Friday 20 February 2009

பழங்காலச் சுவடுகள் - 5

குகை போல இருந்தாலும் வெளிச்சமாக இருந்தது. சூரிய கதிர்கள் உள்ளே விழுந்து சுவர்களில் மாட்டி வைக்கப்பட்ட கண்ணாடிகளில் பட்டு உள்ளே இயற்கையின் ஒளி எங்கும் வியாபித்து இருந்தது. அகிலாவும் சின்னச்சாமியும் உள்ளே நடந்து சென்றனர். வெளியில் இருந்து வந்த இளையவன் யாவருக்கும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னான். அதைக் கேட்டதும் அகிலா ஆங்கிலத்தில் வினவினாள். மூத்தவன் பதில் சொன்னான்.

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, நாங்க எப்படி திரும்பி போறது''

''கவலை வேண்டாம், எங்களிடம் வண்டி இருக்கிறது''

ஒரு குறுகிய அறைக்குள் நுழைந்தனர். அங்கே கட்டிலில் ஒரு பெண்மணி, மரியா, படுத்து இருந்தார். மூத்தவன் தனது தாயை தொட்டு எழுப்பினான். முனகியவாறெ எழுந்தாள் அந்த பெண்மணி. அந்த பெண்மணியிடம் ஏதோ கூறினான். பெண்மணியின் முகம் மலர்ந்தது. அகிலாவை நோக்கி கையை காட்டினார் அந்த பெண்மணி. நடுவானவன் அகிலாவை செல்லுமாறு கூறினான். சின்னசாமியும் உடன் செல்ல எத்தனித்தார்.

நடுவானவன் சின்னசாமியை சைகையால் இருக்கச் சொன்னான். அகிலாவை செல்லுமாறு மீண்டும் கூறினான். அகிலா பயத்துடன் அருகில் சென்றாள். அந்த பெண்மணி அகிலாவின் கைகளை எடுத்து தனது கன்னங்களில் ஒட்டிக் கொண்டார். தனது அருகி்ல் அமருமாறு கட்டிலில் உட்காரச் சொன்னாள். மொழி புரியவில்லை, விருப்பம் மட்டும் புரிந்தது. அகிலாவும் அமர்ந்தாள். மூத்தவன் அகிலாவை நோக்கி சொன்னான்.

''நீதான் எங்களை கல்யாணம் பண்ணிக்கிற போகிற பெண்ணாக சொல்லி இருக்கிறேன் அதுதான் படுக்கையில் பல நாட்களாக வேதனையுடன் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். வேண்டாம் என மறுத்து விடாதே''

அகிலாவுக்கு படபடப்பு அதிகமாகியது. நெற்றி வியர்த்தது.

''நான் கல்யாணமானவள் இது போன்று ஏமாற்று வேலைக்கு நான் உதவ மாட்டேன்''

''இல்லை நீ எங்களை திருமணம் முடித்த உடனே செல்லலாம்''

''விபரீதமாக போய்விடும், என்னை எனது கணவர் நிராகரித்து விடுவார்''

''கவலைப்படாதே''

இவர்கள் பேசுவதைக் கெட்டுக் கொண்டிருந்த பெண்மணி மூத்தவனிடம் விசாரித்தாள். மூத்தவன் நாளையே திருமணம் வைத்துக்கொள்வதாக கேட்டதாகவும் அகிலா சரியென சொல்வதாகவும் கூறினான். அந்த பெண்மணி இந்தியா இந்தியா என சொன்னாள்.அகிலாவுக்கு அழுகையாக வந்தது.

கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். எழுந்த மரியா சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அறையை விட்டு வெளியே வந்தார். தனது நான்கு மகன்களையும் அழைத்தார். அவர்களிடம் சந்தோசமாக பேசினார். அந்த குகையில் ஒவ்வொருவருக்கென ஒரு அறை இருந்தது. ஒரு தனி அறையில் சின்னசாமி மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்தார். மூத்தவன் பிரம்ட் அகிலாவை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தான். அகிலா சின்னசாமியை தேடிச் சென்றாள்.

''இப்போ என்ன பண்ண போற''

''நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க''

''அப்படியே தொலைஞ்சி போயிரு''

''.....''

''போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா, இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிற சொபிட் என்ன சொல்றான் தெரியுமா''

''யாரு அவன் என்ன சொல்றான்''

''அவன் தான் கடைசி பையனாம், கல்யாணம் முடிஞ்சிட்டா நீ எங்கயும் போக முடியாதாம்''

''பிரம்ட் அப்படி சொல்லலையே, இப்போ என்ன பன்றது''

அப்போது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மகாராணியை போன்று உடைகளும் நகைகளும் அணிந்து கம்பீரமாக மரியா அனைவருக்கும் முன்னால் நின்றார். அகிலாவை அழைத்து வரச் சொல்லி கட்டளை இட்டார். பிரம்ட் சின்னசாமியிடமும் அகிலாவிடமும் உறுதி கொடுத்துவிட்டு அகிலாவை அழைத்து சென்றான். அனைவரின் முன்னால் நின்றபோது அகிலாவுக்கு கால்கள் நடுங்கியது. புரியாத மொழியது. மரியா பேசினார்.

''நீங்கள் எல்லாம் எனது மகன்களுக்கு பெண் தரமறுத்துவிட்டீர்கள், சிந்து பெண் எனது மகன்களுக்கு மனைவியாகப் போகிறாள் அந்த வைபவம் நாளை கைரோ பிரமிடுகளுக்கு முன்னால் நடக்கும். அனைவரும் அந்த காட்சியை காண வாருங்கள்''

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அகிலாவை நோக்கி சத்தமிட்டனர். கோவமான மனிதர்கள் பார்த்து அகிலா பயந்து போனாள். சின்னசாமி அங்கே வந்தார். சின்னசாமியை காட்டி மரியா சொன்னார்.

''திருமணம் இவர்தான் நடத்தி வைக்க போகிறார், சிந்து மனிதர்''

கூட்டம் கலைய தொடங்கியது. ஆனால் சின்ன சின்ன கூட்டமாக நின்று பேச தொடங்கி விட்டனர். ஆங்கிலம் பேசுபவர்கள் அந்த கூட்டத்தில் இல்லை. இந்த ஐந்து பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஆங்கிலம் கற்று கொண்டதன் காரணம் இவர்களது தந்தை.

அகிலாவும் சின்னசாமியும் விடுதிக்கு சென்று வரலாம் என சொன்னார்கள். பிரம்ட் சரியென அவர்களை அழைத்துக் கொண்டு தான் மட்டும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அகிலா பிரம்டிடம் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டது குறித்து கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள். பிரம்ட் அகிலாவின் யோசனை தான் இந்த முடிவுக்கு காரணம் என சொன்னான். வரமாட்டீர்களோ என அச்சம் கொண்டதாக வேறு சொன்னான். விடுதியில் இறங்கியதும் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர் இருவரும். பிரம்ட் விடுதி கீழே வெளியில் காத்துக் கொண்டு இருந்தான்.

''பயமா இருக்கு''

''எல்லாம் உன்னால வந்தது, என்னாலயும் தான்''

''போகாம இங்கேயே இருந்துலாம்''

''அவன் திட்டமில்லாமலா நம்மளை இங்க கொண்டு வந்து இருப்பான் அந்த சொபிட் என்ன சொன்னான் தெரியுமா''

''சொபிட் சொபிட்''

''நாம இந்த திட்டத்துக்கு சரினு சொல்லலைன்னா உன்னை மட்டும் கொன்னு நைல் நதியில வீசிருவானாம்''

''உங்க திட்டம் பலிக்கட்டும்''

''ஆனா அதுல விவிட் ரொம்ப கலக்கமா இருந்தான், எதுவுமே பேசலை''

''யாரு விவிட்''

''மூணாவது பையன்''

மனம் கலக்கத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் இருவரும் இருந்தார்கள். பிரம்ட் இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். அகிலாவும் சின்னசாமியும் உறுதியான முடிவுக்கு வந்தார்கள். அறையின் கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)

Tuesday 17 February 2009

பழங்காலச் சுவடுகள் - 4

ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.

தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''

''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''

''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''

''அப்படியா, நீ என்ன சொன்ன''

''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''

''என்ன சொன்னாங்க அதுக்கு''

''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''

''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''

''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''

''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''

''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''

''எனக்குப் புரியலை''

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.

''சொல்லு என்ன சொன்னாங்க''

''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''

சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

''நீயா தொலையனும்னு ஆசைப்படற''

''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''

''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''

அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.

சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.

அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.

(தொடரும்)

Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 3

குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.

''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''

''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''

''பயந்துட்டேன்''

''பயம் வரத்தானேச் செய்யும்''

''என்ன சொல்றீங்க''

''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''

''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''

''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''

''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''

''நான் குளிச்சிட்டு வரேன்''

''நான் வெளியே போகமாட்டேன்''

இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.

'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.

நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'

அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

''என்ன எழுதறீங்க''

''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''

''கொடுங்க பார்ப்போம்''

'இந்தா''

அகிலா படித்துப் பார்த்தாள்.

''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''

''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''

''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''

''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''

அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.

''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''

''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''

''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''

''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''

சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.

''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''

அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)