி முடித்தவர் எழுந்தார். பாரதியும் கிருத்திகாவும் உடன் எழுந்தனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு தான் சிறிது நேரத்தில் வருவதாகவும், வரும்வரை வீட்டிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றார் திருமால். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

‘’என்னய்யா எதுவும் புரியலையே’’

‘’இவருக்குப் பல விசயங்கள் தெரிஞ்சிருக்கு, பெருமாள் தாத்தா பத்தி தெரிஞ்சிருக்கு ஆனா இவ்வளவு சின்ன வயசானவரா தெரியறார், துறவி மாதிரி இருப்பாருன்னு பார்த்தா எல்லாம் தலைகீழா இருக்கே கிருத்தி’’

‘’இருய்யா வீட்டைச் சுத்திப்பார்த்துட்டு வரேன்’’

என்று சொல்லிக்கொண்டே எழுந்த கிருத்திகாவை கையைப் பிடித்து அமர்ந்த இடத்திலேயே அமர வைத்தாள் பாரதி. அரை மணி நேரமாகியும் திருமால் திரும்பவில்லை. இருவரும் பேசிக்கொண்டே இருந்தாலும் அவர்களுக்கு சற்று பயமாக இருந்தது.

‘’எழுந்துப் போகலாம்யா’’

‘’கொஞ்ச நேரம் இரு கிருத்தி’’

‘’என்னய்யா வந்தவங்களை இப்படி உட்கார வைச்சிட்டு வரேன்னு போனார், இன்னும் திரும்பல அதான் ஆளப் பார்த்தாச்சில நேரத்தை வீணாக்க வேணாம்யா’’

‘’நான் அவர்கிட்ட பேசிட்டுதான் வருவேன் கிருத்தி, அவர் வரப்ப வரட்டும்’’

கிருத்திகா வேகமாக எழுந்தாள். சமையல் அறையில் நுழைந்தாள். பாரதி கோபத்துடன் அவளைப் பார்த்தவாறே இடம் மாறாது அமர்ந்து இருந்தாள். சமையல் அறையில் தண்ணீர் குடித்துவிட்டு வந்தவள்

‘’இந்தாய்யா தண்ணியாவது குடி’’

‘’ஏன் இப்படி பண்ற கிருத்தி’’

‘’தண்ணி குடிக்கனும்னு தோணிச்சியா, அதான் நம்ம வீடா நினைச்சிட்டு உரிமையோட குடிச்சேன்’’

என சொல்லிக் கொண்டே தண்ணீரை கீழே வைத்துவிட்டு அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிராக இருந்த அறைக்குள் நுழைந்தாள் கிருத்திகா. பாரதி கிருத்திகாவின் செயலைக் கண்டு என்ன செய்வதெனப் புரியாமல் தலையை குனிந்து கொண்டு தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

கிருத்திகா சென்ற அறை மிகவும் வெளிச்சமாக இருந்தது. அந்த அறையில் மூடப்படாத ஒரே ஒரு அலமாரியில் சேலைகளும் வேஷ்டிகளும் தனித்தனியாய் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள். அந்த அறையில் பொருட்கள் மிகவும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவரில் படங்கள் எதுவும் மாட்டி இருக்கவில்லை. அந்த அறையிலும் கட்டில், மேசை, நாற்காலி என எதுவும் இல்லை. ஆனால் போர்வைகள், தலைகாணிகள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த அறையிலிருந்து வெளிவந்த கிருத்திகா குனிந்த தலை நிமிராத பாரதியைப் பார்த்தவாறே வீட்டின் பின்புறம் சென்றாள். கழிவறை, குளியலறை கட்டப்பட்டு இருந்தது. துணிகள் காய்ந்து கொண்டு இருந்தது. சிறுவன் சிறுமியின் உடைகள் காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள் கிருத்திகா. அச்சிறியத் தோட்டத்தில் சில்லென வீசும் காற்றில் மலர்களின் வாசனையை நுகர்ந்தவாரே தோட்டத்தினுள் நடந்தாள். தோட்டம் தாண்டி கட்டப்பட்டிருந்த வீட்டுச் சுவர் பின்னால் ஒரு பெரிய சுவர் நீளமாக கட்டப்பட்டு இருந்தது. அந்த பெரிய சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை கிருத்திகாவினால் காண இயலவில்லை. ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. திருமால் இன்னும் வரவில்லை. அறைக்குள் வந்த கிருத்திகா

‘’வாய்யா போகலாம், இவர் நாம நினைச்ச மாதிரி துறவியெல்லாம் இல்லை, இவர் குடும்பஸ்தன், குழந்தைகள் எல்லாம் இருக்குய்யா இவருக்கு’’

பாரதியின் கண்கள் சிவந்து இருந்தது.

‘’என்னய்யா ஆச்சு’’

‘’நீ ஓரிடத்தில உட்காரமாட்டியா கிருத்தி, நம்ம மேல நம்பிக்கை வைச்சி உட்காரச் சொல்லிட்டுப் போயிருக்கார், நீ என்னவோ அவரோட வீட்டை எல்லாம் சுத்திப் பாத்துட்டு இருக்கே, வாசனுக்கு இவரைப் பத்தி தகவல் சொல்லனும் அதனாலதான் இங்க இப்போ இருக்கோம்ங்கிறதை மறந்துராத கிருத்தி’’

‘’என்னய்யா இவ்வளவு டென்ஷன் ஆகிற, வீட்டுல ஒண்ணும் திருடிட்டுப் போற அளவுக்கு எதுவும் இல்லைய்யா அதான் தைரியமா நம்மளை உட்கார வைச்சிட்டுப் போயிருக்கார், இதுக்குப் போய் இப்படியாய்யா கோபப்படறது, இனி நான் எங்கயும் போகலைய்யா’’

பாரதி கிருத்திகாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். திருமால் நிதானமாக வீட்டினுள் நுழைந்தார்.

(தொடரும்)