Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3

எனக்கு அந்த லெமூரியா பத்தின புத்தகத்தை படிக்க படிக்க மனசில திகிலடிக்க ஆரம்பிச்சிருச்சி. எழுபது வருச காலமா இந்த லெமூரியாவில வாழ்ந்தவங்களைப் போல நான் வாழனும்னு ஆசைப்பட்டு அதுல எந்தவித குறையும் வைக்காம இதுவரைக்கும் வாழ்ந்து வந்துட்டு இருக்கறதை நினைக்கிறப்போ என்னால என்னையவே நம்ப முடியல. அந்த லெமூரியாவில இருந்து வழித்தோன்றலா வந்தவங்க இன்னும் அங்க அங்க இருக்காங்கனு அந்த புத்தகத்தில எழுதி இருந்ததை பார்க்கறப்போ இதெல்லாம் எப்படி சாத்தியமோனு தோணிச்சி.

லைப்ரரியன்கிட்ட போனேன், எனக்கு லெமூரியா பத்தின புத்தக பட்டியல் வேணும்னு கேட்டேன். இரண்டு புத்தகம்தான் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்னு லைப்ரரியில சட்டம் இருக்கு, இருந்தாலும் 'லெமூரியா சம்பந்தமான புத்தகம் எல்லாம் எடுத்துக்கோங்கோண்ணா' னு லைப்ரரியன் தன்கிட்ட இருந்த கம்ப்யூட்டரில தட்டி பதினைஞ்சு புத்தகத்துக்கு மேல காட்டினார். அதுல இங்கிலீஸ் புத்தகங்களும் இருந்தது. 'எல்லாம் வேணாம், ஒவ்வொரு புத்தகமா படிச்சிட்டு எடுத்துட்டுப் போறேன்'னு அவர்கிட்ட சொல்லிட்டு வந்து என் வீட்டுக்காரி படிச்சி முடிக்கட்டும்னு அவ பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன்.

என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதம் படிக்க ஆரம்பிச்சா நீர், ஆகாரம் எதுவும் வேணாம், படிச்சிட்டே இருப்பா. நான் கூட பல நாளு அவளுக்காக விரதம் எல்லாம் இருந்துருக்கேன். அன்னைக்கு என்னைக்குமில்லாத சந்தோசம் அதிகமா இருக்கும். இன்னைக்கும் அளவுக்கு அதிகமான சந்தோசம்தான் எனக்குள்ள இருந்தது. திடீரென திரும்பி என்னைப் பார்த்தவ 'ஏண்ணா பசிக்கிறதாண்ணா'னு அமைதியா கேட்டு வைச்சா. 'இல்லை நாயகி, நீ படி'னு அமைதியா சொன்னேன். என்ன நினைச்சாளோ புத்தகத்தை மூடி வைச்சிட்டு 'வாங்கோண்ணா போலாம்'னு கிளம்பச் சொன்னா. நானும் மறுப்பு எதுவும் பேசாம அவளோட கிளம்பிட்டேன்.

லைப்ரரியன் எனக்காக லெமூரியாவைப் பத்தி ஒரு புத்தகம் எடுத்து வைச்சி இருந்தார். 'இந்தாங்காண்ணோ, அந்த புத்தகத்தோட சேர்த்து இந்த புத்தகத்தையும் எடுத்துட்டுப் போங்கோ'னு லைப்ரரி புத்தக அட்டையில பதிவு செஞ்சி கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
'ஏண்ணா என்ன புத்தகம் அது'னு வழக்கம்போல அப்போதான் என் வீட்டுக்காரி கேட்டா. 'இது லெமூரியா பத்தின புத்தகம்'னு சொன்னேன். அவளுக்கு லெமூரியா பத்தி தெரிய வாய்ப்பு இல்லை, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம், மஹாபாரதம், கந்தபுராணம் அப்புறம் என்னோட நாலு கதைகள் மட்டும்தான். அவளா இதுவரைக்கும் வேறு எந்த கதைப் புத்தகமும் வாசிச்சது இல்லை. எனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் லெமூரியா பத்தி அக்கறையில்லாமதான் இருந்தது. எப்பவுமே நான் கதை படிக்கிறப்போ அந்த புத்தகத்தோட பேரு மட்டும் கேட்டுப்பா, அப்புறம் தூங்க போறப்போ கதைச்சுருக்கம் சொல்லச் சொல்வா. கல்கியோட கதையினா அவளுக்குப் பிரியம்.

திருவானைக்கோவிலுல ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு வெயில் குறைச்சலா அடிச்சதால அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சிட்டோம். பேசிட்டே நடந்தோம். அப்போ லெமூரியாவைப் பத்தி சொல்லிட்டே வந்தேன். 'அப்படியாண்ணா, அப்படியாண்ணா'னு கேட்டுட்டே வந்தவ 'அந்த மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணா'னு சொன்னதும் எனக்கு ஸ்ரீரங்க கோயிலு கோபுரம் கண்ணுல பட்டுச்சு. 'எல்லாமே உண்மைனு தெரியாது எனக்கு'னு சொன்னேன். 'ஏண்ணா நாம வாழற சரித்திரத்தை எழுதி வைச்சி பல வருசம் கழிச்சி இப்படி அந்நியோன்யமா இரண்டு பேரு வாழ்ந்தாங்கனு படிக்கிறப்ப, இது உண்மையா இருக்காதுனு படிக்கிறவா நினைக்க தோது இருக்குண்ணா, ஆனா அந்த உண்மை நமக்கு மட்டும்தா தெரியும்ண்ணா'னு சொன்னதும் 'இல்லை நாயகி அந்த மனுசாள் எப்படி வாழ்ந்தானு நா எப்படி பார்க்காம எழுத முடியும்'னு சொன்னேன். யோசனை பண்ண ஆரம்பிச்சா. இரயில்வே கிராஸ்கிட்ட வந்துட்டோம். ஒரு மரத்துக்கு கீழ நின்னோம். குளு குளுனு காத்து வேமா வீசிட்டு இருந்துச்சு.

எனக்கு ஒரு யோசனை தோணிச்சி. எந்த கதையும் படிக்காத என் வீட்டுக்காரிக்கு இந்த லெமூரியா பத்தி என்னோட கைப்பட எழுதுறதை படிக்கட்டும்னு 'நாயகி நான் அந்த மனுசாளைப் பத்தி எழுதுறேன்'னு சொன்னேன். அவ என் மாருல சாஞ்சிக்கிட்டா. நா அவளோட தலையை வருடிட்டே சொன்னேன் 'மொத்தமா எழுதுனப்பறம் படிக்கிறயா, இல்லாட்டி கொஞ்ச கொஞ்சம் எழுதறப்ப படிக்கிறியா'னு கேட்டதும் 'ஒரு வரி எழுதி காமிச்சது போல ஒரு வார்த்தை எழுதினாலும் காமிங்கோண்ணா'னு மாருல சாஞ்சிட்டே சொன்னா. அப்பத்தான் எனக்கு என்னோட மாருல சட்டை நனைஞ்சது தெரிஞ்சது. துடிச்சிப் போய்ட்டேன். நீங்களும் உங்க வீட்டுக்காரிக்காகத் துடிக்கிறீங்களா?

இரண்டு நாளா நான் ஒரு வார்த்தைக் கூட கதை எழுதலை. என்னால எழுதவும் முடியலை. லைப்ரரியில இருந்து வாங்கிட்டு வந்த புத்தகங்களை எடுத்துக் கூடப் பார்க்கலை. அந்த மரத்து நிழலுல என் வீட்டுக்காரி சொன்னது என் மனசில ஓடிட்டே இருந்துச்சி. 'மனுசாளைப் பத்தி நீங்க எழுதி முடிச்சதும் நாம இவ்வுலக வாழ்க்கையை முடிச்சிக்கிறனும்ண்ணா, அந்த ரங்கநாதருகிட்ட போயிறனும்ண்ணா'னு சொன்னதுதான் என்னை இப்படி யோசனையில உட்கார வைச்சிருச்சி. மனுசாளைப் பத்தி எழுதாம இருந்தா பல காலம் வாழலாமானு நட்பாசையில மனசு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. அப்படி உசிரைப் பிடிச்சி பல காலம் இன்னும் வாழுறதல என்ன இருக்கப் போறதுனு நினைக்க வேணாம். கஷ்டப்படற நஷ்டபற மனுசாளுக்கு எல்லா எங்களால முடிஞ்ச தொண்டுகாரியம் பண்ணிட்டு வாரோம். மனுசாளுக்குத் தொண்டு பண்றதுதான் பெரிய தொண்டுனு பகவான் சொல்லியிருக்கார். இதே யோசனையில இருந்தாலும் காலையிலயும் சாயந்திரமும் ஸ்ரீரங்கநாதரை தவறாம சேவிச்சிட்டே வந்தோம்.

'ஏண்ணா வந்து சாப்பிடுங்கோண்ணா'னு என்னோட நினைவுகளை கலைச்சா. நா மெல்ல எழுந்து சாப்பிட போனேன். இன்னைக்கு வீட்டுச் சமையல்தான். சமையலை ரொம்ப பக்குவமா என் வீட்டுக்காரி பண்ணுவா. நா காய்கறி நறுக்கிக் கொடுத்துட்டு சமையல்கட்டிலே அவ சமைச்சி முடிக்கிறவரைக்கும் பேசிட்டே நிற்பேன்.

பிள்ளைகளெல்லாம் கூட இருந்த காலத்தில அவங்களுக்கெல்லாம் சாப்பாடு பரிமாறுவா. பிள்ளைக எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சதும், நாங்க இரண்டு பேரும் ஒன்னாதான் சாப்பிடுவோம். இன்னைக்கும் அப்படித்தான் உட்கார்ந்து சாப்பிட்டோம். அவளுக்கு பொறையேறிருச்சி. தலையில தட்டிவிட்டேன். 'தண்ணி குடிக்கச் சொல்லி நானும் குடிச்சேன். 'ரங்கநாதர் நினைக்கிறாருண்ணா'னு சொன்னா. புள்ளைக நினைக்கும்னு கூட அவளுக்குச் சொல்லத் தோணலையேனு நா சாப்பிடறதை நிறுத்திட்டு அவளையேப் பார்த்தேன். அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்க முடியல. தான் தட்டில இருந்து சாப்பாடு எடுத்து எனக்கு ஊட்ட வந்தா. 'சாப்பிடுங்கோண்ணா'னு சொன்னா. கண்ணுல நீர் கோர்த்தது. அவ ஊட்டிவிட்டதை சாப்பிட்டேன். அவளோட ஒரு குழந்தையாத்தான் வாழ்ந்து வரேன்னு மனசுக்குப் பட்டுச்சு.

வீட்டு வெளியில உட்கார்ந்தோம். இதமா காத்து வீசிச்சு. மதிய வேளையில தூங்கறதில்ல. 'மனுசாளைப் பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க எழுதலையேண்ணா'னு சொன்னா. இதோட நாற்பது தடவை மேல சொல்லியிருப்பா. சிரிச்சிட்டே எழுதுறேன் நாயகினு ஒவ்வொரு தடவையும் சொன்ன நா இன்னைக்கு 'எழுதத் தோணலை'னு சொன்னேன். 'ரங்கநாதருகிட்ட போக விருப்பமில்லையாண்ணா'னு சொன்னா. அழுகையா வந்துருச்சு. அவளை கட்டிப்பிடிச்சு சின்ன புள்ளை போல அழ ஆரம்பிச்சிட்டேன். பதறிப் போய்ட்டா. அவளும் அழ ஆரம்பிச்சிட்டா. நா அழுதா தாங்கமாட்டா. வீணா அவளை கவலைப்படுத்திட்டோமேனு அவ மரத்து நிழலுல சொன்னதை அழுகையில இருந்து மீண்டு வந்து சொன்னேன். 'நீங்க எழுதலையினாலும் ஒருநாள் போயிருவோம்ண்ணா, ரங்கநாதர் காத்துண்டே இருக்காருண்ணா, எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி இதுக்காக சின்ன குழந்தையாட்டம் அழலாமாண்ணா'னு கன்னத்தில திரண்டு நின்ன கண்ணீரை துடைச்சிவிட்டா.

அப்பதான் எனக்கு உறைச்சது. எழுதாம இருந்தாலும் போயிட்டா என்னோட வீட்டுக்காரியோட ஆசையை நிறைவேத்தாம போயிருமேனு 'இரு நாயகி'னு அந்த நோட்டையும் பேனாவும் எடுத்துட்டு வந்து அவ பக்கத்தில உட்கார்ந்தேன். எழுத ஆரம்பிச்சேன்.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

என் வீட்டுக்காரிக்கிட்ட காட்டினேன். வாசிச்சா. வாசிச்சிட்டு மனுசாளைப் பத்தி அருமையா எழுதி இருக்கேள்ண்ணானு சொல்லி என் கையை எடுத்து கண்ணுல தொட்டுக்கிட்டா. 'இதே மாதிரி தொடர்ந்து எழுதி வாங்கோண்ணா'னு கொஞ்ச நேரத்து முன்னால எனக்கிருந்த கவலையெல்லாம் விரட்டிவிட்டா. 'இப்ப இது போதும் நாயகி'னு சொன்னேன். சிரிச்சா.

அப்போ வீட்டு முன்னால காரு வந்து நின்னது. காரில இருந்து என்னோட இரண்டாவது கடைசி பொண்ணு ரங்கநாயகியும் அவளோட வீட்டுக்காரர் ரங்கப்பிரியனும் என் பேரன் கோபிநாதனும் வந்து இறங்கினா. இறங்கினதுதான் தாமசம் தாத்தா பாட்டினு அந்த இரண்டு வயசு பையன் எங்களைப் பார்த்து தள்ளாடி வந்தான். எனக்கும் என் வீட்டுக்காரிக்கும் அத்தனை சந்தோசம்.வந்தவா இரண்டு பேரும் எங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் பண்ணச் சொன்னா. பேரனும் எங்க காலுல விழுந்தான். என் வீட்டுக்காரி பேரனைத் தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சிட்டா.

நலம் விசாரிச்சிக்கிட்டோம். சாப்பாடு பரிமாறினோம். போன வருசம் வந்தவங்க. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரிகிட்ட 'இந்தாம்மா'னு கையில பணக்கட்டு தந்தா சின்னவ. வருசம் வருசம் கேட்கறதைப் போல 'டிவி வாங்கித்தரவா'னு என்கிட்ட கேட்டா. நா வேணாம்னு சொல்லிட்டேன். என் வீட்டுக்காரியோட காலை அமுக்கிவிட்டுக்கிட்டேதான் பேசிட்டு இருந்தா. இப்படித்தான் தகவல் எதுவும் தெரிவிக்காம வந்துருவா.

நாங்க ஐஞ்சு பேருமா நின்னு இந்த வருசமும் போட்டோ எடுத்துக்கிட்டோம். நானும் என் மாப்பிள்ளையும் பேரனும் வெளியில உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரியும் பொண்ணும் உள்ளே பேசிட்டு இருந்தா. மாப்பிள்ளை அவரோட தங்கி இருக்க கூப்பிட்டார். லீவு கிடைச்சா இங்க வந்து தங்குங்கனு சொன்னேன். ரங்கநாதரை விட்டு எங்கும் போக விருப்பமில்லைனு திரும்பவும் சொன்னேன். அமைதியா இருந்துட்டார்.
சாயந்திரமா கிளம்பிட்டாங்க. என்னை கவனிக்கச் சொல்லி என் வீட்டுக்காரிகிட்டயும், என் வீட்டுக்காரியை கவனிக்கச் சொல்லி என்கிட்டயும் சொன்னவ கலங்கினா. என் வீட்டுக்காரியை கட்டிப்புடிச்சி கொஞ்ச நேரம் நின்னா. அதுவரைக்கும் அந்த நோட்டு யார் கண்ணுலயும் படாம வெளியில செளக்கியமா இருந்தது.

வெளியில வந்த என் பேரன் அந்த நோட்டை எடுத்து நா எழுதுன பக்கத்தை கிழிச்சிட்டான். சின்னவாவும் மாப்பிள்ளையும் என் பேரனை இப்படிச் செய்யக்கூடாதுனு சொல்லி அன்போட கண்டிச்சா. எனக்கு பெருமிதமா இருந்தது. அவங்களை அனுப்பி வைச்சிட்டு அந்த பக்கத்தை தனியா எடுத்துட்டு மறுபடியும் எழுதி வைச்சேன். ஸ்ரீரங்கநாதர் சந்தோசப்பட்டிருப்பார். கோவிலுக்கு சேவிக்க கிளம்பினோம். நீங்களும் வாரீங்களா?

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.

இந்த காலங்காத்தாலே எழுந்திருக்க பழக்கம் சின்ன வயசில இருந்து வந்தது. நாங்க இரண்டுபேரும் ஸ்நானம் பண்ணிட்டு தியானத்தில உட்கார்ந்துருவோம். இன்னைக்கும் அதுதான் செஞ்சோம். அதுக்கு முன்னால ஒன்னு சொல்லனும், என் வீட்டுக்காரி நல்லா கோலம் போடுவா. வாச கூட்டி, தண்ணி தெளிச்சி கோலம் போடற வழக்கம் இன்னும் மாறலை.
'மனுசாளைப் பத்தி யோசிச்சேளான்னா' னு கேட்டா. 'யோசனையில தூங்கிட்டேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு வரி எழுதி வைச்சிருக்கேன், படிக்கிறேன்'னு சொல்லி உங்களுக்கு காட்டுன அந்த வரியை படிச்சேன். என் கையைப் புடிச்சி அவ கண்ணு இரண்டையும் தொட்டுக்கிட்டா. என் மனசுல சந்தோசம் அலைமோதிச்சி. 'ரங்கநாதர் நிச்சயம் சொல்வாருண்ணா, அவர் சொல்றதைக் கேட்டு எழுதுங்கோண்ணா' னு சொல்லிட்டு பால் சுட வைக்கப் போனா.

'நாயகி உன் முகம் தூங்கறப்போ கூட மலர்ந்து இருந்துச்சி, மனுசனுக்கு பாராட்டு கிடைக்கறப்ப எவ்வள சந்தோசம் பார்த்தியா'னு சொன்னதும் 'அது இல்லைண்ணா, ரங்கநாதர் என் குரலை கேட்டுருப்பாருனு தெரிஞ்சதால வந்த சந்தோசம்ண்ணா' னு சொன்னதும் அந்த காலையில என்னை அறியாம அவ காலுல சாஷ்டாங்கமா விழுந்துட்டேன். 'என்ன காரியம் பண்றேள்ண்ணா' னு பதறிப்போய்ட்டா.

அப்புறம் வீட்டு நடுக்கூடாரத்தில கட்டியிருக்க ஊஞ்சலிலே இரண்டு பேரும் உட்கார்ந்து பால் குடிச்சிட்டு இருந்தோம். 'நீங்க மனுசாளைப் பத்தி எழுதறதை நான் படிக்கனும்ண்ணா, ஆனா நீங்க மனுசாளைப் பத்தி என்ன என்ன மனுசுல வைச்சிருக்கீங்களோண்ணு தெரியலைண்ணா' னு சொன்னதும் 'ஏன் அப்படி சொல்ற நாயகி' னு கேட்டேன்.

'பாராட்டு கிடைக்கறப்ப சந்தோசம் மனுசாளுக்கு வரும்னு நீங்க சொன்னேளே, அதைவிட மத்தவா சந்தோசமா இருக்கறதைப் பார்த்துத்தான் மனுசாளுக்கு உண்மையான சந்தோசம் வரும்ண்ணா, என்ன சொல்றேள்' னு என்னையவேப் பார்த்தா. அவ சொல்றது உண்மைனு சொன்னேன். சிரிச்சா.
'உண்மையைத்தான் பேசனும்ண்ணா, உங்களுக்கு தெரியாததாண்ணா' சொல்லிட்டு டம்ளரை எடுத்து கழுவி வைச்சிட்டு ஸ்ரீரங்கநாதரை சேவிக்க கிளம்பினோம். வழக்கம்போல மல்லிகைப்பூ, அதோட கொஞ்சம் பிச்சிப்பூ வாங்கி தலையில வைச்சி விட்டேன். பூ விற்கிற அம்மா எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிடுவா. நாங்களும் அந்த அம்மாவை கும்பிடுவோம். அவகிட்டதான் வழக்கமா பூ வாங்குறது. எந்த நாளைக்கு எந்த பூ வாங்குவோம்னு கூட அந்த அம்மாக்குத் தெரியும்.

'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்' னு பாடல் காதுல விழுந்தது. என் வீட்டுக்காரியோட கைகளை அழுத்தினேன். எப்பவும் கைகோர்த்துட்டு நடக்கறதுதான் வழக்கம். அவளும் என் கைகளை அழுத்தினா. அந்த அழுத்தத்தில காதலோட பலம் எங்க இரண்டு பேரு மனசுக்கும் தெரிஞ்சது. அந்த பாட்டு கேட்டதும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தரைப் பார்த்துப்போம். எதுவும் பேசமாட்டோம்.

கோவிலுக்குள்ள போனோம். ஸ்ரீரங்கநாதரை ரொம்ப நேரமா சேவிச்சிட்டு நின்னா. கண் மூடி சேவிக்கற வழக்கம் எங்ககிட்ட இல்ல. ஸ்ரீரங்கநாதரை நா சேவிச்சிட்டு என் வீட்டுக்காரியைப் பார்த்தப்போ அவ கண்ணுல இருந்து கண்ணீர் சொட்டிட்டு இருந்துச்சி. ரங்கநாதானு மனசுல சொல்லிட்டே அவ கண்ணைத் துடைச்சிவிட்டேன். அப்பவும் அவ ரங்கநாதரையேப் பார்த்துட்டே இருந்தா, கண்ணுல நீர் கொட்டுறது நிற்கலை. அங்கே சேவிக்க வந்தவங்க எல்லாம் அப்படியே நின்னுட்டா. பட்டாச்சாரியார்கள் ஓரமா நின்னுட்டாங்க. நேரம் போய்க்கிட்டே இருக்கு, சேவிக்க வந்தவங்க எல்லாம் அமைதியா இருந்தாங்க, எனக்கு ஆச்சரியமா இருந்தது.

சேவிச்சி முடிச்சதும் அப்பத்தான் சுத்தி சுத்திப் பார்த்தா. ஒரே கூட்டமா இருந்தது. பட்டாச்சாரியார்கள் எல்லோரும் ஒரு சேர புன்முறுவலிட்டாங்க. அங்க இருக்குறவங்களைப் பாத்து 'எல்லோரும் என்னை மன்னிச்சிருங்கோ'னு சொன்னா. பட்டாச்சாரியாரும், கூடியிருந்தவங்களும் கையெடுத்து கும்பிட்டாங்க. நாங்க மெல்ல நடந்து ஓரிடத்தில உட்கார்ந்தோம். சேவிக்க வந்தவங்கல சில பேரு வந்து 'எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமி'னு கேட்டாங்க. உட்கார்ந்து இருந்தவ என்னையும் கூட எழுந்து நிற்கவைச்சி அவங்க கேட்டாங்களேனு ஆசிர்வாதம் பண்ணினா. ஒரு சிலரு நின்னு பேசிட்டு போனாங்க.

இத்தனை வருசத்தில நடக்காத அதிசயம் இது, இன்னைக்கு நடந்துருக்கேனு நினைக்கிறப்ப எனக்கு ரங்கநாதர் ஏதோ சொல்ல வராருனு தெரிஞ்சது. என் வீட்டுக்காரிகிட்ட 'என்ன நடந்தது'னு கேட்டேன். 'மனுசாள் எவ்வள உயர்ந்தவா, ஒவ்வொரு அவதாரமா வந்தப்ப மனுசாளை கவுரவிச்சிருக்கார் இந்த ரங்கநாதர், மனுசாளை அன்போடவும் கருணையோடவும் இருக்கச் சொல்றதுக்கு மனுசாளாவே இவா வந்துருக்காளேனு நினைச்சிட்டு அப்படியே நின்னுட்டேண்ணா. மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணிட்டேண்ணா'னு சொன்னா. அடுத்தவங்க சந்தோசமா இருக்கனும்னு எப்பவும் சந்தோசமா வேண்டிப்பா. மனுசாளைப் பத்தி எனக்கு என் வீட்டுக்காரி சொன்னதும் மனசில சந்தோசம் இன்னும் அதிகமாச்சுது. 'நீ இடைஞ்சல் பண்ணலை, எல்லாம் அமைதியா வேண்டிட்டு இருந்தா'னு சொன்னேன்.

பிரசாதம் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு இருக்கறப்பவே 'ஏண்ணா லைப்ரரி போலாமாண்ணா'னு கேட்டா. 'தாராளாம போகலாம்'னு சொன்னேன். அங்கே இருந்து நாங்க இரண்டு பேரும் திருவானைக்கோவிலுக்கு ஒரு ஆட்டோவில போனோம். ஆட்டோவை அந்த பையன் ரொம்ப மெதுவா ஓட்டிட்டுப் போனான். எங்க உடம்பு அலுத்துக்கப்படாதுனு மெதுவா ஓட்டுறதா சொன்னவன், அவனுடைய குடும்பம், ஊரு உலகம் பத்தி சொல்லிட்டே வந்தான். நாங்க திருவானைக்கோவிலுல இறங்கியதும் அந்த பையனை ஒரு நிமிசம் நிற்கச் சொல்லி கடையில ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் வாங்கி ஆஸ்பத்திரியில இருக்குற அவங்க அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னோம். அப்போ அவனோட கண்ணுல கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்துச்சு, எனக்கு சங்கடமா இருந்திச்சி.

லைப்ரரிக்குள்ள போனோம். 'வாங்கோண்ணா'னு எங்களை லைப்ரரியன் வரவேற்றார். என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதத்தை கையில் எடுத்துக்கிட்டா. நா மனுசாளைப் பத்தி எழுதற யோசனையிலே இருந்தேன். அப்பத்தான் ஒரு விசயம் மனசில பட்டுச்சு. அன்பே கருணையா உருவான மனுசாளைப் பத்தி எழுதனும்னு அப்பத்தான் தோணிச்சி. இப்போ இருக்கறமாதிரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கற மனுசாள் மாதிரி எல்லாருமே அன்பும் கருணையும் கொண்டவங்களா இருக்கற உலகத்தை பத்தி நினைக்க ஆரம்பிச்சேன். கண்ணுல ஒரு புத்தகம் பட்டுச்சு. அந்த புத்தகம் லெமூரியாவைப் பத்தியது. எடுத்து புத்தகத்தில எதார்த்தமா திறந்து எழுபதாவது பக்கம் எடுத்து படிச்சேன். ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. அந்த சந்தோசத்தில 'மனுசாளைப் பத்தி எழுத யோசனை வந்துருச்சினு' என் வீட்டுக்காரிக்கிட்ட முணுமுணுத்தேன். ரொம்ப சந்தோசப்பட்டா. நானும் என் வீட்டுக்காரியோட ஆவலை நிறைவேற்ற அந்த ரங்கநாதர் வழிகாட்டிட்டாருனு நினைச்சி சந்தோசப்பட்டேன். நீங்களும் சந்தோசமா இருக்கீங்களா?

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2

இதோ இந்த ராத்திரியிலே என் வீட்டுக்காரி தூங்கிட்டு இருக்கா. எனக்குத் தூக்கமே வரலை. எப்பவுமே படுத்ததும் தூங்கிருவேன். எந்த பிரச்சினைனாலும் அதுபத்தி யோசிக்கமாட்டேன். ஆனா மனுசாளைப் பத்தி எழுதுங்கோனு சொன்னதும் எனக்கு என்ன எழுதறதுனு தெரியலை. அமரர் கல்கி கண்ணுக்கு முன்னால வந்தார். தி. ஜானகிராமன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதினு நிறைய எழுத்தாளர்கள் என் கண்ணுக்கு முன்னால வந்தாங்க. மனுச வாழ்க்கையை எல்லாரும் அலசிட்டாங்கனு மனசுக்குப் பட்டிச்சி. நான் அதிக விரும்பிப் போற நூலகம் திருவானைக்கோவிலுல இருக்கு. நானும் என் வீட்டுக்காரியும் தான் போவோம். அவ ஸ்ரீமத் பாகவதம் எடுத்துப் படிச்சிட்டு இருப்பா. வீட்டுல வாங்கி வைச்சிருக்கேன், இருந்தாலும் அங்க வந்தாலும் அதைத்தான் படிப்பா. எவ்வள சமத்தா தூங்குறா? ம்... இவ மட்டும் இல்லைன்னா நா உயிர் வாழுறதல என்ன அர்த்தம் இருக்கு. நான் நினைச்சிட்டே இருக்கறப்ப இருமிட்டே திரும்பி படுத்தவ என்னைப் பார்த்து 'என்னண்ணா தூங்கலையா'னு கேட்டா.

'மனுசாளைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்' அதான் தூக்கம் வரலைனு சொன்னேன். 'நல்லா யோசியுங்கோண்ணா' னு என்னோட யோசனைக்கு தொந்தரவு தராம பேசமா திரும்பி தூங்கிட்டா. இப்படித்தான் நா என்ன செஞ்சாலும் அன்பா கரிசனையா சொல்லிட்டு அவளோட வேலையப் பார்க்க போயிருவா. இதுலதான் காதலடோ வலிமையிருக்குனு எனக்கு மனசு சொல்லிக்கிரும். வீட்டு வெளியில அந்த ராத்திரியிலே வந்து நின்னேன். கோபுரத்தில் விளக்கு இன்னும் எரிஞ்சிட்டு இருந்தது. 'ரங்கநாதா எனக்கு மனுசாளைப் பத்தி என்ன எழுதறதுன்னு தெரியலை, நீ என்ன எழுதறதுனு வந்து சொல்ல மாட்டியா'னு சின்ன குழந்தை மாதிரி கை இரண்டையும் தலைக்கு மேல தூக்கி சேவிச்சுக்கிட்டேன்.

கொஞ்ச நேரத்தில கதவை அடைச்சிட்டு வந்து உட்கார்ந்துக்கிட்டேன். நல்லா தூங்கிட்டு இருப்பானு பார்த்தா என் வீட்டுக்காரி பால் சுட வைச்சி என்கிட்ட வந்து 'இந்தாங்கண்ணா குடிச்சிட்டு யோசனை பண்ணுங்கோ' னு தந்தா. 'என் யோசனையில உன் தூக்கத்தை கெடுத்துட்டேனே'னு சொன்னேன். சிரிச்சிட்டே தூங்கப் போறேன் ஒரு வரியாவது ஆரம்பிச்சி வையுங்கோண்ணா' னு சொல்லிட்டுப் போய்ட்டா.

நான் சிடி பிளேயரை எடுத்துட்டு வந்து வால்யூமை குறைச்சலா வச்சி ஒரு பாட்டு போட்டேன். ஓ இந்த சிடி பிளேயர் என் முத பொண்ணு எனக்கு பத்து வருசம் முன்னால வாங்கித் தந்தது. அவ்ளதான் சொல்ல முடியும். 'நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்' அந்த பாட்டு கேட்டதும் எனக்கு என்னை அறியாம கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சி. அந்த பாட்டில நான் என்னையவே மறக்க ஆரம்பிச்சது அந்த பாட்டு நின்னதும்தான் தெரிஞ்சது. அடுத்த பாட்டு தொடங்கிச்சி 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' அந்த பாட்டை கேட்டதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கிட்ட பேசனும்போல இருந்திச்சி. எப்பேர்பட்ட கவிஞன், அந்த சின்ன வயசிலே எத்தனை அறிவுனு நினைக்கிறப்போ என்னோட கடந்த வாழ்க்கை எல்லாம் ஒரு கணம் மனசில வந்து போச்சு. அந்த பாட்டு முடிஞ்சதும் சிடி பிளேயரை நிப்பாட்டிட்டு மனுசாளைப் பத்தி யோசிச்சேன்.

திடுதிடுப்புனு விழிச்சிப் பார்த்தேன் ஐஞ்சு மணி நேரம் அப்படியே மேசையில விழுந்து தூங்கிட்டேன், காலையில நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்காரி எழுந்திருவா. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு, மெல்ல எட்டிப் பார்த்தேன், அசையாம நல்லா தூங்கிட்டு இருந்தா. எல்லோரும் பாராட்டின சந்தோசம் அவ முகத்தில இன்னும் இருந்துச்சு. ஒரு வரியாவது எழுதச் சொன்னாளேனு ஒரு புது நோட்டு எடுத்தேன். முத வரி இப்படித்தான் எழுதினேன். எழுதறதை எல்லாம் உங்களுக்கு காட்டுறேன். நான் நீல நிறம் தான் உபயோகிப்பேன்.

மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.
அப்படி எழுதி வைச்சிட்டு என் வீட்டுக்காரி கொண்டு வந்து தந்த பால் அப்பதான் கண்ணுக்கு பட்டது, பால் சூடு ஆறி இருந்தது. அதை அப்படியே எடுத்து குடிச்சேன். நீங்களும் குடிக்கிறீங்களா? இல்லை வேண்டாம், அவ எழட்டும் சுட வைச்சி பால் தரச் சொல்றேன்.

(தொடரும்)