Thursday 26 June 2014

எதற்கு பெண் குழந்தை வேண்டும்?

 என் தங்கைக்கு வளைகாப்பு எல்லாம் வெகு விமரிசையாக நடத்தி முடித்தோம். ஓராண்டு முன்னர் திருமணம் முடித்து எங்களை விட்டு சென்றவள் இப்போது எங்களுடன் சில மாதங்கள் தங்கி இருக்கப் போகிறாள் எனும் சந்தோசமே எனக்கு அதிகமாக இருந்தது. அண்ணா அண்ணா என எதற்கெடுத்தாலும் என்னை சுற்றி சுற்றி வருவாள். திருமணம் ஆன பின்னர் வாரம் ஒரு முறை போனில் பேசி விடுவாள் அல்லது நான் பேசி விடுவேன். அவ்வப்போது திருவிழா விசேசங்களில் சந்தித்து கொண்டதுடன் சரி.

நானும் தங்கையும் பேசிக் கொண்டு இருந்தோம்.

''என்ன பிள்ளை எனக்கு பிறக்கும் சொல்லுண்ணா''

''உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்''

''நிசமாவாண்ணா''

''ஆமா, உனக்கு பெண் குழந்தைதான்''

''எப்படிண்ணா இவ்வளவு உறுதியா சொல்ற''

''பிறந்த பிறகு நீயே ஆச்சர்யப்படுவ''

''எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா''

நாங்கள் பேசியது என் அம்மாவுக்கு கேட்டுவிட்டது. 

''ஏன்டா ஆம்பளை புள்ளை பிறக்கும்னு சொல்றதை விட்டுட்டு பொட்ட பிள்ளை பிறக்கும்னு சொல்ற''

''என்னமா பெண் குழந்தைன்னா என்ன, என்னை விட தங்கச்சி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்தில் இல்லையா''

''அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அது எல்லாம் உனக்கு என்ன புரியப் போகுது''

''அண்ணா, அம்மா கூட சண்டை போடாதே''

எனக்கும் அம்மாவுக்கும் ஏதேனும் வாக்குவாதம் வந்தால் அண்ணா அம்மா கூட சண்டை போடாதே என்று மட்டுமே என் தங்கை சொல்வாள். நானும் அதற்கு பின்னர் வாய் திறப்பதே இல்லை. அம்மா திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

''வாயில என்ன வார்த்தை வருது, பொம்பள பிள்ளையாம் பொம்பள பிள்ளை. வயித்துல நெருப்பு கட்டிட்டே போராடுற வாழ்க்கை''

அம்மாவின் அந்த வாக்கியத்திற்கு பின்னர் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்து வெளியே கிளம்பினேன். வேறு எங்கு போக போகிறேன். எனது காதலி கனகதுர்க்கை தான் எனக்கு எல்லாம்.

''என்ன ஒரு மாதிரி இருக்கே''

''அம்மா இன்னைக்கு திட்டிட்டாங்க''

''என்ன வம்பு இழுத்து வைச்ச''

''என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறக்கும்னு சொன்னேன். அதுக்கு என்னை திட்டினாங்க''

''ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி வைக்க வேண்டியதுதான எதுக்கு பெண் குழந்தைன்னு சொன்ன இல்லைன்னா சொல்லாம இருக்கலாம்''

''நீயே இப்படி பேசற''

''என் அக்காவுக்கு இப்படித்தான் பெண் குழந்தை பிறக்கும்னு நான் சொல்லி வைக்க என் அம்மா என்கிட்டே சரியாவே பேசறதே இல்லை. அதுவும் பெண் குழந்தை பிறந்ததும் கருநாக்கு காரினு என்னை அம்மா திட்டாத நாளே இல்லை. ஆனா என் அக்காவோட மாமியாருக்கு கொள்ளை சந்தோசம். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தா அவங்க குடும்பம் செழிப்பா இருக்கும்னு சொன்னதால அக்காவை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினாங்க. ஆனா என் அம்மாவுக்கு என் மேல இன்னும் வருத்தம் போன பாடில்லை.''

''பெண் குழந்தைதானே குழந்தைகளில் சிறப்பு''

''எல்லா குழந்தைகளும் சிறப்புதான், ஆனா பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படும் அம்மாக்கள் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்லிருவாங்க. மத்தபடி பெண்ணுக்கு பெண் எல்லாம் எதிரி இல்லை. எங்கே தான் பட்ட துயரங்களை தனது மகள், பேத்தி படுவாங்கனு அவங்க கவலை''

''உனக்கு என்ன குழந்தை வேணும்''

''ரெண்டும். பெண் இஷ்டம்''

''ஏன்?''

''அழகு படுத்தலாம். நீ கூட உன் சின்ன வயசு போட்டாவுல தலை சீவி பொட்டு வைச்சி பூ சூடி இருப்ப. எல்லா குழந்தையும் பெண் குழந்தையாக பார்க்கிற மன பக்குவம் தாய் கிட்ட இருந்தாலும் பெண் அப்படின்னா கஷ்டம்னு ஒரு எண்ணம் இருக்கு, கூடவே இருக்க முடியாத துயரம். ஆனாலும் எனக்கு பெண் குழந்தை இஷ்டம்''

''சரி இந்த வரி பாரு. 'நமக்கு பெண் குழந்தை பிறக்கும் என எவராலும் எளிதாக சொல்லிவிட முடியும்' எப்படி இருக்கு? ''

''ம்ம் நல்லா இருக்கு''

''என்ன காரணம் தெரியுமா''

''நாம் இருவரும் ஒரே சிந்தனை கொண்டதால் எனது மரபணு x உனது மரபணு x இணையும் சொல்ற விஷயம் தானே''

''ஆமா, எப்படி கண்டுபிடிச்ச''

''உனக்கு வேற என்னதான் தெரியும்''

''அப்போ ஆண் குழந்தை நமக்கு கிடையாதா''

''கூடலின் போது ஊடலுடன் இருப்போம்''

எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. எப்போதும் என்னை ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்துவிடுவாள்.

என் தங்கையின் பிரசவ தினம் வந்தது. என் அம்மா என்னை கடுகடுவென பார்த்தார்கள். நான் சொன்னபடியே பெண் குழந்தை பிறந்தது. என் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். என் அம்மா மட்டும் என்னிடம் வந்து கருநாக்கு பயலே என திட்டிவிட்டு போனார்.

''அண்ணா எப்படிண்ணா கரெக்ட்டா சொன்ன''

''அது வந்து இருக்கறதே ரெண்டு குழந்தை. ஒண்ணு பொண்ணு பிறக்கும், இல்லைன்னா ஆணு பிறக்கும்''

''உனக்கு ஏதோ தெரிஞ்சி இருக்குண்ணா''

''சரி என்ன பெயரு மனசில வைச்சிருக்க''

''கனகதுர்க்கை''

''அது என்னோட ஆளு பேரு''

''அதான் அந்த பேரு''

என் தங்கையின் பாசத்தை என்னால் நிறைய புரிந்து கொள்ள முடியும். வீட்டு வேலை என அம்மா தங்கையை மட்டுமே சொன்னாலும் நான் உதவி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். சமையலில் கூட அம்மாவுக்கு நிறைய உதவி செய்வதுண்டு. தங்கை நன்றாக படிக்க வேண்டும் எனும் அக்கறை எனக்கு நிறைய இருந்தது. அப்பா என்னை சத்தம் போட்டதுண்டு ஆனால் தங்கையை ஒருபோதும் கோபித்துக் கொண்டது இல்லை.

அப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். ஒரு பெண் குழந்தையை பெத்துக்காம எந்த மனுசனோட வாழ்க்கையும் பூர்த்தி ஆகாதுடா. எனக்கு அது எப்போதுமே விளங்கியது இல்லை. அம்மாவிடம் சென்று நான் பேச்சு கொடுத்தேன்.

''இப்ப என்னம்மா அடுத்தவாட்டி பையனை பெத்து தந்துர போறா''

''பேசாம போயிரு''

''இல்லம்மா அது வந்து''

''ஒரு புள்ளையோட நிப்பாட்டுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கடா, என் எரிச்சலை கிளப்பாத''

''அம்மா தங்கச்சிக்கு பெண் குழந்தைதான் வேணுமாம்''

''நீ போறியா இல்லையா''

அம்மாவின் கோபம் அடங்கவே இல்லை. ஒருநாள் நான் அம்மா அப்பா ராமசாமி தாத்தா உடல் நலன் சரியில்லாமல் இருந்ததால் பார்க்க போயிருந்தோம். பேச முடியாமல் பேசினார்.

''எத்தனைஆம்பளை புள்ளை பெத்தேன், ஒன்னே ஒண்ணு பொம்பள புள்ள. இந்த கடைசி காலத்தில அந்த பிள்ளை தான் எனக்கு கஞ்சி ஊத்தி நல்லது கேட்டது பாக்குது''

அவர் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.

''அப்பா, எதுக்கு அதை எல்லாம் நினைக்கறீங்க'' என அவரது மகள் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு நோக்கி நடந்தோம். அம்மா என்னிடம் அன்றிலிருந்து என்னிடம் கோபம் கொள்வதே இல்லை.

நானும் மனதில் உறுதியுடன் கூடலின் போது ஊடலே வேண்டாம் என கனகதுர்க்கையிடம் சொல்லி  வைத்தேன்.



2 comments:

G.M Balasubramaniam said...


பெண்குழந்தைகளுக்கு பிறந்த வீட்டுப் பாசம் அதிகம் பொதுவாகவே அதிக அன்பு செலுத்துவது பெண்குழந்தைகளே

Radhakrishnan said...

ஆமாம், நன்றி ஐயா.