Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 8

ஒரு சின்ன மாநாடு. அங்கே ஒருவர் கேள்வி எழுப்பினார். புற்று நோய் என வந்துவிட்டால் அது எதனால் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய சிகிச்சை முறை அளித்தால் ஒழிய எந்த ஒரு பிளாசிபோவும் ஒரு பலனும் அளித்துவிடாது. உடனே மற்றவர் சொன்னார், ஆமாம் ஆமாம் அப்படியே மருந்து அந்த நோயை முற்றிலும் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

பிளாசிபோவை நம்பி மட்டும் செயல்பட்டால் இன்று உலக மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்து இருக்கும் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். கருணை, புண்ணியம், அன்பு பிரார்த்தனை இதெல்லாம் காப்பாற்றும் என்று இருந்தால் ஏன் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டும்! இந்த பிளாசிபோ கடுமையான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பிளாசிபோவினால் நோய் குண்மாகும் என்பதெல்லாம் நம்ப தகுந்தது அல்ல, உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

நமது திருவள்ளுவரும் அதைத்தானே அழகாக சொல்கிறார். நோய் நாடி... எனவே ஆன்மிகம் சொல்லும் மன அமைதியும், கட்டுப்பாடான வாழ்க்கையும் ஒரு பிளாசிபோ போன்று இருந்து மருந்தை சற்று தூர நிற்கச் செய்யும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அறிவியல் மருந்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய நோய்கள் என பல இருக்கிறது. ஒரு காலத்தில் நோய் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என கருதிய புண்ணியவான்கள் இருந்தார்கள். ஆனால் கடவுள் அத்தனை சிரமம் எல்லாம் தருவதில்லை என நோய் வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து எது நோய் உருவாக்கியதோ அதை வைத்தே மருந்து கண்டுபிடித்த அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள்.

உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த பென்சிலின், முக்கியமாக எனக்குப் பிடித்துப் போன பென்சிலின். தடுப்பு ஊசி முறையெல்லாம் 'முள்ளை முள்ளால் எடுப்பது' போன்றதுதான். ஆக ஆன்மிகம் நம்மை நல்வழிபடுத்த, நம்மை நாம் உணர்ந்து கொள்ள சொல்லும் வழிமுறை. அறிவியல் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து தீர்த்திட வழி பார்க்கும் ஒரு வழிமுறை. பிளாசிபோவோ, மருந்தோ 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், அத்துடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளாசிபோ, மருந்து போன்று விற்பனைக்கு கிடைப்பதில்லை! ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோய் தீர்க்கிறேன் என வித்தை காட்டும் மனிதர்கள் பிளாசிபோ வகையைச் சார்ந்தவர்களே. நமது மூதாதையர்களின் மருத்துவம் பிளாசிபோ வகையைச் சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்தையும் முறைப்படுத்துங்கள் என மேல்நாட்டு மருத்துவம் கேட்டுக்கொள்கிறது. நமக்கு அதற்கு எங்கே நேரம்? ஒரு திப்பிலி, சுக்கு, மிளகு, இஞ்சி போய்க்கொண்டே இருப்போம்!

மாத்திரை என்பது நமது உடலில் உயிர் வேதி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதாவது நமது உடலில் உயிர்வேதிவினைகள் பல மூலக்கூறுகளால் வழிநடத்தப்படுகிறது. அவ்வாறு நடக்கும் வினைகள் நமது உடலுக்கு நல்ல செயலை செய்ய வேண்டும், அப்படியில்லாது ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது இந்த மாத்திரைகள் நமது உடலில் இருந்த முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.

நமது மூளை நமது உடலில் அனைத்தும் சீராக இருக்கும் வண்ணம் பல தொழிலாளர்களை வேலைக்கு அமைத்து உள்ளது, ஏதாவது பிரச்சினையெனில் இயற்கையாகவே முதல் நிலைக்கு கொண்டு செல்லப்படும், அப்படி இல்லாதபட்சத்தில் தான் இந்த மாத்திரை உதவுகிறது. அதுதான் உடம்புக்கும் மாத்திரைக்கும் உள்ள சம்பந்தம்.

இது ஒன்றும் தற்காலிகமாக நடந்தது அல்ல. பல வருடங்கள் முன்னரே மருத்துவ ரீதியாக உணரப்பட்ட ஒன்று. ஒரு ஆராய்ச்சியாளர் ஆற்றில் தண்ணீரை குடித்ததும் காய்ச்சல் வந்துவிட்டதை போன்று உணர்ந்தார். ஆனால் அந்த தண்ணீரை அதிகமாக அருந்த அருந்த காய்ச்சல் மறைந்து போனதை கண்டார். அப்படி உருவானதுதான் மலேரியாவுக்கான மாத்திரை. நமது ஆயுர்வேத மருந்தும் அதுவே.

நோய் என்பது நமது உடல்நிலை சமன்நிலை அற்று போவதாகும். நமது உடலில் பலவித வழிப்பாதைகள் இருக்கின்றன, அனைத்தும் சரியாக செயல்பட்டாலன்றி ஏதாவது பிரச்சினை வரக்கூடும், அப்படி சில வழிபாதைகளில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் வழி அறிந்து தரப்படும் மாத்திரை அந்த வழிப்பாதையை சீராக்குகிறது. நோய் அப்படித்தான் குணமாகிறது. இது குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது, புது புது வியாதிகள் வந்து கொண்டு இருக்கிறது, மாத்திரையும் தான்!

நமது உடம்பு கார்பன் போன்ற தனிமம் சேர்ந்த மூலக்கூறுகளால் ஆனதே. எரித்தால் தெரியும், புதைத்தால் புரியும். எனவே தனிமத்திற்கும் உடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி இத்தனை சிக்கலான வழியமைப்பை ஏற்படுத்திக் கொண்டது என வரும்போதுதான் ''அறிவிற்சிறந்த ஒருவர் உருவாக்கினார்'' எனும் கொள்கை பிறக்கிறது. நமது உடல் செயற்கை அல்லவே! எல்லாம் இயற்கை தான். இயற்கை தான் செயற்கையாக தோற்றம் அளிக்கின்றதேயன்றி கீதாசாரம் சொன்னது போல எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது! மாற்று விசயங்கள் என வரும்போது எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது அவ்வளவே. ஆம் இயற்கையாய் மட்டுமல்ல அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.

பறப்பது என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை என பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனிதன் தனது அறிவினைக்கொண்டு பறந்து செல்ல விமானம் தயாரித்துவிட்டான். இறக்கைகள் உள்ள பறவையெல்லாம் பறப்பதில்லை. இறக்கைக்கு கீழே இருக்கும் சிறகுகள்/இறகுகள் தான் பறப்பதற்கு காரணம். ஒரு பட்டம் பறந்தது, வியந்தான் மனிதன். பறவை பறந்தது, வியந்தான். தானும் பறக்க கைகளில் சிலவற்றைக் கட்டியும் பார்த்தான். எலும்பு உடைந்ததுதான் மிச்சம். மனிதன் நடப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவன் என நிரூபணம் ஆனது. பலூனில் காற்றை அடைத்து அதைப் பறக்கச் செய்தான். தனது காற்றை ஊதி பலூன் பறப்பது கண்டு தனக்குள் இருக்கும் காற்று தன்னை மிதக்கச் செய்யாதா எனும் ஏக்கம் இன்று வரை தீரவில்லை. பலூனில் ஹீலியம் வாயு அடைத்து அதில் தன்னை இணைத்து பறந்தான். ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்பட்ட விமானம் எரிந்து வீழ்ந்தது. இப்படி ஒன்றில் தொடர்பு கொண்டுதான் அவனால் பறக்க முடிகிறது என்பது மனிதனால் செய்யக்கூடிய விசயம். ஒல்லியாக இருப்பவரை ஊதித் தள்ளிவிடுவேன் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கும், காற்றடித்தால் பறந்துவிடுவாய் என்பதும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் மனிதனால் பறப்பது என்பது சற்று கடினமே.

சித்தர்கள்... அதிசய மனிதர்கள். இப்படி இயற்கையாய் சாத்தியமில்லை எனச் சொன்னால் அது உங்கள் இயலாமையின் காரணம் என சொல்லும் மனிதர்கள். கூடுவிட்டு கூடு பாய்வது, காற்றோடு காற்றாய் இருப்பது, தண்ணீரில் நடப்பது என்பதெல்லாம் இதுவரை பார்த்தது இல்லை. செய்தி கேள்விபட்டதுதான். அதே வேளையில் பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பலர் பல நாட்களாக உயிருடன் இருந்து இருக்கிறார்கள் எனும் செய்தி கேட்கும்போது அந்த அழிவின் காரணமாக மனம் வலித்தாலும் ஆச்சரியம் அளிக்கின்றது.

காற்றில் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் 1% ஆர்கன், கிரிப்டான், செனான் கார்பன்- டை- ஆக்ஸைடு (0.04%) ஹைட்ரஜன் மட்டுமே. இதில் இலகுவான காற்றை உள்ளிழுத்து சித்தர்கள் பறக்கிறார்களா? அல்லது மனம் இலேசாக இருப்பதால் பறந்தது போல் உணர்கிறார்களா? அறிவதற்கில்லை.

போகர் ஆச்சரியம் அளிக்கின்றார். திருமூலர் ஆச்சரியம் அளிக்கின்றார். கலசமுனி வியக்க வைக்கின்றார். ஒருநாளேனும் ஒரு சித்தரையாவதுப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளக்கூடாதா என்றுதான் எனக்கு இருக்கின்றது. உடல் செலுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விசயம். இரத்தம் ஒரே வகுப்பும் காரணியும் இல்லையென்றால் உயிர் மிஞ்சாது. இன்ன இன்ன இரத்த வகுப்புதான் இன்ன இன்ன இரத்த வகுப்புக்கு என எழுதி வைக்கப்பட்ட விதி இருக்கிறது. அதே வேளையில் உறுப்பு மாற்று சிகிச்சை சாத்தியமே என்கிறது அறிவியல்.

எனது எண்ணத்தை உங்களிடம் திணித்து என்னைப் போலவே உங்களை 100% சதவிகிதம் மாற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாற்ற இயலும் என்கிறது மனோதத்துவ முறை. எனவே தனிமங்கள் மூலம் சாதிப்பது என்பது சற்று யோசிக்க வேண்டியதே. கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் உயிர் போய்விடும். நைட்ரஜன் இரத்தத்தில் கலந்துவிட தொடங்கினால் உயிர் வலி எடுக்கும். கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சித்தர்கள் வாழ்க்கை முறை சாமான்யனான எனக்கு தெரிய வாய்ப்பு இதுவரை இல்லை. கோமெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு உயிரினங்கள் இல்லை. இங்கு இருப்பதோ இருபதே இருபது அமினோஅமிலங்கள். அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சிந்தனைகள் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியமே. எப்படியெல்லாம் உயிரினங்கள் புரதம்தனை உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதிசயமே.

அதாவது நமக்கு பிரச்சினை எல்லாம் சூரியன் தான். பக்கத்தில் இருக்கும் கோள்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்தவரை. நமது வாயு மண்டலம் பற்றி விரிவாக பார்த்தால் தெரியும். பிற கிரகங்களில் இருந்து வாயுக்கள் நமது பூமியில் நுழைகிறதா என்பது பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன். தாவர இனங்கள் அனைத்து மூலக்கூறுகளையும் வைத்திருக்கிறது. பாம்பின் விஷம் கூட நோய்க்கு மருந்து. கொல்லப்பட்ட பாக்டீரியா, வைரஸ், விஷம் நீக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் மருந்து. எனவே விண்வெளியில் சென்று இங்கிருப்பதையே எடுத்துச் செய்வது என்பது இந்தியாவில் குக்கிராமத்தில் இருந்து காய்ச்சலுக்கு இலண்டனுக்கு வந்து ஊசிகூட போடாமல் மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்றதே. இலண்டனிலாவது மருந்து கிடைக்கும் எனத் தெரிந்து வரலாம். ஆனால் விண்வெளியில் எங்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.

தலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ

தண்ணீர் சிகிச்சை முறை கூட ஒருவகை பிளாசிபோ தான். ஆனால் தற்போதைய ஆய்வின் படி ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் வெறும் கற்பனை என தெரியவந்துள்ளது.

இந்த பிளாசிபோவுக்கு எனது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஒரு சின்ன உதாரணம். இருமலைக் கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறுதனை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த மூலக்கூறு உண்மையிலே சிறந்ததா என கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனை மேலும் உறுதிபடுத்த குவைத் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு என்னைச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். நானும் சரி என சொன்னேன். அந்த ஆய்வகமானது இங்கு பயின்ற மாணவரால் நடத்தப்பட்டு வருகிறது. சில வாரங்கள் முன்னர் என்னிடம் அந்த ஆசிரியர் வந்து குவைத் ஆய்வகத்திற்கு தண்ணீர் மட்டும் அனுப்பி மருந்து என சொல்லி இருப்பதாகவும் வரும் முடிவு பொறுத்தே நாம் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டும் என கூறிவிட்டார். என்னால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் சிரித்ததும் அவரும் சிரித்துவிட்டார். இதுதான் பிளாசிபோ!

சிரிப்பாக எனக்குத்தான் இருக்கும் ஆனால் பீச்சர் எனும் ஆய்வாளருக்கு அப்படியில்லை. பீச்சர் 15 வித வித நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை கையில் எடுத்தார். அந்த 15 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தவர் இந்த பிளாசிபோ மூலம் 35 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தார்கள் என தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த ஆராய்ச்சிகளை ஆராய்ந்தபோது பீச்சர் சொன்னதைவிட பிளாசிபோ சற்று அதிகமாகவே நோயினை தீர்த்து இருப்பதாக தெரியவந்தது. இந்த பிளாசிபோவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றலுண்டு என மின்னல் வேகத்தில் பல ஆராய்ச்சிகளை ஆராய ஆரம்பித்த பெருமை பீச்சர் எனும் ஆய்வாளருக்குத்தான் சேரும்.

வலி, மனநிலை பாதிப்பு போன்ற நோய்களில் 60 சதவிகிதம் பிளாசிபோவால் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் எனவும், மனநிலை நோயாளிகளில் மருந்துக்கும், பிளாசிபோவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியில் எதையுமே சரி என அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், 1997 ல் கீய்ன்லே மற்றும் கீய்ன் பீச்சர் கூறிய அனைத்து ஆராய்ச்சியையும் திரும்பவும் சரிபார்த்து பீச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என காட்டினார்கள். பிளாசிபோவுக்கு இங்கே என்ன வேலை என கூறி ஒரு நோயில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு வேறு சில காரணிகளும் உண்டு, அதனை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பாவ்செல் எனும் ஆய்வாளர் சொன்ன வாசகம் மிகவும் யோசிக்க வேண்டியது. பொதுவாக ஒரு நோய் தானாக, இயற்கையாக மாற்றம் கொள்ளக்கூடியது மருந்து உட்கொண்டாலும் சரி, உட்கொள்ளாவிட்டாலும் சரி, எனவே அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதை விடுத்து பிளாசிபோ நோய் தீர்க்கும் என சொல்வது விந்தையானது என கடந்த வருடம் அறிவித்து உள்ளார்.

ஒரு ஆராய்ச்சியில் பிளாசிபோவால் முன்னேற்றம் என சொன்னபோது அதுகுறித்து மற்ற ஆராய்ச்சியாளர் சொன்னது இந்த முடிவுகள் எதைத் தெரிவிக்கின்றது எனில் ஒன்று செய்முறையில் குளறுபடி இருக்க வேண்டும் அல்லது முடிவுகளை கண்மூடி எழுதி இருக்க வேண்டும். இப்படி பிளாசிபோ முன்னேற்றம் தந்ததாக கூறும் ஆய்வுகள் ஒருபக்கமும், அது கண்கட்டு விளையாட்டு என மறுபக்கமும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிளாசிபோ என்பது மருந்து மற்றும் சிகிச்சை முறை அற்றது என அர்த்தப்படும். ஒரு ரத்தநாளம் உடைகிறது எனில் அதை நாம் கட்டி நிறுத்தினால் அது சிகிச்சை முறை. ஆனால் அதே ரத்தநாளத்தை கட்டுவது போல் கட்டி ஆனால் கட்டாமல் விட்டுவிட்டு என்ன ஆகிறது எனப் பார்ப்பது பிளாசிபோ.

பாரசிட்டமாலை தண்ணீரில் கலந்து கொடுத்தால் அது மருந்து. அது உடலில் என்ன செய்கிறது எனப் பார்ப்பது மருந்தினால் என்ன விளைவு.

பிளாசிபோ என்றால் வெறும் தண்ணீரை மருந்து கலக்காமல் தருவது. பல சிகிச்சை முறைகள் குறிப்பாக பிரார்த்தனை கூட பிளாசிபோ வகையில் சாரும்.

மருந்து ஒன்றைத் தராமல், நோய் தீர்க்கும் மருந்து தந்திருக்கிறேன், சரியாகிவிடும் என மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் நோயாளியும் மருந்து உட்கொள்வதால் நோய் குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

நமக்கு என்ன நடக்கப்போகிறது எனும் நம்பிக்கையே நோய் தீர்க்கும் மருந்து என்கிறார் கிர்ஸ்ச். இவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் சொன்ன முடிவு இது. ஒரு மனிதனின் நம்பிக்கை நமது உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் மனிதனின் எண்ணம் நரம்பியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே என்கிறார்கள்.

இதைத்தானே ஆன்மிகமும் சொல்கிறது, அப்படியெனில் ஆன்மிகமும் அறிவியலும் வேறு என எப்படி சொல்லலாம் என்றால் அறிவியல் விளக்கம் சொல்லப்பார்க்கிறது, ஆன்மிகம் விளக்கம் தேவையில்லை என்கிறது அதனால்தான் இரண்டும் வெவ்வேறு. இந்த மனநிலைதான் பிளாசிபோ ஏற்படுத்தும் முன்னேற்றத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. ஒருவரிடம் பிளாசிபோவை தந்து அதிக சக்தி வாய்ந்த மருந்தை தந்திருக்கிறேன் என சொல்லி அவரது நோய் குணமான பின்னர் அவரிடம் நான் தந்தது பிளாசிபோ என சொன்னால் அவர் எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்று நினைக்கக்கூடும் அல்லவா! ஆனால் இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த காரணம் என சொல்லிவிடமுடியாது என்கிறார்கள் பலர்.

நமது எண்ணம் நமது உடலில் ஓடும் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வேண்டும் என்கிறார்கள். சரிதான்! இதுமட்டுமல்ல காரணம், அன்பு, கருணை, உற்சாகம் போன்ற காரணிகள் அவசியம் என்கிறார்கள். இதைத்தானே ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்தார்கள்.

தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்

பிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.

எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.

1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.

விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.

கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.

ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.

இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.

'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.

பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.