Thursday 20 August 2009

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா?!

Robin said...

moral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.

Robin said...

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.


சம்பந்தபட்ட பதிவு: http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_20.html

----------------------------------------

மிக்க நன்றி ராபின். நீங்கள் இவ்வாறு எழுதிய பின்னர் எனக்குள் இருந்த ஆன்மிகம் குறித்த தெளிவான பார்வை சற்று மங்கலாக முயற்சித்தது. ஆனால் மீண்டும் சிந்தித்த பின்னர் மிகவும் தெளிவாகத்தான் தெரிந்தது. இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது. நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார்? இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா? இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா? இதில் ஒன்றை தீவிரமாகப் பின்பற்றுவது, அல்லது ஒரேயடியாக வெறுத்துவிடுவது எனக் கருத வேண்டாம். இறைவன் அவசியமில்லை எனச் சொல்வதற்கும் இறைவனை வெறுத்து ஒதுக்குவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்னர் ஆன்மிகம் என்றால் என்ன எனத் தேடியதில் ஆன்மிகம் குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் பதிவில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.


தன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை. ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.


ஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல. மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.


நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல்.


நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி.


முழு பதிவினையும் படித்திட http://jeyamohan.in/?p=118


பெரும்பாலனவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் சொன்னால் உலகம் சரியென்று ஏற்கும் எனச் சொல்ல வரவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் ஆன்மிகம் குறித்து வேறுபட்டிருக்கக் கூடும். இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான்.

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.


இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.


இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.


அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.


ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.


இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.


ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


Tuesday 18 August 2009

கலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish

Sword Fish said...

Your question is: Why does anmikam (meaning of this word, as used by you, is confusing) put off people today, unlike in the past?

Instead of answering the question in simple terms, you have rambled so much that I dont understand what is in your mind - except at the end, where, the meaning of anmikam, according to you, appears to be one that goes beyond religion and the god the religions point to. You want that anmikam to be detached from religion, god, and rituals and ceremonies. But this does not answer the question: why is anmikam unpopular today?

Please write clearly.

சம்பந்தபட்ட பதிவு http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_18.html

--------------------------------

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. மீண்டும் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்கிறது. மிகவும் ரசிக்கிறேன்

இவர் தனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லிச் சென்றவிதம்தனைப் பார்த்து மிகவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் தயவுசெய்து தெளிவாக எழுது என்று சொன்னவிதம் மிகவும் நன்றாக இருந்தது.

ஏதோ எழுதுகிறோம் என்ற நினைப்பைப் போக்கும் விதத்தில், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிச் சென்ற விதம் மிகவும் அருமை.

நானும் பலருடைய இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன், சில இடுகைகளில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவேன். எனது பின்னூட்டங்கள் பல சிதறிக் கிடக்கின்றன. பின்னூட்டங்கள் கூட பயனளிக்கும் விதமாக அமைந்தால் எத்தனை நல்லது என்பதை இன்று இரண்டாவது முறையாக காண்கிறேன்.

நாம் நமது வலைப்பூவில் எழுதுவது மட்டும் அல்ல எழுத்து, பிறரது வலைப்பூவிலும் எழுதுவதும் எழுத்துதான். எனவே நமது எண்ணங்கள் பயன்படுமாறு எழுதுவது இன்றியமையாததாகிறது.