Friday 6 September 2013

சாமியாரின் சுகபோக வாழ்க்கை

நான் சாமியாராகப் போகப் போகிறேன் என்றே கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தேன். இதனால் எனது அம்மாவும் அப்பாவும் கடும் எரிச்சல் அடைந்தார்கள்.  இருபது வயசுல என்ன சாமியார் ஆசை இவனுக்கு என்றே என்னை மந்தரிக்க எல்லாம் அழைத்து சென்றார்கள். ஆனால் எனது முடிவில் நான் மாற்றம் கொள்ளவில்லை. அவசரம் அவசரமாக ஒரு பெண்ணை பார்த்து எனக்கு மணம் முடிக்க மணப்பெண்ணைத்  தேடி தேடி அலைந்தார்கள்.

யாராவது ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வந்தால், அந்த குடும்பத்தில் சென்று  நான் சாமியாராகப் போகிறேன் என்றே சொல்லி வைத்தேன். அதனால் எனக்கு எவரும் பெண் தர மிகவும் யோசித்தார்கள். சில சாமியார்கள் சம்சாரிக்கு ஒரு பொண்டாட்டி, சாமியாருக்கு பல பொண்டாட்டிகள் என ஊரில் வசனம் பேச வைத்துவிட்டார்கள். இருப்பினும் எனது சாமியார் ஆசை என்னை விடவில்லை. சாமியார் ஆக வேண்டுமெனில் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்வது என்று அறிந்து கொள்ள ஒரு சாமியாரை சந்திக்க சென்றேன். இவர் மிகவும் பிரபல்யமானவர் இல்லை. எனது நண்பர் ஒருவர் சொல்லித்தான் இவரைத் தெரியும். அவனிடம் கேட்டதற்கு நீ நேரில் சென்று பார் என முடித்துக் கொண்டான்.

இந்த சாமியார் தனது பெயரில் ஆனந்தா என்றெல்லாம் சேர்த்து கொள்ளவில்லை. தனது பெற்றோர் வைத்த பெயரான வேலுச்சாமி என்பதையே இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி மரங்கள், செடிகள் என இருந்தன. அந்த மரங்கள் செடிகளுக்கு நடுவே ஒரு ஓலை வேய்ந்த குடிசை. சாமியார், சம்சாரி ஆன கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். குடிசை கதவு திறந்தே இருந்தது. ஆனால் உள்ளே அவர் இல்லை. சரி என சுற்றிப் பார்த்தேன். செடிகளுக்கு ஒருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். இவர்தான் சாமியாரா? காவி உடை எல்லாம் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் அருகில் சென்று நீங்கள் தான் வேலுச்சாமி சாமியாரா என்றேன். அவரோ எனது பெயர் வேலுச்சாமி, நான் சாமியார் எல்லாம் இல்லை என்றார். எனது நண்பன் சொன்னான், நீங்கள் சாமியார் என்று என்றேன். உனது நண்பன் மீதான நம்பிக்கை எனக்குப் பிடித்து இருக்கிறது, ஆனால் நான் சாமியார் இல்லை என்றார். நான் அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு 'சாமியார்' என்றால் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறாய்? என்றார்

எவர் ஒருவர் பக்தியும், அருளும் நிறைந்து சதா இறைவனையே நினைத்து அவருக்கு பணிவிடை புரிகிறாரோ அவரே சாமியார் என்றேன். மிகவும் நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார். எனக்கு உச்சி குளிர்ந்து போனது. சரி, இறைவன் எங்கெலாம் இருக்கிறார் என்றார். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்றேன். நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார் மீண்டும். எனக்கு சந்தோசமாக இருந்தது. சரி, நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்றார். நான் வேலை எதுவும் செய்யவில்லை, சாமியார் ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றேன். பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார்.

சாமியார் ஆக நீங்கள் தான் எனக்கு அருள் புரிய வேண்டும் என்றேன். மிகவும் தாராளமாக செய்யலாம், தினமும் காலையில் எட்டு மணிக்கு இங்கு வந்துவிடு, மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து சென்று விடு என்றார். மிகவும் சந்தோசமாக வீடு சேர்ந்தேன். வீட்டில் விசயம் சொன்னதும் பெற்றோர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். ஆனால் என்னை அவர்களால் தடுக்க இயலவில்லை.

மறுநாள் காலையில் சாமியாரை காண சென்றேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட எல்கை அளவை காட்டி இங்கே பதினோரு மணி வரை நீ தண்ணீர் பாய்ச்சு என சொல்லிவிட்டு சென்றார். நானும் சாமியார் ஆகும் ஆசையில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தேன். அரை மணி நேரத்தில் பழங்கள் கொண்டு வந்து இதை சாப்பிடு என தந்தார். பழங்கள் மிகவும் ருசியாக இருந்தது. நேரம் ஆக ஆக உடல் வலிக்க ஆரம்பித்தது. சரியாக பத்தரை மணிக்கு பழச்சாறு கொண்டு வந்து தந்தார். அமிர்தமாக இருந்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்தது.

பதினோரு மணிக்கு வந்து பார்த்தவர் மிகவும் நன்றாக வேலை செய்து இருக்கிறாய் என என்னை அழைத்துக் கொண்டு அவர் செய்து முடித்து இருந்த வேலையை காட்டினார். பல தென்னங்காய்கள் உரித்து இருந்தார். இதையெல்லாம் மூட்டை கட்டு என்றார். மூட்டை கட்டி முடிக்கும் முன்னர் முதுகெலும்பு உடைந்து போகுமாறு இருந்தது. ஒரு மினி லாரி வந்தது.

இன்னைக்கு எத்தனை மூட்டை சாமி என்றபடி வந்தவர் பத்து மூட்டை இருக்கே என கொஞ்சம் பணம் முதலாக தந்தார். மினி லாரியில் அவருடன் சேர்ந்து நானும் மூட்டைகளை ஏற்றி விட்டேன். வரேன் சாமி என சொல்லிவிட்டு மினி லாரி டிரைவர் கிளம்பினார். அரைமணி நேரம் கழித்து என்னை அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரமம் சென்றார். அங்கே சிறு குழந்தைகள், முதியவர்கள் என பலர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் பொழுதை கழித்தவர் தன்னிடம் இருந்த பணத்தை அங்கே இருந்த ஆசிரம நிர்வாகியிடம் தந்தார். கணினியில் வேகமாக தட்டிப் பார்த்துவிட்டு சாமி, இதோட உங்க அன்பளிப்பு தொகை பதினைந்து  லட்சம் என்றார். கணக்கு நான் கேட்கலையே என்றார் சாமியார். ஆசிரமத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். நானும் அவர்களுடன் சாப்பிட்டேன்.

இரண்டு மணிக்கெல்லாம் குடிசைக்கு திரும்பியவர் அங்கே இருந்த கயிற்று கட்டிலை என்னிடம் காட்டி அதில் தூங்கு என சொல்லிவிட்டு அவர் ஒரு துண்டினை கீழே விரித்து மர நிழலில் அப்படியே உறங்கினார். நான் சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசையில் அவர் சொல்வதையெல்லாம் தலையாட்டி பொம்மை போல செய்து கொண்டிருந்தேன்.

நான் விழித்து பார்த்தபோது சாமியார் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். மணி ஐந்து ஆகி இருக்கும். நானும் வேகமாக எழுந்து நிறைய நேரம் உறங்கிவிட்டேன் என்றேன். உறங்கத்தானே செய்தாய், உடலுக்கு மனதுக்கு நல்லதுதானே என சொல்லிவிட்டு என்னை களை எடுக்க சொன்னார். நானும் எடுத்தேன். சரியாக மணி ஆறு ஆனதும் என்னை வீட்டுக்குப் போக சொன்னார். நான் தங்கி இருக்கிறேன் என சொன்னேன். சரி என சம்மதம் சொன்னார். அன்று மாலை குளித்து முடித்த பின்னர்  மறுபடியும் பழங்கள், காய்கறிகள் என சாப்பிட தந்தார். வேறு உணவு கிடைக்குமா என கேட்க மனம் வரவில்லை. சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தோம். அப்போது விளக்கு ஒன்றை கொண்டு வந்து அத்துடன் ஒரு நோட்டு புத்தகம் தந்தார். இதை படிக்க ஒரு மணி நேரம் ஆகும், படித்து முடி என தந்தார். சற்று தள்ளி அமர்ந்து அவர் எதையோ எழுத ஆரம்பித்தார்.

எனக்கு கொடுத்த நோட்டு புத்தகத்தின் தலைப்பு வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ்வது எப்படி என்று எழுதி அதற்கு கீழே வேலுச்சாமி என்று போட்டு இருந்தது.


A saint is one who has been recognized for having an exceptional degree of holiness, sanctity, and virtue. (Wikidpedia)

A real saint is who preserves the nature and support the humanity (Radhakrishnan)


5 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான கதை..!

ராஜி said...

சாமியார் ஆகி இருந்தால் கூட இம்புட்டு ஜாலியா இருந்திருக்க மாட்டீங்க! பிளாக்கர் ஆனதால, எம்புட்ட் ஜாலியா இருக்கீங்க பாருங்க!

ராஜி said...

சாமியார் ஆகி இருந்தால் கூட இம்புட்டு ஜாலியா இருந்திருக்க மாட்டீங்க! பிளாக்கர் ஆனதால, எம்புட்ட் ஜாலியா இருக்கீங்க பாருங்க!

ப.கந்தசாமி said...

சாமியார் வாழ்க்கை சுகமானது அல்ல.

Radhakrishnan said...

நன்றி