Tuesday 17 March 2015

மிட்டாய் பொண்ணு

தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு செல்லும் முன்னர் அந்த கடை முன் வந்து நின்றுவிடுவாள். கடைக்காரர் முகம் சுளிக்காமல் ஒரு மிட்டாய் கொடுப்பார். இப்படி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுத்தா எப்படிபா வியாபாரம் பண்ணுவ என கேட்டால் வேற யாரும் வந்து நிக்கிறத பாத்த என கடைக்காரர் சிரிப்பார். அவள் ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் சென்றபோது மாமா எனக்கு தினமும் மிட்டாய் தந்தால் படிச்சி எல்லா காசு தரேன் என சொன்னதற்காக கடைக்காரர் தருவது என எண்ணுவது தவறுதான்.

அவளுக்கு அந்த மிட்டாய் ஒரு ஆனந்தமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தது. மாதக்கடைசியில் 15ரூபாய் ஆயிருச்சி மாமா என்றபோது இதைப்போய் கணக்கு வைத்து இருக்கிறாளே என கடைக்காரர் ஆச்சரியம் அடைந்தது என்னவோ உண்மை. சரிம்மா, நல்லா படி என்பதான பதில் அவளுக்கு சந்தோசம் தந்தது.

225 சதுர அடியில் ஒரே ஒரு அரை கொண்ட மணல், கல் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடுதான் அவள் வீடு. விறகு அடுப்பு. கயிறு கட்டில் ஒன்று. மர  அலமாரி ஒன்று. தாத்தா பாட்டி படங்களோடு கருமாரி அம்மன் படம் மாட்டிய மேற்கு சுவர். அவள் இவர்களை வணங்காமல் பள்ளி செல்வதில்லை. விவசாய கூலி தொழில்.

ஒன்பது மணி வரை படிப்பாள். வரவு செலவு என அவள் கணக்கு எழுதுவாள். பெற்ற பிள்ளையின் அறிவு கண்டு கொண்ட அலுப்பு எல்லாம் ஓடிவிடும். தட்டாங்கல்  பிடித்தமான ஒரு விளையாட்டு. அம்மாவோடு சிறிது நேரம் விளையாடுவாள். அப்பாவோடு கதை பேசுவாள். வயசுக்கு வந்துட்டா சொந்தக்காரங்களுக்கு சொல்லணுமே என்ற அம்மா சொன்ன வாக்கியம் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்கொண்ணும் செய்ய வேணாம்மா என்ற அவள் வார்த்தை அம்மாவுக்கு வலித்தது. சின்னபிள்ளையாய் பேசாம இரு என்ற அம்மாவின் அதட்டல் அவள் அமைதி அடிய போதுமானதாக இருந்தது.

ஆறாம் வகுப்புக்கு நடந்தே பக்கத்து ஊர் செல்ல வேண்டி இருந்தது. அதே மிட்டாய் தினம் வாங்கிச்  செல்வாள். அவள் கடன் கணக்கு 185 ரூபாய் ஆகி இருந்தது. இதுவரை அம்மா அப்பாவின் கடன் ரூ 5645.25 அக்கி இருந்தது. தனக்கென தம்பி தங்கை இல்லாத குறையை அந்த ஊரில் இருந்த சிறுவர் சிறுமிகள் தீர்த்து வைப்பதாகவே எண்ணுவாள். அவளது அறிவுதனை பள்ளி மெச்சியது. அவளுக்கு இருந்த உதவி குணம் அதிசயிக்க வேண்டிய ஒன்று. தான் கொண்டு வரும் உணவை பள்ளியின் வெளி வாசலில் அமர்ந்து இருக்கும் பாட்டிக்குத் தருவாள்.

முதல்நாள் அந்த பாட்டியை மதியம் பார்த்தபோது அவள் உள்ளத்தில் ஏதோ  ஒன்று தோணியது. சாப்பாடு வேணுமா பாட்டி என்றபோது ஆம் என தலையசைத்த பாட்டிக்கு சோறு தருவது தவறு இல்லை என ஆசிரியரின் அனுமதி பெற்றே தந்து வந்தாள். பாட்டி சாப்பிட்டதும் போய்விடுவார். இப்படியாய் அவள் செய்யும் உதவிகள் பல.

பெரிய பெண் ஆன பின்னர் மிட்டாய் பழக்கத்தை அவள் கைவிடவில்லை. அவள் நன்றாக படித்து பத்தாவதில் நிறைய மதிப்பெண்கள் பெற்றதை ஊரே கொண்டாடியது. பன்னிரண்டு வரை அதே பள்ளி. மாமா இனி எனக்கு மிட்டாய் வேண்டாம் இதோட ரூபாய் 1150 ஆயிருச்சி. பன்னிரண்டு முடிச்சப்பறம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வீங்களா? அவளது கேள்விக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்மா, நல்லா படி என்று சொன்னபோது மிட்டாயை விட அதிகம் இனித்தது. பெற்றோரின் கடன் ரூ 854.35 என வந்து நின்றது.

அடுத்த நாள் அந்த கடையை கடக்கும்போது அவளை அறியாமல் அங்கு நின்றாள். காசு கணக்கு வைக்க வேணாம் என கடைக்காரர் மிட்டாய் காட்டியபோது வேணாம் என அவள் மறுக்கவில்லை. கணக்கு வைச்சிக்கிறேன் மாமா என வாங்கிக்கொண்டு நடந்தாள். ஏழு கழுதை வயசு ஆகி போச்சு இன்னும் மிட்டாய் சாப்பிடுது என அங்கிருந்தவர் சொன்னது அவளுக்குள் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. அந்த மிட்டாய் அவளுக்கான உற்சாகமும் ஆனந்தமும்.

எத்தனயோ பேர் எதுக்குடி அந்த மிட்டாய் தினமும் வாங்கி சாப்பிடுற என கேட்கும்போதெல்லாம் பிடிச்சிருக்கு என்றே சொல்வாள். நீங்களும் வாங்கி சாப்பிடுங்க என பலரிடம் சொன்னாலும் எவரும் தினம் வாங்கி சாப்பிடும் வழக்கம் கொண்டு இருக்கவில்லை. பதினோராவது முடித்து பன்னிரண்டில் அடிஎடுத்து வைக்கும்போதுதான் அவளுக்குள் காதல் உணர்வினை ஒருவன் விதைத்து இருந்தான். அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்கும் அவளை பிடித்து இருந்தது.

முதன் முதலில் காக்கா கடி கடித்து ஆளுக்கு பாதி மிட்டாயை பகிர்ந்தபோது இதைப்போய் எப்படி சாப்பிடற என அவன் துப்பிவிட்டான். தனக்குப் பிடித்த மிட்டாயை துப்பிவிட்டானே என அவன் மீது கோபம் எல்லாம் அவள் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்து இருக்கிறது என்றே நகர்ந்துவிட்டாள். பன்னிரண்டில் காதலும் படிப்பும் என இறுதி தேர்வு வந்தது. மிகவும் அருமையாகவே எழுதினாள்.

என்னை மறந்துராதே என்ற அவனின் கெஞ்சல் அவளுக்குள் நிறைந்து இருந்தது. பெற்றோரின் கடன் எல்லாம் முடிந்து ரூ 1000 சேமிக்க தொடங்கி இருந்தார்கள். இவளது கடன் ரூ 1520ல் வந்து நின்றது. தேர்வு முடிவு கண்டு மீண்டும் ஊரே கொண்டாடியது. ஆவலுடன் படித்த பல பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்களே எடுத்தார்கள். அவளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வந்தது.

பணத்திற்காக கடைக்காரரிடம் சென்று நின்றபோது எவ்வளவு வேணும் என்று கேட்க ரூ 30000 மாமா என்று அவள் சொன்னதும் சரி வந்து வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார். வீட்டில் எதுக்கு அவ்வளவு பணம் என்று கேட்டு வைத்தார்கள். போயிட்டு வர முடியாதா, அங்கேயே தங்கிதான் படிக்கணுமா என்ற அம்மா அப்பாவின் கேள்விக்கு ரொம்ப கஷ்டம் என்று சொன்னதும் சரி என்றார்கள்.

அவளும் படித்தாள். அவளது கடன் வருடம் வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. கடைக்காரர் ஐந்து வருடங்களுக்கும் பணம் தந்தார். அவளது தந்தை கூலித்தொழில் விட்டுவிட்டு வேறு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று மாதம் ரூ 2000, 3000 என கொண்டு வர கடைக்காரருக்கு கொஞ்சம் கொஞ்சம் கட்டினார்கள். மருத்துவ படிப்பு முடிந்தபோது அவளது கடன் ரூ 1,15,250.40 என்று இருந்தது. இந்த ஐந்து வருடங்கள் மிட்டாய் இல்லாத வருடங்கள் என சொல்ல முடியாது. மொத்தமாக வாங்கி வைத்து ஒரே ஒரு மிட்டாய் தினம் சாப்பிட்டு வரத்தான் செய்தாள்.

பன்னிரண்டாவது படித்தபோது காதல் கொண்ட பையன் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் வீடு வசதி பார்த்து வேண்டாம் என சென்று விட்டார்கள். அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் அவனின் பெற்றோர் கேட்கவில்லை. நான் வேலைக்கு சென்று சம்பாதிப்பேன் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர்கள் கேட்பதாக இல்லை. அவன் அவனின் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்வேன் என சொன்னதும் வேறு வழியின்றி சரி என்றார்கள்.

மாமா, கல்யாண செலவுக்கு பணம் வேண்டும் என்று நிற்க எவ்வளவு வேணும் என்றார். ஒரு ஐந்து லட்சம் வேணும் மாமா என்றதும் சரி வந்து வாங்கிக் கொள் என்றார். கடைக்காரர் தான் இவளுக்கு பணம்தருவது தனது மனைவிக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொண்டார். அவளது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடித்த கையேடு வேலைக்கும் சென்றாள். கடைக்காரர் அவளது திருமணத்திற்கு நிறைய மிட்டாய்கள் கொண்டு வந்து பரிசாக தந்தார். அவளுக்கோ அத்தனை சந்தோசம்.

அவனிடம் தனது மிட்டாய் கதை எல்லாம் சொன்னாள். அவன் அவனின் பெற்றோர்களிடம் சொல்லி அத்தனை பணத்தையும் கடைக்காரரிடம் கொண்டு வந்து கட்டினான். மாமா, இவர் எதுவும் கடன் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார், ஆனா அந்த மிட்டாய் கணக்கு மட்டும் நான் தரேன் என்றாள். என்னம்மா, இன்னுமா அதை கணக்கு வைச்சிருக்க என்றார். உனக்கு நான் எவ்வளவு வேணுமினாலும் செய்யலாம்மா, நீ என்னோட குல தெய்வம் என்ற கடைக்காரர் சொன்னது அவளுக்கு புரியவில்லை. என்ன மாமா குல தெய்வம்னு சொல்றீங்க என்றாள். அது அப்படித்தாம்மா, மறக்காம உனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுமா என்றார். சரி மாமா என்றாள்.

அவளது பெற்றோரை தங்களோடு வந்து இருக்கச் சொன்னான் அவன். அவர்களோ அந்த கூரை வீடு, வேலை என விட்டுவர மறுத்தார்கள். காலம் நகன்றது. மிட்டாயை நிறுத்தியபாடில்லை. ஒரு பையன், ஒரு பொண்ணு என அவள் தாயானாள். குழந்தைகளுக்கு பத்து வயது மேல் ஆனது.

ஒருமுறை அவனும் அவளும் வீதி வழியே சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு செய்து கொண்டு இருந்தான். அதை கண்டு அவள் அங்க பாருங்க ஒருத்தன் வம்பு பண்றான். நீ பேசமா வா, எல்லோரும் பேசாமத்தான போறாங்க என்றபோதும் என்னங்க அந்த பொண்ணை  அடிக்கிறாங்க, வாங்க என்னன்னு பார்ப்போம். சொன்னா கேளு வேணாம். என்னவாச்சும் பண்ணிட்டு போறாங்க. அவளுக்கு மனம் கேட்பதாக இல்லை.

என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசறீங்க என அவனை இழுத்துக்கொண்டு அங்கே சென்றாள். அவர்களுக்கான வாக்குவாதம்தனை நிறுத்த சொன்னாள். அங்கிருந்தவனோ அவளை தகாத வார்த்தையால் திட்டினான். ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிறியே அறிவில்லை என அவள் திட்ட அங்கிருந்தவன் கோபம் ஆனான். தன்னிடம் இருந்த ஆயுதம் கொண்டு அவளை தாக்கினான். அங்கிருந்தவனை அவளது கணவன் தடுக்க போக அவளது கணவனுக்கும் அடி விழுந்தது. இருவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் கூடிட அங்கிருந்தவன் ஓடினான். அந்த பெண்ணிடம் கேட்க அவன் தன காதலன் எனவும் தனக்கு இடைஞ்சல் தந்ததாக கூறினாள். இவர்கள் வராவிட்டால் அவளது காதலன் அவளைக் கொன்று இருக்கக்கூடும் என்று சொன்னாள்.

அடிபட்ட காயத்திற்காக அவள் அவளது கணவன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எவருக்கோ உதவி செய்யப் போய்  இப்படி ஆகிவிட்டதே என அவளது கணவன் நான் சொல்ல சொல்ல கேட்காம பாரு என்றான். ஒவ்வொருத்தரும் இப்படி ஒதுங்கி போறதால பெண்ணின் மீதான தாக்குதல் அதிகம் ஆகுது என்றாள். காயத்திற்கு மருந்து எல்லாம் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு இப்படி ஆனதை ஊரில் கேள்விப்பட்டு அவளது பெற்றோர் கடைக்காரர் எல்லாம் வந்தார்கள்.

இந்தம்மா மிட்டாய் என்று தர மாமா மறக்காம கொண்டு வந்துட்டீங்க என்று சொல்ல அங்கு எல்லோரும் சிரித்தார்கள். மம்மி யூ ஆர் த மிட்டாய் பொண்ணு என அவளது மகள் சொல்லி சொல்லி சிரித்தாள். (முற்றும்)

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையை இந்த மிட்டாய் பொண்ணு இறந்து போவதாக சோகமாக முடிக்க நினைத்தேன். அது உண்மை நிகழ்வை எழுதுவது போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்.  இந்த கதையில் சொல்லப்பட்ட எல்லாமே கற்பனைதான். ஆனால் கடைசியில் நடந்த விஷயம் சற்று உண்மையானது. எவரோ வாக்குவதம்தனில் ஈடுபட தனது கணவனுடன் சென்றபோது எனக்கென செல்லாமல் அவர்களுக்குள் சண்டையை விலக்கி விட சென்று அந்த கொடூரனால் தாக்கப்பட்டு உயிர் இழந்த ஒரு பெண்ணின் நிகழ்வு தான் இந்த கதையை எழுத வைத்தது. அந்த பெண்ணின் கணவனுக்கும் நிறைய காயங்கள்.

வேடிக்கைப் பார்ப்பது நல்லது என இந்த சமூகம் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இது போன்ற வீரம் நிறைந்த பெண்மணிகள் இந்த உலகிற்கு வேண்டும். அப்போதுதான் கயவர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

Yarlpavanan said...


சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Yarlpavanan said...


சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்