Sunday 30 August 2009

இலங்கை மாநகரம்

இதிகாச காலத்திலேயே
இன்னலுக்கு உட்பட்ட நகரம்
நாட்கள் பறந்த பின்னரும்
தொடரும் இன்னல்கள்

நிறமெல்லாம் ஒன்று தான்
நிலமெல்லாம் ஒன்று தான்
வினையேன் வந்து தொலைந்தது
வேறுபட்ட மொழி கொண்டதாலா
வேற்றுமை கண்ட இனத்தினாலா
புத்தர் தந்த எண்ணத்தில்
அன்பும் கருனையும்
தொலைந்து போனதாலா
கண்ணீர் விட்டு கதறுகின்றேன்
காக்கும் கடவுள் அவதரிப்பாராக.

தென்றல் சுதந்திரமாய்
உலாவிடும் தூய நகரம்
தீங்கினை நினையாது
தென்னை காய்த்து குலுங்கும்
கடலின் அலைகள் முத்தமிட்டு
கரையினை கட்டி தழுவிடும்
காதலர்களின் தலைநகரம்

புன்னகை சிந்தி
விருந்தோம்பலின் வெளிச்சமாய்
விளங்கிடும் புண்ணிய நகரம்
எல்லாம் கனவாய் இருக்கிறது
நேற்றைய தினமெல்லாம்
கனவாய் போகுமெனில்
இன்றைய தினமும்
இந்நகரத்தில் கனவாய் போகாதா

பூஞ்சோலையாய் இருந்த பூமியில்
பூக்களை கருக செய்வதும்
உரிமையுள்ள பங்கினை வேண்டி
உரக்க குரல் தரும்
உணர்வுகளை உரைய வைப்பதும்
கல்லிலும் மண்ணிலும் கட்டி புரண்டு
நிலவின் நிழலில்
கதைகள் கதைத்து
கனவெல்லாம் வளர்த்து
வாழ்ந்த நல்ல உள்ளங்களை
செந்நீர் வடிக்க செய்வதும்
இருக்கும் இனிய இடம் விட்டு
இன்னல் தரும் இடம் நோக்கி
விடை காணும் மனிதருக்கு
இது விதியா
அறிவில்லார் தரும் நீதியா.

அமைதி ஒரு நாள் வரும்
ஆயுதம் ஏந்தி
அவதியுரும் நாள் தொலையும்
அன்புடன் கதைத்து
ஆராத துயரம் தீரும்
கண்கள் காணும் வேற்றுமை
கடலில் கரைந்து போகும்

கரும்புகையில்லா வானத்தில்
மேகங்கள் கவிதை பாடி செல்லும்
மரத்தின் கிளையில் கனிகள்
பறவைகளுக்கு காத்து நிற்கும்
வளரும் பயிர்களுக்கு
வீரமிக்க செயல்கள் சொல்லி
வலிமையை கற்பிக்கும்
வாழ்வு நோக்கி
இன்னலையெல்லம் தாங்கி நின்று
இன்பத்தை இரு கைகளால்
அணைக்க வேண்டி
கண்ணீர் துடைக்க வழியின்றி
கலங்கி நிற்கும்
இலங்கை மாநகரம்
அமைதியின் வழியில்
சிறந்து விளங்கும்
உயிர் பெற்றதின் அர்த்தம் விளங்கும்.

------
எழுதிய ஆண்டு 2006!!!

Saturday 29 August 2009

கடவுளோடு காதல்

என்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு
பச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்
பருவம் வந்தபின்னும் மாறவில்லை
உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்

நான் பாமாலை சூட்டும் போதெல்லாம்
வாய் திறந்து நீ பாராட்டியது இல்லை
மலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்
மறுத்து ஒதுக்குவதில்லை நீ
உன்மீது எனக்கு மனம் மாறா காதல்

பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்

உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி
என் தீராத காதல் சொல்கிறேன்
ஏற்றுக் கொள்வாய் எம்பெருமானே

உன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து
யான் உறங்கச் செல்லும்போதெல்லாம்
என்னை நீ ஆட்கொள்ளமாட்டாயோ
என்னும் அளவில்லாத காதல் உன்னோடு
பரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய
எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்!

Friday 28 August 2009

கடவுள்

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பிறந்ததினால் நன்றி கூற
தலைமுடி காணிக்கை
கடவுள் பழக்கம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்
சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

கோவில்களின் வேலைப்பாடுகள் மத்தியில்
கையெடுத்து கும்பிட வைக்கும்
சிலையாய் கடவுள்

கடவுள் காட்சி தருகிறார்
மனிதர் காட்டும் வித்தைகள்

எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்
சொற்பொழிவாளரின் சொல்வன்மை

எல்லாம் கடந்து உள்ளவன்
எல்லை இல்லாதவன்
தவத்தினால் வருகை தந்தவன்
வரம் எல்லாம் அள்ளி தந்தவன்
வெறும் காட்சிகளாய் கதைகளாய் இன்று

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.