Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 2

''என்னங்க நாம தெரியாத ஊருக்குப் போறோமே அங்க யாராவது நம்மளை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது''

''என்ன திடீருனு இந்த யோசனை''

''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''

''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''

''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''

அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

''என்னங்க எழுந்துச்சா''

''இல்லை இனிமேதான் தூங்கனும்''

''மணி எத்தனை''

''நாலு''

''பிளைட்டுக்கு நேரமாச்சா''

''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''

சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.

''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''

''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''

''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''

''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''

''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''

சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.

''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''

''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''

''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''

''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''

''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''

சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.

''பயமா''

''ரொம்பவே''

''இறங்கிப் போ''

''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''

''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''

''மாமா ஏன் அப்படி சொன்னாரு''

''அது அவரோட விபரீத ஆசை''

''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''

''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''

''தொலைக்கமாட்டீங்கதானே''

சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.

''மனசுக்கு அமைதியா இருக்குங்க''

''எனக்கும் தான்''

''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''

''தொலைச்சிர மாட்டீங்களே''

''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''

''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''

''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''

''குளிச்சிட்டு வரேன்''

அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

Saturday 14 February 2009

பழங்காலச் சுவடுகள் -1

பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.

சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.

மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.

''எப்போடா பிளைட்டு''

''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''

''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''

''எடுத்து வைச்சாச்சுப்பா''

''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''

''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''

''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''

'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''

''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''

''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''

''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''

''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''

அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை

குரு பார்வையும், சனி பார்வையும் நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ராகு கேதுப் பெயர்ச்சிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தராவிட்டாலும் சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது பலரும் அறிந்திருக்கக்கூடும் விசயமே. இதில் அறிவியலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விசயம் கண்ணுக்குப் பட்டது. அவ்விசயத்திற்கு விரைவில் வருகிறேன்.

பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.

இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.

பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.

20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்