Friday 31 July 2009

மறதி ஒரு வியாதி

நான் காசிநாதன் வந்து இருக்கேன், என்னை தெரியுதா உன் பால்ய தோழன் கல்யாணம் ஆகி போனவன் தான் அதற்கப்புறம் இந்த ஊருக்கு வரவே இல்லை என்னை தெரியுதா என்னை பாரு' 70 வயது காசிநாதன் தனது நண்பர் பூமிநாதனிடம் 45 வருடங்கள் கழித்து தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

பூமிநாதன் 'எதையெல்லாம் எடுத்துட்டு போறாங்க, எதையெல்லாம் சொல்லிட்டு போறாங்க' என்றார்.

காசிநாதனை தனியாய் பூமிநாதன் மகன் சின்னச்சாமி அழைத்துச் சென்றார்.

'அப்பாக்கு நினைவு போய் மூணு வருசம் ஆச்சி பசிச்சா சாப்பிடவும், வெளியில வந்தா போகவுமா இருக்கார், யாரையும் அடையாளம் தெரியல வர்வங்களை போறவங்களை பார்க்கிறார், இப்போ பேசறதையே பேசறார். இவர் தான்னு அறிமுகப்படுத்தினா தலையை ஆட்டுறார் அப்புறமா வந்தவங்க திரும்பி வந்தாக் கூட யாருன்னு தெரிய மாட்டேங்குது சுத்தமா நினைவு இல்லை'

காசிநாதன் யோசித்தார்.

'டாக்டர்கிட்ட காமிச்சீங்களா என்ன சொன்னாங்க எப்ப இருந்து இப்படி ஆச்சு'

'அம்மா இறந்த மறு நிமிடமே தன்னோட நினைவை இழந்துட்டார், டாக்டர்ங்க அல்சைமெர் நோய்னு சொல்றாங்க வயசானவங்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்காம் இதை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியலை அம்மாதான் நினைவுன்னு வாழ்ந்தவர்' என மனம் கரைந்தான் சின்னசாமி.

காசிநாதன் தனது இளம் வயது கதையை சொன்னார்.

'உங்க அப்பா மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்க மாட்டேன், நான் நல்லா படிக்கிறேன்னுட்டு தான் படிக்காம அவர் வீட்டுல இருந்து பணம் வாங்கி என்னை படிக்க வைச்சார், கல்யாணத்தைக் கூட அவர்தான் என் வீட்டிலயும் பொண்ணு வீட்டிலயும் பேசி சம்மதம் வாங்கி முடிச்சி வைச்சார், நான் வேலை நிமித்தமா வெளியூர் போய் அப்புறம் அங்கேயே செட்டில் ஆகி இந்த மண் பக்கம் வரலை, யார் இவரை பாத்துகிறது இப்போ'

'நானும் என் பொண்ஜாதியும் தான். ஒ அவரா நீங்க நினைவு இருக்கறப்ப, அப்பா உங்களைப் பத்தி விசாரிப்பார் எங்கயும் யாருக்கும் தெரியல, எப்படி இருக்கானோனு சொல்லிக்கிட்டே இருப்பார், நீங்க எப்படி இத்தனை வருசம் கழிச்சி பார்க்க வந்து இருக்கீங்க' என்றான் சின்னசாமி.

சின்னசாமி கேட்ட கேள்வியில் தனக்கும் இந்த நோய் நோயாய் இத்தனை நாளாய் இல்லையெனினும் இருந்து இருக்கிறது என்று எண்ணி 'பூமி' என ஓடிச்சென்று காசிநாதன் பூமிநாதனைக் கட்டிக்கொண்டு கதறினார், காலம் கடந்து நன்றி நினைத்து...

நன்றி மறப்பவரை விடவா இந்த அல்சைமெர் நோய் கொடியது?

இந்த அல்சைமெர் நோயானது நமது மூளையில் ஏபி - 42 என்னும் புரோட்டினானது ஒழுங்காக மடிய முடியாமல் அரைகுறையாய் மடிந்து பீட்டா சீட்டுகளைப் போன்று படிந்து பின்னர் பைபர்களாக மாறி படிமமாய் படிவதால் நினைவானது இழக்கப்படுகிறது. இதற்கு அலுமினியம், இரும்பு போன்ற 3 சார்ஜ்கள் கொண்டவைகளால் இருக்கலாம் என மருத்துவம் தெரிவிக்கிறது ஆனால் உறுதிபடுத்த முடியவில்லை.

ஏ பி - 42 புரோட்டினை தனியாய் நரம்பு செல்களுடன் சேர்த்து செய்த ஆராய்ச்சியில் அந்த நரம்புகள் செல்கள் மடிந்தன, ஆதலினால் இந்த புரோட்டின் இவ்வாறு ஆகாமல் எப்படி காக்கலாம் எப்படி திருப்பலாம் என மருத்துவம் முயல்கிறது.

ஒருவேளை ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பூமிநாதன் நினைவு திரும்பி காசிநாதனை இனம் கண்டு காசிநாதனின் புகழ்மிக்க வாழ்க்கையினை கண்டு பெருமிதம் அடையலாம். பலன் எதிர்பாராமல் செய்த உதவியல்லவா!

----முற்றும்----

ஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3

ஒருவர் தங்களுடைய மனக்குறைகளைச் சொல்லும்போது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பது குறித்து வருத்தப்படுவதை விட அவரது மனக்குறைகளைச் சொல்லி முடிக்கும்வரை அமைதியாக கேட்போம். இங்கே நீதிபதியாக இருப்பதை விட ஆறுதலான நபராகவே காட்சி அளிப்போம். அதன்காரணமாகவே அங்கே மனக்குறைகள் நீக்கப்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடுகிறோம்.

காலப்போக்கில் நம்மைச் செலுத்துவது குறித்து ஒரு அறிஞர் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்வோம். இறந்த மீன் ஒன்றுதான் தண்ணீர் போன போக்கில் போகும், உயிர் வாழும் மீன் தண்ணீர் செல்லும் திசையை எதிர்த்துக் கூட நீச்சல் போடும் வல்லமை உடையது. அதனதன் பாட்டுக்கு போவோம் என்கிற மனப்பான்மையைக் கைவிட்டு விடுவதன் மூலம் மகிழ்ச்சி நிலையாய் நிற்கும் வாழ்க்கையை வாழ இயலும். அதே வேளையில் உணர்ச்சியுள்ள மனிதனுக்கு எல்லா உணர்வும் பொது என்பதை நினைவில் நிறுத்துவோம்.

நான் உண்மையாக மட்டுமே இருப்பேன் என மொத்த மகிழ்ச்சியையும் தொலைத்துவிட வேண்டாம். பல வேளைகளில் எது உண்மை எது பொய் என எவராலும் அத்தனை எளிதாக நிர்ணயித்துவிட முடிவதில்லை. மொத்தத்தில் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தினாலேயே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எட்டாத ஒன்றாக இருக்கிறது.

விவேகாநந்தரின் கூற்றினை நினைவில் நிறுத்துவோம், ஒரு கல் அதன் அளவில் கல்லே! அதை ஆராய்பவரின் கண்ணுக்குக் கல் பலவித கோணங்களை பெற்றுக்கொள்வது போல் தோற்றமளிக்கிறது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆராய்ச்சியினாலும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது, அந்த பொருள் அதன் தனித்தன்மையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போதே இழந்துவிடுகிறது.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் தேவையோ தேவையற்றதோ விளக்கங்களைச் சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டிருப்பது அல்ல, விளக்கங்களை ஏற்றுக்கொள்வதுடன் தேவையோ தேவையற்றதோ விசயங்களைச் சலிப்பற்று செய்துகொண்டு வாழ்ந்திருப்பதேயாகும். எப்பொழுது ஒன்றை மறுக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதே மகிழ்ச்சிக்குத் தடை விதிக்கிறோம். மறுக்காமல் மாற்றுவழி ஒன்றைத் தேடுவதே மகிழ்ச்சிக்கானப் பாதையாகும்.

பச்சோந்தியைக் குறை கூற வேண்டாம். பச்சோந்தியாக உயிரினங்கள் இல்லாது போயிருந்தால் உலகத்தில் ஏற்பட்டச் சூழ்நிலை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி இன்றைய மனிதன் நிலைக்கு உயிரினங்கள் முன்னேறியிருக்க வாய்ப்பு இல்லை. எல்லா உயிரினங்களும் போராடுவதையே மகிழ்ச்சியாகக் கொண்டிருக்கிறது. போராட்டத்துக்குப் பின்னர் மகிழ்ச்சியாக காலத்தைச் செலவழிக்கிறது. டார்வினின் தத்துவப்படி சூழ்நிலை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வாழும் உயிரினங்களே வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றன அதன் சந்ததிகள் வளர்ச்சியடைகின்றன.

மகிழ்ச்சியைப் பற்றி எழுதத் தொடங்கி கவலைகளையே முன்னிறுத்திக் கொண்டிருப்பது போன்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் ஏதுங்க மகிழ்ச்சி? எனவேத் தேவையின்றி ஆராய்ந்து கொண்டிருப்பதை விட ஒருவருக்கொருவர் உதவியுடன் இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கையாகக் கருதப்படுகிறது.

கவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா?

கவிதைக்கான இலக்கணங்கள் என்ன எனத் தெளிந்துகொண்டால் இழப்பும், இழப்பாகாது இருப்பதும் அறியத்தகும். 'வெறும் வார்த்தைகள்' என தமிழ் இலக்கணம் ஏதும் அறியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் நிலைக்கு வந்துவிட்ட எனக்கு இந்தக் கேள்வியைப் பார்த்ததும் கவிதை என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் புதிய இலக்கணங்களை வரையறுத்துக் கொண்டது என சொல்லத் தோன்றுகிறது, ஆனால் அது ஒப்புக்கொள்ளக் கூடிய விசயமல்ல.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் என ஒரு இலக்கணம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் வைத்துக்கொண்டு வாழ்வதைப் போல கவிதைக்கு என இலக்கணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் என ஆகிப்போனதில் அதிசயமில்லை. ஆனால் உண்மையிலேயே கவிதைக்கு இலக்கணம் அவசியமா? அவசியம், அநாவசியம் என்பது எழுதுபவரைப் பொருத்து அமைகிறது எனும் நிலைக்கு கவிதைத் தள்ளப்பட்டுவிட்டது. மருத்துவர் தொழிலை ஒரு பொறியியல் படித்தவர் செய்வது போல! எவர் எத்தொழில் வேண்டுமெனில் செய்யலாம் எனில் எதற்கு முறையான படிப்பு என வந்தது? இது இருக்கட்டும்.

கவிதை என்றால் என்ன எனக் கேட்டால்

நீ பேசும் வார்த்தையெல்லாம் கவிதை - அட
நீ பேசாத வார்த்தைகளும் கவிதை

என எழுதும் வல்லமையை கவிதை என்று சொல்லிக்கொண்டால் எல்லாமே கவிதைதான்! எல்லாமே கவிதை எனும்போது அதற்கு ஏது இலக்கணம்!

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கான இலக்கணம் என்று கூறி

உள்ளத் துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை

என பாடியிருப்பது பலருக்குத் தெரிந்திருந்தால் தாங்கள் எழுதும் பலவிசயங்களை கவிதை எனச் சொல்லமாட்டார்கள். எழுத்துக்கும் வார்த்தைக்கும் இலக்கணம் உண்டு அதுபோல கவிதைக்கும் இருக்கிறது. 'நாளை நான் சாப்பிட்டேன்' எனச் சொன்னால் ''நாளை நான் சாப்பிடுவேன்' எனச் சொல்லித் திருத்தலாம். கவிதையில் எது சரி, எது சரியில்லை என யார் சொல்லித் திருத்துவது.

செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என இலக்கணம் வகுத்தது. 'யாப்பெருங்கலக் காரிகை' கவிதைக்குரிய இலக்கணம் பற்றி எடுத்தியம்புகிறது. எதுகை, மோனை, சீர், அணி, அடி, தொடை, தளை, குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என பலவகையான விசயங்களை அறிந்து வைத்துக்கொண்டே கவிதை எழுத வேண்டுமெனில் இவையெல்லாம் இல்லாது எழுதப்பட்டவைகள் எல்லாம் வெறும் வார்த்தைகளே எனத் தைரியமாகச் சொல்லலாம்! கவிதையில் இனிமையைத் தருவது எதுகையும் மோனையும் எனச் சொல்வார்கள். எதுகையையும் மோனையையும் மட்டுமே வைத்து எழுதப்பட்டவை இலக்கணம் உள்ள கவிதை என்பது எப்படி சொல்ல இயலும்.

அறிஞர் அண்ணா எழுத ஆரம்பித்துச் சொல்கிறார்

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.

இதுதான் உண்மை. தமிழ் இலக்கணம் ஏந்தி வருவதே கவிதை. ஆனால் நாங்கள் எழுதுவது கவிதை இல்லை, எழுதுவது புதுக்கவிதை எனச் சொல்லி எழுதினார்கள்.

//'கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)//

//கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது. கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது. புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்'' நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்.//

//கவிதை, மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களையும் அனுபவங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது; மேற்கண்ட அனுபவத்தால் ஏற்படும் சுவைகளையும் உண்மையான உணர்ச்சியோடும், இயல்பான தன்மையோடும் எடுத்து இயம்புகின்றது. எனவே கவிதையில் கருத்து, கருத்துக்கு உயிரூட்டும் உணர்ச்சி, கற்பனைச் செழுமை, பொருள் புலப்பாடுக்குரிய ஏற்ற வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவைகளாகும். நன்றி: (டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்)//

//சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம். நன்றி: வைரமுத்து//

காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணமே தேவையில்லை என சமுதாயம் அறிவுறுத்தப்பட்டது. உண்மையில் கவிதை தமிழ் இலக்கண வடிவத்தைத் தொலைக்கவில்லை. இழக்கப் போவதுவமில்லை. எழுதுபவர்கள் இழந்துவிட்டார்கள், தொலைத்துவிட்டார்கள். கற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கவிதை எழுதத் தெரியாது போனார்கள். எனவே இவர்கள் எழுதுவதை இனிமேலாவது கவிதை எனச் சொல்லாமல் இருந்தாலே போதும். ஆக இழப்பு நமக்குத்தானேயன்றி தமிழ் கவிதைக்கு அல்ல. மேலும் செய்யுள், பா போன்றவை கவிதை வடிவம் கொண்டதாக கருதுபவர்களும் உண்டு. செய்யுள் பா போன்றவைகள் கவிதைக்கான இலக்கணம் இருந்ததை மறுக்க இயலாது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.

பல விசயங்களைத் தொலைத்து நிற்கும் சமுதாயமாகவே எல்லா விசயங்களிலும் மாற்றம் என மாறிக்கொண்டேயிருக்கிறோம். இந்த மாற்றம் அழிவின் பாதைக்கா? ஆக்கப் பாதைக்கா? என்பதை நாளைய சமூகம் குறித்துக்கொள்ளட்டும்!